ஷக்தியின் கை,கால்கள் எல்லாம் நடுக்கமெடுத்து நடுங்கத் தொடங்கின.கார்த்திக் மீதுள்ள காதலை உணர்ந்த நொடி..அவள் உணர்வு இதுவாகத்தான் இருந்தது. காரிலுள்ள ஏசியையும் மீறி சிலிர்த்து சில்லிட்டது அவள் உடல்.மெலிதாக கண்கள் கூட கலங்கி விட்டன..என்ன உணர்வு இது?புரியவில்லை அவளுக்கு! ஏனோ அழுகை கூட வந்தது!
பார்வதி,சஞ்சய் என இருவரும் மறந்து விட்டிருக்க இப்போது அவள் நினைவில் முழுவதும் அவனே தான்!
அடிக்கடி இப்படி தான் மூடி இருக்கும் கண்களை நிறைப்பான்.மனதை நிறைப்பான் சில வேளை கலைக்கவும் செய்வான்!
கார்த்திகை முதல் முதலாக சந்தித்ததில் இருந்து இன்று அவனை பற்றி மேடையில் பேசியது வரை தனக்குள் அசை போட்டுக் கொண்டாள் ஷக்தி.
ஆடிஷன் அன்று,முதல் முதலாக சிறு பிள்ளை போல் அவனை வியந்து ஆர்வமாகவும் ஆவலாகவும் பார்த்தது. அனுவுக்கு தெரியப்படுத்துவது போல் அவனோடு பேசியது!ரசித்தது! ஆர்வக்கோளாறால் இன்ஸ்டாகிராமில் மெசேஜ் செய்தது! அதன் பின் அவன் மேல் கோபம் கொண்டு பேசாமல் இருந்தது!சண்டை போட்டது! என ஒவ்வொன்றாக நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு அவனோடு பேசிய ஒரு சந்தர்ப்பம் நினைவு வர கண்கள் விரிய திகைத்தவாறு உறைந்து போனாள்.
ஆம்!அன்றொரு நாள் தன் ரசனைகள் கே.கேவை தாண்டி போய்விடும் என அவனிடம் கூறியது!அதற்காக அடுத்து வந்த நாட்களில் இருந்து அவன் அவளை விட்டு விலகியது!அதன் பின் இவள் சண்டையிட்டு அவன் மேல் ஈர்ப்பு இருப்பதாக கூறியது!அதைத் தொடர்ந்து அவன் சொன்ன விளக்கங்கள்.. என இப்போது நினைத்தவளுக்கு ‘சரியான லூசு டி நீ’ என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாலும் இதழோர சிரிப்போடு கன்னங்கள் சிவந்தது.
முன் சீட்டிலிருந்து மகளை திரும்பி பார்த்த பார்வதி,”ஷக்தி?! என்னடி தனியா சிரிச்சுகிட்டே வர? ஃபைனலிஸ்டாகவும் பைத்தியமாயிட்டியாடி?”என்றவர், ஐயோ..!என் பொண்ணு பைத்தியம் ஆயிட்டாளே?!”என அழுவது போல் பாவனை செய்ய,தாயை முறைத்தாள் ஷக்தி.
“அப்பா சொல்ற வரை வரமாட்டேன் மா!”என்றான் அழுத்தமாக.
அதில் அண்ணனை கவலையாக பார்த்துக் கொண்டிருந்த ஷக்திக்கு இப்போது தான் ஒரு விடயம் புரிந்தது.
அவள் எலிமினேஷனை அறிந்து சஞ்சய் வீட்டிற்கு வந்திருந்த சமயம், மனோகர் கோபமாக இருந்தபோது அவளுக்கு நினைவு வந்து என்னவோ கார்த்திக் தான்! ஆம்!அவனைத்தான் நினைத்தாள்! எங்கே சஞ்சய் காதலை ஒத்துக் கொள்ளாத தந்தை தன் காதல் அறிந்தால் என்ன செய்வாரோ? என நினைத்தது இப்போது புரிய.. முகத்தை கைகளால் மூடிக்கொண்டவளுக்கு அழுகை வந்தது.
எப்போதிருந்து அவன் மேல் இந்த நேசம் வந்தது என தெரியவில்லை அவளுக்கு. எந்த புள்ளியில் அவன் மீது இருந்த ஈர்ப்பு காதலாக மாறியது?அவன் மேல் காதல் இருந்தும் அதை உணர முடியாமல் எது தடுத்தது?! ஹ்ம்ம்!ஒன்று தந்தை அவள் மேல் வைத்த நம்பிக்கை. மற்றயது அவள் காதலை கார்த்திக் அறிந்தால் இதையும் ஈர்ப்பு,மாயை என சொல்லி விடுவானோ எனும் பயம்.
“அப்படி மட்டும் சொல்லிடாதீங்க கார்த்திக்!” என மனதோடு முணுமுணுத்தவளுக்கு அவனிடம் காதலை வெளிப்படுத்த தயக்கம் எழுந்தது.
“கார்த்திக் ரொம்ப நல்ல கேரக்டர் இல்லமா?” சஞ்சய்,தாயிடம் கேட்பது காதில் விழ நிமிர்ந்து முன் சீட்டில் இருந்தவர்களை நோக்கினாள் பெண்.
“ம்ம்!ரொம்ப அருமையான தம்பி! ரொம்ப நல்லா பேசுவான்!பந்தா இல்லாத பையன் பா!”என அவர் சொல்ல,
“வருங்கால மாப்பிள்ளையை தம்பின்னு சொல்றதை பாரு!”என தாயை பார்த்து முனகிக் கொண்டாள் ஷக்தி.
“நானும் அவனை கவனிச்சதுல புரிஞ்சுது மா!அதே மாதிரி இன்னைக்கு ஷோல அவங்க கேட்ட கேள்வியே கொஞ்சம் வேற மாதிரி மா!அதுக்கு எவ்வளவு பொறுமையா பதில் சொன்னான்”என சஞ்சய் பேசியதை கேட்டு திடுக்கிட்டவள், “ண்ணா?”என பதட்டமாக பார்க்க,
“எனக்கு அவங்க கேள்வி புரிஞ்சுது ஷக்தி!ஆனா உனக்கும் கார்த்திக்கும் அப்படி ஒரு எண்ணமில்லைன்னு எனக்கு தெரியும்!”என்றான்.
‘இப்போ வரை அப்படி இல்ல?!ஆனால் இனி?’ அவள் மனது கேள்வி எழுப்பியது.
“என்ன சஞ்சய் சொல்ற?நீங்க பேசறது எனக்கு புரியல?” பார்வதி வினவ,பிரியா கேட்ட கேள்வியில் இருந்த உள்ளர்த்ததை விளக்கினான் அவன்.
தங்களையே தவிப்போடு பார்த்துக் கொண்டிருந்த மகளை திரும்பி பார்த்த பார்வதி, “கார்த்திக் நம்ம வீட்டுக்கு மாப்பிள்ளையா வர்றதுல எனக்கொன்னும் ப்ரச்சனை இல்ல பா!”எனவும்,
“மாஆ!”என சஞ்சய் அதட்ட,
“மாஆஆ?!”என்றாள் ஷக்தி அதிர்ச்சியுடன்.
“என்ன சொல்லிட்டேன்னு இப்போ ஆளாளுக்கு இப்படி ரியாக்ஷன் கொடுக்கறீங்க?அதுக்கு தான் வாய்ப்பில்லைல?” என்றவர்,அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு திரும்பிக் கொண்டார். அன்னையின் பார்வையில் ஷக்தி தான் திருதிருவென முழித்து நின்றாள்.
சிறிது நேர பயணத்திற்கு பின் அவர்கள் காலனியை அடைய, “ச..சஞ்சய் வீட்டை விட்டு கொஞ்சம் தள்ளியே வண்டிய நிப்பாட்டுப்பா!” என்றார் பார்வதி தயக்கமாக.
அவரை முறைத்து விட்டு, “அப்பா திட்டுவாங்கன்னு நீ பயப்பட்டாலும் பரவால்ல!இருட்டாயிடிச்சு,வீட்டு வாசல்லயே நிறுத்திடுறேன்!” என்றவன் காரை வீட்டு வாசலில் நிறுத்தினான்.
கேட்டிலேயே இவர்களுக்காக தான் காத்திருந்தார் மனோகர். முன்பே ஷோ முடிந்து வருவதாக போனில் தந்தைக்கு சொல்லிருந்தாள் ஷக்தி.
காரை விட்டு ஷக்தியும்,பார்வதியும் இறங்க கண்ணாடியை இறக்கிய சஞ்சய்,தந்தையைப் பார்ப்பதை தவிர்த்து விட்டு, “போய்ட்டு வரேன் மா!”என்றான்.
“நீ..நீ பாட்டுக்கு வீட்டுக்கு வந்து போவ…உன் அம்மா தான் என்னை குத்தவாளியாக்கி ஒரு மாசம் பேசாம இருப்பா..!இப்போ அதான் வேணுமா உனக்கு?என் மருமகளும், பேரனும் இல்லாம எதுக்கு இங்க வந்த?”என்று மகனை முறைத்தவாறு கூறியவர் பார்வையை வேறு பக்கம் திருப்ப, காரை விட்டு புயல் போல் இறங்கிய சஞ்சய் கலங்கிய கண்களோடு தந்தையை இறுக்கமாக அணைத்திருந்தான்.
பார்வதியும், ஷக்தியும் ‘என்னடா நடக்குது இங்க?’ எனும் ரீதியில் வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.
“ப்பா.. ப்பா..என்னை மன்னிச்சுட்டீங்களாப்பா? மன்னிச்சிட்டீங்களாப்பா?”என அணைப்பிலிருந்த படி குரல் கரகரக்க கேட்டுக் கொண்டிருந்தான்.
அவன் முதுகில் ஆறுதலாக தட்டிக் கொடுத்தார் மனோ.
வெளியே பேசும் சத்தம் கேட்டு வந்த மதி,தந்தையும் தமையனும் கட்டிப்பிடி வைத்தியத்தில் இருப்பதையும் அதைத் தொடர்ந்து, திறந்திருந்த வாய்வழியே ஈ ஈரல் வரை போய் வந்ததை அறியாமல் வாய்பிளந்த நிற்கும் தாயையும், தமக்கையையும் பார்த்தவள் அதிர்ச்சி மாறாமல் பார்வதி அருகில் போய் நின்று கொண்டாள்.
“என்னடி நடக்குது!” என ஷக்தியை சுரண்டிய மதியிடம்,
“நண்பன் பட வெங்கடேஷ் ஶ்ரீகாந்த் அவங்க அப்பான்னு நினைப்பு டி மதி.. அப்பனுக்கும் மகனுக்கும்! என்னைய என்னவோ வில்லி ரேஞ்சுக்கு பேசறாரு உன் அப்பா?!”எனப் பொருமினார் பார்வதி.
மனைவியின் பொருமலில் அணைப்பில் இருந்து வெளியில் வந்த மனோ முறைக்க,”என்னை எதுக்கு முறைக்கறீங்க?”என பார்வதி சிடுசிடுத்தார்.
“நீ பேசாத!எதுக்கு பேசற?கிட்ட தட்ட ஒரு மாசமா என்ட்ட பேசாம இருந்தல்ல?இப்போ உன் மகனோட சமாதானமாகவும் உனக்கு பேச்சு வருதோ?”என மனைவியிடம் கடுகடுத்தவர் சஞ்சயின் புறம் திரும்பி, “மருமகளும்,பேரனும் இல்லாம நீ வீட்டுக்கு வரக்கூடாது!” என்றதுடன் மீண்டும் மனைவியை முறைத்து விட்டே வீட்டினுள் சென்றார்.
மனோ பேசியதில் பார்வதியின் முகம் போன போக்கை பார்த்து பக்கென அவர் மூன்று மக்களும் சிரிக்க,முறைத்தார் அவர்.
____________________________
டோமினோஸ் பீட்சாவை வாங்கி விட்டு அரவிந்தை முறைத்தப்படி காரில் ஏறினான் கார்த்திக்.
‘மாப்ள நம்ம மேல செம்ம கோபத்துல இருக்கான் போல! இவிபிலருந்து முறைச்சுட்டே வரான்’என அவன் முறைப்பை பார்த்து அரவிந்த் நினைத்துக் கொண்டான்.
சிறிது நேரம் மௌனமாக சென்ற கார் பயணத்தை கலைத்தது,
“ஏன்?” என்ற கார்த்திக்கின் கேள்வி.
“பதில் தெரிஞ்சும் நீ கேள்வி கேட்கற கார்த்திக்!?”
“…..”
சாலையை வெறித்தவாறு இருந்தவனை பார்த்த அரவிந்த்,
“எக்ஸ்ட்ரீம்லி சாரி கார்த்திக்!அவன் இப்படி செய்வான்னு நான் நினைக்கல!உன்னை பத்தி கேக்கவும்..சாதாரணமா பேசினதை அவன் இவளோ பெரிய இஸ்யூவாக்குவான்னு யோசிக்காம விட்டேன்!எஸ்.இட்ஸ் மை ஃபால்ட்!”என்றவாறு நெற்றியை தேய்த்துக் கொண்டான்.
இவன் டிரம்ப் பிளேயர் ரமேஷை சந்திப்பதற்கு காரணங்கள் இருந்தன. அன்றொரு நாள் ஷக்தி, கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்க வந்த போது அவர்கள் நெருக்கத்தை பார்த்து யோசனையாக புருவம் சுருக்கிருந்தான். அடுத்து வய் சேனலின் ச.ரி.க.ம.பா மியூசிக் பேண்டின் ஹெட் கிஷோருடன் ரமேஷை அதிகமாக பார்க்க நேர்ந்தது.கிஷோருக்கும், கார்த்திக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தமே! கார்த்திக் அவனிடம் இருந்து ஒதுங்கியே இருந்தாலும் கிஷோருக்கு அவனை வம்பிழுத்தே ஆக வேண்டும்!மூன்று வருடங்களுக்கு முன்பு சேனல் விடயமாக இருவருக்கும் மோதல் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அரவிந்தனின் நெருங்கிய நண்பன் அவன். காலையில் கிஷோரின் பெயரை சொல்லாமல் அரவிந்த் மறைக்கும் போதே புரிந்து கொண்டான் அவன் தான் என.
ரமேஷிடமும் பேச்சுவாக்கில் தான் தன்னைப் பற்றி போட்டுவாங்கிருக்கிறான் என புரிந்து கொண்டான் கார்த்திக். ஆனால் அரவிந்தனும் இதற்கு காரணமாக அமைவான் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. முழுதாக அவனின் மேலும் தவறை சொல்ல முடியாது என நினைத்துக் கொண்டவன் இதன் பின் மேலும் ஷக்தியையும், தன்னையும் இணைத்துக் பேச்சு பரவக்கூடாது என நினைத்தான்.
தன் சிந்தனையில் உழன்று கொண்டிருந்தவனை, “கார்த்திக்!” எனும் அரவிந்தனின் அழைப்பு நடப்புக்கு கொண்டு வந்தது.
என்ன என்பது போல் பார்த்து வைத்தான் அவன்.
“டேய்.! ஏன்டா இப்படி பார்த்து வைக்கற?ஒன்னு முறைக்கற இல்லைன்னா ஏதோ போல பார்த்து வைக்கற!” என்றவனிடம்,
மீண்டும் “ப்ச்ச்!”என சலித்துக் கொண்டான் கார்த்திக்.
“கார்த்திக்?!”
“என்னை,என்ன சொல்ல சொல்றீங்க மாமா?ரமேஷ்ட்ட கேட்டா சொல்றான் உங்க மாமா தான் கிஷோர் கிட்ட சொல்லிருக்கார்ன்னு!நீங்க அவன்ட்ட எதுக்கு என்னைப் பத்தி சொன்னீங்க?”என இரண்டாவது முறையாக கேட்டான்.இவிபியிலும் இதையே தான் அரவிந்திடம் வினவிருந்தான் இவன்.
பெரு மூச்சொன்றை விட்டுக் கொண்ட அரவிந்த்,“ஆடிசன் அன்னைக்கு நீயும்,அந்த ஷக்தி பொண்ணும் பேசிட்டிருந்ததை கவனிச்சிருக்கான் இந்த கிஷோர்!இது எப்டி எனக்கு தெரியும் டா?அதுக்கப்பறம் கிராண்ட் லாஞ்ச் அன்னைக்கும் நீயும்,நானும் ஷக்தியும் பேசினத பார்த்துருக்கான். உங்க ரெண்டு பேர் கூடவும் பேசிட்டு என் கேபினுக்குள்ள போகும் போது அங்க இருந்தவன் கேட்டான்,
‘யார் மச்சி அந்த பொண்ணு..? கார்த்திக்கும் நீயும் நின்னு பேசினீங்க தெரிஞ்சவலான்னு?!’. நான் உங்க சேனல் கண்டஸ்டென்ட்-ன்னும்,உன் கூட ப்ரெண்ட்லின்னும் தான்டா சொன்னேன்!அந்த நாய் எதை ஆதரமா வெச்சு அப்படி ஒரு நியூஸை கொடுத்தான்னே தெரியல?!****”என்றவன் கிஷோருக்கு வாய்க்குள்ளேயே கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டு,
“உன்னை பத்தி நியூஸ் போட்ட யூடியூப் சேனல்ல தான் அந்த கிஷோரோட கசின் ஒருத்தன் வேலை செய்றான். அவனுக்கு நியூஸ் தேவைன்னு உன்னை பத்தி எழுத சொல்லிருக்கான் பன்னாடை! நல்ல வேலை அந்த நேரம் ஷக்தி பேர் அவனுக்கு தெரிஞ்சிருக்கல! இல்லைன்னா இந்த கிஷோர், அதையும் வெளியிட சொல்லிருப்பான்!”என்றான்.
இதையே தான் ரமேஷும், கார்த்திக்கிடம் கூறியிருந்தான். ஆனால் கிஷோர் தன்னைப் பற்றி மேலும் விசாரித்தது தான் கார்த்திக்கை சந்தேகம் கொள்ள வைத்தது.
‘எதுவோ இருக்கின்றது அவனிடம்!இல்லையென்றால் வய் சேனலினுள் பேசும் அளவிற்கு வளர்ந்திருக்காது!’
“எனக்கு சந்தேகம் வந்து கிஷோர்ட்ட கேட்கும் போது, ‘நானும் உன்னை மாதிரி எதற்சியா தான்டா என் கசின்ட்ட சொன்னேன்.அவன் இப்படி நியூஸா போடுவான்னு எனக்கு தெரியலேங்கறான்!’ ஆனா அவன் கசின்ட்ட கேட்டதுக்கு உண்மையை சொல்லிட்டான். கிஷோருக்கு வார்ன் பண்ணிருக்கேன் கார்த்திக்!இனிமே இதுல இன்வால்வ் ஆக மாட்டான்!”என்றவனிடம்,
“இதுக்கப்பறமும் அந்த கிஷோரால எதுவும் பிராப்ளம் ஆச்சுன்னா.. அவன்ட்ட சொல்லுங்க,எப்பவும் போல கார்த்திக் அமைதியா இருக்க மாட்டான்னு!”என்றான் இறுகிப் போன முகத்துடன்.
“அவனுக்கு உன் வளர்ச்சியைப் பார்த்து பொறாமை கார்த்திக்!” என்றவன்,
இளகாமல் இருந்த அவன் முகத்தை பார்த்து,“கார்த்திக் மறுபடியும் கேக்கறேன்.. டூ யூ லவ் ஷக்தி?”எனக் கேட்க,
நொடியில் இறுக்கம் தளர்ந்து கண்கள் புன்னகைக்க,“பதில் தெரிஞ்சும் கேள்வி கேட்கறீங்க மாமா?”என்றவனை பார்த்தவன்,
சிரிப்புடன்,”என்கிட்ட இருக்கற பதில் நீ சொல்ற பதிலா இல்லாம இருந்தா?”என கொக்கி போட்டு நிறுத்த,
புன்னகையுடன் தோள்களை குலுக்கி, “அதுக்கு நான் பொறுப்பில்லை!”என்றான்.
________________________
அடுத்த நாள் காலை என்றுமில்லாத நாளாக மகிழ்ச்சியாகவே விடிந்தது ஷக்திக்கு.நேற்றைய சந்தோசங்கள் மனதில் இனிமையைப் பரப்ப மெதுவாகவே எழுந்து கொண்டவள் அறிந்திருக்கவில்லை இன்றைய நாளின் முடிவு விடியலிலிருந்த மகிழ்ச்சியை முற்றாக துடைத்தெறியப் போவதை.
இன்று காலேஜ் இருக்கவில்லை ஷக்திக்கு.அதனால் மெதுவாகவே குளிக்கலாம் என திட்டம் போட்டவள், பல் மட்டும் துலக்கி காலைக் கடன்களை முடித்து விட்டு,
“அம்மா!” என அழைத்தப்படி அடுப்படிக்குள் புகுந்தாள்.
அவளை பார்க்காமல் காய் நறுக்கிக் கொண்டிருந்தார் பார்வதி.
“மாஆ!ஸ்ட்ராங்கா ஒரு காபி!”என்ற மகளிடம்,
“இன்னைக்கு போட முடியாது டி!”என்றார்.
“என்னம்மா இப்படி சொல்லிட்ட?! அதுவும் சூப்பர் சிங்கர் ஃபைனலிஸ்ட் நானு!”
“அந்த வெலக்குமாரெல்லாம் எனக்கு தெரியும்!ரெண்டு மாசமா ஒழுங்கா வீட்டு வேலை நீ செய்றதே இல்ல!துணி துவைச்சு வெச்சிருக்கேன் போய் காயப் போடுடி!” என்றவர் வெங்காயத்தை வதக்கத் தொடங்க,
மூக்கு விடைக்க தாயை முறைத்து விட்டு,“துவைக்கத் தெரிஞ்சவங்களுக்கு அதை காயப்போடுறதுல என்ன வந்துட போகுது!”என முனகிக் கொண்டே சென்றவளை பார்த்து,
“உனக்கு வேலை சொல்லனும்னு தாண்டி நான் துவைச்சு மட்டும் வெச்சேன்!அப்படியே வீட்டையும் பெருக்கிடு!”என உள்ளிருந்து குரல் கொடுத்தார் பார்வதி.
“வெஷம்!வெஷம்!அம்புட்டும் வெஷம்!”என முணுமுணுத்தபடியே அனைத்து வேலைகளையும் செய்து முடித்தவள் குளியலை போட்டு விட்டு அக்காடவென சாப்பாட்டு தட்டுடன் டீவி முன் அமர்ந்தாள்.
ஸ்டார்ட் மியூசிக் சேனலை வைத்தவள்,அதில் ஜோடி no1 நிகழ்ச்சியை தொடர்ந்து போடப்பட்ட சூப்பர் சிங்கரில் மூழ்கினாள். வெளேண்டைன் ரவுண்ட் நடந்த எபிசோடை ரீ டெலிகாஸ்ட் செய்து கொண்டிருந்தனர்.
காதலர் தினம் வருவதை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு முன் அந்த சுற்றின் சூட்டிங்கை நடத்தினர்! நிகழ்ச்சி சரியாக காதலர் தினம் அன்று ஒளிபரப்பப்பட்டும் இருந்தது.
வரிசையாக அனைவருமே பாடி முடித்தனர்.பாடி முடித்தவர்களிடம் காதல் பற்றியும் அவர்களுக்கு காதலர்கள் இருக்கின்றார்களா எனவும் தொகுப்பாளர்கள் கேட்க சிரிப்பும் கலகலப்புமாக சென்று கொண்டிருந்தது நிகழ்ச்சி.
அடிக்கடி கேமராக்களில் ஷக்தி விழுந்து கொண்டிருந்தாள். அதை முதலில் பார்க்க சந்தோசம் கொண்டவள் தொடர்ந்து அவளையே கேமரா காட்டிக் கொண்டிருப்பது போல் தோன்ற சலித்து பின் எரிச்சல் அடைந்தாள். இந்த எபிசோட்டை முதல் தடவை அவ்வளவாக அவதானித்து பார்த்திருக்கவில்லை அவள். இப்போது வந்த எரிச்சல் முதல் முறை டெலிகாஸ்ட் செய்யப்பட நேரம் பார்த்த போது வரவில்லையே என நினைத்தவள்,
“வேற எவளுமே இல்லன்ன மாதிரி என்னையவே காட்டுறாங்க!”என எரிச்சலாகி முனங்கும் போதே..இப்போது டீவியில் அவள் பாடுவதற்காக மேடை நோக்கி இறங்கிக் கொண்டிருந்தாள்.அவள் அன்றைய சுற்றில் பாடிய பாடல் நினைவு வர இப்போது அதை அவள் உதடுகள் முணுமுணுத்தது.
தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம்…அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம்….
ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்விக்கேட்கும் ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும்
எனும் வரிகளுக்கு கார்த்திக் இப்போது டீவியில் தெரிய புன்னகைத்துக் கொண்டவள்,
“நம்ம ஆளு லவ்வர்ஸ் டேன்னாலும்,கருப்பு சட்டை போட்டு தான் வர்றாப்ள!” என சிரித்து விட்டு,”கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு!”என்று பாடினாள்.
பின் டீவியில் தெரிந்தவனை முறைத்து”நேத்து அந்த திட்டு திட்டிட்டு ஒரு சாரிக்கேக்கல இந்த கார்த்திக் ஹ்ம்ம்!” என்று கோபம் கொண்டவள் மீண்டும் கண்களை டீவியில் வைத்தாள்.
இப்போது ஒருவழியாக முழுதாக பாடலைப் பாடி முடித்திருந்தாள் ஷக்தி. டீவியிலே கண்ணாக இருந்தவளுக்கு இவள் பாடும் நேரங்களில் இவளையும் கார்த்திகையுமே கேமராக்கள் அதிகமாக ஃபோகஸ் செய்திருப்பது அப்போது தான் புரிய மனம் படபடவென அடித்துக் கொண்டது. நேற்று கேட்ட கேள்விக்கும்,இப்போது ஓடிக் கொண்டிருக்கும் காட்சிக்கும் சம்பந்தம் இருப்பது மெது மெதுவாக புரிந்தது ஷக்திக்கு. ஆம்!அவர்கள் இருவரையும் முன் கூட்டியே காதலர்களாக காட்ட முயற்சி செய்திருக்கின்றனர்!
“ஐயோ!இதுல நான் வேற..கார்த்திக்கு பொக்கே கொடுத்திருக்கேன்..பாட வேற ரெக்வஸ்ட் பண்ணிருக்கேன்!லூசு வேலை பார்த்திருக்க ஷக்தி நீ”என தலையில் அடித்துக் கொண்டாள்.
அதன் பிறகு அன்றைய நாள் அவளுக்கு ஓடவே இல்லை. குட்டி போட்ட பூனை போல் போனும் கையுமாக சுற்றித் திரிந்தவளை பார்த்து மதியும்,பார்வதியும் என்னவென்று கேட்டும் பதில் சொல்லவில்லை அவள்.
மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தது.. ‘கார்த்திக் என்ன நினைத்தாலும் பரவாயில்லை,தயக்கத்தை உடைத்து உன் காதலை வெளிப்படுத்திடு ஷக்தி!’ என மனம் அறிவுறுத்திக் கொண்டிருக்க போனில் அவன் வாட்ஸ் அப் சாட் சென்று பார்ப்பதும்,பின் அதை கட் செய்வதுமாகவே இருந்தாள்.
அந்நேரம் திடீரென்று, “ஷக்தி!!”என போனுடன் அலறிக் கொண்டு வந்தாள் மதி.
அவள் காட்டிய வீடியோவைப் பார்த்தவளுக்கு முகம் வெளிறி கைகள் நடுக்கமெடுக்க பிடித்திருந்த போனை தவற விட்டிருந்தாள்.
பெரிய பதிவோடு “லவ் யூ கார்த்திக்!”என அவள் டைப்பி வைத்திருந்த குறுஞ்செய்தி போனோடு அழிந்து போனது.