“கேட்டதுக்கு என்னன்னு சொல்வியா.. அதை விட்டுட்டு அட்டுவைஸ்ஸு!” என சலித்துக் கொண்டாள் தமயந்தி.
“மேடம் எக்ஸாம்லாம் முடிச்சிட்டு குஜாலா இருக்கீங்க போல?அதான் இப்படி குண்டக்க மண்டக்க கேள்வி வருதோ?”
“ஆமான்னா அம்மணி என்ன செய்றதா உத்தேசம்?!அங்க மட்டும் என்னாவாம்…?சூப்பர் சிங்கர் ஃபைனல்ல ஃபோர்த் பிளேஸ் வந்த கொழுப்புல தானே..நான் கேக்கற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லாம இருக்க?”என அவளும் எகிறினாள்.
ஆம்!சூப்பர் சிங்கரின் இந்த சீசன் நிறைவுற்று இன்றோடு ஒரு வாரம் கடந்திருந்தது!ஷக்தி அதில் நான்காவது ஆளாக வெற்றி பெற்றதைத் தான் மதி சொல்லிக் காட்ட, அவளை முறைத்தவள்,
“ஐயே!இப்ப என்னா?டீ.ஆர்.பி ரேட்டிங்னா என்னனு தெரியனும் அவ்வளவு தானே?சொல்றேன் கேட்டுக்கோ” என்றவள்,
“முதல்ல டீஆர்பி-னா ‘Target Rating Point Rating’ அப்டின்னு சொல்வாங்க! அதாவது, இப்போ எங்க சேனலயே எடுத்துக்க.எங்க சேனலை எத்தனை பேர் எவ்வளவு நேரம் பார்க்கறாங்கன்னு மதிப்பிட்டு வெச்சுக்குவாங்க!இங்க சேனல் வியூவர்ஸ் (channel viewers) தான் மெய்ன் மேட்டரே!எந்தெந்த சேனல்ல எந்த ஷோ அதிகமான வியுவ்ஸ் போகுதோ.. அந்த சேனல் டீஆர்பி ரேட்டிங் ஹையாகும்!இதனால தான் சேனல்களுக்கிடையில அடிச்சிக்கறாங்க!”
“உதாரணமா எங்க சேனல்ல சூப்பர் சிங்கர்னு பாட்டு ஷோ ஆரம்பிச்சு நல்லா போச்சுன்னா,அதை பார்த்து வய் சேனல்ல சரிகமபான்னு ஆரம்பிப்பாங்க,அதே சன் சேனல்ல பாட்டு பாடவான்னு ஸ்டார்ட் பண்ணுவாங்க!அதே மாதிரி டான்ஸ் ஷோவ்ஸ், குக்கரி ஷோவ்ஸ், ரியாலிட்டி ஷோவ்ஸ், நானா நீயா மாதிரி டிபேட் ஷோ இப்படி ஏகப்பட்டது இருக்கு!”
“ஓஹோ!!இவ்வளவு இருக்கா?ஆமா இந்த ரேடிங்ஸ்லாம் எப்படி கணக்கு பண்ணி எடுக்கறாங்க?” – என ஆர்வமுடன் கேட்டவளிடம்,
“அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாதுடி மதி!வேணும்னா கூகிள் ஆண்டவர்ட்ட கேட்டுப் பாரு” என்றாள் வெளியில் செல்ல தயாராகியபடி.
உடனே கூகிள் ஆண்டவரை நாடிய மதி அதிலிருந்த தகவலை பார்த்து விட்டு,
“என்னாது?!!இந்த ரேட்டிங்ஸ் எடுக்க வீட்ல உள்ள டீவி கனெக்சன்ல, ஸ்பெஷல் மீட்டர்ஸ் வெச்சுருப்பாங்களாமா?இந்தா இப்பவே போறேன்!அந்த பாரதி செல்லம்மா சீரியல் சின்னபுள்ள தனமால்ல போயிட்டிருக்கு!இதுல பார்ட் டூ வரப்போதாம்! இன்னைக்கே அதை புடுங்கி டீஆர்பி ரேடிங்கை குறைக்கறேன்”என ஆர்ப்பாட்டம் செய்தவளை பார்த்து தலையில் அடித்துக் கொண்டாள் ஷக்தி.
“அடியே!அதெல்லாம் வெளில தெரிற மாதிரி வெச்சுருக்க மாட்டான்டி!கம்னு கெட!”
“ஓஹோஓஓ..!”என இழுத்த மதி மேலும் படித்து விட்டு,
“அந்த மீட்டர்ஸ்ஸ கண்டு பிடிக்கலன்னா..ஒன்னு வியூவர்ஸ்க்கு லஞ்சம் கொடுத்து அவங்க சேனலை பார்க்க சொல்லி..டீஆர்பி ரேட்டிங் அதிகமாக்குவாங்களாம்!இல்லைன்னா டீவிய ஆன் பண்ண உடனே எந்த சேனல் முன்னாடி வந்து விழனும்ன மாதிரி செட் பண்ணி வைப்பாங்களாம்!எப்படியெல்லாம் யோசிச்சு ஐடியா பண்றாங்கையா!” என்றாள்.
அவள் சொல்வதை கேட்டிருந்த ஷக்தி,“இன்னோரு ட்ரிக்ஸ்ஸும் வெச்சிருக்காங்க மதி இந்த சேனல்க்காரங்க!ஒரு மனிசனை அவங்களுக்கு தெரியாம தூண்டிவிட்டு, அளவுக்கு அதிகமா உணர்ச்சிவசப்பட வெச்சு,அவங்க உணர்வுகளை ட்ரிக்கேர் பண்ணி,தான் கேமராக்கு முன்னாடி என்ன பேசறோம்.. என்ன மாதிரி காட்டிக்கறோம்னு தெரியாம.. அந்த நொடி யோசிக்காம வெளிப்படுத்துற உணர்வுகள்,பேச்சுன்னு.. அத்தனையும் கலக்ட் செஞ்சு,எடிட் பண்ணி அவங்களுக்கு தேவையான மாதிரி வெளிய காட்டிடுவாங்க!”
“கேமராக்கு முன்ன பேசறவங்க, அந்த வெளிச்சம் இல்லாம போச்சுன்னா அதுக்கு பின்னாடி இருக்கற நிஜ உலகத்தை நினைச்சு பார்க்க மறந்துடறாங்க மதி! அதுக்கப்பறம் இந்த உலகத்தை சமாளிச்சு,அது கேக்கற கேள்விகளுக்கு பதில் சொல்லி,சில பல ட்ரோல்ஸ்ஸுக்கு உள்ளாகின்னு அத்தனையும் ஃபேஸ் பண்ணி வெளிய வரும் போது நொந்து நூடுல்ஸ் ஆகிட வேண்டியது தான்!” என்றாள்.
“ஆமால்ல? எனக் கேட்டவள், “எல்லாம் உன்னால தான்டி மந்தி!” என்று மதியின் பின் மண்டையில் ஒரு அடியை போட்டு விட்டு கிளம்பிவிட்டாள்.
போகும் அவளை சிரிப்புடன் பார்த்தாள் தமயந்தி.இந்த ஒன்றரை மாதங்களில் ஷக்தியின் வாழ்வில் வீசிய புயலில் எவ்வளவு மன அழுத்தத்துக்கு உள்ளாகி இருந்தாள் தமக்கை..ஒன்றே ஒன்று பித்துப் பிடிக்காத குறை மட்டுமே என அறிவாள் மதி.வெளியில் தங்களுக்காக அவள் சிரிப்பது போல் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் அழுத்தம் கொஞ்சமும் குறையவில்லை என அனைவருக்குமே தெரியும். உயிராக நேசித்த இசையைக் கூட அல்லவா விட்டு விட துணிந்தாள்.
அன்று தான் அந்த வீடியோவைக் காட்டி இருக்கவே கூடாது என மதி நினைக்காத நாளே இல்லை.அவள் அதை காட்டி இருக்கா விட்டாலும்.. அடுத்தடுத்து நடக்க வேண்டியது எப்படியாவது நிகழ்ந்திருக்கும் அல்லவா?
“ம..மதி,மதி! எ..என்னடி இது?”வார்த்தைகள் வர மறுக்க சடுதியில் கலங்கிய கண்களுடன் வீடியோவில் இருந்து கண்ணை அகற்றாமல் கேட்டாள் ஷக்தி.
“அக்கா!பதட்டப்படாதே!”என்ற மதி போனை ஆஃப் செய்து விட்டு, ஷக்தியை அணைத்து முதுகை வருடி விட்டாள்.
“யா.. யார்டி இப்படி எல்லாம் போட்டாங்க?”நடுங்கிய குரலில் கேட்டவளை சாமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த மதி,
“ம்மா!இங்க வாம்மா!”என சத்தமாக பார்வதியை அழைக்க,
“என்னடி?எதுக்கு இப்ப கத்தற?”என்றபடி சமையலறையில் இருந்து வந்தவர்,ஷக்தியை அணைத்தவாறு இருந்த மதியியைப் பார்த்து அவசர அவசரமாக நெருங்கினார்.
“எதுக்குடி நான் உன்னை திட்ட போறேன்?!இப்போ ஏன் அழற?முதல்ல உக்காரு”அங்கிருந்த கதிரையில் அவளை அமர்த்தி விட்டு,மதியிடம் திரும்பி,
“ஏன்டி நீ இவளோட சண்டை போட்டியா?அவளை சமாதானப்படுத்த தான் கட்டிகிட்டு இருந்தியா?இன்னும் உங்க ரெண்டு பேருக்கும் சண்டை போடற பழக்கம் போகலையா?” மதி ஆம் என்று சொன்னாள் அவள் முதுகில் பட்டாசு வெடிக்கும் அளவிற்கு கோபத்துடன் பார்வதி கேட்க,
“எம்மாஆ!சண்டை போடல மா..இது..இது வேற மேட்டர்!”
“என்ன ப்ரச்சினைன்னு சொல்லேன்டி?”என்றவர்,கலங்கிக் கொண்டிருந்த ஷக்தியின் அருகில் அமர்ந்து,
“நீ என்ன செஞ்சிருந்தாலும் திட்ட மாட்டேன் ஷக்தி!சின்னதுல மாதிரியே தப்பு செஞ்சிட்டு அழ வேண்டியது!”என்றவாறு அவள் தோளில் தட்டிக் கொடுக்க,
‘தப்பு’ என்ற சொல் ஷக்தியை தாக்கியது. ‘தான் செய்தது தப்போ?’ ‘கார்த்திக் மீதான காதலும் தப்போ?’ மனம் இதே கேள்விகளில் நின்று விட முந்தைய நாள் தான் அவளே தன் காதலை உணர்ந்தாள் என்பதை வெகுவாக மறந்து விட்டாள் ஷக்தி.அந்த வீடியோ தந்த அதிர்ச்சி பயத்தை அதிகரித்ததே தவிர வேற ஒன்றையும் யோசிக்க விடவில்லை.
மதி,தண்ணீர் கொண்டு வர என்னவென்று புரியாவிடினும் பார்வதி,ஷக்தியின் தலை வருடிக் கொண்டிருக்க, வெளியில் சென்றிருந்த மனோகர் அவசரமாக வீட்டுக்குள் நுழைந்தார்.
வீட்டுப் பெண்கள் மூவரையும் பார்த்தவரின் முகம் இறுகி இருந்தது.பெண்களும் இதை கவனித்து விட வீடியோ பற்றி தந்தைக்கும் தெரிந்து விட்டது என புரிந்து போனது ஷக்திக்கு.
“எதுவும் அவசரமாங்க?” பார்வதி கேட்க,இல்லையென தலையசைத்தவரின் பார்வை மகள் மீதே தான் இருந்தது.
மனைவியிடம் தன் ஃபோனைக் கொடுத்தவர் மகள் பக்கத்தில் அமர்ந்து கொண்டார்.
திரையில் ஓடிய வீடியோவைப் பார்த்த பார்வதிக்கு நெஞ்சம் பதறியது..எந்த தாய்க்கு தான் பதறாது? ஆம்!அதில் கார்த்திக்கையும்,ஷக்தியையும் இணைத்து காட்சிகள் ஓட பின்னணியில் காதல் பாடல் ஓடியது.அனைத்து கிளிப்பிங்களும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து எடுக்கப்பட்டு எடிட் செய்யப் பட்டிருந்தது.
“ப்பா?”மகள் கலங்க ஒன்று சொல்லாமல் அவள் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டவர் தட்டிக் கொடுத்தார்.
அவர் செய்கையில் மனம் அழுத்த தாங்க முடியாது.. தோளில் சாய்ந்து சத்தமாக அழுது விட்டாள் ஷக்தி.
“கோ..கோவமாப்பா என் மேல?”கேட்டவளை, “ஷ்ஷ்! ஷக்தி”என அடக்கியவர், “பாரு, நீ என்ன முழிச்சிட்டு இருக்க?போய் சாப்பாடு எடுத்து வை சாப்பிட்டு பேசிக்கலாம்?”என்றார் மனைவியிடம்.தாயுடன் செல்லுமாறு மதிக்கு கண்ணைக் காட்டியவர், மகள் தோளில் தட்டிக் கொடுத்தார்.
“இது..இது இதெல்லாம் எனக்கு தெரியாது பா”என திக்கியவளை பார்த்தவர்,
“எனக்கு தெரியும் ஷக்தி!இப்ப எதையும் யோசிக்காத!எந்த மாதிரி பிராப்ளம் வந்தாலும் அப்பா உன் கூட இருக்கேன்” ஆறுதல் சொன்னார். ஆனாலும் அவருக்குமே அதிகமாக நெஞ்சம் பதறி இருக்க சோர்ந்து இருந்தார் மனோகர். ஆனால் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. இந்த வீடியோவால் மகளின் எதிர்காலம் பாதிக்கப்படுமே என சராசரி தந்தையாக பயந்தவர் தான் வீட்டுப் பெண்களுக்காக மறைத்துக் கொண்டார்.இப்போது அவருக்கு மகன் சஞ்சயின் அருகாமை தேவைப்பட்டது.
யோசனையில் இருந்தபடி தன்னை மெதுவாக தட்டிக் கொடுத்தவாரு இருக்கும் தந்தையை பார்த்து ஷக்திக்கு குற்ற உணர்வு அதிகமாகி மேலும் அழுகை பொங்கியது.
எப்போதுமே ஓரடி தள்ளி நிற்கும் தந்தை, வெளிப்படையாக ஆரத் தழுவி பாசத்தை காட்டத் தெரியாத வெள்ளை மனிதரிடமிருந்து இப்படியான செய்கையை ஷக்தி எதிர்பார்த்திருக்கவில்லை. அவர் கோபம் கொள்வார், திட்டுவார் இது தான் அவள் எதிர்பார்ப்பாக இருக்க.. தந்தையை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லையே என வருத்தம் கொண்டாள். கூடவே கார்த்திக்கின் நினைவும் வர வீடியோவில் உள்ளது போல் அப்போது காதல் வரவில்லை என்றாலும்..இப்போது வந்த காதலை பெற்றோரிடமிருந்து மறைக்க பார்த்தேனே என மனம் அடித்துக் கொண்டது இவளுக்கு.
மெதுவாக தந்தை முகம் பார்த்தாள்.
“என்ன ஷக்தி?” என்றவரிடம், மனதில் எழுந்த தைரியத்தில் பயமும் கலந்திருக்க,
“இதுக்காக தான் இந்த மீடியா கருமத்தை வேண்டான்னு சொன்னேன் கேட்டானா உன் மகன்?” ராமச்சந்திரன் கோகிலாவிடம் வெளியான வீடியோவை காட்டி கத்திக் கொண்டிருந்தார்.
“கொஞ்சம் பொறுமையா இருங்க!அவனே நேத்து தான் வந்துருக்கான்”என்ற கோகிலாவின் சமாதானம் எடுபடாமல் போக,
“உனக்கு சொன்னா புரியாது கோகி!எனக்கு இவனை பத்தி எந்த மாதிரி நியூஸ் வந்தாலும் பரவால்லன்னு விட்டுட்டு போயிருப்பேன்.ஆனா இவனோட அந்த பொண்ணையும் சம்பந்தப்படுத்தி பேசிருக்காங்க! அந்த பொண்ணை பெத்தவங்களுக்கு எவ்வளவு பதறும்?நம்ம வீட்லயும் பொண்ணிருக்கு கோகி!சத்யாவை பத்தி இப்படியாரும் பேசிருந்தா நாம பதறாம இருப்போமா?நான் அந்த பொண்ணோட அப்பா கிட்ட பேசணும்.இது ஃபோன்ல பேசற விசயமும் இல்ல!சென்னை போவோம்!”என தீர்க்கமாக சொன்னவர்,முகம் இறுகி அங்கு நின்று கொண்டிருந்த மகனை பார்த்தார்.
செமி ஃபைனல் ஷூட்டிங்கிற்கு இன்னும் ஒரு வாரம் இருப்பதால் வயில்ட் கார்ட் சுற்று முடிந்தவுடன் கிடைத்த ஒரு வார லீவிற்காக திருவனந்தபுரம் வந்திருந்தான் கார்த்திக்.அதுவும் கோகிலா வரச் சொல்லி அடிக்கடி கேட்டுக் கொண்டதால்.. கிடைத்த காலேஜ் இவெண்டையும் மறுத்துவிட்டு வந்திருந்தான்.
மதியம் போல் வந்தவன் பல மாதங்களுக்கு பிறகு அம்மா சமையலை சாப்பிட்டு, அவரோடும் தம்பியோடும் பொழுதைக் கழித்து, குட்டித் தூக்கம் போட்டு எழ,அவனை பற்றி வீடியோ வெளிவந்துள்ளதாக அரவிந்திடமிருந்து வந்த அழைப்பு காலையில் இருந்த உற்சாகத்தை வடியச் செய்திருந்தது.
“இது கிஷோர் வேலை இல்ல கார்த்திக்!எவனோ புதுசா சேனல் கிரியேட் பண்ணி அதுல உங்க ஷோல கிடைச்ச கிளிப்பிங்கை எடிட் பண்ணி போட்டுருக்கான்.வெறும் 30 செக்கன் வீடியோ..ஆனா வீடியோ வெளியான அஞ்சி நிமிசத்தில சின்ன சின்ன யூடியூப் சேனல்ஸ் இது மாதிரி போட ஆரம்பிச்சிட்டாங்க” என்றான் அரவிந்த்.
கார்த்திக் பதில் பேசாமல் ஒற்றை கையால் நெற்றியை பற்றிக் கொண்டான்.
“என்னடா கார்த்திக், அமைதியா இருக்க?நீ மேற்கொண்டு சொன்னா நான் இதை பத்தி விசாரிக்கறேன்! சைபர் க்ரைம் கிட்ட சொல்லி நெட்லருந்து வீடியோஸ் எல்லாம் எடுக்க சொல்றேன்!” என்றவனிடம்,
“இல்ல மாமா!இதை இப்படியே விட்டுருங்க.நாம மேலும் விசாரிச்சோம்னா அது வேற நியூஸாகிடும்.வீடியோஸ் பார்த்தாலே தெரியுது.இது கிஷோர் வேலை இல்லைன்னு. வியூஸ்க்காவும், லைக்ஸ்காகவுமே தான் இப்படி வீடியோ செஞ்சிருக்காங்க” என்றவனுக்கு ஆற்றாமையும், கோபமுமே அதிகம் இருந்தது.
சோஷியல் மீடியா இன்ஃப்ளுவன்ஸால் ஒரு சில மக்கள் மதி இழந்து செய்யும் இப்படியான வேலைகளை நினைத்து கோபம்!இதனால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை யோசிக்காமல் அதை ரசித்து லைக்ஸ், கமெண்ட்ஸ் என இஷ்டத்துக்கு மக்கள் பேசுவது எனும் ஆற்றாமை.
இதற்கு முதல் CWC ஷோவில் கலந்து கொண்ட இருவரை பற்றி ரசிகர்களால் எடிட் செய்யப்பட்ட வீடியோக்கள் வெளியாகிருக்க,அந்த ஷோ முடிவுற்ற போதும் அவர்கள் கலந்து கொள்ளும் இன்டர்வியூக்களில் எப்பொழுதும் மாற்றி மாற்றி ஒருவரை பற்றி மற்றவரிடம் கேள்விகள் எழுந்திருந்தன. இப்போது ஷக்தியும் இப்படியான கேள்விகளை சந்திக்க நேரிடுமே என கார்த்திக்கு கவலைகள் அதிகரித்தது.
சென்னை செல்லும் அடுத்த பிளைட்டில் சென்னை வந்திறங்கினர் கார்த்திக் குடும்பம். நேரே ஷக்தியின் வீட்டுக்கு தான் சென்றனர்.
“என்ன மன்னிப்புன்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க! இதுல உங்க தப்புன்னு ஒண்ணுமில்ல. எங்களுக்கு இந்த மீடியா,இப்படி நியூஸ் எல்லாம் பழக்கப்படாத ஒன்னுன்னாலும்.. இப்படி பேச்சு வந்தா அதை எதிர் கொள்ள தயாரா இருந்திருக்கனும். கொஞ்ச நாள் பேசுவாங்க. அப்பறம் இதை மறந்துடுவாங்க”என்றார் மனோகர்.
“ஆனாலும் உங்க சொந்தத்துல..”என்றவரிடம்,
“ஹ்ம்ம்.. நேத்துலர்ந்து போனுக்கு மேல ஃபோன் போட்டு கேக்கறாங்க தான்.எல்லாருக்கும் விளக்கம் சொல்ல முடியாதில்லயா?அதனாலே யார் கூடவும் பேசல.ஆனா மெனக்கெட்டு இவ்வளவு தூரம் எங்களை பாத்து பேச வந்ததுக்கு ரொம்ப நன்றி சார்”என்ற மனோவை அப்போதே நண்பனாக பிடித்துப் போனது ராமசந்திரனுக்கு.
“சார் எல்லாம் வேண்டாம்..நீங்க சந்திரன்னே கூப்பிடுங்க”என சிநேகிதமாக புன்னகைத்தார்.
மனோ, தந்தையாய் எவ்வளவு கலக்கம் அடைந்திருப்பார் என தெரியும் சந்திரனுக்கு.அதை வெளிக்காட்டாமல் திடுதிப்பென்று வந்தவர்களை உபசரித்து அன்பாக பேசியவர்களை பிடித்துப் போய் விட மகனை பார்த்தார்.
சஞ்சயுடன் பேசிக் கொண்டிருந்தான் கார்த்திக். சஞ்சயுமே இவ்விடயம் கேள்விப்பட்டு அடுத்த நாளே குடும்பத்தோடு சென்னை வந்திருந்தான்.
கோகிலா பல நாள் பழகிய நண்பியுடன் பேசுவது போல் பார்வதியுடன் பேசிக் கொண்டிருக்க,மதி அதை சுவாரசியமாக கேட்டுக் கொண்டிருந்தாள் என்றால் ஷக்தியோ தயக்கத்துடன் அமர்ந்திருந்தாள்.
இதை பார்த்த சந்திரனுக்கு ஊரிலிருந்து சென்னை கிளம்பி வந்த போது இருந்த மனநிலை முழுவதும் ஷக்தி குடும்பத்தை சந்தித்ததில் மாறியிருக்க,மனதில் எழுந்ததை நேரடியாக மனோவிடம் கேட்டு விட்டார்.என்ன சொல்வதென்று தெரியாமல் அதிர்ந்தார் அவர்.அவர் மட்டுமல்ல தந்தை கேட்ட,
அதிர்விலிருந்து வெளிவந்த கார்த்திக், “அப்பா” என்றான் அழுத்தமாக சந்திரனுக்கு மட்டும் கேட்கும் குரலில்.
மனோகர் வெகுவாகத் தயங்கினார். என்ன சொல்வதென்று தெரியவில்லை.நிறைய யோசிக்க வேண்டிருந்தது அவருக்கு. அதுவுமில்லாமல் அவர்கள் கலாச்சாரம் பழக்க வழக்கங்கள் எல்லாம் வேறு.அது ஒரு பக்கம் இருக்க அவர்களை விட அதிகம் வசதியானவர்கள்.மகளின் எதிர்காலம்,மகள் நேற்றிரவு சொன்ன கார்த்திக் மேல் உள்ள விருப்பம்..இது சரி வருமா என்று தோன்றியது.மகள் அவரிடம் மட்டுமே சொல்லிருக்க, வீட்டில் யாரிடமும் அதை பற்றி பகிர்ந்து கொள்ளவில்லை அவரும்..அதற்கு நேரமும் இருக்கவில்லை.
“யோசிச்சு சொல்லுங்க மனோகர்” அவர் யோசனை முகம் பார்த்து சந்திரன் சொல்ல,தந்தையை முறைக்க முடியாமல் இருந்த கார்த்திக்,
“அப்பா எதுவும் தப்பா கேட்டிருந்தா சாரி அங்கிள்!நாங்க அப்போ கெளம்பறோம்” என்றவன், குடும்பத்துடன் கிளம்பியிருக்க, வந்ததில் இருந்து ஒரு முறை கூட ஷக்தியின் முகம் பார்த்திருக்க வில்லை கார்த்திக்.
அதன் பின் சென்ற நாட்கள் அனைத்தும்.. அவளையும் கார்த்திகையும் கொண்டு தொடர் விமர்சனங்கள் வர அவள் ஷூட்டிங் செல்ல மறுத்ததும் பின்,இடையில் டெலிகாஸ்ட் செய்யப்பட்ட வயில்ட் கார்ட் சுற்றில் கார்த்திக் அன்று பேசியதை தூக்கி விட்டு ஷக்தி உணர்ச்சிவசப்பட்டு கார்த்திக் பற்றி பேசுவதும்,பிரியா கேள்வி கேட்டதற்கு அவன் சிரிப்பதும் மைக்கில் பேச மறுப்பதுமே ஒளி பரப்பப்பட்டிருக்க, இதை கண்டித்த கார்த்திக்கின் பேச்சு சேனலினுள் எடுபடாமல் போனது.
அதன் பின் நடைபெற்ற பைனலில் நான்காம் இடம் பிடித்தது,அதற்கு அடுத்து அவள் கலந்து கொண்ட அனைத்து இன்டர்வியூக்களிலும் ஒரு கேள்வியாவது கார்த்திக்கை பற்றி எதிர் கொள்ளாமல் இருந்ததில்லை என நாட்கள் நகர,அவள் விருப்பம் சொல்லிய பின் அமைதியாகி விட்ட தந்தையை நினைத்து,அவள் பாடிய அனைத்து பாடல்களும் யூடியூபில் ஸ்டார் சேனலில் இருக்க, இருவரையும் இணைத்து வந்த வீடியோவால் அவளின் பாடல் வீடியோக்களுக்கு கீழாக புதிதாக முளைத்த, ‘இந்த பாட்டு கார்த்திக்காகத் தான் பாடியிருக்கா ஷக்தி’ என வந்த கமெண்ட்களை பார்த்து என்று மன அழுத்தம் ஒரு பக்கம், அடிக்கடி அவன் நினைவுகளில் மௌன அழுகை..என ஒன்றரை மாதம் ஓடி விட்டிருக்க இன்று லோயலா காலேஜில் நடக்கும் இவெண்டுக்காக சென்று கொண்டிருந்தாள் ஷக்தி.