“எந்தினா ஞங்களோடு போலும் பறயாதே போயி?” எதிர்ப்பட்ட அக்காவின் கேள்விக்கு பதில் சொல்லாமல் மாடி ஏறி மியூசிக் சிஸ்டம்ஸ் உள்ள அறைக்குள் நுழைந்து கதவடைத்துக் கொண்டான்.
தம்பியின் செயலில் சத்யா முகம் வருத்தத்தை காட்டியது.காரில் இருந்து இறங்கிய தந்தையை,“ஏன் பா?”எனும் ரீதியில் பார்த்தாள் அவள்.
“இப்போ என்னாச்சுன்னு இவன் இப்படி போறான்” மகளிடமும், மனைவியிடமும் பொருமினார் ராமச்சந்திரன்.
“உங்க அப்பாட்டெல்லாம் என்னால பேச முடியாது சத்யா.அவன்ட்ட ஒரு வார்த்தை கேட்காம என்ன வேலை பார்த்துட்டு வந்திருக்கார் தெரியுமா? உன் அப்பாட்ட நீயே பேசு..!” கோகிலா மகள் முகம் பார்த்து ஆதங்கத்துடன் பேசியவர், கணவனை முறைத்து விட்டு வீட்டுக்குள் நுழைந்தார்.
மகள் அவர் முகம் பார்த்து நிற்க,”ஆத்யம் வீடுனுளில் வரு சத்யா” என்றழைத்து சென்றார்.
“நான் இருக்கும் போது யாரும் வீட்டுக்குள்ள மலையாளம் பேசக் கூடாது சொல்லிட்டேன்” கடுகடுத்தபடி அவர்கள் இடையில் வந்த கோகிலா,
“இதை கேளு சத்யா..!உங்கப்பா இருக்கார்ல, அந்த ஷக்திப் பொண்ணோட வீட்டுக்கும் வந்து மலையாளத்துல பேசறார்!நமக்கு மொழி தெரிஞ்சா மட்டும் போதுமா..?அவங்களுக்கு தெரிஞ்சிருக்குமான்னு யோசிக்கறதில்ல?நான் உங்கப்பாக்கு சிக்னல் கொடுத்துருக்காட்டி கொழ,கொழன்னு இவர் பேசறதையே கேட்டுட்டு இருந்துருப்பாங்க அவங்க!” என்றவர் மீண்டும் சமையலறைக்குள் புகுந்து கொள்ள,சந்திரன் போகும் மனைவியை முறைக்க,வாய் விட்டு சிரித்தாள் சத்யா.
“சரி சொல்லுங்கப்பா என்னாச்சு?அவன் ஏன் கோவமா இருக்கான்?”
அங்கு நடந்த பேச்சு வார்த்தையை மகளிடம் சொன்னவர்,
“அந்த வீட்டு ஆளுங்களை பிடிச்சிருந்தது சத்யா.அதான் மனசுல பட்டதை கேட்டுட்டேன். உங்கம்மாக்கு அவனை பத்தி நினைப்பிருக்கா?மகனுக்கு கல்யாணம் வயசாகுதே,கால காலத்துல கல்யாணம் செஞ்சு வைப்போம்னு..!இதுல கோபப்பட என்ன இருக்கு சத்யா?”கேட்க,
“அவன்கிட்ட கேட்டுட்டு நீங்க பேசிருக்கலாம் பா!அதுவும் இன்னிக்கு தான் ஷக்தி வீட்டாளுங்களை சந்திச்சிருக்கீங்க. இந்த மீடியா இஸ்யூன்னால அவங்க மனநிலை சரியா இருக்காதேப்பா. சரி அவங்கள விடுங்க.. நம்ம கார்த்திக் என்ன மனநிலைல இருக்கான்னு பார்த்துருக்கலாம் பா” என்றாள் மகள்.
“அப்படி கேளு சத்யா. நேத்துலருந்து அவனை திட்டத் தெரிஞ்சவருக்கு இன்னைக்கு அவன்ட்ட இது பத்தி பேசத் தெரியலையா?இந்த வீடியோ பிரச்சனை கேள்விப்பட்டதிலருந்து அவன் முகமே சரி இல்ல.என் பையன் மனசை பார்க்காம எல்லாத்தையும் வீம்புக்குன்னே செய்றாரு உன் அப்பா”என்று ஆதங்கப்பட்டவர் இருவருக்கும் காபியை கொடுத்து விட்டு சத்யா அருகில் அமர்ந்து கொண்டார்.
“நான் என்ன வீம்பு பிடிக்கறேன்..?”என்றார் கடுப்பாக.
“பின்ன இல்லையா?நீங்க தான் அவனுக்கு மியூசிக் கத்து கொடுத்தது..அவன் கத்துக்கிட்டான்.உங்க கனவை அவன் மூலம் நிறைவேத்திக்க அவனை எல்லா மியூசிக் ரியாலிட்டி ஷோலயும் சேர்த்து விட்டீங்க சேர்ந்துகிட்டான். ஆனா அதே மீடியால இப்ப அவன் பெரிய இடத்தில வந்து நிக்கறான்.மீடியா வேணான்றீங்க!இடையில வேலையை விட்டுட்டு வந்தவனை அதையும் இதையும் பேசி போக வெச்சீங்க!அதுவுமில்லாம இந்த நாலு வருசமா அவன் கிட்ட ஒழுங்கா பேசறதயே விட்டுட்டீங்க”கோகிலா ஆதங்கப்பட்டார்.
ராமச்சந்திரன் ஒரு இசைப்பிரியர். அவரது இளமைக் காலங்களில் இசை மீதிருந்த ஈர்ப்பால் அக்கார்டியன் இசைக்கருவி வாசிக்க கற்றுக் கொண்டார். அன்றைய காலகட்டத்தில் மிகவும் பிரபலமான இசைக்கருவி அது.பின் குடும்பத் தொழிலை சுமக்க நேர, வாசிப்பதை முழுதாக நிறுத்தவில்லை என்றாலும் முன்பு போல் இசைக் கருவிகள் மீது ஈடுபாடு இல்லாமல் செல்ல.. கார்த்திக் பிறந்த பின் அவனுக்கு ஆர்மோனியம்,கீ போர்ட் இசைக்கருவிகளை வாசிக்க கற்றுக் கொடுத்தார். அவருக்கு இருக்கும் கனவை கார்த்திக் மூலம் நிறைவேற்றிக் கொள்ள நினைத்தார்.ஆனால் அவர் எதிர்பார்க்காத ஒன்று மகன் இந்த துறைக்குள்ளேயே தன்னை முழுவதுமாக புகுத்திக் கொண்டது. அவனை நினைத்து ஒரு பக்கம் பெருமை என்றாலும்..ஆனால் இதில் முழுதாக பிடித்தமில்லை இவருக்கு.
“இந்த மீடியா நிரந்தரம் இல்ல கோகி.கார்த்திக் பத்தி இன்னைக்கு எப்படி எல்லாம் பேசனாங்க..உனக்கு தெரியும் தானே.?உயரத்துல இருக்குறவங்களை அவங்க எதிர்ப்பார்க்காத நிமிசம் கீழ தள்ளி விட்டுடும் இந்த மீடியா.என் பையனுக்கு நான் அந்த நிலமை வரக் கூடாதுன்னு நினைக்கிறேன் கோகி.அதுவுமில்லாம நம்ம பக்கம் சொந்தம் எல்லாம் இவனை என்னன்னு சொல்றாங்க கீ போர்ட் பிளேயர்னா..?கச்சேரி நடத்துறவன்னு தானே.. இவ்வளவு பெரிய பரம்பரை சொத்திருக்க, இவன் எதுக்கு கல்யாண பங்க்சன் எல்லாம் போய் வாசிக்கனும்,எனக்கு பிடிக்கல!” என்றவரை, வெட்டாவா குத்தவா எனும் ரீதியில் பார்த்த அவர் மனைவி,
“இதெல்லாம் நல்லா பேசுங்க..! அவனுக்கு கீ போர்டு கத்து கொடுக்க முன்ன இதை பத்தி யோசிச்சுருக்கனும்.இப்ப அவன் நேசிக்கறதை விட்டுட்டு வான்னா வந்துடுவானா..? ப்ச்,இதெல்லாம் பரவால்ல விடுங்க..இன்னிக்கு பார்த்தீங்களே ஒரு வேலை. ஹ்ம்ம்,ஆறுதல் சொல்லப் போன இடத்தில என் பையன் மனசை பார்க்காம பொண்ணு கேட்டுட்டு வந்திருக்கீங்க!” விடாமல் பேச,
“ஆமா பையன் மனசை பார்க்காம தான் பேசிட்டு வந்துருக்கேன் பாரு”சந்திரன் முணுமுணுத்துக் கொண்டார்.
“என்ன அங்க முணுமுணுப்பு?”
“ஒன்னுமில்லா,ஞான் இனி ஒன்னும் சம்சாரிக்கில்லா” என்றவர் சொல்ல,
திடீர் என்று கார்த்திக் பாடும் சத்தம் கேட்டது.அவன் கீபோர்ட் இசையுடன் ‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பின் முன்னே’என பாடிக் கொண்டிருந்தான்.
இதைக் கேட்ட சத்யாவிற்கு சிரிப்பு வரப் பார்க்க, “இதுக்கொன்னும் குறைச்சல் இல்ல, அவங்கப்பனுக்கு தான் சப்போர்ட் செய்வான்..சரியான அப்பா கோண்டு”கோகிலா அலுத்துக் கொள்ள,
“ஆமாடி ஆமா.உன் பையன் இவ்வளவு நேரம் உன்னை திட்ட விட்டுட்டு சமாதானம் செய்ய இப்போ பாட்டு பாடறான்” என்றவருக்கும் எத்தனை முயன்றும் சிரிப்பு வந்தது விட்டது.மூவரும் சிரித்துக் கொண்டனர்.
அவர்கள் சிரிப்பொலி கேட்க,திறந்த கதவை மீண்டும் மூடி விட்டு புன்னகையுடன் கீ போர்டுடன் ஐக்கியமாகி விட்டான் கார்த்திக்.
கோபம்,சந்தோசம்,துக்கம் என அனைத்து உணர்வுகளுக்கும் அவன் கீ போர்டு தான் அவனது வடிகால். நேற்றிலிருந்து உள்ளே அழுத்தி வைத்திருந்த கோபம், ஆற்றாமை எல்லாம் இன்று ஷக்தி முகம் பார்த்ததில் எங்கோ சென்றிருந்தது.
இவர்கள் நேராக ஷக்தி வீட்டை அடைந்திருந்த சமயம் அவள் தான் கதவைத் திறந்தாள்.
அழுது முகம் வீங்கி,உப்பிய கண்ணங்களும்,ஈர இமைகளுமாக ஷக்தியை பார்க்க இவனுக்கு உள்ளே அடித்துக் கொண்டது. அவனை கண்டதும் திகைத்து விழித்தவள் அதன் பின் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை.
தன் முகம் பார்க்க தயங்கி அவள் நின்றது,கோகிலா பேச்சுக் கொடுக்கும் போதெல்லாம் மண்டையை ஆட்டி அவள் கேட்டுக் கொண்ட விதம் இப்போது நினைக்கும் போது கார்த்திக்கு புன்னகை அரும்பியது.
“ஷக்தி”கண்களை மூடி அவள் பெயரை சொல்லிக் கொண்டவனுக்கு அவள் மீது இருக்கும் உணர்வு என்னவென்று தான் புரியவில்லை.
அவனுக்கு புரியத் தேவையில்லை! அவனும் புரிய முயற்சிக்க போவதில்லை. தனக்கு தானே சொல்லிக் கொண்டான்.
தொடர்ந்து அவன் கைகள் கீ போர்ட்டுடன் உறவாட, ஏ.ஆர்.ஆரின் பாடல்கள் அவன் கைகளில் அனாயசமாக வாசிக்கப்பட்டது. தந்தை,ஷக்தி வீட்டில் பேசியதால் அவர் மேல் உண்டான வருத்தம் கூட தாயின் பேச்சிலும்,இசையிலும் மெல்ல விலகியது.
வாசித்துக் கொண்டிருந்த ‘ஹொஸானா’ பாடலை நிறுத்து விட்டு ப்ரீத் கன்ட்ரோலரை காதில் மாட்டி வாய் அருகில் வருமாறு வைத்தவன்,அடுத்து ‘புது வெள்ளை மழை’ பாடலின் இடையில் வரும் இசையை வாசித்தான்.பின் அதைத் தொடர்ந்து ‘காதல் தேசம்’ படத்தில் வரும் எஸ்பிபி பாடிய பாடலை வாசித்தவன்,நிறுத்தி விட்டு கண்களை மூடிக் கொண்டான்.
அவன் ஷக்தியின் கரம் பிடித்து அன்று வாசிக்க சொல்லிக் கொடுத்த காட்சி நினைவில் வர மின்சாரம் தாக்கியது போல் உணர்ந்தவன் கண்களை திறந்து ஆழ்ந்த மூச்சை எடுத்து தன்னை நிலைப்படுத்த முயற்சி செய்து பின் தோற்றுப் போனவனாக பிடரியைக் கோதிக் கொண்டான்.
“வேணாம் ஷக்தி. போயிடு”முகத்தை தேய்த்தவாரு முனகிக் கொண்டவனின் ஒற்றை கை அவன் அனுமதியில்லாமல் அன்று வாசித்த “தள்ளிப் போகாதே” பாடலை வாசிக்க தொடங்கிருந்தது.
“உங்க கைல பவர் சப்ளைமெண்ட் எதுவும் வெச்சிருக்கீங்களா?”
“இல்ல. எனக்கு ஷாக் அடிச்சது” அவள் பேசியது இப்போது நினைவில் வர இசைக்கு எதிராக, “தள்ளிப் போயிடு ஷக்தி”என முனகிக் கொண்டான்.
அடுத்த இரண்டு நாட்களில் கார்த்திக்கின் தந்தையும்,தாயும் ஊருக்கு கிளம்பிருக்க,கேரளா செல்லும் முன் மனோகரை அழைத்து பேசினார் சந்திரன்.அவர் பேசி விட்டு போனை வைத்திருக்க அடுத்து கார்த்திக் அழைத்து பேசியிருந்தான்.
அதன் பின் ஓடிய நாட்கள் ஷக்தியை சந்திக்கும் நேரங்களில் வேண்டுமென்றே தவிர்த்து வந்தான் கார்த்திக்.அவளுக்காக சேனலுடன் முட்டிக் கொண்டான்.அவள் வெற்றியில் இவன் மகிழ்ந்தான். அவள் எதிர்கொள்ளும் அவனை பற்றிய கேள்விகளுக்கு தவித்தான்.ஆறுதல் செய்ய நினைத்தான்.ஆனால் இவன் ஷக்தியை தவிர்க்க நினைக்க அவனறியாமலே இன்னுமின்னும் இவனுள் இறங்கிக் கொண்டிருந்தாள் ஷக்தி.
ஒன்றரை மாதம் கடந்து,இன்று லோயலா காலேஜில் கார்த்திக் நுழைய அதே வேளையில் ஷக்தியும் நுழைந்திருந்தாள்.ஒரு நொடி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
கார்த்திக் ஸ்டேஜ் பக்கம் செல்ல ஷக்தி அவள் நண்பர்கள் இருக்கும் பக்கம் சென்றாள். கார்த்திக்கை பார்க்க கூடாது என தனக்குள்ளேயே உருப்போட்டு கொண்டிருந்தவளுக்கு என்ன முயன்றும் அவள் பார்வை அவனிடமே நிலைத்தது.
அவர்கள் குழுவில் இருந்த மணிமாறன் ஏதோ காமெடி சொல்லிருப்பார் போலும் வாய் விட்டு நகைத்துக் கொண்டிருந்தான் கார்த்திக். அவன் சிரிப்பில் தொலைந்து போனாள் இவள்.
எப்போதும் போல இன்றும் கருப்பு நிற ஷர்ட் தான் அணிந்திருந்தான். முழுக்கையை முட்டி வரை மடித்து விட்டு,சுருள் கேசம் களைந்து, ஒட்டிய புருவங்கள் அவன் சிரிப்புக்கேற்றவாறு அசைந்து அவனை வசீகரனாகக் காட்ட ஷக்தியை வசீகரித்தான்.
சிரித்தபடியே அவன் சாதாரணமாக இவள் பக்கம் திரும்ப,சிரித்துக் கொண்டிருந்தவன் சட்டென திரும்பி பார்ப்பான் என எதிர்பார்க்காத ஷக்தி அவன் பார்வையில் திகைத்து திணறி நிற்க,கார்த்திக் தன் பார்வையை விலக்கிக் கொண்டான்.
பதினைந்து நிமிடங்கள் கடந்து இசை நிகழ்ச்சி ஆரம்பித்திருக்க, நிகழ்ச்சி நிறைவு பெற இரவு ஏழை எட்டியிருந்தது.
நிகழ்ச்சி முடிய பேசிவைத்த பேமெண்ட் அவர்களுக்கு வழங்கப்பட்டது. சிறியளவிலான பணம் தான் என்றாலும் அன்றைய நிகழ்ச்சி கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமின்றி இசை குழுவிற்குமே மன நிறைவை தந்திருந்தது.
மெது மெதுவாக அனைவரும் கிளம்பிக் கொண்டிருக்க ஷக்தியோடு அவள் நண்பர்கள் சிலர் இருந்தனர். ஸ்டேஜில் இருந்த கார்த்திக்கின் ஆகஸ்ட்ரா குழு அவர்கள் பொருட்களை பேக் செய்து கொண்டிருக்க,கார்த்திக்கிடம் கிளம்ப முன் பேசி விட வேண்டும் என நினைத்தாள் இவள்.
அந்நேரம் பார்த்து சஞ்சயிடம் இருந்து அழைப்பு வந்தது.தான் அழைக்க வருவதாகக் கூறியவனிடம்,
“எப்போ அண்ணா சென்னை வந்த?”
“இப்போ தான் ஷக்தி.அப்பா தான் அவசரமா சென்னை வர சொன்னார்”
“ப்ச்ச்!பிடிக்கும் மாமா.ஆனா நீங்க நினைக்கிற மாதிரி இல்ல”
“என்ன நான் நினைக்கற மாதிரி இல்ல..?!அன்னைக்கு கேட்டேனே.. அதுக்கு என்கிட்ட இருக்கிற பதில் இது தான் கார்த்திக்.நீ ஷக்தியை விரும்பற”என்று சொல்ல,
இன்ஸ்டண்டாக பூத்த புன்னகையுடன்,“நான் தான் சொன்னேனே மாமா.உங்க கிட்ட இருக்கற பதிலும் என் பதிலும் ஒரே மாதிரி இல்லைன்னா அதுக்கு நான் பொறுப்பில்லைன்னு”என்றான்.
“டேய்..உன்னை கொல்ல போறேன்டா!காதலிச்சு கல்யாண பண்ண எனக்கு தெரியாதா..?காதல் பத்தி!”அரவிந்த் கடுப்பாக,
வேறு புறம் பார்வையை திருப்பிக் கொண்டவன்,
“மாமா, ஷக்தியை பிடிக்கும் அவ்வளவு தான். ஜஸ்ட் ஐ லைக் ஹேர். பிடித்தம்ன்னா காதல்னு அர்த்தம் இல்ல.இந்த பிடித்தம் காதலாகறது சரியும் இல்ல” கடைசியில் முணுமுணுத்துக் கொண்டான்.
“என் மூஞ்சை பார்த்து அதை சொல்லுடா.நீ சுவத்தை பார்த்து சொல்றதெல்லாம் என்னால நம்ப முடியாது!”
“ப்ச்ச்!”சலித்துக் கொண்டவனிடம்,
“இப்போ என்ன.?ஓகே.உனக்கு ஷக்தி மேல இருக்கிறது பிடித்தம்னே வெச்சுக்கலாம். உனக்கு தான் கல்யாண வயசு ஆகுதில்ல..!”அவன் பேசிக்கொண்டிருக்க,
“எனக்கொன்னும் வயசாகல.ஒரு அஞ்சு வருஷம் போகட்டும்” என இடையிட்டான் கார்த்திக்.
“டேய்.அடுத்த வருசம் முப்பதை தொடப் போற..!உனக்கு வயசாகல..? அரைக்கிழவனானப்பறம் கல்யாணம் பண்ணப் போறியா?”-எந்த பக்கம் போனாலும் பால் போடறானே எனும் கடுப்பு அரவிந்திடம்.
“மாமா..”என்றவனுக்கு இப்போதைக்கு திருமணம் பற்றிய எண்ணம் இருக்கவில்லை.
“அவளுக்கு சாதாரண பீஸ்புல்லான லைஃப் அமையனும் மாமா.என்னை கல்யாணம் பண்ணா அதெல்லாம் கிடைக்குமா சொல்லுங்க?நம்ம வீட்ல இருக்குறவங்க கூட என்னால வெளிய போக முடியுமா?இல்ல அவங்க தான் வருவாங்களா?நீங்க எல்லாருமே சொல்றீங்க. நான் இப்பெல்லாம் ஒழுங்கா பேசுறது இல்ல என் பேச்சு குறைஞ்சு போச்சுன்னு.ஆனா நீங்க எல்லாருமே என்னையும் இந்த மீடியாவயுமே பிளேம் பண்றீங்கல்ல?அம்மா, அச்சா, சத்யா,அருண் இவங்க எல்லாரும் என்கிட்ட எப்டி இருக்காங்க.சொல்லுங்க பார்க்கலாம்?நான் மீடியா வந்து ஆறு வருசம் ஆகுது.மீடியா தான் என் ஃப்யூச்சர்ன்னு சொன்னதுலருந்து அச்சா என் கூட பேசுறத விட்டுட்டார்.
“கல்யாண பங்ஷன், இவண்ட்டுன்னு நான் போய் வாசிக்கிறதுல அவருக்கு விருப்பம் இல்ல.ஹ்ம்ம்! எனக்கு நம்பிக்கை இருக்கு மாமா. இப்போ இல்லைன்னாலும் ஒரு நாள் நல்ல நிலைக்கு வருவேன்.என் இலட்சியம் நிறைவேறும்னு. அதே மாதிரி அம்மா என்னை பார்க்கற பார்வை,என்கிட்ட பேசுற விதம்னு எல்லாம் மாறிடுச்சு.அவங்க பேச்சுல மரியாதை இருக்கும்.சில விசயங்கள் என்கிட்ட பேச தயங்குவாங்க..சில நேரம் பயப்பட கூட செய்வாங்க. மீடியா பீப்பிள், வெளியில என்னை பார்க்கற மனுசங்க மாதிரி அம்மாவும் பார்க்கறாங்க.அருண்,சத்யா கூட அம்மா கேட்டகரி தான். எனக்கு இங்க எல்லாரையும் புரியும் மாமா.. இவங்களுக்கு நான் கேகேவா தெரியறேன்னது தான் என் கவலையும் வருத்தமும்” உணர்ச்சி வசப்பட்டு பேசியவனின் குரல் கரகரத்தது.
“டேய் கார்த்திக்”
தொண்டையை செருமியவன், “சில வேளை எனக்கே என்னை நினைச்சி சிரிப்பா இருக்கும் மாமா.இவங்க என்னை பார்க்கற விதத்துல, ‘சாதாரண கீ போர்ட் பிளேயருடா கார்த்திக் நீ.அப்படி என்ன பிரபலம்? ரொம்ப பில்டப் பண்றாங்கடா உன்னைய!’ன்னு என் மனசாட்சி கூட கிண்டல் பண்ணும்”என்று விட்டு அரவிந்த் முகம் பார்க்க அவன் விழித்துக் கொண்டிருந்தான்.
“ரொம்ப பேசி அறுக்குறேன்ல?” சிரித்தான்.
“ப்ச்ச்! உன்னை நீயே போட்டு ரொம்ப குழப்பிக்கற கார்த்திக்! செலிப்பிரட்டீஸ் யாரும் இங்க கல்யாணம் பண்ணிக்காம இருக்காங்களா?”எனக் கேட்டவனுக்கு அவன் பக்கம் புரிந்தாலும் கார்த்திக் தன்னைத் தானே தேவையில்லாமல் குழப்பிக் கொண்டிருக்கிறான் என்றே தோன்றியது.
கார்த்திக்கின் அமைதி இவனை யோசிக்க வைக்க,
“நீ சொல்ற மாதிரின்னா ஷக்தி கூட இப்போ மீடியா பேர்சன் தானே? அவளுமே பெரிய பிளே பேக் சிங்கரா ஆக வாய்ப்பிருக்குல்ல?” என்றான் அரவிந்த் கேள்வியாக.
“நீ இப்படி சந்தோசப்படறத பார்த்து நான் என்னன்னு நினைக்கற?? கேட்டா ஜஸ்ட் லைக் ஹேர்ன்னுவ!”
‘இந்த ஜென்மத்தில இவன் கல்யாண பண்ணிக்க மாட்டான்’
“மாமா.சரி அதை விடுங்க. ஆனா ஒரே ஃபீல்டுல இருக்கறவங்க மேரேஜ். ப்ச்!நிச்சயமா இது சரி வராது.ஒரே ஃபீல்டு, இதனால ஃப்யூச்சர்ல பெர்சனல் லைஃப்ல இஸ்யூஸ் வரும்.சோ,இந்த பேச்சை இதோட விட்டுடுங்க”என்றான் பேச்சை தொடர விருப்பமற்று.
“கார்த்திக்..உனக்காகவா இவ்வளவு யோசிக்கற?நம்ப முடியலயே?”
தலையாட்டி மறுத்து புன்னகைத்தவன்,“சொன்னா முறைக்க கூடாது” எனும் பீடிகையுடன்,
“ஷக்திக்காக”என்றான்.அதற்கு அரவிந்த் முறைக்க,அந்நேரம் கோபத்தோடு கார்த்திக் முன் வந்து நின்றாள் ஷக்தி.
அவள் வருகை ஆண்கள் இருவருக்குமே அதிர்ச்சி தான். அதிலும் ஷக்தி முகத்தில் இருந்த கோபம் கார்த்திக் பேசியதை அவள் கேட்டுவிட்டதாக உணர்த்த, கார்த்திக் திகைப்பு மாறாமல் அவளையே பார்த்திருந்தான். அவனை முறைத்து விட்டு அரவிந்தின் பக்கம் திரும்பியவள்,
“அண்ணா”என்றழைத்தாள் சற்று கடுப்புக் குரலில்.
“என்னமா?”- பவ்யமாக அரவிந்த.
மேசையில் இருந்த தண்ணீர் போத்தலை காட்டி,”அந்த வாட்டர் பாட்டலை எடுத்து தந்துட்டு,ஒரு பத்து நிமிசம் பார்க்கிங்ல வெயிட் பண்றீங்களா?”என கேட்க,
சரி எனும் தலையாட்டலுடன் அரவிந்த் போத்தலை எடுத்து கொடுத்து விட்டு செல்ல, அடுத்த நொடி மொத்த நீரையும் தன் முன்னால் நின்றிருந்தவனின் தலையில் கவிழ்த்திருந்தாள் ஷக்தி.