தலையிலிருந்து தண்ணீர் வழிய அதிர்ச்சியில் கண் சிமிட்டல் வேலை நிறுத்தம் செய்திருக்க தன்னைப் பார்த்தவனை,பார்த்திருந்த ஷக்தியின் கண்களில் கோபக் கணல்.
பல்லைக் கடித்துக் கொண்டு நிலத்தில் ஒற்றை காலை உதைத்தவள்,இரு கைகளையும் அவன் கழுத்துக்கு கொண்டு சென்று கார்த்திக்கை நெறிப்பது போல் பாவனை செய்தாள்.
அவன் எதுவோ இயம்ப முற்பட, இவள் முறைப்பு கார்த்திக் பேச்சை முடக்கிப் போட்டது.
பற்கள் அரைபட,“பிடிக்கும்னு சொல்வாராம்,எனக்காக யோசிப்பாராம் கேட்டா லைக் பண்றாங்களாம்.ஆனா காதல் மட்டும் இல்லையாம்!” என்றாள் ஷக்தி.
“ஷக்தி!!”அதிர்ந்து அவன் அழைக்க,
“சுப்!!பேசனீங்க, உண்மையாவே கழுத்தை நெரிச்சுடுவேன்”என்றாள் அதே செய்கையுடன்.
இவன் விழிகள் விரிந்தது.
“இப்போ நான் உங்களை கேகேவா பார்க்கறேன்னு சொன்னேனா? சொல்லுங்க கார்த்திக் சொன்னேனா?” உஷ்ண மூச்சை வெளியிட்டவளைக் கண்டு இவன் தலை தானாக இல்லையென்றசைந்தது.
“முன்னாடி பார்த்தேன்!உங்க மேல ஒரு வியப்பு, ஆர்வம் இருந்தது உண்மை. இல்லைன்னு மறுக்க மாட்டேன்.ஆனா இப்போ,இந்த நிமிசம் இல்லை! ஏன்னா உங்களை நான் எனக்கான, என் கார்த்திக்கா பார்க்கறேன்! யெஸ்!உங்களை நேசிக்கிறேன். விரும்பறேன், காதலிக்கறேன்!நீங்க எப்டி இருக்கீங்களோ அப்படியே உங்களை விரும்பறேன்.உங்க அமைதி,உங்க கீபோர்ட்,அதை இசைக்கிற விரல்கள் எல்லாத்தையும் நேசிக்கிறேன். கார்த்திக்கு உள்ளே இருக்கிற கேகேவ எவ்வளவு பிடிக்குமோ.. அதை விட அதிகமா கேகே-க்கு பின்னாடி உள்ள கார்த்திக்கை காதலிக்கறேன்!” என்றவளுக்கு உணர்ச்சிவசப்பட்டதன் விளைவாக கண்ணீர் வழிய, அதை துடைத்து விட்டு, அதிர்ச்சி விலகாமல் தன் மீதே பார்வை பதித்திருப்பவனை நோக்கினாள்.
“உங்க மேல உள்ள என் உணர்வுகளை,உங்களை போல பிடித்தம்,காதல்னு வேற வேற மாதிரி எனக்கு பார்க்க தெரியல கார்த்திக்!உங்களை மாதிரி பொய் சொல்லவும் முடியாது”என்று கூறி கண்ணீர் தடத்தை அழித்து விட்டு,
“கேகேன்ற மியூசிஸியனைத் தாண்டி என் ரசனைகள் போக வாய்ப்பிருக்குன்னு எப்போ உங்க கிட்ட சொன்னேனோ.. அப்பவே அந்த கோட்டை தாண்டிட்டேன் நான்!ஈர்ப்பு,மாயை,பிடித்தம் நீங்க என்ன பேர் வெச்சுக்கிட்டு உங்களை ஏமாத்திகிட்டாலும் எனக்கு உங்க மேல இருக்குற அன்பு காதல் தான்!”என்றாள்.
அவள் காதல் சொன்ன விதத்தில் கார்த்திக்கிற்கு வார்த்தைகள் மறந்தன. அவளிடமிருந்து இத்தனை வேகத்தை எதிர் பார்த்திருக்காதவன் பதில் இயம்ப முடியாமல் வார்த்தைகள் மறுக்கப்பட்டது போல் இமைக்காது அவளையே பார்த்திருந்தான்.
அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையிலும் அவனுக்கான நேசம் வெளிப்பட்டதை உணர்ந்து தான் இருந்தான் கார்த்திக். அடிக்கடி சந்திக்க நேரிடும் அவள் கண்களில் இருக்கும் தனக்கான நேசத்தை கண்டு கொண்டவன் தான் அவளிடமிருந்து விலகிச் சென்று அவளையும் விலக்கி வைத்திருக்க அதையெல்லாம் ஷக்தியின் பேச்சு மெல்ல மெல்ல தகர்த்து கொண்டிருந்ததை அறிந்தவனிடத்தில் மெல்லிய அதிர்வு!இதழ் கடையில் சிறு புன்னகை அரும்ப,
“தள்ளிப் போயிடு ஷக்தி..” தனக்குள்ளாகவே முணுமுணுத்துக் கொண்டான்.
அவனையே பார்த்திருந்த ஷக்திக்கு எத்தனை முயன்றும் கன்னத்தில் கண்ணீர் வழிந்து விட இவனுக்கிங்கு பதறியது.
“அழாத ஷக்திம்மா!”என்றான் மென்மையாய்.
அதில் ஷக்திக்கு வந்ததே கோபம். இத்தனை நேரம் தான் மூச்சுப் பிடிக்க பேசியதற்கு பதில் சொன்னானா கடன் காரன்!!
கையிலிருந்த போத்தலை தரையில் விட்டடித்தவள், “ஆமா இதை ஒன்ன மட்டும் சொல்லிடுங்க. நான் அழுதா உங்களுக்கு என்ன? நான் இப்படித்தான் அழுவேன்!” என்றாள் வீம்பு பிடிக்கும் குழந்தையாய், கன்னத்தில் வழியும் கண்ணீரை துடைக்காது.
மெல்லிய புன்னகை அவனிடம். அதில் அவளின் முறைப்பின் அளவு கூடியது.
“என்னை அழ வெச்சுட்டு நீங்க சிரிக்கறீங்கல்ல?” என வெடித்தவள்,
அதற்கு பதில் கூற வந்தவனை பேச விடாமல், “நீங்க சொல்ற,சொல்லப் போற எந்தக் காரணமும் எனக்கு வேண்டாம் கார்த்திக்!உங்க மேல நான் வெச்ச பிரியத்தையும்,மறுத்து இது காதல் எல்லாம் இல்லைன்னு சொல்லிடாதீங்க”என்று திடத்துடன் பேசிக் கொண்டிருந்தவளுக்கு இறுதில் குரல் கலங்கி விட,அவன் முகம் பாராது விடுவிடுவென அங்கிருந்து அகன்றிருந்தாள்.
அவள் உருவம் மறையும் வரை அவள் மேலிருந்த பார்வையை விலக்கிக் கொள்ளவில்லை அவன்.
கண்களை மூடி மனதின் உள்ளே ஆழிப் பேரலையாய் எழும் அலைகளை ஓய்வடையச் செய்ய முயன்று தோற்றவனாக இதயத்தின் இருப்பிடத்தில் வலது கரத்தை வைத்து அழுத்திக் கொண்டான்.
பெரிய விழிகளில் கண்ணீர் தேங்கி நிற்க அழுகையாய், ஆதங்கமாய், ஆர்ப்பாட்டாமாய் தன் அன்பு முழுவதையும் கொட்டிவிட்டு மறைந்து சென்ற ஷக்தியின் உருவமே அவன் மூடிய விழிகளுக்குள் உலா வந்தன.
போகும் முன் அவளின் கண்கள் வெளிப்படுத்திய அந்த பாவம்!ஷ்ஸ்!!அவளை அள்ளி அணைத்திருக்க வேண்டுமோ?என கார்த்திக்கை நினைக்க வைக்க திடுக்கிட்டு போனவன் இதழ் பிரியா புன்னகையுடன் கண்களைத் திறந்து பிடரியை தடவிக் கொண்டான்.
“நானே,என்னை ஏமாத்திக்க விட மாட்டியா ஷக்தி?”முனகிக் கொண்டவனுக்கு தன்னை நினைத்தே புன்னகை அரும்பிட அவள் வீசி விட்டு சென்ற போத்தலை குனிந்து கையில் எடுத்துக் கொண்டான்.
ஈரம் காயாத தலையுடன், போத்தலும் கையுமாக வெளியில் வந்தவனை பார்த்து நக்கல் சிரிப்பு சிரித்தான் அரவிந்தன்.
“வீட்டுக்கு போய் குளிக்க வேணாம் போல?”என கிண்டலும் செய்ய, முறைக்க முடியாது புன்னகைத்து வைத்தான் கார்த்திக்.
“டோஸ் கொஞ்சம் அதிகமோ?அதை சமாளிக்கத் தான் இப்படி சிரிச்சு வைக்கிறியாடா கார்த்திக்?”அரவிந்த் அடங்காது கேலி செய்ய,
“காரை நீங்களே ட்ரைவ் பண்ணிடுவீங்களா?”எனக் கேட்டான் ஒன்றும் நடவாதது போல.
“டேய்!!”
“பேசிக்கலாம் மாமா”
அரவிந்த் காரை இயக்க, கைகளால் தலையை துவட்டிய படி,
“ஷக்தி போயிட்டாளா?யார் கூட போனா?”என்றான் இவன்.
அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்து விட்டு, “அவங்க அண்ணன் போல.அவர் கூடத் தான் போனா!” என்றவன்,
சாதாரண உடல் மொழியும், புன்னகை முகமுமாக இருந்தவனைப் பார்த்து, “ஷக்தியை அழ வைக்கிற கார்த்திக்!”என்றான் குற்றம் சாட்டும் குரலில்.
“ஸ்டேஜ் பின்னாடி இருந்து வரும் போது கண்ணைத் துடைச்சிட்டே வந்தா.அவங்க அண்ணா வரவும் முகத்துல ஒன்னையும் காட்டிக்கல”என்றவன்,
“நீ ஒரு பொண்ணை அழ வெச்சுருக்க கார்த்திக். சீரியஸ்லி?”
“…”
“உங்க ரெண்டு பேருக்கும் இடையில என்ன நடந்ததுன்னு நான் கேட்க மாட்டேன்.அது உங்க பெர்சனல்! ஆனா நான்,உன்கிட்ட இதை எதிர் பார்க்கல கார்த்திக்!ஷக்தி..”என மேல பேச வந்தவன் கார்த்திக்கின் அமைதியில் பேச வந்ததை நிறுத்திக் கொண்டான்.
பின் வீடு வரையிலும் இருவரும் எதையும் பேசிக் கொள்ளவில்லை. அரவிந்தனும் கார்த்திக்கை கட்டாயப்படுத்த விரும்பாமல் அவன் போக்கிலே விட்டு விட்டான்.
தங்கை முகம் பார்த்தான் சஞ்சய். இத்தனை அமைதியாய் இருந்ததில்லை அவள்.அதுவும் தமையனைக் காணும் போது அத்தனை விடயங்கள் இருக்கும் அவளிடம் பகிர்ந்து கொள்ள. அப்படியிருப்பவள் காரில் ஏறியதிலிருந்து மௌனமாக மட்டுமே இருக்க,கலங்கியிருந்த அவள் முகம் பார்த்து,
“என்னாச்சு பாப்பா? ஒரு மாதிரியா இருக்க?”எனவும் கேட்டு விட்டான் சஞ்சய்.
“தலை வலிண்ணா”என பதில் கொடுத்தவள் இத்தனை அவசரமாய் தமையன் ஊர் வர என்ன காரணம் என அப்போது கேட்டதையும் மறந்து விட்டிருந்தாள்.
வீடு வர,ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை தெளிவு படுத்திக் கொண்டு உள்ளே நுழைந்தாள் ஷக்தி.
கூடத்தில் சஞ்சயின் மனைவி,மகன் உட்பட அனைவரும் அமர்ந்திருந்தனர்.
“அண்ணி நீங்களும் வந்துருக்கீங்களா?”எனக் கேட்டவள்,
“வாங்கண்ணி” என வரவேற்றாள்.
அதில் அனைவரும் ஷக்தியை குழப்பமாய் நோக்கினர்.
வரும் வழியில் சஞ்சயிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்டிருப்பாளே? என்பது அங்கிருந்தவர்களின் எண்ணமாக இருக்க,ஒன்றும் தெரியாது போல் பேசுபவளை ஆராய்ச்சியாக பார்த்திருந்தனர்.
‘உங்க அண்ணா கிட்ட கேட்டுக்கலையா?’என சாதனா கேட்க வந்தவள் ஷக்தியின் பின்னால் நின்ற படி ‘ஒன்றும் கேட்காதே’ என தலையசைத்த கணவனின் செய்கை கண்டு அமைதியானாள்.
மனோகரும், பார்வதியும் மகளைக் கவனித்துக் கொண்டு தான் இருந்தனர். சூப்பர் சிங்கரின் பின்னான அவளின் முதல் நிகழ்ச்சி இது.போகும் போது இருந்த மகிழ்வு கூட இப்போது அவள் முகத்தில் தென்படாதிருக்க, ஷக்தியின் தெளிவையும் மீறி கவலை தென்பட்டது. கண்களில் மென் சோகம் இருக்க,பேச்சில் அத்தனை உற்சாகம் இல்லை.
ஆனால் இவருக்குத் தான் பயம் பிடித்துக் கொண்டது.கடந்த ஒரு மாதமாக இப்படித்தான் சோகமே உருவாக வலம் வந்து கொண்டிருந்தவள் இந்தக் கொஞ்ச நாட்களாகத் தான் பழைய நிலைக்கு திரும்பி இருந்தாள்.இப்போது மறுபடியும் என்னானது?போன இடத்தில் யாரும்,எதுவும் பேசி விட்டார்களா? என நினைத்தவர் மகளிடம் கேட்க முயற்சிக்கவில்லை.
மனோகருக்கும் இதே எண்ணம் தான்.மகளின் மனநிலையை மாற்றும் பொருட்டு,
“ஈவென்ட் இன்னிக்கு எப்படி போச்சு ஷக்தி?” என வினவினார்.
அண்ணன் மகனைக் கையில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தவள்,
“நல்லா போச்சுப்பா”என்றாள் சின்ன சிரிப்புடன். கார்த்திக்கோடு உரையாடியது நினைவில் எழுந்தாலும், முயன்று முக பாவனையை சாதாரணமாக வைத்திருந்தாள்.
சற்று நேரம் அவளின் நிகழ்ச்சி பற்றியே பேச்சு தொடர்ந்தது. ஆனால் ஷக்தி அவர்கள் கேட்கும் கேள்விக்கு மட்டுமே பதில் சொல்லிக் கொண்டிருக்க, அருகிலிருந்த மனைவியைப் பார்த்து கண்ணசைத்தார் மனோகர். அதைப் புரிந்து கொண்டவராக,
“இன்னும் யாரும் சாப்பிடல ஷக்தி! உனக்காகத் தான் காத்துட்டு இருந்தோம். போய் பிரெஷ் ஆகிட்டு வா சாப்பிடலாம்”என்று கூற,
சரியென தலையசைத்தவள் விரைந்து,அவசரக் குளியலை போட்டு விட்டு உடை மாற்றி வந்தாள்.
சஞ்சய் கூடத்தில் இருந்த ஷோபாவை இழுத்து ஓரத்தில் போட, தரையில் விரிப்பை விரித்துக் கொண்டிருந்தாள் மதி.
வசதியான ஹால் தான் என்றாலும் டையினிங் மேசை போடுமளவிற்கு இடம் போதாது. ஆட்கள் நிறைந்தால் தரையில் தான் விரிப்பு விரித்து உண்ண வேண்டும்.
வழமையாக என்றால் இப்படி இரவுணவுகள் ஒன்றாக சாப்பிடப் படுவதில்லை. வேண்டும் பொழுது அவரவரே தட்டில் உணவிட்டு ஹால் சோபாவில் அமர்ந்த படி சாப்பிட்டு எழுந்து விடுவார்கள்.
சஞ்சயின் குடும்பம் இங்கு வரும் சமயங்களில் மக்களோடு ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதை வழக்கமாக்கியிருந்தார் பார்வதி. குடும்பத்தோடு இது அவனின் இரண்டாவது வருகை. ஒரு வாரத்தின் முன் நடந்த சூப்பர் சிங்கரின் இறுதிச் சுற்றன்று தங்கைக்காக வந்திருந்தான்.
அப்போது தான் ஷக்திக்கு, தந்தை அண்ணனை அவசரமாய் சென்னை வரக் கூறியாதாகச் சொன்னது நினைவில் வர,மனோகரை ஏறிட்டாள்.
அவரும்,மகளையே தான் பார்த்திருந்திருப்பார் போலும். தலையசைத்து வாவென்று அழைத்தார் சிறு புன்னகையுடன். இப்பொழுதெல்லாம் பெரும் மாற்றம் மனோகரிடம். முன்பிருந்த சிடு சிடு தன்மை மறைந்திருந்தது. முற்று முழுதாக மறையக் காரணம் என்றால் பேரனின் வரவு தான். ஷக்தியின் பிரச்சனைக்கு பிறகு பிள்ளைகளைப் புரிந்து கொள்ள முயன்றார். முன்பெல்லாம் மனைவி மூலம் தான் பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பு, படிப்பு என அனைத்தையும் கேட்டுக் கொள்வபவர் இப்போது சிறிது நேரம் உட்கார்ந்து மகள்களிடம் பேசி விட்டுத் தான் தூங்கவே செல்வார்.
மலர்ந்த முகத்துடன் தந்தையின் அருகில் வந்தமர்ந்து கொண்டாள் ஷக்தி.இன்றைய நிகழ்ச்சியில் கிடைத்த பணத்தை நீட்டினாள்.
மகள் கையைப் பிடித்து பணத்தை உள்ளங்கையோடு மடித்தவர்,
“அம்மாட்ட கொடு மா!”என்றார் வாஞ்சையாய்.
“ப்ச்ச், ப்பா!பைனல்ல வந்த பணத்தை தான் வாங்க மாட்டேன்னீங்க. இதையாவது வாங்கிக் கோங்கப்பா ப்ளீஸ்” இறைஞ்சினாள் ஷக்தி.
“சரி. அதுலருந்து ஒரு நூறு ரூபா மட்டும் எடுத்துக்கொடு ஷக்தி!”
“ப்ப்பா!”
“இப்போ உன்கிட்ட வாங்கலைன்னா என்ன?எனக்கு பணம் தேவைப்பட்டா உங்களை கேட்காம யார் கிட்ட கேட்கப் போறேன்”என சமாதானமாய்ப் பேச, முறுவலுடன் நூறு ரூபாய் தாளைக் கொடுத்தாள்.
‘என் மகள் உழைத்த பணம்’ கர்வமாய் நினைத்தபடி மனம் நிறைய அதை வாங்கிக் கொண்ட மனோகர்,மகளை ஆதூரமாய் பார்த்தார்.
“என்கிட்ட என்னப்பா சொல்லணும்?” தந்தையின் பார்வையை வைத்து அவள் கேட்க,
மகள் கரங்களைப் பிடித்து தட்டிக் கொடுத்த படி,
“உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு நினைக்கறேன் ஷக்திமா!” என்றார்.
“ப்பா!”என்றவளுக்கு மீதியைப் பேச முடியவில்லை.என்ன சொல்வது? எதைக் கேட்பது?கார்த்திக்கைப் பற்றியும் சொல்லி விட்ட பிறகு அவனையன்றி வேறு யாரினதும் கரம் பற்ற முடியுமா? முதலில் அவனுக்கே தன் மீது அபிப்பிராயாம் இல்லாது விடத்து..? அவளுள் கேள்விகள் மளமளவென முளைத்து நிற்க,இதற்குத் தான் அவசரமாய் தமயனையும் அழைத்தாரோ என நினைத்தவள்,கலக்கமாய் தந்தை முகம் நோக்கினாள்.
“ப்பா,இப்போ.. அது கொஞ்ச நாள் போட்டும் பா”
அவள் தடுமாற்றத்தில் சிரித்தவர்,
“அப்பா மேல நம்பிக்கை இருக்குல்லப்பா”என வினவ,
“ப்பா!”என்றாள் மகள் தவிப்பாய்.
“அப்பாவும் மகளும் அப்படி என்ன ரகசியம் பேசறீங்க எங்களல்லாம் விட்டுட்டு?”என்றபடி இருவரின் பேச்சிலும் இடை புகுந்தார் பார்வதி.
“உனக்கு தெரியாம நாங்க என்ன பேச?”எனக் கேட்டார் மனோ. ஷக்தி, தாயின் பேச்சில் அனைவரையும் பார்க்க, மொத்தக் குடும்பமும் இத்தனை நேரமும் தந்தை – மகள் உரையாடலைத் தான் கவனித்துக் கொண்டிருந்தார்கள் போலும். சிரித்தார்கள்.
மனோகரன் சொல்லியதில் இருந்து இன்னுமே மீண்டிருக்கவில்லை ஷக்தி. பார்வதி மகளைக் கலைத்தவர், சாப்பாட்டு பாத்திரங்களை வந்து எடுக்க சொல்ல, தந்தையை ஒரு பார்வை பார்த்து விட்டு அடுக்களைக்குள் நுழைந்தாள்.
“ம்மா!”என்று ஷக்தி பணத்தை நீட்ட,
“உன் அக்கவுண்ட்ல போட்டு வெச்சுக்கோ ஷக்தி”என்றவர்,
“உன் கல்யாண செலவுக்கு நாங்க சேர்த்து வெச்சிருந்தாலும் அந்த நேரம் தேவைப்பட்டா, உபயோகமா இருக்கும்ல”என்றார்.
“ம்மா!! இப்ப என்ன என் கல்யாணத்துக்கு அவசரம்?”என முகம் சுருக்கினாள்.‘என்ன இவரும் திருமணத்தை பற்றியே தான் பேசுகிறார்’ எனத் தோன்றியது ஷக்திக்கு.
“என்னை முறைக்காம,எப்போ பைக் ஷோரூம் போகப் போற சொல்லு? சஞ்சு கேட்டான்” என்றார்.
சூப்பர் சிங்கரில் வெற்றி பெற்ற பணத்தில் அவளுக்கென ஸ்கூட்டி வாங்க சொல்லிருந்தார் பார்வதி. இப்போது அதையே கேட்க,
முறைப்பின் அளவைக் கூட்டியவள்,
“இப்போ நான் தந்த ‘மூனு ஜீரோ’ உள்ள பணம் வேணாம் கல்யாண செலவுக்கு சேமிச்சு வைன்னு சொல்லிட்டு, அதையே ‘அஞ்சு ஜீரோ’ உள்ள காசை ஸ்கூட்டி வாங்க சொல்றியே என்னம்மா உன் கணக்கு!”எனப் பொருமினாள்.
“அதெல்லாம் அப்படி தான் போடி!போய் இந்த பாத்திரத்தை வை. அங்க எல்லாரும் சாப்பிட உக்கார்ந்துட்டாங்க”என சொல்லி கிளப்பி விட்டார்.