வெளியில் பேச்சு வார்த்தை நடக்க தன் அறையில் அண்ணி சாதனாவுடன் அமர்ந்திருந்தாள் ஷக்தி. படபடவென வந்தது அவளுக்கு.பெற்றோரும், அண்ணனும் என்ன முடிவெடுக்க போகிறார்களோ என்ற பதட்டம்.
இன்னேரம் ஷக்தியின் முகத்தில் இருக்கும் கலவரத்தை மதி பார்த்திருந்தால் அவளைக் கிண்டல் செய்து ஒரு வழி ஆக்கிருப்பாள். நல்ல வேளை மதி ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க, ஷக்தியின் திருமணம் பற்றிய பேச்சு தான் வீட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது என்பது தெரிந்திருக்கவில்லை.
முகத்தை சாதாரணமாக வைத்துக் கொள்ள முயன்றாலும் முடியாமல் போக அவள் பதட்டத்தை கண்டு கொண்டாள் சாதனா.
“ஷக்தி?”என அழைக்க வெளியில் கேட்கும் பேச்சு வார்த்தையில் காதை வைத்திருந்தவளுக்கு அண்ணியின் அழைப்பு கேட்கவில்லை.
“ஷக்தி”மீண்டும் ஒரு முறை சாதனா அழுத்தி அழைக்க,
“ஹாங்!அண்ணி”என்றாள் முழித்து.
சிரித்தவள், “எதுக்கு இவ்ளோ பதட்டம்? கல்யாணப் பேச்சு வந்தா பொண்ணுங்களுக்கு டென்ஷன் வரது இயல்பு தான்.ஆனா உன் முகத்துல பயம் இருக்கே.அப்படி என்ன பயம்?உன் விருப்பத்தை தாண்டி இங்க யாரும் போக மாட்டாங்கன்னு தெரியும் தானே?”எனக் கேட்டவள், ஷக்தியின் கண்களில் தெரிந்த அலைப்புறுதலில் யோசனையாகப் பார்த்தாள்.
வீட்டில் கல்யாணம் பற்றி பேசப்படுகையில் பெண்களுக்கு எழும் சாதாரண பதட்டமென இவள் நினைத்திருக்க இந்த அலைப்புறுதல் வேறு எதையோ உணர்த்தியது.
இங்கோ ஷக்தி மனதுக்குள் வேண்டாத கடவுள் இல்லை. என்னென்னவோ வேண்டுதல் வைத்தாள்.இந்தப் பேச்சை தந்தை இதோடு விட்டு விட்டால் போதும் என நினைத்தாள். ஆனால் என்றாவது ஒரு நாள் இதை செயற்படுத்த தானே வேண்டும்? நினைக்க நினைக்க ஷக்திக்கு தொண்டையெல்லாம் அடைத்துக் கொண்டது.
இதனைத்தையுமே அவதானித்துக் கொண்டு தான் இருந்தாள் சாதனா. மெதுவாக எதுவோ புரிவது போலிருக்க, ஷக்தியை தன் பக்கம் பார்க்கச் செய்தவள்,
“ஷக்தி நீ யாரையாவது விரும்பறியா?”எனக் கேட்டே விட்டாள்.
“அண்ணி”என்றாள் நடுங்கும் குரலில்.அதிலே அது தான் விடயம் எனப் புரிந்து போனது. அவளும் இதையெல்லாம் கடந்து வந்தவள் தானே.
மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் ஷக்தி முகம் காட்டிய பாவனை சிரிப்பை வரவழைத்தது சாதனாவிற்கு.
“எத்தனை வருசமா நேசிக்கறீங்க?” எனக் கேட்டாள்.
“அண்ணி!”அழுதுவிடுபவள் போல் கூறியவள்,
“நா..நான் இன்னும் உங்க முதல் கேள்விக்கே பதில் சொல்லலண்ணி”என்றாள் பாவமாய்.
“அதெல்லாம் கண்டு பிடிச்சாச்சு ஷக்தி. இப்போ கேட்டதுக்கு பதில் சொல்லு” என சாதனா சிரிக்க, மறுக்க வந்தவளைப் பார்த்து,
“பொய் சொல்லி தப்பிக்க பார்க்காதே”என மிரட்டினாள்.
“அது வந்தண்ணி..”என தொண்டை உலர கூறியவளுக்கு, வெளியில் கேட்ட தந்தையின் பேச்சில் நெஞ்சுக்கூடு உலர்ந்து போனது.
“அன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்தாரே ராமச் சந்திரன்,நம்ம ஷக்தியை என்கிட்ட பொண்ணு கேட்டாரு!ஆனா மறுநாளே எனக்கு கால் பண்ணி அவர் பையன் கார்த்திக்கு விருப்பமில்லையாம்னு சொல்லிட்டாரு” மனோகரன் சொல்லிக் கொண்டிருக்க, ஷக்திக்கு மனதின் ஓரத்தில் சுருக்கெனும் வலி!அடைத்துக் கொண்ட தொண்டையைத் தாண்டி கேவல் வெளிவரும் போல் இருந்தது.
கார்த்திக்கையும், இவளையும் இணைத்து காணொளி வெளியான அடுத்த நாள் அவன் குடும்பம் தன் வீடு வந்திருந்த போதே கேட்டு விட்டாரா?சந்திரன் கேட்டதும் தெரியாது, கார்த்திக் அதற்கு மறுப்புச் சொன்னதும் தெரியாதே! தந்தையும் இதை தன்னிடம் காட்டிக் கொள்ளவில்லையே!ஏன்?தன் விருப்பம் தெரிந்தவர் இதை அறிந்து கொண்டால் உடைந்து விடுவேன் என்றா?
அப்போதே மறுப்புத் தெரிவித்தவனிடத்தில் போய் அல்லவா மீண்டும் நான் காதலை வெளிப்படுத்தி இருக்கிறேன்! என்னை என்ன நினைத்திருப்பான்? தன்னையே தாழ்வாக நினைத்துக் கொண்டவளுக்கு கார்த்திக்கின் மேல் அப்படி ஒரு கோபம்.
“எப்போவோ இதெல்லாம் நடந்திருக்கு,ஆனா நீங்க என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலெல்ல?”என அங்கு பார்வதி கணவனிடம் மல்லுக்கு நின்றார்.
பின் அவரே, “அவங்க வேண்டாம்னதால தான் சொல்லலையா? எனக் கேட்கவும் செய்தவர்,
“அது எப்படி அந்தப் பையன் கார்த்திக் என் பொண்ணை வேண்டாம்னு சொல்லலாம்” என்றார் பொருமலாக.தாயின் பேச்சில் புன்னகைத்துக் கொண்டாள் ஷக்தி.
“பாரு, என்னை சொல்ல விடேண்டி..!”என்ற மனோகரன்,
“பார்த்த அன்னைக்கே கேட்டது எனக்கும் அதிர்ச்சி தான்,ஆனா எனக்கு நிறைய யோசிக்க வேண்டி இருக்க, பதிலா எதுவும் சொல்லல”என்றார்.
“….. “
“ம்ம்ம்!அவங்க காலச்சாரம், பழக்க வழக்கம் எல்லாம் நம்மது மாதிரி இல்லையே.. வசதியான குடும்பமும் கூட.அதுவுமில்லாம அன்னைக்கு இருந்த சூழ்நிலை சரியில்ல. மீடியால அவ்ளோ பேச்சு நம்ம பொண்ணு பத்தி. அதுவும் அந்தப் பையனோடவே!என்னால எப்படி சம்மதம் சொல்ல முடியும்.மீறி சம்மதம் சொன்னா வெளில பேசிக்கிட்டதை நாம உண்மையாக்கற போல ஆயிடும்ல?” என்றவர் மனைவி, மகன் முகம் நோக்கினார்.
சஞ்சய் மௌனமாய் இருக்க, பார்வதி பேசினார்.
“வெளில பேசிக்கிறவங்க பேசிக்கிட்டே தான் இருப்பாங்க. அதெல்லாம் நினைச்சு கவலைப் பட்டுக்க முடியுமா என்ன? நீங்க சொல்ற காரணங்கள் சரி தான். ஆனா எனக்கு என் பொண்ணு விருப்பம் தான் முக்கியம். நமக்கும் பிடிச்சி அவளுக்கும் பிடிச்சிருந்தா தான் அவளுக்கு மேற்கொண்டு கல்யாணப் பேச்செல்லாம்,அது யாரா இருந்தாலும் சரி!”என்றார் இலகுவாய்.
மகளைப் பற்றி அக்காணொளி வெளிவந்த சமயம் பதறியிருந்தார் தான். ஆனால் விரைவில் அதிலிருந்து மீண்டு இலகுவாய் கடந்து விட்டவர், மற்றவர்களையும் கடக்கச் செய்திருந்தார். சொந்தம்பந்தம், பக்கத்து வீடு என எவர் பேசியதற்கும் பதில் சொல்லவில்லை. சொல்லப் போனால் காதில் கூட போட்டுக்கொள்ளவில்லை பார்வதி.
“…..”
“கேட்டவங்களே வேணாம்னு சொல்லிட்டாங்க. அவர் பையன் கிட்ட விருப்பம் கேட்காம அவசரப்பட்டார்னு நினைக்கிறேன்! அந்த தம்பிக்கு விருப்பம் இல்லாதப்போ…ஹ்ம்ம்,அதுவும் சரி தானே!”என்றவர்,
“ஆனா கார்த்திக் நல்ல பையன்”என அங்கலாய்த்தார்.
புன்னகைத்த மனோகர்,“ம்ம்!நல்ல பையன் தான்!அதான் அந்தப் பையனையே நம்ம ஷக்திக்கு கேட்கலாம்னு இருக்கேன்”என்றார்.
“என்ன?!!!!”கேட்டுக் கொண்டிருந்த ஷக்தி உட்பட அனைவரினதும் கேள்வி இது தான்.
“ப்ப்பா,அவங்க தான் வேணாம்னு சொல்லிட்டாங்களே?விருப்பம் இல்லாதவரைப் போய்.. ப்ச்!”சஞ்சய் சொல்ல,
“ராமச் சந்திரன் சொன்னது, அவர் மகனுக்கு இப்போதைக்கு கல்யாணத்துல விருப்பமில்லைனு தான்”என்றவர்,
“அவர் பேசி அடுத்த நிமிசமே அந்தப் பையனும் எனக்கு ஃபோன் பண்ணார்”என்று கார்த்திக் பேசியதை பகிர்ந்து கொண்டார்.
முதலில் அழைத்த சந்திரன்,
“நேத்து அந்த சூழ்நிலைல நான் அப்படி கேட்டிருக்க கூடாது. அதுக்கு நீங்க என்னை மன்னிக்கனும்.ஒரு நாள் பொறுமையா சந்திச்சு கேட்டிருக்க வேண்டியது” என்றார்.
“எதுவா இருந்தாலும் சொல்லுங்க சந்திரன்” என ஊக்கினார்.
“ஹ்ம்ம்,அது பொண்ணு கேட்ட நாங்களே இப்படி சொல்லக்கூடாது தான். வந்து.. என் பையன் இப்போ இருக்குற வேலை பத்தி உங்களுக்குத் தெரியும்.மீடியா, நிரந்தரம் இல்லைன்னு தான் எனக்குமே அவன் மேல வருத்தம் இருக்கு!கொஞ்ச நாள் தான் இந்த வேலை,பெயர்,புகழ் எல்லாம் இங்க நிலைக்கும்னு தெரிஞ்சும் எதுக்காக இதை செய்யறான்னு ஆதங்கம். ம்ப்ச்,இப்போ என்னடான்னா இதைச் சொல்லியே இப்போதைக்கு கல்யாணம் வேணாங்கறான் ” என்றவர் சிறிது நேரம் மௌனம் காத்தார்.
சொல்லப் போனால் திடுதிப்பென்று சந்திரன், ஷக்தியை பெண் கேட்கும் போது மனோகர் யோசிக்க வேண்டி இருந்த காரணங்களில் கார்த்திக்கின் வேலை பற்றிய யோசனையும் இருந்தது உண்மை. மகள் விருப்பம் சொன்ன போது கூட அவருக்கு இது தோன்றி இருக்கவில்லை.சந்திரன் கேட்கவே இந்த எண்ணம். காணொளிகள் வெளிவந்த சில மணித்தியாலங்களிலே கார்த்திக்கின் குடும்ப பின்னணி பற்றி அவருக்கு தெரிய வந்திருந்தது.
பூர்வீகம் கேரளா, வசதியான குடும்பம் என்றும் அதோடு கார்த்திக்கின் வேலை விடயங்கள் பற்றியும்.
என்ன தான் இசைத் துறையில் இருந்தாலும் நிரந்தரமான வேலை இல்லாத பட்சத்தில் மகளுக்கு அப்படியொரு எதிர் காலம் அமைவது உவப்பானதாக இல்லை. மனோகரையும் குற்றம் சொல்ல முடியாது!சாதாரண நடுத்தர வர்க்க தந்தையின் எண்ணம் அவருடையது.
மகளுமே இந்தத் துறையில் சார்ந்து இருந்தாலும் ஷக்தியை மீடியா வெளிச்சத்தில் பாட வைக்கும் போது அவருக்குமே தயக்கமும், பயமும் இருந்தது. இன்னுமே இருக்கிறது. அப்படியிருக்க மகளிடம் முன்பே சொல்லி விட்டார். பாட வாய்ப்புக்கள் கிடைக்கும் பட்சத்தில் பாடுவது உனதிஷ்டம் என்றும் ஆனால் நிரந்தரத் தொழிலாக இதையே நம்ப வேண்டாம் என்றும்.
இசை இளங்கலை முடித்த பின் விருப்பம் இருக்கும் பட்சத்தில் மேல் படிப்புக் கூட படிக்க சொல்லியிருந்தார்.
இப்போது ராமச் சந்திரனும், கார்த்திக்கும் இதையே சொல்லி தங்களையும் யோசித்திருக்க அவர்கள் மேல் இன்னும் மதிப்பு அதிகரித்தது மனோகருக்கு. சந்திரன் நினைத்தால் சொல்ல முடியுமல்லவா, தங்களிடம் குடும்பத் தொழில் இருக்கிறது உங்கள் பெண்ணைத் தரலாம் என. அப்படியின்றி தன்னிடத்தையும் எண்ணி யோசித்து மகனுக்காகவும் பேசுகிறார் என புரிந்தது.
“என் பையன் திறமை இல்லாதவன்னு நான் சொல்லல மனோகர்.அவன் செய்யற இந்த வேலையை நான் குறைவாவும் நினைக்கல!அவன் சாதிக்க நினைக்கறான்.எனக்கு நம்பிக்கை இருக்கு எப்படியும் இந்த துறைல சாதிச்சிடுவான் எங்க கார்த்திக்”என சொல்லிக் கொண்டவரிடம் மகனை நினைத்து பெருமை தான்.
ஆனால் இதையெல்லாம் அவர் மனைவியிடமோ,மகனிடமோ வெளிப்படுத்தியது இல்லை.
‘அஞ்சுக்கும் பத்துக்கும் எதுக்கு உன் பையன் ரோடு ரோடா அதை தட்டிட்டு திரியுறான். உன்கிட்ட இல்லாத பணமாப்பா சந்திரா’ என சொந்தங்கள் பேசுகையில் வரும் கோபத்தில் தான் மகனிடம் இசைத் தொழிலை விட்டுவிடச் சொல்லி வீம்பு பிடித்தார்.
சில நேரங்களில் கார்த்திக் கலந்து கொள்ளும் வெளி நிகழ்ச்சிகளில் சொற்பளவான வருமானமே வருவது தெரிய, ‘இவனுக்கென்ன தலையெழுத்தா?’ எனத் தோன்றாமல் இல்லை. அதிலும் மனித உணர்வுகளை மதிக்காது மீடியாக்களில் இஷ்டத்திற்கு பேசப்பட,மகன் இதை விட்டு விட வேண்டும் எனும் எண்ணம் வலுப்பெற்றது.
கார்த்திக் இசை வட்டத்தில் யாரையோ விரும்புகிறான் என யூகத்தில் பேசப்பட்ட செய்தியால் கொதித்துப் போய் மனைவியிடம் சத்தம் போட்டிருந்தார் சந்திரன். மீடியாவிற்குள் நுழைந்த இத்தனை வருடங்களில் மகனைப் பற்றி இப்படியெல்லாம் பேச்சு வந்ததில்லை. கார்த்திக்கை முழுமையாக அறிந்தவர். அவன் ஒழுக்கத்தை, கண்ணியத்தை எவருமே குறை கூறிவிட முடியாது. அப்படியிருந்தும் மகனையும் இதில் இழுத்து விட்டார்களே எனும் ஆற்றாமையில் இருந்தவரை, அமைதிப் படுத்தியது என்னவோ அரவிந்தன் தான்.வய் சேனல் கிஷோர் வேலை என்று சொல்லிருந்தான்.
ஒரு வழியாக எல்லாம் சரியாகப் போய் கொண்டிருந்த நேரத்தில் கார்த்திக்கையும், ஷக்தியையும் இணைத்து வந்த காணொளியால் நேரடியாக மகனையே பேசி விட்டார்.அதில் அவருக்குமே வருத்தம் தான். ஆனால் அடுத்த வீட்டுப் பெண்ணை, அவர்கள் பெற்றோர்களின் மனநிலையை, உணர்வுகளைப் பார்க்காது இஷ்டத்திற்கு இவர்களே கற்பனைக் குதிரையை பறக்க விடலாமா? மகனும் இதில் சம்பந்தப்பட்டிருக்க ஷக்தியின் குடும்பத்தை பார்க்க விரைந்து விட்டார்.
இதைக் கேள்விப்பட்டு சந்திரனை அழைத்த அரவிந்தன், கார்த்திக்கிற்கு, ஷக்தி மீது விருப்பம் இருக்கலாம் என்பது போல் மேலோட்டமாக கோடிட்டு காட்டியிருக்க,மனோகரின் குடும்பத்தை சந்தித்ததில், முகத்தில் சிறு சுணக்கம் கூட இன்றி தங்களை வரவேற்றவர்களை சந்திரனுக்குமே பிடித்துப் போனது. அதனாலயே பட்டென பெண் கேட்டு விட்டார். ஆனால் கார்த்திக் மறுப்பான் என எதிர் பார்த்திருக்கவில்லை.