“கார்த்திக் தான் கல்யாணத்துக்கு இன்னும் கொஞ்ச வருஷம் போட்டும்றான். ஆனா,ஷக்தி எங்க வீட்டுப் பொண்ணா வர்றதுல எங்க எல்லாருக்கும் சம்மதம் மனோகர். பொண்ணை பெத்தவங்க நீங்க! உங்க விருப்பம் தான் முக்கியம். பொண்ணுக்கு வேற வரன் பார்க்கறதுன்னாலும், பரவால்ல மனோ.ஹ்ம்ம்!யார் யாருக்குன்னு அந்த ஆண்டவன் எழுதி வெச்சிருப்பான்.நாம எதையும் மாத்த முடியாதுல்ல!” என்றிருந்தார் சந்திரன் இறுதியாக பேசும் போது.
மனோகருக்கு தான் என்ன பதில் கொடுக்கவென தெரியவில்லை.
சந்திரன் பேச்சிலிருந்து புரிந்து கொண்டார்,தங்கள் மகளை விட அவர்களுக்கு மனதில்லை என. ஆனால், சந்திரன் ஒரு வார்த்தை கூட அதைப் பற்றி கட்டாயப்படுத்திப் பேசவில்லை. அதனாலேயே அவரை நிரம்ப பிடித்துப் போனது மனோகருக்கு. இருவரினது உரையாடலும் சினேகிதமாகவே நிறைவு பெற்றது. இருவரும் நட்பு பாராட்டிக் கொண்டனர்.
சந்திரனுடன் பேசி விட்டு என்ன முடிவெடுப்பதென மனோகர் யோசனையில் இருக்கும் போதே கார்த்திக் அவருக்கு அழைத்தான்.
தந்தை பேசிய அடுத்த நிமிடமே அழைப்பது சரியில்லை எனப் புரிந்தாலும்,மனோகரிடம் எதைப் பேசி வைத்தாரோ எனப் பதட்டத்தில் அழைத்து விட்டிருந்தான் அவன்.
“ஹலோ யாரு?”என மனோகர் கேட்க,
தயங்கி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் கார்த்திக்.
இவன் அழைப்பில் மனோகருக்கு சற்று திகைப்பு தான்.தந்தை அழைத்துப் பேசிய இரண்டாவது நிமிடமே மகனின் அழைப்பு.
“சார்?”என கார்த்திக் விளிக்க,
“சொல்லுங்க தம்பி”என்றார் மனோகர்.
“அது,அப்பா பேசிருப்பார்னு நினைக்கிறேன்.உங்களை சங்கடப் படுத்தற மாதிரி எதுவும் சொல்லிருந்தா,அவர் சார்பா நான் மன்னிப்பு கேட்டுக்கறேன் சார்!” என்றான்.
புன்னகைத்தார் மனோகர்.அவன் அழைப்பும்,பேசிய விதமும் முறுவலைத் தான் தோற்று வித்தது அவருக்கு.பேச்சில் அத்தனை தயக்கமும், சங்டமும்.சற்று முன் சந்திரன் பேசியதைப் போல.
முதன் முதலாக ஷக்தியின் ஆடிசன் அன்று கார்த்திக்கோடு பேசியிருந்தவர் அதன் பின் ஓரிருமுறை அவனைச் சந்திக்க நேர்ந்தும் பேசியதெல்லாம் இல்லை. அவரைக் காணும் போது தெரிந்த விதமாக தலையசைத்து சிறு புன்னகை புரிவான். இவருமே புன்னகைத்து கடந்து விடுவார். ஆனால் கார்த்திக்கின் மீதான மகளின் விருப்பம் தெரிந்ததில் இருந்து இவன் யோசனை தான்.
“சார்?”மனோகரின் அமைதியில் மீண்டும் அழைத்தான் கார்த்திக்.
“ம்ம்,பேசினார் தம்பி!சங்கடப் படுத்தற மாதிரி எதுவுமே பேசல உங்கப்பா.நீங்க லகுவா இருங்க. சொல்லப் போனா நானும், சந்திரனும் நண்பர்களாயிட்டோம்” என்றார் சிறு சிரிப்புடன் அவனைப் புரிந்தவராக.
மனோகர் சொல்லவும் தான் அதுவரையிலும் இழுத்துப் பிடித்து வைத்திருந்த மூச்சு ஆசுவாசமாய் வெளிவந்தது கார்த்திக்கிற்கு. படபடப்பு மெல்லக் குறைந்தது.
தான் சொன்ன காரணத்தை தவிர்த்து, அதிகமாய் தந்தை எதையும் சொல்லவில்லை எனப் புரிய,தன் பங்கிற்கு மனோகரிடம் தனக்கான காரணத்தை விளக்க முயன்றான் கார்த்திக்.
“எனக்கான அடையாளத்தை நான் இன்னும் அடையல சார்.அதான் அதுவரைக்கும் கல்யாணம்..” என்று நிறுத்தியவன்,
“ஹ்ம்ம், அப்பா திடீர்னு அந்த சூழ்நிலைல அப்படி கேட்பார்னு எதிர் பார்க்கல. அதோட அந்த வீடியோவும். சாரி சார்! என்னால உங்களுக்கு சங்கடம்” என்றான் வருத்தத்துடன்.
தன்னையும், ஷக்தியையும் இப்படியெல்லாம் இணைத்து பேசி விடக்கூடாதே என நினைத்து தான் அவளிடமிருந்து அத்தனை விலகிருந்தான். அப்படியிருந்தும் சாத்தியமே இல்லாத ஒன்றை, பார்வையாளர்களின் கற்பனைத் தீனிக்காக அதற்கொரு வடிவமொன்றைக் கொடுத்து காணொளியாக வெளிவந்ததில் கோபத்தோடு,வருத்தமும் இருக்கவே செய்தது இவனிடம்.
“அப்படிலாம் இல்ல தம்பி. உங்களுக்கும் அந்த வீடியோவுக்கும் சம்பந்தம் இல்லைன்னு எனக்குத் தெரியும்.அப்டி இருக்கும் பட்சத்தில நீங்களும் உங்கப்பாவும் அத்தனை மன்னிப்புக் கேட்டுட்டீங்க. ப்ச், இப்பவும் மன்னிப்பு..!நீங்க இப்படி பேசறது தான் எனக்கு சங்கடத்தை கொடுக்குது. இதெல்லாம் கடந்து தான் வரணும்னு இருக்குப் போல. கடந்துடலாம் தம்பி”என்றார் புரிதலாய்.
அவர்களுமே இப்படியொரு பிரச்சனை வருமென்று எதிர்பார்த்திருக்காத பட்சத்தில் தந்தையும், மகனும் இதில் மீண்டும், மீண்டும் மன்னிப்பு கேட்பது உண்மையிலே சங்கடத்தை தான் கொடுத்தது மனோகருக்கு.தன் பெண்ணை யோசித்து, தங்களுக்காக அவ்வளவு தூரத்தில் இருந்து அவர்கள் வந்து பேசியதே, சந்திரனின் மீதும் அவர் குடும்பத்தின் மீதும் தனி மரியாதையைக் கொடுத்தது.
மனோகர் சொல்லிதயதை ஆமோதித்தவன்,வேறென்ன பேசுவதென்று தெரியாமல் அமைதியாக இருக்க,சிறிது நேரம் மனோகரிடமும் மௌனம்.
தன் மௌனம் கலைத்தவர்,
“இசைத் துறைல நீங்க சாதிக்க நினைக்கறதா சொன்னார் சந்திரன். உங்க கனவுக்கு கல்யாணம் தடையா இருக்கும்னு நீங்க நினைக்கிறீங்களா?”என பட்டென கேட்டே விட்டார் மனோகர்.ஏனோ அந்த நிமிடம் கண்ணீர் விழிகளுடன் மகள் கார்த்திக்கை விரும்புவதாக சொன்னதே நினைவில் வர, இப்போது கார்த்திக்.. தந்தைக்காக அழைத்து பேசியதும், அவனிடம் இருக்கும் பணிவும், எளிமையாக பழகும் விதமும் நல்ல அபிப்பிராயத்தை அவன் மேல் விதைத்தது மனோகருக்கு.
மீடியா அன்றி நிரந்தரத் தொழில் செய்தால் அவனுக்கே மகளைத் திருமணம் செய்து கொடுத்து விடும் எண்ணம் ஒரு நொடி தோன்றி மறைந்திருந்தது. அதன் விளைவே இந்த வினா!
இதை எதிர்பாராத கார்த்திக், அவர் வினவலில் என்ன சொல்வதென்று தெரியாது ஒரு நிமிடம் தடுமாறித் தான் போனான்.
‘என் பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஏன் மறுக்கிறாய்?’ என நேரடியாக கேட்க முடியாது,இப்படி கேட்கிறாரோ எனத் தோன்ற ஒரு வகையில் அவன் எண்ணமும் சரி தான்.
தன்னிடம் மட்டுமே கார்த்திக் மீதான நேசத்தை மகள் பகிர்ந்திருக்கிறாள் என ஸ்திரமாக நம்பியிருந்தார் மனோகர்.அதை மெய்ப்படுத்தியது போல் இருந்தது இத்தனை நேரமான கார்த்திக்கின் பேச்சு. மகளின் விருப்பம் அவனுக்கு தெரிந்திருக்கவில்லை, என்பதில் தந்தையாய் சிறு கர்வம் மனிதரிடம்!
அதனாலயே அவருக்கும் தெரிய வேண்டி இருந்தது, மகளைப் பற்றிய கார்த்திக்கின் எண்ணம் என்னவென்று.
“தம்பி?”என மனோகர் அழைக்க,
தன்னிலை மீண்டவன்,
“என் கனவுக்கு கல்யாணம் தடையா இருக்கும்னெல்லாம் நினைக்கல சார். இப்ப வேண்டாமேன்னு தோணுச்சு.ரெண்டு குடும்பத்தோட சங்கமமா இருக்கற கல்யாணம் ரொம்ப பெரிய பொறுப்பு!நம்மல நம்பி வர்ற பொண்ணுக்கு நாம கடமைப் பட்டுருக்கோம். அவங்க முழு எதிர்காலம் என்னை நம்பி ஒப்படைக்கப்பட்டிருக்கும் போது, அது எந்த சூழ்நிலையிலயும் என்னால பாதிக்கப் படக்கூடாதுன்னு எண்ணம் எனக்கிருக்கு சார்.அவங்க கனவு என்னால போச்..ஹ்க்கும், என் கனவுக்கான போராட்டத்துல என்னை நம்பி வர்ற பொண்ண காயப்படுத்திடக் கூடாதேன்ன பயம். ஒரு வேளை எனக்கான கனவை நான் அடையாம போனா, அதுக்கான காரணம் என் துணை தான்னு யாரும் சுட்டிக்காட்டிடக் கூடாது. என் துணையே அப்படி நினைக்கும் அளவுக்கு நான் இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன் சார்! இந்தப் பொறுப்புக்கு நான் முழுமையா தயாரில்ல.அதான் இப்போ வேண்டாம்னு!”என்றான் தான் மனதில் நினைத்திருந்ததை.
அவன் சொன்னதனைத்தையும் கேட்டிருந்தவருக்கு வியப்பு தான். இந்தக் காலத்தில் யார் இப்படியெல்லாம் யோசிப்பார்கள்? அதுவும் தன்னை நம்பி வரும் துணைக்காக இத்தனை யோசித்திருக்கிறான்.அவன் பேச்சு சந்திரன் தம்பதியின் வளர்ப்பின் அருமையைக் காட்டியது.
கார்த்திக்கின் பேச்சில் இருந்த உறுதியும்,பண்பும், பாங்கும் அவனின் மேல் இருந்த நல்லபிப்பிராயத்தின் அளவைக் கூட்டி அவனைப் பிடிக்க வைத்தது.
எல்லாவற்றையும் மீறி அவன் பேச்சு வேறேதோ ஒன்றை உணர்த்தியது அவருக்கு. ஒரு வேளை மகளை மனதில் வைத்து தான் இந்த முடிவோ என்ற எண்ணம் அடி மனதில் எழுந்தது. அப்படியொரு எண்ணம், எப்படியென்றெல்லாம் தெரியவில்லை.மனது சொன்னது! அதன் உந்தலில்,
“நீங்க ஷக்தி?”என தான் நினைத்ததை கேட்கவே வந்தவர், அதிகப்படியென எனத் தெரிந்து அதோடு நிறுத்தி விட்டார்.
ஆனால் அவர் கேள்வியை நொடியில் யூகித்து விட்டவன், தன்னைக் கண்டு கொண்டாரே என ஒரு நிமிடம் தடுமாறி பிடரி முடியை இழுத்துக் கொண்டான்.
“சாரி தம்பி!”மனோகரே இருவருக்கும் இடையில் நிலவிய அமைதியைக் கலைத்தார்.
“நீங்க கேட்டதுல எதுவும் தப்பில்ல சார். உங்களைப் புரியுது. சாரிலாம் வேணாம்”என்றான் இலகுவாய் சிறு புன்னகையுடன்.
“உங்க எண்ணம் ஒரு விதத்தில சரி தான் சார்” தன்னை மறைக்க முயற்சிக்கவில்லை அவன்.
“தம்பி?!”
“ஷக்திக்கு பியூச்சர் சிங்கருக்கான குட் ஹோப் இருக்கு சார். என்கிட்ட சொல்லிருக்கா,பெரிய சிங்கராவனும்னது தான் அவ கனவுன்னு.என்னால என் இலட்சியத்தை அடைய முடியாமக் கூடப் போனாலும் பரவால்ல சார். ஆனா,அதே ஒரு வேளை என்னால அவ பாடுறத விடற சூழல் எந்த நிலைல வந்தாலும், என்னை நானே மன்னிக்க மாட்டேன் சார். ஒரே ஃபீல்ட்டுல இருக்கறவங்களுக்கிடைல பியூச்சர்ல பிராப்ளம்ஸ் வரும். அது வேணா சார். புரிஞ்சுப்பீங்கன்னு நம்பறேன்”என்றான்.
கார்த்திக்கின் பேச்சை உள்வாங்கிக் கொண்ட மனோகருக்கு அவன் யோசிப்பது புரிந்தது. கணவன்-மனைவி ஒரே துறையில் இருப்பது ஒரு வகையில் தொழில் வாழ்க்கையில் பிரச்சனையைக் கொண்டு வரும். அதுமட்டுமில்லாது தொழில் பிரச்சனை அவர்களது தனிப்பட்ட வாழ்விலும் பிரச்சனையைக் கொண்டு வரலாம்(?)என்பது அவன் எண்ணம்.
அதிலும் தன்னிடமே மகள் பகிர்ந்திராத அவளின் கனவு பற்றி கார்த்திக்கிடம் சொல்லிருக்கிறாள் எனக் கண்டு கொண்டவருக்கு, திகைப்பையும் மீறி,மகளுக்காகவே அவன் யோசிப்பது மனதோரம் சிறு மகிழ்வைக் கொடுத்தது என்றே சொல்லலாம்.அவனின் இவ்வெண்ணமே,அவனுக்கும் ஷக்தி மீது பிடித்தமிருந்தும் அவளுக்காகவே இதை மறுக்கிறான் என தெள்ளத் தெளிவாகத் தெரியப்படுத்தியது.
ஏனோ மனம் நிம்மதியைத் தழுவியது!
மகளின் விருப்பத்தை எப்படி மறுப்பது என தவிப்பும், கவலையுமாய் நினைத்திருந்தவருக்கு அதற்கு அவசியமில்லை எனத் தோன்றியதாலோ என்னவோ!
அந்தக் கணம்,தனக்கு பிறகு தன் பெண்ணை இவன் பார்த்துக் கொள்வான் என உறுதியாய் தோன்றிற்று அவருக்கு. ஆனாலும் மனதில் சிறு நெருடல்.
தனக்கான கனவை/ அடையாளத்தை அடைகிறேன் என எதிர் காலத்தை இசைத் துறையோடு மட்டுமே அமைத்துக் கொண்டால்!எத்தனை நாளைக்கு இந்த வேலை நிரந்தரம்?ஒரு வேளை அடையாமல் போனால்? வேறு எதிர் காலத்திட்டம்?
கார்த்திக்கை நினைத்து தந்தையாக சந்திரனின் கவலை என்னவோ அதே தான் மகளைப் பெற்ற தந்தையாய் மனோகரின் நெருடலும்.
“நான் இப்படி சொல்லக்கூடாது! ஆனா கேட்காம இருக்க முடியலை. ஒரு வேளை இசைத் துறையை நீங்க விடற நிலைமை வந்தா, அதுக்கு பிறகான நிரந்தர வேலை?” என அதையும் கேட்கவே செய்த மனோகரன்,
“சந்திரன் கூட பேசும் போது பேச்சு வாக்குல சொன்னார். உங்களுக்கு ரியல் எஸ்டேட் பிசினஸ்ல இன்டரெஸ்ட் இல்லைன்னு நீங்க பிடிவாதமா அதை பார்க்க மாட்டேன்னு சொல்லிட்டீங்களாம்னு கவலைப்பட்டார்”என்றார்.
இப்படி, இத்தனை பேசுபவர் அல்ல மனோகரன். அதுவும் இத்தனை நேர உரையாடலை பார்வதியுடன் கூட வைத்திருக்காதவர், இன்று பேசக் காரணம் மகள் மட்டுமே!
‘மகள்’எனும் ஒற்றை சொல் இந்த தந்தைகளிடத்தில் எத்தனை மாயத்தை தான் செய்து விடுகின்றன!
அம்மாங்களுக்கு எப்படி மகன்களின் மீது அன்லிமிடெட் அன்போ, அப்படியே அப்பாக்களுக்கும் மகள்கள் மீது!என்னவொன்று அம்மாக்களுக்கு (பெண்கள்) அன்பை வெளிப்படையாகக் காட்டியே பழக்கமிருக்க, ஆண்டவனால் இன்ஸ்டால் செய்யப்பட்ட அன்பை வெளிப்படையாகக் காட்டத் தெரியாத(!) ஆண்கள் அவன் நினைத்தாலே அன்னின்ஸ்டால் செய்ய முடியாதவர்கள். அதிலும் மேல் வெர்சனில் (male version)அப்பாக்கள் என்றுமே தனி வெர்சன் தான்!
இங்கு மனோ மகளை மனதில் நிறுத்தியே இப்படி கேட்டிருக்க, கார்த்திக்கோ சந்திரன் பேசியதைக் கொண்டு தந்தைக்காக கேட்கிறார் எனும் விதமாக நினைத்தான்.
தந்தையை நினைக்கையில் ஆயாசமாய் வந்தது.ரியல் எஸ்டேட் பிஸினசில் சந்திரனுக்கு உதவியாக அரவிந்தனும் இருந்தான். அதில் இடைச் சொருகலாக தான் செல்வதில் உடன் பாடில்லை இவனுக்கு. அரவிந்தன் மருமகனாக இருந்தாலும் அத்தனை நம்பிக்கையானவன். அப்படியிருக்க ஈடுபாடில்லாமல் தானும் பொறுப்பை எடுத்துக் கொண்டு அக்காவின் கணவருக்கு சங்கடத்தை கொடுக்க விரும்பவில்லை. தந்தைக்கு பிறகு தம்பி அருண் இதை பார்த்துக் கொள்வான்.
இவன் எண்ணத்தை கோகிலா வழியாக சந்திரனின் காதுக்கு கொண்டு சேர்த்தும், மூத்த ஆண் பிள்ளை அவர் தொழிலை பார்க்காததில் ஆதங்கம் இருக்கவே செய்தது.
பின்னே,இசைத் துறையில் உள்ள ஈடுபாடு ரியல் எஸ்டேட்டில் இல்லை என்று தொழிலை பார்க்க மாட்டேன் என்றான்.அதற்கு சந்திரன் கோபத்திலும்,வீம்பிலும் அவனுடன் பேச்சைக் குறைத்துக் கொள்ள, அவனோ பேசுவதே அரிதாகிப் போய்,தந்தையுடன் முன்பிருந்த ஓட்டுதல் இன்றி இருந்தான். அப்பாவிற்கு தப்பாத மகனாக அதே வீம்புடன் அவனுமிருக்க, சந்திரன் கோபம் முழுதாக அவன் செய்யும் வேலையில் தான் திரும்பியது!
மொத்தத்தில் இருவரும் சிறு பிள்ளைச் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
தந்தையின் நினைவில் தலையசைத்து புன்னகைத்துக் கொண்டவன்,
“ஹ்ம்,அப்பாவோட ரியல் எஸ்டேட் பிசினஸ்ல எனக்கு ஈடுபாடு இல்ல தான் சார். ஆனா நீங்க சொன்ன மாதிரி மியூசிக்கை விட்டா, எனக்கு ஆர்வம் இருக்குற டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் பார்க்க இருக்கேன். அதுவும் அப்பா பிசினஸ் தான். ஆனா பெரியளவு செய்ய முயற்சிக்கல அவர். இப்போதைக்கு சின்னதா ஊருக்குள்ள லோடுக்கு மட்டும் தான். ஆனா எனக்கு அதை பெரியளவுல கொண்டு போகற எண்ணம் இருக்கு. டிரான்ஸ்போர்ட் சர்வீசோட டூர் ட்ராவெல்ஸும் செய்ய நினைச்சிருக்கேன். அதுக்கான திட்டம் இருக்கு சார்.அடுத்த வருஷம் ஆரம்பிக்க நினைச்சேன்” என்றான்.
மனோகர் மனம் அவன் பேச்சில் திருப்தி கொண்டது. ஆனாலும் முழுதாக அல்ல!
பின் சிறிது நேரம் கார்த்திக்குடன் பேசியவர் அவனின் இசைப் பயணத்திற்கான வாழ்த்துடன் அழைப்பை துடித்தார்.
அவன் தொழிலை பற்றி விளக்கம் கிடைத்து விட்டாலும், அதுவரை அமிழ்ந்திருந்த காரணங்கள் மேலெழ யோசனையானவர்,அதன் பின்னான நாட்கள் முழுவதும் மகளும், அவளின் எதிர்காலம், பிரச்சனை என அதே எண்ணங்கள் தான்.அதன் விளைவாக அவர் அமைதியாகவே வலம் வர தவித்துப் போனாள் ஷக்தி.
மகளையும் கவனித்தார் மனோ. அவளைப் புரிய, மகளுடன் முன்பை விட பேச்சை அதிகமாக்கிக் கொண்டார். தன்னுடன் சாதாரணமாகப் பேசுவது போல் அவள் காட்டிக் கொண்டாலும், தன்னிடம் மகள் சொன்னதற்கான பதிலை எதிர்பார்க்கிறாள் என அவளின் தவிப்பிலும், அடிக்கடி யாருக்கும் தெரியாது என நினைத்து வீட்டின் பின் புறம் அழுவதையும் கண்டு கொண்டார்.
அதிலே ஒரு முடிவுக்கு வந்து விட்டார். மகளுக்கு கார்த்திக்கை கேட்கலாம் என.
இப்போது கார்த்திக் பேசிய சிலதையும் மனைவி, மகனுடன் பகிர்ந்து கொண்டவர் முடிவையும் தெரிவிக்க, சஞ்சயும் தங்கைக்காக அவன் யோசித்து பேசியதில் ஈர்க்கப்பட்டு சரியென தந்தையிடம் சொல்லி விட, இதில் பார்வதிக்கும் சம்மதமே.
ஆனால் இவயனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ஷக்திக்கு சம்மதம் இல்லை.