கார்த்திக் மேல் கோபமோ கோபம் அவளுக்கு. தன்னை வேண்டாம் என்றவனிடம் எதற்கு இவர்கள் போக வேண்டும் என நினைத்துக் கொண்டவள், விட்டால் கதவைத் திறந்து கொண்டு கூடத்தில் குதித்து, ‘கார்த்திக் எனக்கு வேண்டாம்!!’ என கத்தும் நிலையில் இருந்தாள்.
இதே காரணத்தை தான் இன்று அரவிந்திடமும் சொல்லிக் கொண்டிருந்தான்.தந்தையிடம் இதைச் சொல்லியே தன்னை மறுத்திருக்கிறான். பல்லைக் கடித்தாள் ஷக்தி.
அரவிந்திடம் ‘ஷக்திக்காக’ என்று அவன் சொல்லியது அவள் மனக் கண்ணில் தோன்றியது. அவன் இதழில் தோன்றிய சிறு புன்னகை அதில் மறைந்திருந்த இதயத்தின் வலி, முகம் முழுவதும் அவளுக்கான இதம் என, அப்போது அவன் முகம் காட்டிய பாவனையை அழுத்தமாய் பார்த்தவள் அக் கணம் உணர்ந்திராவற்றை இப்போது உணர்ந்து கொள்ள மனம் தவித்தது;கலங்கியது.
கண்ணீர்,விழிகளை சூழ்ந்து கொண்டது.இன்னுமின்னும் கோபம் கூடியது.
“பொய் பொய்!தண்ணி மட்டும் கொட்டிருக்கக் கூடாது. அந்த பாட்டிலாலையும் சார் மண்டைல நாலு போடு போட்டிருக்கனும்!” என சத்தமின்றி கடுகடுத்தாள்.
‘சாருக்கு மட்டும் தான் எங்கள் கனவு மேல அக்கறை இருக்குமோ?இதை கேட்டா மட்டும் லைக் பண்றேன்! நான் கே.கே இல்ல கார்த்திக்ன்னு அந்நியன், அம்பி கணக்கா வசனம் பேசுவான்!’ மனதுக்குள் அவனுக்கான அர்ச்சனையை ஆரம்பித்தாள்.
‘பொண்ணு கேட்டதுக்கே கல்யாணத்தை தாண்டி வர்ற பிரச்சனை பத்தி எல்லாம் யோசிச்சாச்சு!ஒரே பீல்ட்டுல இருந்தா அப்படி என்ன பிரச்சனை வரும்?வந்தாலும் அதெல்லாம் ஒன்னா கடந்து வராத அளவுக்கா நான் இருப்பேன். என் அன்பு எல்லாத்தையும் பார்த்துக்கும். காதல்னா அவனை மட்டுமா காதலிக்கிறேன். அவர் கனவையும் தானே!இவர் மட்டும் எங்க கனவை நேசிப்பாராம் எங்களை நேசிச்சாலும் இல்லைன்னு சொல்வாராம்’ என மனதுக்குள் ஆதங்கமாய் புலம்பியவளுக்கு, தன் மீதான அவன் காதலும் தெரிந்தது மட்டுமன்றி புரிந்தே இருந்தது.
அவளை விட்டு முன்பை விட அதிகமாய் அவன் விலகிச் சென்றது, நிகழ்ச்சி எபிசோட்டிலிருந்து எடுக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டதற்கு சேனலோடு சண்டை போட்டது, இவள் இறுதிச் சுற்றில் வெற்றி பெற்ற அன்று சிறிதாக கலங்கி விட்ட கண்களும், இதழில் புன்னகையுமாய் சில நொடிகள் அவளைப் பார்த்திருந்தவன், தான் கண்டு கொள்ளவும் நொடியில் சுதாகரித்துக் கொண்டது, தன்னைக் காணும் சமயங்களில் அவன் கண்களில் வந்து போகும் தவிப்பு என இந்த ஒன்றரை மாதங்களில் அவன் நடவடிக்கைகள் அனைத்தையும் கவனித்ததில் ‘அப்போ இது லவ் தானே ஜெஸ்ஸி?’ என்பது போல் சுற்றிக் கொண்டிருந்தவளுக்கு இன்று அரவிந்தனோடானா அவன் பேச்சில் மனம் வெகுவாகக் காயப்பட்டு கலங்கித் தான் போனாள்.
கார்த்திக்கின் சாதாரண பிடித்தத்தை, தான் தான் தவறாகப் புரிந்து கொண்டோமோ என அந்நொடியில் நினைத்தவளுக்கு உள்ளே மெல்லிய வலி. அதிலும் அவனைப் பற்றி அவன் வெளிப்படுத்தியதும், வீட்டிலுள்ளவர்களே அவனைச் சற்று விலக்கிப் பார்ப்பதை கரகரத்த குரலில் சொல்லிய போது இவள் மனம் பரிதவித்தது.
அவனுக்காக பரிதவித்த மனம் ஆதங்கத்தை தத்தெடுத்து ஆவேசமாய் மாறியதென்னவோ அவன் மீதிப் பேச்சை கேட்டதும் தான். அதிலும் ‘அவளுக்காக’ (ஷக்திக்காக)என்று கூறினானே ஷக்திக்கு பற்றிக் கொண்டு தான் வந்தது. அவளின் அக்கோபத்தின் வெளிப்பாடே அவனுக்கான தண்ணீர் அபிஷேகமாய்!
முதலில் அவள் அங்கு கார்த்திக்கை சந்திக்க வந்ததே தனக்குள் இருக்கும் குழப்பத்தை கலையவே. அவன் என்ன எண்ணினாலும் சரி தன் நேசத்தை அவனிடம் சொல்லி விட வேண்டும் என வந்தவள் தான் அவன் பேச்சு ஏற்படுத்திய தாக்கத்திலும், கோபத்திலும் அத்தனை அழுகையாய், ஆற்றாமையாய் (ஆவேசமாய்) அவன் மேலுள்ள பிரியத்தை வெளிப்படுத்தி இருந்தாள்.
தன் மேலுள்ள பிரியத்தை சாதாரண பிடித்தத்தின் பின்னால் பிடித்து மறைத்து வைத்திருக்கிறான் எனத் தெரிந்து கொண்டவளுக்கு, இதுவரையிலும் தெரிந்த அவன் நேசம் இப்போது தந்தையின் பேச்சில் புரிய வந்தது.ஆனால் அந்த மடையனுக்கு தான் அது புரியவில்லை!
“லவ் பண்ற பொண்ணு இப்படி தான் பயந்து சாகறதா. தைரியமா இருக்க வேணாமா?” எனக் கேட்டவள்,
ஷக்தியை தோளோடு அணைத்துக் கொண்டு, “என்ன என்னவோ வாய்க்குள்ள முணுமுணுத்த, அதுவும் முகத்தை ரொம்ப கடுகடுன்னு வெச்சிக்கிட்டு. உன்னவருக்கு செம்ம திட்டு திட்டின போல?”என்றாள் சிரித்துக் கொண்டே.
தன்னை புட்டு புட்டு வைக்கும் அண்ணியை பார்த்து முழித்தவளுக்கு பதில் சொல்லத் தான் வரவில்லை.
“யாரை விரும்பற ஷக்தி? நான் வேணா உங்கண்ணன் கிட்ட பேசவா?”
“அண்ணி அது வந்து…”அவள் தயங்க,
“மாமாவ நினைச்சி பயப்படறியா?இந்தப் பையனை வேணாம்னு சொல்லிடலாம். நீ பயப்படாதே!”
“வேணாம் வேணா!நான் விரும்பறதே அந்தப் பையனைத் தாண்ணி” என்றாள் படபடவென.
“எதே!!!!” சாதனாவின் கூவலில் மதி அருகில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை சாந்தனு அசைய மகனைத் தட்டிக் கொடுத்தாள்.
“ம்ம்” – அப்பாவியாய் ஷக்தி.
“அடியே!வெளிய பேசிக்கிற பையனா உன் ஆளு”
“ம்ம்”
“பின்ன ஏன்டி அப்படி ஒரு ஃபேஸ் ரியாக்ஷன் கொடுத்த?பாரு இப்ப கூட மூஞ்ச அப்பாவியா வெச்சுக்கற சரியான அமுக்குனி நாத்தனார்” என்றாள் அவள் தோளில் சிறு அடியொன்றை போட்டு.
“அண்ணி”என சிணுங்கியவளிடம்,
“என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லல போ”என போலியாக கோபித்துக் கொண்ட சாதனா,
“இரு இரு, ஆமா மாமா தான் பச்சைக் கொடி காட்டிட்டாங்களே? பின்ன ஏன் முகத்தை உம்முன்னு வெச்சிருக்க? வாய்க்குள்ள வேற திட்டிட்டே இருந்த?”என வினவ,
“அது, அது அவங்க மேல கோபம் அண்ணி” என்றவள்,
கார்த்திக்கை சந்தித்தது தொடங்கி, அவன் மேல் ஈர்ப்புக் கொண்டதில் இருந்து காதலை உணர்ந்தது, என பகிர்ந்து கொண்டவள்,தான் இன்று காதலை வெளிப்படுத்தியதைப் பற்றி தவிர்த்து விட்டாள்.
“இதே காரணத்தை தான் அவங்க மாமா,எங்கப்பான்னு எல்லார்க்கிட்டையும் சொல்லி என்னை மறுக்கறார் அண்ணி! அப்போ என் கோபம் நியாயமானது தானே?வேண்டாம்னு சொன்னவங்க கிட்ட நாம ஏன் போகனும்? என்னை விட்டா இப்பவே ஹால்ல குதிச்சு கார்த்திக் வேண்டாம்னு சொல்லிடுவேன்”என்றாள் புசு புசுவென மூச்சு வாங்க.
வரப் பார்த்த சிரிப்பை அடக்கிக் கொண்ட சாதனா,
“ம்ம்,குதியேன்.குதிச்சு இப்பவே உன் கார்த்திக்கை வேண்டாம்னு சொல்லிடு”என கிண்டல் பேச,
“ஆஹ்!”என திடுக்கிட்டவள்,
“அ.. அது கோபத்துல சொன்னேன் அண்ணி!” என்றாள் பாவமாய் கண்களை சுருக்கி.
சிரித்த சாதனா, “உன் கோபமும் நியாயமானது தான்!ஆனா இப்படி ஒரு தங்கப்புள்ள உன் கையில சிக்கப் போதே”என்றாள்.
“அண்ணி!”சிணுங்கினாள்.
“மாமாக்கு நீ காதலிக்கிறது தெரியுமா?”
“ம்ம்”
“அடிக் கள்ளி!”என ஷக்தியின் இடையில் கிள்ளியவள்,
“மாமா விஷயம் தெரிஞ்ச உடனே ஓகே சொல்லிட்டாரா?”எனக் கேட்டு,
மூன்று வருடங்கள் கடந்து அவர்களுடனே இப்போது தானே பேசுகிறார். அந்த வருத்தம் சாதனாவிடம் இருக்க, அண்ணியைப் புரிந்து கொண்டவள்,ஆறுதலாய் கரங்களைப் பற்றிக் கொண்டாள்.
“அப்பாகிட்ட பயந்து கிட்டே ஒரு குருட்டு தைரியத்துல தாண்ணி சொன்னேன்!ஒன்றரை மாசமா அதைப் பத்தி என்கிட்ட ஒண்ணுமே பேசல அப்பா. பயந்துட்டே இருந்தேன். எனக்கு,கார்த்திக்கோட அப்பா பொண்ணு கேட்டது கூடத் தெரியாது. ஆனா இன்னைக்கு பார்த்தா அப்பாவே இப்படி சொல்றாரு”என்றவளுக்கு மனதில் சிறு நிம்மதியும்.
“எல்லாம் சரியா போயிடும்! காதல் பாத்துக்கும்!கடவுள் பாத்துப்பார்”என ஆறுதலாய் தலையை வருடியவள்,
“அப்டி எங்க பொண்ணை வேணாம்னு சொல்லிடுவாரா? கட்டம் கட்டி தூக்கிட மாட்டோம்” என்றாள் மிரட்டலாய்.
சிரித்தாள் ஷக்தி.
“ம்ம்ம், இது தான் எங்க ஷக்தி! சிரிச்ச மாதிரி இப்படியே தூங்கு”என்று விட்டு சாதனா வெளி நடப்பு செய்து விட,கார்த்திக்கின் நினைவுகளால் அலக்களித்த மனதை அமைதிப்படுத்த வழியின்றி நித்திரையில் ஆழ்ந்தாள்.
வெளியில் சஞ்சய் மட்டும் உட்கார்ந்திருக்க, பார்வதியும் மனோவும் தூங்கச் சென்றிருந்தனர்.
கணவன் அருகில் அமர்ந்து கொண்டவள்,
“என்ன யோசனையா இருக்கீங்க?”என்றாள்.
“அப்பா ஷக்திக்கு கல்யாணம் பண்ண நினைக்கிறார்”
“ம்ம்”
“அப்பா பேசினதை கேட்டல்ல சாது! கார்த்திக். சூப்பர் சிங்கர் ஷோல கீ போர்ட் பிளேயரா இருக்காரே அவராம். நல்ல பையன் தான். ஆனா” என்றவனின் கைகளை அழுந்தப் பற்றிக் கொண்டவள், ஷக்தியின் அறையை கண்களால் காட்ட, புரிந்ததாக தலையாட்டி தங்கள் அறைக்குள் நுழைந்த சஞ்சய்,
“அவங்க வேண்டாம்னு சொல்லிருக்கும் போது, அப்பா போகப் போறேன்னு சொல்றாங்களா.. அதான் ஒரே யோசனையா இருக்கு. முதல்ல பாப்பாக்கு இதுல சம்மதமான்னு தெரியலையே?” என்றான்.
“உங்களுக்கு சம்மதமா?” சாதனா கேட்க,
“எனக்கு முழு சம்மதம் சாது!அந்தப் பையன் அப்பாகிட்ட பேசினதுலயே பிடிச்சு போச்சு. அவர் ஷக்தியை யோசிச்சு பேசிருக்கார்,கேட்ட தானே!”
“ம்ம், கேட்டேன் கேட்டேன்! நீங்க தான் சரியா கவனிக்கல!” என்றாள் சிறு சிரிப்புடன்.
“நானா? என்ன கவனிக்கல?”
“ஷக்தி விருப்பத்தை மீறி மனோப்பா இப்படி ஒரு முடிவெடுப்பாரா என்ன?”
“அப்போ பாப்பாக்கு சம்மதமா?” என்று கேட்டு நிறுத்தியவன் மனைவி முகத்தில் இருந்த சிரிப்பின் அளவில்,
“நிஜமாவா? “எனக் கேட்டான். ஆமென தலையசைத்தாள்.
“உனக்கு எப்படித் தெரியும்?”
“உங்க பாப்பா தான் சொன்னா?” என்றாள் கணவன் முகம் சென்ற போக்கை பார்த்து பெரிதாக சிரித்து.
“நம்ம ஷக்தியா?நம்பவே முடியல”என்றவன்,
“அப்பாக்கிட்டயும் சொல்லிட்டாளா? அதுக்கு எதுவும் சொன்னாராமா? முதல்ல திட்டிருப்பாரா?” என்றான் அண்ணனாய் படபடப்புடன்.
“அதெல்லாம் இல்ல. முதல்ல உக்காருங்க!”என அமர வைத்தவள், ஷக்தி சொன்னதைப் பகிர்ந்து கொண்டாள்.
“உனக்கு நியாபகம் இருக்கா சாது? அன்னைக்கு வயில்ட் கார்ட் ரவுண்டுல நம்ம ஷக்தியையும், கார்த்திக்கையும் லவ் ஏங்கிள் காட்ட ட்ரை பண்ணி ஒரு மாதிரி ட்விஸ்ட்டா கேள்வி கேட்டாங்கன்னு சொன்னேன்ல. அப்போ கூட அந்த சிச்சுவேசனை கார்த்திக் தான் ரொம்ப அழகா ஹெண்டில் செய்தாரு. ஹ்ம்ம், ஆனாலும் இப்படி திரிச்சி விட்டு பேசுவாங்கன்னு நினைக்கல. மீடியால இருக்குறவங்கன்னா அவங்களுக்குன்னு தனிப்பட்ட வாழ்க்கை ஒன்னு இருக்குன்னு யோசிக்க மாட்டாங்களா?! இஷ்டத்துக்கு பேச வேண்டியது” என்றான் ஆதங்கமாய்.
ஆறுதலாய் கணவனின் கரங்களைப் பற்றிக் கொண்டாள் சாதனா.
“இப்ப என்னாங்கற? நான் ஆமா சொல்லனுமா? அப்போ ஆமா!என் பொண்ணு எங்கிட்ட அவ பிடித்தத்தை சொன்னா. அதை நிறைவேத்தி வைக்க வேண்டியது என் கடமை தானே!”என்றார் சற்றே கர்வமாய்.
முறைத்த மனோகர், “உன்கிட்ட மறைக்கணும்னு எல்லாம் நினைக்கல பாரு!நானே கொஞ்சம் குழப்பமான மனநிலைல இருந்தேன். உன்னை விட்டுட்டு எப்பவாவது முடிவெடுத்திருக்கேனா”என கேட்டவர்,
“நீயே சொல்லேன். இப்போ நான் எடுத்த முடிவு சரியா? நான் என் பொண்ணை மட்டுமே யோசிச்சு எடுத்துருக்கேன். சொந்தங்க பேசிக்கிட்டாலும் எனக்கு கவலை இல்ல!உனக்கும் முழு மனசா சம்மதம் தானே?மனைவியின் கைகளைப் பற்றிக் கொண்டார்.
“எனக்கு முழு மனசா சம்மதம்ங்க. நீங்க எடுத்த முடிவும் சரி தான்! கார்த்திக் வீட்ல சீக்கிரமே பேசிடலாம்” மனைவியின் பேச்சை ஆமோதித்தார் மனோகரன்.