“ஷக்தி” என அவன் அழைக்க, அதே பாவனையுடன் அவனை ஏறிட்டாள் அவள்.
அதில் பக்கென சிரித்து விட்டவன், “டேய் தக்குடூ!” எனவும்,தெளிந்தவள் அவனைப் பார்த்து விட்டு தன் வலது கரத்தின் சுண்டு விரலைத் தூக்கி முகத்தின் முன் வைத்து பார்க்க, இன்னும் விரிந்த புன்னகையுடன்,
“நம்ம பத்தி விஷால் எதுவும் வெளிய தப்பா சொல்லி வெச்சா? அன்னைக்கு கோவை இவண்ட்ல அவுட்டான போட்டோஸ் வெச்சே அத்தனை கேள்வி கேட்டா அனு! நான் அவகிட்ட ஒன்னு கூட சொல்லல. வீட்ல பேசிக்கிட்டதை கூட சொல்ல வேணாம்னு இருந்துட்டேன். இன்னைக்கு நீங்க என்னன்னா…நீங்களா இது? அசால்ட்டா தோளை வேற குலுக்கறீங்க?”என படபடத்தவளை சிரிப்புடன் பார்த்திருந்தவன் காரிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்ட, வாங்கிக் கொள்ள கை நீட்டியவளிடம்,
“ஒன்லி குடிக்க. என் தலைல எல்லாம் அபிஷேகம் பண்ணக்கூடாது”என அடக்கப்பட்ட புன்னகையுடன் சொல்லிக் கொடுக்க முறைத்தாள் அவள்.
அன்று கோவையில் இவர்கள் இருவரையும் ஜோடியாக கூட்டத்தில் இருந்த சிலர் புகைப்படம் எடுத்திருக்க அந்த நிகழ்ச்சியின் பின் அவையனைத்தும் சமூக வலைத்தளங்களில் வலம் வந்திருந்தது. ஆனால் முன்பை போல் அத்தனை பேசப்படவில்லை. காரணம் அந்நேரம் பிரபல சினிமா நடிகர் ஒருவரின் விவாகரத்து ட்ரெண்டாகி பேசப்பட,மீடியா பெரிதாய் இவர்களை கண்டு கொள்ளவில்லை.
சேனலில் உள்ள சிலர் ‘இருவருக்கும் காதலோ?’ என இவர்களின் காது பட பேசினாலும் இருவருமமே அலட்டிக் கொள்ளவில்லை. ஷக்தியின் நட்பு வட்ட பெண்களும் கேட்க ஒன்றும் சொல்லவில்லை அவள்.
இவர்களின் மலேசியாப் பயணம் அன்று தான் ராமச்சந்திரன் சென்னை வருவதாக கூறியிருக்க, அன்றே முறைப்படி திருமணம் பற்றி பேசலாம் என முடிவெடுத்திருந்தனர் பெரியவர்கள். அதுவரையில் இது பற்றி வெளியில் சொல்ல விரும்ப வில்லை ஷக்தி. ஆனால் இவனோ திடுதிப்பென்று விஷால் முன் இயல்பாய் கை பற்றுவான் என எதிர்பார்த்திராதவளுக்கு என்ன எதிர்வினையாற்றவென்று தான் தெரியவில்லை. இவள் தன் யோசனையிலே இருக்க அதற்கிடையில் மனோகருக்கு அழைத்திருந்தான் கார்த்திக்.
கார்த்திக் இலக்கத்தை சேமித்து வைத்திருந்தவர் அவன் அழைப்பை ஏற்க,
“அப்பா,நான் கார்த்திக் பேசறேன்!”என்றான் இவன். அதில் ஷக்தி யாரென கேள்வியாய் அவனை பார்க்க,
“நின்ட அச்சன்!”என வாயசைக்க புரியாமல் பார்த்தவளிடம், “உங்க அப்பா” என்றான் இந்த முறை.
திடுக்கிட்டவள், “என்ன செய்றீங்க கார்த்திக்!”பதறி வர இரண்டடி விலகியவன், அவளுக்கு முன் ‘நில்‘ என்பது போல் கையைக் காட்டி விட்டு அதற்குள் மூன்று முறை அவனை கூப்பிட்டிருந்த மனோகரிடம் பேச ஆரம்பித்தான்.
“ம்ம்,அப்பா!நானும் இங்க தான் ஸ்டூடியோல இருக்கேன். ஷக்தி பார்க்கிங்ல நின்னுட்டிருந்தா அதான் உங்களுக்கு கால் பண்ணேன்” என்றவன்,
“ஷக்தியைக் கூப்பிட வரீங்களா ப்பா?”
அவன் மனோகரை கூப்பிடும் விதத்தை அப்போது தான் தந்தை,மகள் இருவருமே கவனித்தனர்.
மனோகரன் நெகிழ, “சாச்சிபுட்டானே!” என முணுமுணுத்துக் கொண்டாள் ஷக்தி.
கார்த்திக்கும் இருப்பது பற்றி மகள் கூறவில்லையே என நினைத்தவர், “அவ ஃப்ரண்ட்ஸ் கூட வரேன்னு சொன்னாளே?”என்றார்.
சுத்தி வளைக்காமல், “உங்களுக்கு பிராப்ளம் இல்லைன்னா நான் ஷக்தியை ட்ராப் பண்ணிடட்டுமா?” என அவன் நேரடியாக கேட்க, என்ன சொல்வதென்று தெரியாமல் மனைவியை துணைக்கழைத்தார் மனோகர்.
என்னவென கேட்ட பார்வதியிடம் விடயத்தை சொல்ல, “முறைப்படியா பேசாம எப்டி பொண்ணை கார்த்திக் கூட வர சொல்றது?” எனத் தயங்கினார். மனோவுக்கும் இதே எண்ணமே.
மனோகரின் மௌனத்தில் அவர் எண்ணம் புரிந்தவன், “ஷக்தியை தனியா விட்டுட்டுப் போக நான் விரும்பல ப்பா!நீங்க வரும் வரையும் இங்கயே வெயிட் பண்றேன்” என்றான் தன்மையாய்.
அவனின் பேச்சில் மனோகர் கவரப்பட்டது என்னவோ உண்மை. அதுவும் தன்னை அழைத்து மகளைக் கூட்டி வர அனுமதி கேட்டதில், அவரை மெய்யாகவே சாய்த்து விட்டான் தான்!
“நீங்களே கூட்டி வாங்க தம்பி”என அனுமதி வழங்கியவர் போனை துண்டிக்க,கேட்டுக் கொண்டிருந்த பார்வதி கேள்வியாகப் பார்க்கவும்,
“நம்மகிட்ட உரிமையோட கூப்பிட்டு அனுமதி கேக்கறார். இந்தக் காலத்துப் பசங்கல்ல இப்போ இப்படி எல்லாம் இருக்கறதில்ல பாரு. என்ன இருந்தாலும் நம்ம பொண்ணுக்கு பேசப் போறோம். கூட்டிட்டு வரட்டுமே”என கூறிய கணவனின் இந்தவதாரத்தில் வாயைப் பிளந்தார் பார்வதி.
“கெட் இன் ஷக்தி” என கார்த்திக் கார் கதவைத் திறக்க,
“எங்கப்பாவயே கவுத்துட்டீங்க ப்பா”என முனகியபடி ஏறிக் கொண்டவளைப் பார்த்து சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
கார் அந்த வளாகத்தை விட்டு வெளியில் வந்து சாலையில் பயணிக்கத் தொடங்கியது. சற்று நேரம் இருவரும் எதையும் பேசிக் கொள்ளவில்லை. ஷக்தி வேண்டுமென்றே மௌனத்தை கையில் எடுத்துக் கொண்டவள், சற்று முன் அவன் பற்றியிருந்த தன் சுண்டு விரலை பார்ப்பதும் வருடிக் கொடுப்பதுமாகவே வர, அவள் செய்கையைப் பார்த்தவன் திரும்பி சிறு புன்னகையுடன் சாலையில் கவனம் வைத்தான்.
“ஸாரி!” என்றவனின் குரலில் அவன் பக்கம் பார்த்தாள் ஷக்தி.
இன்னும் சாலையிலே கவனமாய் இருந்தவனைக் கண்டு முறைத்தவள், வெடுக்கென திரும்பிக் கொள்ள,உடல் குலுங்க ஒரு சிரிப்பு அவனுடமிருந்து.
“பேசேன் ஷக்தி?”
“….”
“தேஷ்யமோ மோளே? எந்தெங்கிலும் பறயு!” (கோபமா? ஏதாவது சொல்லேன்!)
“…..”
“ரொம்ப சுத்த விடறப்பா” என்றவனின் பொய் குற்றச் சாட்டில் வெடுக்கென திரும்பியவள்,கியரில் இருந்த அவன் கரத்தை நறுக்கென கிள்ளி வைத்தாள்.
“ஆ!”என அலறியவன், “ரொம்ப ரொம்ப கோபம்னு புரிஞ்சி போச்சு. ஈ-வீக் ஃபுல்லா,கொறச்சு திரக்காயிருந்நு (கொஞ்சம் busy ஆ இருந்தேன்)” என்று சொல்ல, மீண்டும் கிள்ள வந்தவளிடம்,
“சரி,சரி நீயும் தான்!” என ஒப்புக்கொண்டான் அவசரமாய்.
“அதென்ன சுத்தல்ல விட்டதெல்லாம் நீங்க!ஆனா நான் சுத்த விட்டேன்னு சொல்றீங்க?!”எனப் பொருமியவள்,
“பிடிச்ச கையை விட மாட்டேன்னு சொன்னவருக்கு சுண்டு விரல் மட்டும் தான் தெரியுது போல!”என சத்தமாக முனக,
“தக்குடு மோளூ!”என்றவன் இயல்புக்கு மீறி கொஞ்சம் சத்தமாகவே சிரித்து விட்டான்.
ஆவென வாய் பிளக்காதா குறையாக அவனைப் பார்த்திருந்தவளிடம்,
“இப்போதைக்கு சுண்டு விரல் பிடிச்சுக்கறேன்!அப்பறம் மொத்தமா பிடிச்சுக்கறேன்…உன் கையை” என்று இடைவெளி விட்டு இழுத்து குறும்பாய்க் கூற, விழி விரித்தாள் அவள்.
எப்போதுமே அமைதியாக,அளந்து பேசுபவனாகவே அவனைப் பார்த்திருக்கிறாள் ஷக்தி. மற்றவர்களை கடிந்து கூட பேச மாட்டான். பேச்சில் ஒரு நிதானமிருக்கும்.அதையும் மீறி பேசுபவனாக இருந்தால் குரலில் ஒரு அழுத்தம் இருக்கும் அவ்வளவே!சிரிப்பது கூட தலையசைப்புடனான சிறு புன்னகை.
இப்பொழுதெல்லாம் அவன் இத்தனை பேசுவதே ஷக்திக்கு ஆச்சர்யம் தான். முன்பெல்லாம் ஒரு சில நேரங்களில் அவளுடன் ஓரளவு பேச நேரிடும் சமயங்களில் ‘இத்தனை பேசுபவனா?’என தனக்குள்ளே முணுமுணுத்துக் கொள்பவள் அவனிடமே வாய் விட்டும் கேட்டதுண்டு.அதன் பின் அமைதியைக் கடைப்பிடிப்பவன், இன்றென்று அவன் ஒவ்வொரு பேச்சிலும்,செய்கையிலும் ஷக்தியை திணறடித்துக் கொண்டிருந்தான்.
சாலை முழுவதும் அமைதியாய் வெறிச்சோடி போய்க் கிடந்தது. ஆங்காங்க காவல் துறையினர் நின்று கொண்டிருந்தனர்.இரு பெரிய பட நடிகர்களின் ரசிகர்களுக்கிடையிலான மோதலில் உண்டாகிருந்த கலவரம் கலைக்கப்பட்டதை உறுதி செய்தது அது.
ஷக்தி வீடிருந்த காலனியை நெருங்கினர். வீடு வருவதையே பார்த்திருந்தவளிடம்,