விடாமல் அடித்துக் கொண்டிருந்த காலிங் பெல் சத்தத்தில் கதவை திறந்தாள் மதி.அங்கு நின்றவனை பார்த்து முதலில் திகைத்து, பின் ஆச்சர்ய பாவனை காட்டிய அவள் விழிகள் இப்போது முழுப் புன்னகையை ஏந்தி நிற்க.. “சஞ்சுண்ணா”எனும் சந்தோச விழிப்போடு தாவி தன் அண்ணனை அணைத்துக் கொண்டாள்.
தன் குட்டித் தங்கையை அணைத்துக் கொண்ட சஞ்சயின் கண்களும் கலங்கியது.. “குட்டி”என்றபடி வாஞ்சையுடன் தங்கை தலை வருடியவன்..தன்னை அதிர்ச்சியாக பார்த்திருந்த மீதி இரு ஜீவன்களையும் முறைத்தான்.
“சஞ்சு..நீ…நீ எங்கடா இங்க?”பல மாதங்களுக்கு பிறகு மகனை நேரில் சந்தித்த சந்தோசம் ஒரு பக்கம்,சற்று நேரத்தில் வீட்டிற்கு வந்துவிடும் கணவனை நினைத்து பயம் ஒரு பக்கமென கலவையான மனநிலையில் தடுமாறி வந்தது பார்வதியின் வினவல்.
“ஏன் நான் வரகூடாதுன்னே இங்க இருக்கற எல்லாரும் என்னை தலைமுழுகிட்டீங்களா?”குடும்பத்தை பார்த்த மகிழ்ச்சியில் தொண்டை அடைக்க கரகரவென வந்தது அவன் வினா!
“டேய்”
“அண்ணா!”
“சஞ்சுண்னா!” மூன்று பெண்களின் குரலும் ஒரே நேரத்தில் அதட்டலாக ஒலித்தது.
அவர்கள் பாசத்தில்,கண்கள் குளம் கட்ட.. வெளி வரப்பார்த்த கண்ணீரை கை கொண்டு துடைத்தவன்,
“உள்ள விட மாட்டீங்களா?இல்ல வாசலோடையே என்னை அனுப்ப பிளேனா?”என சிரிப்புடன் கேட்க,
“உள்ள வாடா…”என அழைத்தார் பார்வதி.
உள்ளே வந்த சஞ்சயை காய்ந்து போன கண்ணீர் தடங்களோடு அணைத்துக் கொண்டாள் ஷக்தி.அவள் கன்னங்களை பரிவோடு துடைத்து விட்டு.. உச்சந்தலையில் முத்தம் வைத்தவன் தாயின் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.
அவனை பார்த்த சந்தோசத்தில் மூன்று பெண்களுக்கும் அடுத்து பேச வார்த்தைகள் வரவில்லை.ஃபோனில் பேசிக் கொண்டிருந்தாலும்,நேரில் பார்த்து பேச வார்த்தைகள் பஞ்சமாகியிருக்க மூவருக்கும் விழிகள் கலங்கியது.
“எப்டி இருக்கடா சஞ்சு..?சாதனா,சாந்தனு ரெண்டு பேரும் எப்டி இருக்காங்க? சாப்பிட்டியா என்ன?ரொம்ப இழச்சி போயிட்டடா? வேலை விசயமாவா வந்த?அம்மா மேல கோவமா இருக்கியாடா?” அவன் தலை கோதி கேள்விகளை அடுக்கினார் பார்வதி.
“உன் பேரன், மருமக எல்லாரும் நல்லா தான் இருக்காங்க!ஆனா நான் தான் நல்லா இல்லை. உங்களை எல்லாரையும் நேர்ல பார்க்காம..என் தங்கச்சிங்க கூட வம்பு பண்ணாம?அப்பா கூட பேசாம, நல்லா இல்லமா?”என்று கலங்கிய கண்களை சிமிட்டிக் கொண்டவன்,
“உங்க எல்லார் மேலயும் செம்ம கோபத்துல இருக்கேன்மா!என் தங்கை கஷ்டத்துல தோள் கொடுக்க நான் இல்லாம… எல்லாருமா சேர்ந்து என்னை தள்ளி வெச்சுடீங்கல்ல? மூனாவது மனிசனாட்டம் வேடிக்கை பார்க்கறேன்மா!” என்றான் ஆதங்கமாக.
இவர்களுக்கு விசயம் புரிந்து போனது..நேற்று நடந்த டாப் டென் சுற்றில் ஷக்தி எலிமினேட் செய்யப்பட்டதை கேள்விப்பட்டதில் தான் இன்றைய சென்னை வாசம் இவனது என்று!நேற்று சஞ்சய் ஃபோன் செய்து அது பற்றி வினவியிருக்க மறைத்திருந்தனர் பெண்கள் மூவரும்.
‘யார் இந்த தகவலை இவனிடம் சேர்த்திருப்பார்?’ என்ற சந்தேகத்தோடு மதியை திரும்பி பார்த்தனர் மற்றைய இரு பெண்களும்.
அதை புரிந்து கொண்ட மதி,”என்ன ரெண்டு பேரும் என்னையே சந்தேகமா பார்க்கறீங்க?இதுல ஸ்லோ மோஷன் வேற?!நான் ஒன்னும் அண்ணாகிட்ட சொல்லல!நாம தான் சொல்லக் கூடாதுன்னு பிளேன் போட்டோம்ல?” அவள் உலறிக் கொண்டு போக.. ஷக்தியையும், பார்வதியையும் முறைத்தான் இவன்.
‘மாட்டி விட்டா நான் பெத்த குரங்கு!’ தலையில் கை வைத்துக் கொண்ட பார்வதி மகனின் முறைப்பை கண்டு அசடு வழிந்தார்.
“என்கிட்ட சொல்ல கூடாதுன்னு பிளேன் வேற போட்டுருக்கீங்கல்ல?”கோபத்தில் பல்லை கடித்தான் சஞ்சய்.
“ஏன் மா என்கிட்ட நீங்க யாருமே இதை பத்தி சொல்லல?அப்பாக்கு மாதிரி உங்களுக்கும் வேண்டாதவனா போயிட்டேனா?”
“ச்சச்சே..!என்ன பேச்சுடா இது?நாங்க சொன்னவுடனே இப்படி தான் நீடான்னு வந்து நின்னுருவ.. அதுக்கப்பறம் நான் தானே உனக்கும்,உன் அப்பாக்குமிடையில டப்பாங் குத்து ஆடனும்.அதான் சொல்லல”
“எதே? டப்பா குத்தாஆஆ..??” கண்ணீர் வடித்த ஷக்தி கூட தாயின் பதிலில் கிளுக்கி சிரித்தாள்.பார்வதியை டப்பாங்குத்து ஆடுவது போல் நினைத்திருப்பால் போலும்!
தங்கையின் சிரிப்பை வாஞ்சையுடன் பார்த்த சஞ்சய், “மாஆஆ..!!உம் மேல கோபப்படக் கூட முடியுதா?!”என சலிப்புடன் சிரித்தவாறு தாயின் தோளை அணைத்துக் கொண்டான்
இதில் காண்டானது என்னவோ மதி தான்!
“அடியே ஷக்தி!அம்மா போச்சே ஐயோ போச்சேன்னு இவ்வளவு நேரம் அழுதுட்டு..இந்த பாரு சொன்ன மொக்கை ஜோக்குக்கா சிரிக்கற?!” என்றவள்,தமக்கையின் தோளில் சிறிய அடியொன்றை போட்டாள்.
“ண்ணா..!இவளை பாருண்ணா!” சிணுங்கிய படி தமையனின் தோளில் சாய்ந்தாள் ஷக்தி.
“மதிம்மா,பாவம் அவளை விடு!”
“அது சரி. நீங்க மூனு பேரும் குடும்பமா சேர்ந்துடீங்கல்ல?!!அப்போ நான் ஆரோ தானே?!நான் இந்த வீட்டை விட்டு போறேன்!”என்றவள்,
“யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க..”என பாடியபடி கதவு வரை நடந்து சென்றவளை தடுக்காமல் சிரித்தவாரு பார்த்துக் கொண்டிருந்தனர் மூவரும்.
அதில் திரும்பி பார்த்து மூவரையும் முறைத்து விட்டு,மீண்டும்..
“விடுகதையா இந்த வாழ்க்கை விடை தருவார் யாரோ” என பாட, ஷக்தி,சஞ்சய்,பார்வதி மூவரும் ஒருவரை ஒருவர் அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்துக் கொண்டனர்.
அதில் குறும்புச் சிரிப்போடு ஷக்தியிடமிருந்து கிடைத்த சிக்னலில்,இவர்கள் மூவருமாக சேர்ந்து கோரசாக,
“நான் தான் இப்போ உங்க மூனு பேரையும் பொழக்க போறேன்” பற்களை நறநறத்து மூவரையும் பார்த்து முறைக்க,கலகலவென்று நகைத்தனர்.
அவள் முறைப்பை மாற்றாமல் பார்க்க அவர்களின் சிரிப்பின் அளவு அதிகரித்தது.அதற்கு மதி நாக்கை துருத்தி காட்ட,அப்போது தான்.. வீட்டிலிருந்து வெளிவந்த சிரிப்பு சத்தத்தை கேட்டவாறு உள்ளே நுழைந்தார் மனோகரன்.
அங்கிருந்தவனைப் பார்த்து அதிர்ச்சியையும் கோபத்தையும் முகத்தில் பிரதிபலித்து நின்றிருந்தவரை கண்டவர்கள் பார்வையும் திகைப்பை வெளிப்படுத்த.. மூவரின் இதழ்களிலிருந்த புன்னகையும் மெதுவாக மெதுவாக காணாமல் போனது.
மகனின் முகத்திலிருந்து கோபமாக தன் பார்வையை விளக்கிக் கொண்டவர் சஞ்சயின் கைகளை பற்றிக் கொண்டு தன்னை தவிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த மனைவியின் புறம் திரும்பி அழுத்தமாக பார்த்தார்.
“ஏங்க..”பார்வதி கணவனை அழைக்க வர,கையில் இருந்த பைகளை நிலத்தில் சிதறடித்து விட்டு கோபமாக அவர்கள் அறைக்குள் நுழைந்து கொண்டார் மனோகரன்.
“மாஆ!”கலக்கமாக தன்னை அழைத்த மகனின் கைகளை தட்டிக் கொடுத்தவர்,
“டப்பாங்குத்து ஆடனும்டா மகனே” என சிரிக்காமல் கூற அதில் கலக்கம் மறந்து சிரித்தனர் அவர் மூன்று மகவுகளும்.
“ம்மாஆ பீ சீரியஸ் மா!” கரகரத்த குரலை மறைக்க முயன்ற படி சஞ்சய்.
“அதனால தான்டா சிரிக்காம பேசினேன்”
“ம்மாஆஆ!” – கடுப்பாகிவிட்ட கோரசான குரலில் பார்வதியின் மூன்று செல்வங்களும்.
‘மதுரை முத்துட்டருந்து கத்துக் கிட்ட மொத்த வித்தையும் காட்டா விடுறாங்களா?!’ என முணுமுணுத்த படி”ப்ச்ச்!இப்போ எதுக்கு டென்ஷன்? அவர் கிடக்கறார் விடுங்க மூனு பேரும்!ஷக்தி அண்ணனுக்கு காபி போடு.மதி கீழ கிடக்கற சமான்லாம் எடுத்து வை.நானும் பார்க்கறேன் இன்னும் எத்தனை நாளைக்கு இந்த வீணாப் போன வீம்புன்னு” கணவனை நினைத்து பொருமலுடன் அறை நோக்கி சென்றார்.
அவர் மக்கள் மூவரும் தான் அடுத்த என்ன நடக்குமோ என்றபடி அறை வாயிலை திகிலுடன் பார்த்துக் கொண்டிருக்க,அதை கலைத்தது சஞ்சயின் அலைபேசி.
அவன் மனைவி சாதனா தான் அழைத்திருந்தாள்.
அதை பார்த்த ஷக்தி, “அண்ணா நீ அண்ணி கூட பேசுண்ணா”என அவன் தோளில் ஆதரவாக தட்டியபடி கூறியவள்,மதியிடம்
“மதி,நீ கீழ கிடக்கற திங்க்ஸ் எல்லாம் எடுத்து வை!நான் டீ போடறேன்” என்றபடி கிட்சனுக்குள் புகுந்து கொண்டாள்.
பாலை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்த ஷக்திக்கு தான் நிகழ்ச்சியில் இருந்து விலகியதெல்லாம் பின்னுக்குப் போக சகோதரன் பற்றிய கவலையே இப்போது மனதில் பெரும் பாரமாய் ஏறியது.
கடந்த மூன்று வருடங்களாக அண்ணனின் திருமணத்தை ஏற்றுக் கொள்ளாமல் அவனையும்,அவன் குடும்பத்தை விலக்கி வைத்திருக்கும் தந்தையை நினைக்கும் போது ‘ஏற்றுக் கொள்வதற்கு என்ன?’ எனும் கோபம் ஒரு பக்கம்,’அப்படி என்ன தப்பு செய்துவிட்டான்?’ எனும் ஆயாசம்,அதையும் மீறி ‘அவனை பிரிந்து அவருக்கும் நிம்மதி இல்லையே?!’ வேதனை ஒரு பக்கம் அவளிடம்.
மனோகர் மட்டுமே மகனிடம் கடுமை காட்டிருக்க,அவர் மனைவியையோ, மகள்களையோ சஞ்சயுடன் உறவு கொண்டாடுவதையோ, சந்திப்பதையோ தடுத்திருக்கவில்லை.
இந்த மூன்று வருடங்களில் சஞ்சையும் வீட்டுக்கு வந்ததில்லை.பெங்களூரில் இருந்து வருடத்திற்கு நான்கு முறை தான் சென்னை வருவான். தாயையும், தங்கைகளையும் வெளியே எங்காவது சந்தித்து விட்டு சென்று விடுவான்.தந்தை கோபம் குறையும் வரை காத்திருந்தான்.பார்வதியும், ஷக்தியும் கூட தந்தை தங்களை சஞ்சையுடன் உறவு கொண்டாட விட்டுருந்தாலும் அவருக்கு மதிப்பளித்தே அவனை அதிகம் சந்திக்க நினைத்ததில்லை.அவன் மகனைக் கூட ஃபோனில் வீடியோ காலில் தான் பார்த்திருந்தார்கள்.
பார்வதிக்கு பேரனை தன் கரங்களில் தூக்கி வளர்க்க வேண்டும் என கொள்ளை ஆசை.ஆனாலும் கணவனைத் தாண்டி சென்றதில்லை.இந்த வருடம் ஆரம்பித்ததில் இதோ இன்று தான் சென்னை வந்திருக்கிறான்.இன்றும் அவனிடம் தந்தை பேசாமல் சென்றது பெரும் வருத்தத்தை கொடுத்தது.
யோசித்துக் கொண்டிருந்தவளின் நினைவலைகளில் திடீரென அவன் விம்பம்!திடுக்கிட்டாள் ஷக்தி!மனதோடு பதிந்து போன அவன் உருவத்தை உணர்ந்து கொண்டாள்!கண்களை மூடி அவன் விம்ப உலாவை தடை செய்தாள்!
‘இது சரி இல்ல ஷக்தி’ எனவும் முணுமுணுத்துக் கொண்டாள்.
“அப்பா!அண்ணாவை மன்னிச்சு ஏத்துக்கோங்க ப்பா!”என மானசீகமாக கடவுளை வேண்டி விட்டு கிட்சனிலிருந்து வெளிவந்தவள், அண்ணனுக்கும், தங்கைக்கும் டீயைக் கொடுக்க,
பார்வதி அழுகுரலில் முறையிடும் சத்தம் அடைக்கப்பட்ட அறையின் கதவை தாண்டி வெளியில் இருந்த மூவருக்கும் கேட்டது.
அந்த பொண்ணை காதலிக்கிறதை உங்க கிட்ட மறைச்சானா?! உங்கட்ட சொல்லி தானே சாதனா வீட்ல பொண்ணு கேக்க சொன்னான்!
அந்த பொண்ணு அப்பா சரியில்ல, குடும்பம் சரி இல்ல..அதுக்காக சாதனா அப்படி இருப்பாளா? உங்களுக்கு தான் தெரியாதா?
மனோப்பான்னு உங்களை அவ அப்பா ஸ்த்தானத்துல தானே பார்த்தா?!உங்களை மாதிரி ஒரு அப்பா இல்லைன்னு தானே உங்களை அப்பான்னு சொன்னா?
கௌரவம் என்னாகுறது?அந்த மாதிரி குடும்பத்துல எதுக்கு பொண்ணு எடுக்கனும்?நம்ம குடும்பம் என்ன பேசும்னு தானே நீங்க அவன் காதலிச்ச பொண்ணை கட்டிக் கொடுக்க மறுத்தீங்க?
உங்க மகனை பார்க்கல,அந்த பொண்ணை மருமகளா பார்க்கல,உங்க பேரனை பார்க்கல? ஏங்க?யாருக்காக இப்படி பிடிவாதமா இருக்கீங்க?”அழுகுரலில் அடங்காத ஆதங்கத்தை வெளிப்படுத்தும் அன்னையின் சத்தம் கேட்டு வெளியில் நின்ற மூவருக்குமே கண்கள் கலங்கின.
பார்வதி கலங்கி யாருமே பார்த்ததில்லை..அவர் கணவனான மனோகரன் கூட மனைவி அழுதோ,அதிகம் கலங்கியோ பார்த்ததில்லையே!?பார்வதி ஒரு கலகலப்பான மனிதி!தன்னையும் தன்னை சுற்றி உள்ளவர்களையும் தன் பேச்சால் கலகலப்பாக வைத்துக் கொள்பவர்.
அப்படிப்பட்ட மனைவியின் அழுகை அவரை அசைத்திருந்தாலும் பிடிவாதமாக அமர்ந்திருந்தார் மனிதர்.
கணவனை ஒரு பார்வை பார்த்து விட்டு கண்களை அழுத்தமாக துடைத்துக் கொண்டார் பார்வதி.
“ம்மாஆ!நீ அழாதமா!எனக்காக நீ பேச வேண்டாம்.அப்பா கோபம் போகும் வரை நான் இங்க வரல.நான் போறேன் மா!” கதவருகில் நின்று கரகரத்த குரலுடன் சஞ்சய் பேசினான்.
அவன் பேசியது கேட்டும்..கண் மூடி நெற்றியில் கை வைத்து படுத்துக் கொண்டு.. அசையாது இருக்கும் கணவனை பெரு மூச்சுடன் நோக்கி விட்டு வெளி நடப்பு செய்தார் பார்வதி.
“ம்மாஆ?!” என கலங்கும் மகனிடம்,
“பார்த்தியாடா சஞ்சய் உன் அப்பாவ!கடைசியா என்னையே வில்லி மனைவி மாதிரி போர்ட்ரைட் (portrait) பண்ண வெச்சுட்டாரு! உங்கப்பா ஒரு கல்நெஞ்சக்கார கணவன்டா!”என பார்வதி நொடித்துக் கொள்ள சிறு சிரிப்பு எட்டிப் பார்த்தது பிள்ளைகள் மூவரிடமும்.
“சா..சாரி மா!இன்னைக்கு வீட்டுக்கு நான் வந்திருக்க கூடாது..எப்போவும் போல வெளிலயே சந்திச்சிருக்கனும். ஆனா முடியல மா.ஷக்தி நிலமை கேள்விப்பட்டும்.. வேத்தாள் மாதிரி வெளில நிக்க முடியல!”என தொண்ட அடைக்க பேசுபவனை பார்த்து வாஞ்சையாக அவன் கன்னம் வருடியவர்,
“அதெல்லாம் விடுடா சஞ்சு..இது உன் வீடு.நீ எப்போ வேணா வரலாம்” என்றார் மெல்லிய குரலில்.
சரியென்று தலையாட்டிக் கொண்டவன் மனோகர் இருக்கும் அறையை எட்டிப் பார்த்து விட்டு கவலையுடன் பெருமூச்சொன்றை விட்டுக் கொண்டான்.அவன் செய்கையில் பெண்கள் மூவரும் கலக்கமாக அவனை பார்க்க அதில் கண்ணுக்கெட்டாத சிரிப்பை உதிர்த்தவன் சிறிய தலையசைப்புடன் அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
அன்றிரவு பெண்கள் மூவருக்கும் உணவு இறங்கவில்லை.பார்வதி அதட்டி உருட்டி மகள்களை சாப்பிட வைக்க பெயருக்கு கொறித்து விட்டு அறையில் முடங்கிக் கொண்டனர். மனோகரும் சாப்பிடவில்லை. அவர் கோபத்தை சாப்பாடு மேல் தான் காட்டுவார் என தெரிந்த பார்வதியும் பேசாமல் போய் படுத்துக் கொண்டார்.
தன் மடியில் தலை வைத்து படுத்திருக்கும் மதியின் தலையை வருடி விட்டாள் ஷக்தி.அவளை விட தைரியமாக இருக்கும் மதியே,அண்ணன் நிலமையை நினைத்து அழுதபடி இருந்தாள். அதோடு மதிக்கு அடுத்த வாரத்தில் இருந்து இறுதி பரீட்சைகள் ஆரம்பம்.அந்த அழுத்தமும் சேர்ந்து கொண்டது.அவளை தூங்க வைத்து விட்டு எழுந்து அறையின் ஜன்னல் பக்கம் போய் நின்று கொண்டாள் ஷக்தி.
ஏதோ ஒரு யோசனையில் இருளை வெறித்திருந்தவளை தொலைசியின் அழைப்பு கலைத்தது.