இந்த சிறிய இடைவேளை நேரத்தில் மகேஷை பற்றி பார்ப்போம்.
சந்திரன் மகேஷின் தந்தை இறகும்பொழுது மகேஷிற்கு பதிமூன்று நிஷாவிற்கு பத்து வயது இந்த சிறு வயதில் அவர்களது தந்தையை இழந்து விட்டார்கள்.
சந்திரன் குழந்தைகள் மீது மிகவும் பாசமானவர்தான். ஆனாலும் அவரது பழக்க வழக்கங்கள் அனைத்தும் போதைக்கும் குடிக்கும் அடிமையாக இருந்ததால் அவர் இவ்வளவு சீக்கிரமாக இறக்க காரணமாக இருந்தது.
மகேஷ் சிறுவயதிலேயே எவ்வளவோ தந்தையிடம் கூறிப் பார்த்தான். ஆனால் அவர் அதை விட முடியாமல் தான் அதை தொடர்ந்தார்.
குடி மற்றும் போதை வஸ்தினால் தந்தை சீக்கிரம் மரணத்தை தேர்ந்தெடுத்ததால் அதை அவன் எந்த கஷ்டம் மற்றும் சோகத்திலும் தொடுவதே இல்லை என்ற முடிவை தந்தையின் இறப்பில் இருந்து எடுத்தான்.
தந்தை மேல் மிகவும் பாசம் வைத்திருந்த மகேஷிற்கு அவரின் இழப்பிலிருந்து விடுபடுவது மிகவும் கடினமாக இருந்தது. ஆனாலும் குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பு அவனது ஆகும். என்பதை உணர்ந்து கொண்டு அவனே முதலில் தந்தையின் இழப்பில் இருந்து மீண்டு வந்தான். அடுத்து என்ன செய்வது என தெரியாமல் சித்ரா தவித்து இருக்கும்போது பழனிச்சாமி அனைத்து விதத்திலும் அவர்களுக்கு உதவியாக இருந்தார்.
நிஷாவையும் மகேஷையும் அவர் படிக்க வைப்பதாக கூறியும் மகேஷ் அவரின் உதவியில் வாழ விரும்பாமல் அவனுக்கு ஒரு வேலை வாங்கித் தருமாறு கூறினான்.
அப்பொழுது அவரின் பெயரில் அவர் வங்கி கடன் எடுத்து அவனுக்கு முதல் போட்டு கரவை பால் மாடு வாங்கி கொடுத்தார்.
அந்த வயதிலும் அவன் அந்த மாடுகளை அவனுக்கு பழக்கப்படுத்தி காலை மாலை இரு நேரங்களும் மாட்டை வளர்த்து பராமரித்து அதில் பால் கறந்து படிப்படியாகவே மாடுகளையும் பெருக்கி அவனும் வளர்ந்தான்.
இருவது வயதில் மாடு மேய்ப்பது அவனுக்கு மரியாதை இல்லை என நினைத்து ஏழு வருடங்களில் மாட்டை ஒரு பட்டியாகவே பெருக்கி நல்ல விலைக்கு விற்பனை செய்தான்.
பணத்தை எந்த தொழிலில் போட்டாலும் தொழில் ஒரு வகையில் நஷ்டம் ஏற்படும் என்பதால். பணத்தை பணத்தில் போட்டு சிறிதாக வீட்டிலிருந்தபடியே வட்டிக்கு கொடுக்க ஆரம்பித்தான்.
இருவது வயதாக இருந்தாலும் அவனது ஆளுமை திறமையை பார்த்து அந்த ஊர் மக்கள் அவனுக்கு பயந்து சரியாக வட்டியை கொடுக்க ஆரம்பித்தார்கள்.
மேலும் ஐந்து வருடங்கள் கழித்து இந்த வட்டி தொழில் நிரந்தரமாக செய்வதற்கு தகுந்த தொழில் என தெரிந்தபடியால் டவுனில் வாடகைக்கு ஒரு கடை எடுத்து மகேஷ் செய்ய ஆரம்பித்தான்.
அவன் தொட்டது அனைத்தும் ஏறுமுகம் என்பதால் இதுவரை நஷ்டத்தை அவன் சந்தித்ததில்லை.
பழனிச்சாமி அவனுக்கு செய்த உதவியை அவன் மறக்கவில்லை. இருந்தாலும் அந்த உதவியை காரணம் காட்டி அவர் அவனிடம் எவ்வித சலுகையும் இதுவரை எதிர்பார்த்ததில்லை. இனி எதிர்பார்த்தாலும் அவன் செய்யப் போவதுமில்லை.
தாய் மாமா என்னும் முறையில் அவனுக்கு உதவி செய்து அவர் கை தூக்கி விட்டார். அவனும் நல்ல முறையில் அவர் பட்ட கடனை அடைத்து விட்டான்.
அவருக்கு கஷ்ட காலம் என்றால் கட்டாயம் உதவி செய்வான். ஆனால் இந்த திருமணம் அவர்களது மகள் என்னும் விதத்தில் அவன் சலுகைகள் கொடுக்க மாட்டான்.
ஓடி ஆடி விளையாட வேண்டிய வயதில் குடும்பம் அவனது பொறுப்பாக வந்ததால். சந்தோசம் எதையும் அவன் அனுபவிக்காமல் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்னும் நோக்கத்தோடு வாழ்கை பாதையில் ஓடியதால் அவன் மனம் சற்று கடினம் ஆகிவிட்டது.
சிறு வயது சந்தோசங்களை இழந்துவிட்டான். அன்பு பாசம் காட்டி தாய் வளர்த்து நல்லது சொல்லிக்கொடுக்க வேண்டிய கடமையை சித்ரா செய்ய தவறி விட்டார். சிறிதாக மனம் இலகும் நேரம் அனைத்தும் அவன் தவற விட்டதால் பணம் சம்பாதிக்கும் நோக்கோடு தான் அவன் வாழ்கை பயணம் இனி செல்லும்.
நிஷாவின் கணவன் ஒரு உதவாக்கரை என்று ஒரே வரியில் சொல்லலாம்.
காலேஜ் படிக்கும் போது இருவரும் காதலித்து அதனால் நிஷா கர்ப்பமானதால் மட்டுமே மகேஷும் பழனிச்சாமியும் இந்த திருமணத்தை நடத்தி வைத்தார்கள்.
அவனாக எதுவும் உழைத்து அவர்களுக்கு கொடுக்காமல் மகேஷின் உழைப்பிலேயே உண்டு உடுத்தி செலவுகள் செய்து என வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
அவனது தாய்க்கு என்னவெல்லாம் வாங்கி கொடுத்து பார்த்துக் கொள்வானோ அதை தற்போதும் அவனது தங்கை மற்றும் தங்கை குடும்பத்திற்கும் செய்து கொண்டிருக்கிறான்.
இந்த சலுகை அனைத்தும் கெட்டுப் போகாமல் இருப்பதற்கு நிஷா உமாவை மகேஷிற்கு திருமணம் செய்து கொடுக்க தீவிரமாக இருந்தாள்.
உமா விற்கு மகேஷ் மேல் ஒரு விருப்பம் இருப்பதை சிறு வயதிலேயே நிஷா கண்டு கொண்டாள்.
அப்பொழுது இருந்து அவள் அவளது தாய் சித்ராவிடம் உமாவை மகேஷிற்கு திருமணம் முடித்து வைக்கும்படி கூறிக்கொண்டு இருப்பாள்.
உமாவை தவிர வேறு எந்த பெண்ணை திருமணம் செய்து வைத்தாலும் தற்பொழுது அவர்களுக்கு செய்து கொண்டிருக்கும் அனைத்தும் திருமணத்தின் பின் நடக்காமல் போய்விட நூறு வீதம் வாய்ப்பிருப்பதை நிஷா அறிந்து வைத்திருந்தாள்.
தாய் மற்றும் தங்கைக்கு அனைத்தும் செய்து கொடுப்பான் என்பதால் கேட்கும் நேரங்களில் எல்லாம் தேவையில்லாமல் பணமும் கொடுக்க மாட்டான்.
வீட்டுக்கு தேவையான சமையல் பொருட்கள். அவர்களுக்கு தேவையான உடை அவர்களுக்கு தேவையான அலங்கார பொருட்கள் என அனைத்தையும் முடிவதற்கு முன்பே சொல்லிவிட்டால் அவனே வாங்கி கொடுத்து விடுவான்.
பணம் தேவையில்லாமல் கொடுக்க மாட்டான். தாயின் மருத்துவ செலவிற்கு மட்டும் அளவாகவே பணம் கொடுப்பான்.
பணம் கொடுக்காததால் நிஷா வின் கணவனுக்கு மிகவும் நிஷா வின் மேல் கோபம். அவர்களுக்கிடையே தினமும் சண்டை ஏற்படும்.
மகேஷ் அவனால் முடிந்த அளவிற்கு அவனிடம் கூறி பார்த்து விட்டான். உழைத்து அவனது குடும்பத்தை அவனே பார்த்துக் கொள்ளுமாறும் அவனே முதல் போட்டு கடை ஒன்று வைத்து தருவதாகவும் கூறினான். ஆனால் அவன் கையில் பணம் கொடுக்காமல் அனைத்தையும் மகேஷ் செய்ய இருந்ததால் அதையும் அவன் தடுத்துவிட்டான். உழைக்குமாறு மகேஷ் கூறும்பொழுது ஒரு காதில் கேட்டு மறு காதில் அதை விட்டுவிடுவான். அதன் பின்பும் உழைப்பதற்கு எவ் வித சிந்தனையும் இல்லாமல் இருந்து விடுவான்.
இன்னும் அதிகமாக அவனை கண்டித்தால் எங்கு தங்கையை விட்டு சென்று விடுவானோ.! என்று நினைத்து அதன் பின் தங்கையின் முழு பொறுப்பும் தன்னிடம் வந்து விடும் என்பதால் மகேஷ் அவனிடம் அதிகமாக கண்டிப்பை காட்டாமல் விட்டுவிட்டான்.
தங்கைக்கு அவனது குடும்பத்திற்கும் அவன் செய்யும் செலவு அவனுக்கு மாதத்திற்கு வரும் வருமானத்தில் சொற்ப செலவு தான்.
அவனை இருக்க வைத்து இன்னும் எத்தனை வருடத்திற்கு தான் இவ்வாறு அவர்களது குடும்பத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது தெரியாததால் ஏதாவது முடிவு செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டான்.
மகளை திருமணம் செய்து கொடுத்தால் அவனது குடும்ப விஷயம் அனைத்திலும் மாமனார் தலையிடுவார். என்பதை மகேஷ் உணர்ந்து இருந்தான். நிஷாவின் திருமணத்திற்கு முன்பு அவளுக்காக எவ்வளவு செய்தாலும் அவர் கண்டுகொள்ளவும் மாட்டார். கேட்கவும் மாட்டார்.
ஆனால் நிஷா தற்பொழுது திருமணம் செய்து குழந்தை பிறந்து கணவனும் இருக்கும் பொழுது அவளது குடும்பத்திற்காக அனைத்து செலவையும் அண்ணனாகிய மகேஷ் செய்வதை பழனிச்சாமி இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டார்.என்று மாமனாரை பற்றி நன்கு உணர்ந்திருந்தான்.
நிஷா உமா அவர்களுக்கு இடைஞ்சலாக இருக்க மாட்டாள். என்று நினைத்தாலே தவிர அவளது மாமா மற்றும் அத்தையின் குணத்தை அவள் சிறிதும் நினைத்து பார்த்ததில்லை.
பழனிச்சாமி கமலா தம்பதியினர் எவ்வளவுக்கு சிரித்து சந்தோசமாக பேசுவார்களோ..! உதவி என்று வந்தால் அனைத்தும் செய்வார்களோ.! அதேபோன்று அவர்களது பிள்ளைகளுக்கு ஒரு பிரச்சினை என்று வரும் பொழுது யாருக்கும் எதற்கும் சிறுவிதத்திலும் மனம் இளக மாட்டார்கள்.
மகேஷ் அவனது குடும்பத்திற்கு செய்யும் செலவை பழனிசாமி பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார். ஏனென்றால் இன்று வரையிலும் சித்ரா அவரது தங்கை. கணவனை இழந்தவள் அவளை பார்த்துக் கொள்வது மகன் மகேஷின் கடமை என்று நன்கு உணர்ந்தவர். என்னதான் இருந்தாலும் அதனால் மகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படும் என்றால் அதைக் கேட்காமல் விடமாட்டார்.
எவ்வளவு நேர்மையாக சித்ராவிற்கு அண்ணனாகவும் மகேஷிற்கு தாய் மாமாவும் பழனிச்சாமி இருக்கிறாரோ அதற்கு நூறு மடங்கு மகளுக்கு தகப்பனாக இருப்பார்.
அவர் எடுக்கும் முடிவிற்கு அவரது மாப்பிள்ளை மகேஷ் கட்டுப்பாட்டே தீர வேண்டும்.
அவரின் குணங்களை மகேஷ் நன்கு உணர்ந்தபடியால் இதைக் கேள்வியாக அவர் கேட்கும் முன்பு அவன் இதற்கு முடிவு கட்ட வேண்டும் என நினைத்து விட்டான்.
மாமனும் மாப்பிள்ளையும் வெகு சீக்கிரமே முட்டிக் கொள்ளும் காலமும் வரும்.
தொடர்ந்து அனைத்து விதத்திலும் தாய்க்கு நல்ல மகனாக மனைவிக்கு நல்ல கணவனாக தங்கைக்கு நல்ல அண்ணனாக குழந்தைக்கு நல்ல தகப்பனாக அவனது கடமைகளை எவ்வித குறைகளும் இல்லாமல் மகேஷ் செய்வான்.
அவனது செயல்பாடுகளில் கடமை இருக்குமே தவிர அன்பு பாசம் என்பது பஞ்சமாகி விடும் அவனிடத்தில்.
அவனது இந்த குணத்தையும் மாற்ற அவனுக்கென்று ஒரு இளவரசி பிறந்தால் மட்டுமே முடியும்.
தாய் மனைவி தங்கை மாற்றாத அனைத்தையும் அவனது பெண் குழந்தை மாற்றிவிடும்.
அனைவரும் எதிர்பார்த்து இருந்த நல்ல நேரமும் வந்தது.
கர்மசிரத்தையாக ஐயர் கூறிய மந்திரங்களை இருவரும் கூறி அனைத்து சடங்குகளையும் எவ்வித குறையும் இன்றி முறையாக செய்து அனைவரின் ஆசியையும் பெற்று திருமணம் எவ்வித குழப்பமும் இன்றி இனிதாகவே நிறைவேறியது.
தற்பொழுது செல்வி பழனிச்சாமி உமாதேவி. மனப்பூர்வமாகவும் சடங்கு மற்றும் சட்டப்பூர்வமாகாகவும் திருமதி உமாதேவி மகேஸ்வரன் ஆகிவிட்டாள்.
இத் திருமணம் நடைபெற வேண்டும் என அவர்கள் தவித்திருந்த தவிப்பு அனைத்தும் தற்பொழுதுதான் தீர்ந்து ஆறுதல் அடைந்து பழனிச்சாமி கமலா தம்பதியினர் சீராக மூச்சு விட்டார்கள்.
அதன் பின் நடக்க வேண்டிய அனைத்து சடங்குகளும் எந்த விதக்குறைகளும் இன்றி நடந்து முடிந்தது.
நிஷாவின் தூண்டுதலின் பேரில் அவர்களது சொந்தத்தில் இருக்கும் ஒரு பெண் உமாவிற்கு கொடுக்கும் சீர்வரிசையை சபையில் வைத்து கொடுக்குமாறு கூறினாள்.
அனைத்தும் தயாராக இருந்தபடியால் கமலா மற்றும் பழனிச்சாமி இருவருக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் சீர்வரிசையை கொடுக்க அனைத்தையும் தயார் படுத்தினார்கள்.
பெண் கழுத்தில் நல்லபடியாக தாலி ஏறியதும் கொடுக்க வேண்டும் என அவர்கள் ஒரு எண்ணத்தில் நினைத்தார்கள்.
உமா தாலி ஏறியதும் தற்பொழுது இருந்து அவனது மனைவியாகி விட்டாள். அதனால் இனி அவர்கள் மகள் என்று எந்தவித உரிமையும் முடிவும் எடுக்க முடியாது அவர்களால். அதனால் தாலி கட்டும் வரை மகேஷ் பொறுமையாக இருந்தான்.
இனியும் பொறுமை காக்க தேவையில்லை. அனைத்தையும் இங்கு வைத்தே உடைத்து பேசி விட வேண்டும் என முடிவெடுத்து மகேஷ் அவனது மனதில் இருந்ததை பேச ஆரம்பித்தான்.
” சபையில் இருக்கிறவங்களுக்கும் பெரியவங்க எல்லாருக்குமே நான் ஒன்னு சொல்லுறேன். நல்லா கேட்டுக்கோங்க அப்புறம் கேக்கல புரியலன்னு சொல்லக்கூடாது.”
” நான் பொருள்கள் தான் கடையில காசு கொடுத்து வாங்குவேன். ஒரு பொண்ணை இல்ல. நீங்க கொடுக்குறது எல்லாத்தையும் நான் கை நீட்டி வாங்கினா அது என் பொண்டாட்டிக்கும் அசிங்கம். எனக்கும் அசிங்கம். “
” மாமா இவ்வளவு நேரமும் பேசாமலுக்கு இருந்துட்டு இப்ப பேசுறேன்னு என்னை தவறா நினைக்க வேண்டாம். இப்ப பேசினால் தான் என்னோட பேச்சு எடுபடும் என்பதால் இப்ப பேசுறேன்.
வாங்கி வச்சிருக்க பொருள் வீடு நகை பணம் எதுவுமே என் பொண்டாட்டிக்கு வேணாம்.”
உங்க பொண்ணுக்கு நீங்க கொடுக்க நினைத்திருக்கலாம். ஆனா இப்ப இவ என் பொண்டாட்டி. அதனால் நாங்க வாங்க விரும்பலை. “
” நான் இப்படி பேசினதுக்கு நீங்க கோவிச்சாலும் எனக்கு பிரச்சனை இல்லை. கோவிக்காமலுக்கு அடுத்து நடக்க வேண்டியதை பார்த்தாலும் சரி.
இப்ப என் பொண்டாட்டி கட்டி இருக்கிற புடவை கூட கூறை புடவை என் காசுல நான் எடுத்து கொடுத்தது.”
” உங்க பொண்ணுக்கு நீங்க போட்டு விட்ட நகை எல்லாம் நாளைக்கு உங்க வீடு தேடி வந்துடும்.” என்று அவன் பேச நினைத்தது அனைத்தையும் கூறிவிட்டு உமாவை ஒரு கையில் பிடித்துக் கொண்டு அந்த மண்டபத்தை விட்டு வெளியேறினான்.
தற்பொழுதுதான் திருமணம் நடந்து முடிந்து விட்டது. என நிம்மதியில் இருந்த பழனிச்சாமி கமலா தம்பதியினருக்கு மகேஷின் இந்த அதிரடி பேச்சு. மற்றும் செயலை ஜீரணிக்க முடியாமல் அடுத்து என்ன செய்வது என்று முடிவு எடுக்க முடியாமலும் தவித்து நின்றார்கள்.
சித்ரா நிஷா இருவரும் இவனுக்கு பைத்தியம் பிடித்து விட்டதோ என்று நினைத்து விட்டார்கள்.
கண்ணுக்கு எட்டியது கைக்கு எட்டவில்லை என்று இருவரும் மகேஷ் திருமணநாள் அன்று மிகவும் சந்தோஷமாகவே கெட்ட வார்த்தையால் அவனை அர்ச்சனை செய்து வாழ்த்தினார்கள்.
மகேஷின் ஆட்டம் இத்தோட முடியவில்லை. தற்பொழுது தான் ஆரம்பமாகி இருக்கிறது என்பது. அங்கு கூடி இருப்பவர்கள் யாருக்கும் தெரியவில்லை.
எந்தப் பாவமும் அறியாத உமா இன்னும் பலவற்றை அனுபவிக்க காத்திருக்கிறாள்.