இங்கு பசுஞ்சோலை ஊரில் மாணிக்கத்திடம் வேலைக்கும் செல்ல வேண்டும். அந்த பெண்ணிடம் சாமி சொன்னவாறு திருமணத்திற்கும் சம்மதம் கேட்க வேண்டும். நாட்கள் அதிகம் இல்லை என்பதை உணர்ந்து. முதலில் எதை செய்ய வேண்டும் என்னும் திட்டத்தையும் மனதில் திட்டி விட்டு வேகமாக வீட்டுக்கு வந்தான் சோழன்.
வீட்டுக்கு வந்தவனுக்கு பாட்டியின் கட்டில் அருகே இருந்த சிறிய மேசையில் அவள் கைப்பட எழுதி வைத்த கடிதம் தான் கண்ணில் பட்டது.
ஆனாலும் அதை என்னவென்று பார்க்காமல் அவளைத்தான் வீடு முழுவதும் தேடினான். அந்த சிறிய வீடு வீட்டை சுற்றி இருந்த இடம் அனைத்திலும் தேடி அவள் இல்லை என்பதை அறிந்து கொண்ட பின் வீட்டினுள் வந்து அந்த கடிதத்தை எடுத்து பார்த்தான்.
அதில் ” செல்லம்மாவாகிய நான் எழுதிக் கொள்வது என்னவென்றால். அந்த ஊருக்கு அவள் புதிது என்றும் சூழ்நிலையின் காரணமாகவே அவள் நேத்து இரவு அந்த வீட்டுக்கு வந்ததாகவும். அங்கு பாட்டியும் அந்த ஆன்டியையும் பார்த்ததும் பெண்கள் இருப்பதால் பாதுகாப்பு என்று ஓர் இரவை கழிப்பதற்காக அவர்களுக்கு அவளால் முடிந்த உதவி செய்துவிட்டு அங்கே இருந்ததாகவும். இனி அவள் யாருக்கும் பாரமாக இருக்க போவதில்லை என்றும் அவளால் அவர்களுக்கு இனி எந்த தொந்தரவும் வராது என்றும் பாட்டி மற்றும் அந்த ஆன்ட்டி இருவருக்கும் வேற ஒரு நல்ல குணமான பெண்ணை அவர்களை கவனிப்பதற்கு வேலைக்கு வைக்கும் படியும் இரவும் காலையும் அவளுக்கு உணவு கொடுத்து பாதுகாப்பாக அடைக்கலம் கொடுத்ததற்கு நன்றியும் கூறி கடிதம் முடிந்திருந்தது.
அதை படித்ததும் சோழனுக்கு என்னவென்று உணர்வது என்று தெரியாமல் தவித்து போய் நின்றான்.
அவளோட கொஞ்சம் பேச வேண்டும் அவன் வரும் முறை காத்திருக்கும் படி கூறிவிட்டு கதிர் வந்ததும் மாணிக்கத்திடம் வேலைக்கு சென்று அரை நாள் விடுப்பெடுத்து விட்டு வந்து அனைத்தையும் அவளுடன் பேசி ஒரு முடிவு எடுக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தான்.
ஆனால் அவனது நினைப்பில் மண்ணள்ளி போட்டு விட்டு அவள் எங்கோ சென்று விட்டாள்.
இந்த ஊரில் அவன் எங்கே சென்று அவளை தேடுவது மாணிக்கதிடம் வேலைக்கு செல்ல வேண்டும். என பல யோசனையில் இருந்தவனை பாட்டியின் குரல் கலைத்தது.
பாட்டி அழைத்ததும் அங்கே சென்று என்னவென்று கேட்டு அவரை அழைத்துக் கொண்டு குளியல் அறையில் விட்டு விட்டு வந்தான்.
தற்போது அவன் செல்லவும் முடியாது பாட்டி மட்டும் தாய் இருவருக்கும் ஓர் துணை கட்டாயம் தேவை. அவர்களை தனியே விட்டு அவன் போகவும் முடியாது. யார் என்று சரியாக தெரியாத அவள் மீது கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது.
இரவு ஃபுல் போதையில் வந்தவனுக்கு அவளின் முகம் பார்த்தது சரியாக ஞாபகத்தில் இல்லை. காலையில் அவன் செல்லும் பொழுது முழங்காலில் முகம் புதைத்து அமர்ந்திருந்தவளை தான் பார்த்து விட்டு சென்றான்.
எங்கே தேடுவது எப்படி கண்டுபிடிப்பது என்று யோசனையில் இருக்கும்பொழுது. பாட்டி அழைக்கவும் அவரை அழைத்துக் கொண்டு வந்து கட்டிலில் அமர வைத்து அவருக்கு குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்துவிட்டு அவனும் சிறிய அளவு உணவை உண்டு விட்டு கதிரின் வருகைக்காக காத்திருந்தான்.
சரியாக நேரம் காலை 9 மணி ஆனதும் கதிரும் வந்து விட இருவரும் மாணிக்கத்திடம் சென்றார்கள்.அவர் சோழனுக்கு பாராட்டு கூறியதும் சிரித்த முகமாக அதைக் கேட்டிருந்து விட்டு எவ்வாறு விடுமுறை கேட்பது என்று தெரியாமல் தாங்கியபடி நின்றான் சோழன்.
மாணிக்கமும் அவன் தயக்கத்தை பார்த்து என்னவென்று கேட்டார்.
” ஐயா எனக்கு ரெண்டு நாளைக்கு விடுப்பு வேண்டும்.. வீட்டுல அம்மாவை பாட்டியும் பார்த்துக்கொள்வதற்கு யாரும் இல்லை. வேலைக்கு ஒரு பொண்ணு தேடணும். துணைக்கு ஒரு ஆள் வேண்டும் இப்பொழுது தனியா இருக்கிறாங்க. ரெண்டு நாளைக்குள்ள அவங்களுக்கு ஆள் தேடி செட் பண்ணி கொடுத்துட்டு வேலைக்கு வரட்டுமா என்று கேட்டான். ” சிறிதும் யோசிக்காமல் மாணிக்கம் ” தாராளமா விடுப்பு எடுத்துக்கோ சோழா இதுல என்ன இருக்கு. எப்பவுமே நீயாவே லீவு கேட்க மாட்ட இன்னைக்கு நீ கேட்டிருக்க அதனால உனக்கு இருக்கிற அவசரம் எனக்கு புரியுது. விரும்பினால் நானும் வீட்டு வேலைக்கு ஒரு நல்ல பொண்ணா பார்த்து விசாரிக்கிறேன். அது சரி உனக்கு கல்யாணம் பண்ணிக்கலாம்னு ஆசை எதுவுமே இல்லையா சோழா?. வீட்டுக்கு வேலைக்கு ஒருத்திய தேடி திரியறதுக்கு. நீ ஒரு கல்யாணத்தை பண்ணிட்டா அவ காலத்துக்கும் உங்க எல்லாரையும் பார்த்துக் கொள்ளுவா தானே. வீட்டு வேலைக்கு இல்லாமலுக்கு உனக்கு கல்யாணத்துக்கு நான் ஒரு பொண்ணு பார்த்துடறேன் சோழா நீ கவலைப்படாத. இப்போ வயசானவங்க அங்க தனிய இருக்காங்க சீக்கிரமா வீட்டுக்கு போ. ” என்று கையில் கொஞ்சம் பணமும் கொடுத்து சோழனை அனுப்பி வைத்தார்.
சோழன் வெளியே சென்று விட்டான் என்று தெரிந்ததும் கதிர் மாணிக்கத்திடம் ” என்னய்யா நீங்க நீங்களே அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொல்றீங்க. நாளைக்கு அவன் கல்யாணம் பண்ணி அவனுக்கு ஒருத்தி வந்துட்டா நம்ம கிட்ட வேலைக்கு போகாத கொலை பண்ணாதனு அவ சொன்னா அப்புறம் நாம என்ன பண்றது?.” என்று கேட்டான் கதிர்.
” அடேய் முட்டாப் பய மவனே. சோழனை பார்த்தால் பொண்டாட்டி பேச்சை கேட்டு அவ முந்தானையை பிடிச்சிட்டு திரியுறவன் போலவா இருக்கு.
அவன்லாம் எப்பயுமே முரட்டு பய டா பொண்டாட்டியோட அன்பு பாசம் எல்லாம் உணரவே மாட்டான். அவன் இப்ப ஒண்டிக்கட்டையா அங்க இருக்கிற பெருசுகளை பார்த்துக்கவே ஆளில்லாமல் தவிச்சிட்டு இரண்டு நாள் லீவு கேட்க்குறான். இதுவே நமக்கு அடங்கின ஒரு பொண்ணு பார்த்து நாம அவனுக்கு கல்யாணம் பண்ணி வைத்துவிட்டால்.பாரு ஐயா நமக்கு கல்யாணம் பண்ணி இவ்ளோ பெரிய நல்லது செய்றாருன்னு நம்ம மேல ஒரு நல்ல எண்ணம் அவனுக்கு வரும். அவனுக்கு நம்ம மேல எப்பயுமே ஒரு நல்ல எண்ணம் இருக்கணும் டா அதுதான் நமக்கு ரொம்ப முக்கியம். நாமளே ஒருத்தியை பிடிச்சு அவளுக்கு பணத்தை கொடுத்து அவனுக்கு அவளை கல்யாணம் பண்ணி கொடுத்தா அவ அங்க இருக்கிற பெருசுகளையும் பார்த்துட்டு அவனுக்கு பொண்டாட்டியா வாழ்ந்து புள்ள குட்டி பெத்து போட்டு அவன் என்ன பண்றான் வீட்ல இருக்கும் போது எங்க போறான் வரான் என்ற தகவல் எல்லாம் நமக்கு சொல்லுவா? நீ எந்த நேரமும் அவனை பின்தொடர்ந்து கொண்டு இருக்க முடியுமா? வெளில போகும்போது வேலைக்கு போகும் போதும் நீ அவன் கூட இருந்து அவன் என்ன செய்றான்னு எனக்கு சொல்லுவ. அதே மாதிரி வீட்லயும் அவனை பத்தி தெரியறதுக்கு நமக்கு ஒரு ஆள் இருக்கிறது நல்லது தானே. ” என்றான் மாணிக்கம்.
” நீங்க சொல்றதெல்லாம் சரிதான் ஐயா ஆனா நம்ம நடிக்க அனுப்புற பொண்ணுக்கு அவன் மேல லவ் வந்து நமக்கு எதிராக மாறிவிட்டால் என்ன பண்ணுறது?. ” என்று அவனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை கேட்டான் கதிர்.
” நீ சொல்றதும் சரி தான் டா. நம்ம அதுக்கேற்ற மாதிரி நமக்கு பணிஞ்சு போற பொண்ணுதான் தேடனும் . அவ சைட்ல ஒரு பிடிமானம் இருக்கணும். யாரையாவது வச்சு அவளை கார்னர் பண்ணி தான் அவன் கூட கல்யாணம் முடிச்சு வாழ அனுப்பனும். அவளுக்கு எப்பவுமே ஒரு பயம் இருக்கணும் நாம ஏதாவது தவறா அவருக்கு எதிரா பண்ணிட்டா நம்ம அம்மாவையோ, அப்பாவையோ யாரையாவது கொன்னுருவார். என்ற பயம் அவளுக்கு இருந்துகிட்டே இருக்கணும். அப்படிப்பட்ட ஒருத்தியை தான் தேடணும். எல்லாத்தையும் மீறி அவ சொல்லிட்டான்னு வை அதனால் நம்ம மேல அவனுக்கு சந்தேகம் வந்துவிட்டால் அந்த குடும்பத்தை கூண்டோட எமலோகம் அனுப்பிட வேண்டியதுதான். அதுதான் நம்மட தொழிலும் கைவந்த கலையும் ஆச்சே. ” என்று கூறி சத்தமாக வாய் விட்டே சிரித்தான் மாணிக்கம்.
அவர்களின் உரையாடல் முடிந்ததும் இருவரும் கலைந்து சென்று விட்டார்கள்.
மாணிக்கத்தின் வீட்டில் இருந்து அவனின் வீட்டிற்கு வந்த சோழன். அவர்களின் பக்கத்து வீட்டு சிறு பெண்ணை அழைத்து அவனது கைபேசி இலக்கத்தை கொடுத்து இவர்களையும் சற்று நேரம் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு அவளைத் தேடி வெளியே சென்று விட்டான்.
அன்று அந்த வீட்டிலிருந்து காலை வெளியேறிய செல்லம்மா சற்று தொலைவில் இருந்த ஒரு முருகன் கோயிலுக்கு சென்றாள்.
அவளது மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது.
ஏன் என்று காரணம் புரியாமல் அங்கு இருந்த முருகன் சிலையை பார்த்துக் கொண்டு சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்தாள்.
ஒரு நோயாளியையும் வயது முதிர்ந்துரையும் தனியாக விட்டுவிட்டு வந்தது அவளுக்கு அவ்வளவு சரியாக படவில்லை.
அவள் யார் எவர் என்று தெரியாத போது அவளுக்கு இரண்டு நேர உணவு மற்றும் இரவும் பாதுகாப்பும் கொடுத்த அவர்ககளை அவளும் யார் எவர் என்று தெரியாத போது வயதான அவர்கள் இருவரையும் துணை இன்றி தனியே விட்டு வந்து விட்டோமே என்ற குற்ற உணர்வு அவள் மனதை அழுத்திக் கொண்டிருந்தது.
முருகன் அவளைப் பார்த்து அவளின் வாழ்க்கையை நினைத்து அழகாக சிரித்துக் கொண்டிருப்பது போன்று அவளுக்கு தோன்றவும் அவன் குடிகாரனோ நல்லவனோ கெட்டவனோ நடப்பது நடக்கட்டும் என்று முருகனை மனதார வேண்டிக்கொண்டு மீண்டும் அவர்களது வீட்டுக்கே திரும்பிச் சென்றாள்.
நமது மனம் இரண்டாகப் பிரிந்து நல்லது கெட்டதற்கு இரண்டுக்கும் போராடும்.
ஒரு மனம் இது சரி என்றும் மற்றொரு மனம் தவறு என்று போராடும். எதற்கு நாம் தலை சாய்ப்பது என்பது தான் நமது வாழ்க்கையை தீர்மானிக்கிறது.
செல்லம்மாவின் மேல் சற்று இரக்கம் கொண்டு இறைவன் கொடுத்த அந்த வாய்ப்பை அவள் மீண்டும் தவறவிட்டு அவனிடமே சென்றாள்.
மீண்டும் இருவரும் ஒருவரை தேடி ஒருவர் சென்று கண்ணாம்பூச்சி ஆடிக் கொண்டு இருந்தார்கள்.