மகேஷின் வீட்டில் ஷாப்பிங் சென்றிருந்த உமாவின் தம்பி தங்கை இருவரும் வந்ததும் சித்ரா மற்றும் நிஷாவை தவிர அனைவரும் அவர்கள் வாங்கி வந்ததை பார்ப்பதற்காக ஒன்று கூடி விட்டார்கள்.
அவர்கள் வாங்கி வந்த நகைகள் மற்றும் உடைகள் அனைத்தையும் உமா கமலா அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது பழனிச்சாமியின் முகமோ மிகவும் வாடி இருந்ததை பார்த்த மகேஷ். ” ஏன் மாமா முகம் சோர்வா இருக்கு என்ன பிரச்சனை?. ” என்றான்.
” தங்கை மகன் என்று நெருங்கி வராமல் மாப்பிள்ளை என்று சற்று தள்ளி இருந்து ” ஒன்னும் இல்லை மாப்பிள்ளை. ஆனா நான் ஒன்னே ஒன்னு தான் உங்ககிட்ட கேட்கணும் மாப்பிள்ளை. ” என்று கூறிவிட்டு அவன் முகத்தை பார்த்து இருந்தார்.
” என்ன மாமா இவ்ளோ நாள் இல்லாமல் இப்ப புதுசா மாப்பிள்ளைன்னு சொல்லி அந்நியமா நடத்துறீங்க?. இப்பவும் நான் நீங்க வளர்த்து ஆளாக்கின அதே மகேஷ் தான். நீங்க சும்மா சாதாரணமா எப்பவும் கூப்பிடுற மாதிரி மகேஷ் பேர் சொல்லியே பேசுங்க. மாப்பிளை ன்னு சொன்னா எனக்கு ஏதோ சங்கோஜமா இருக்கு மாமா. என்ன கேட்கணும் தாராளமா கேளுங்க மாமா.” என்றான் மகேஷ்.
அண்ணனும் மகனும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை கேட்பதற்காக சற்று அவர்களுக்கு தெரியாமல் ஒளிந்து நின்று அவர்கள் பேசுவதை கேட்க தயாராக இருந்தார் சித்ரா.
” நாங்க இவ்வளவு பொருளும் வாங்கும்போதும் இந்த திருமண பேச்சு எடுக்கும் போதும் எனக்கு இதெல்லாம் தேவையில்லை மாமான்னு நீங்க ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே..! மாப்பிள்ளை. இப்ப சொன்னீங்க பார்த்தீங்களா ஒரு வார்த்தை நான் எப்பவுமே நீங்க வளர்த்த மகேஷ் தான் என்று. ஆனா இப்ப நீங்க நடந்துக்குற இந்த நடவடிக்கை எதுலயுமே நீங்க எனக்கு மகேஷா தெரியவே இல்லை. யாரோ முன்ன பின்ன தெரியாத ஒருத்தருக்கு என் பொண்ண கட்டி கொடுத்த மாதிரி தான் எனக்கு பீல் ஆகுது. அப்படித்தான் நீங்க நடந்துக்கிறீங்க.”
” சின்னத்துல ரொம்ப கஷ்டப்பட்டு விடாமுயற்சி பண்ணி நம்பிக்கையாக உழைத்து இப்ப நீங்க நல்ல நிலைமையில் இருக்கீங்க. நான் கொடுக்கிற எந்த சீருமே என் பொண்ணுக்கு நீங்க வேணாமுன்னு ஒதுக்குறீங்க நீங்க. என் பொண்ணை நல்லா பாத்துக்குவேன்னு சொல்லி எங்க கண்ணு முன்னுக்கே எல்லாம் செய்றீங்க. இதுவே நாளைக்கு உங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து அந்த பெண் குழந்தைக்கு நீங்க எந்த சீருமே செய்யாமலுக்கு அந்த பொண்ணு போற இடத்துல கஷ்டப்படுற நிலைமை வந்தால் நீங்கள் அதை ஏற்றுக் கொள்வீங்களா?. ” என்று அவர் மனதை அழுத்திய கேள்வியை கேட்டு விட்டார்.
” இதுல என்ன மாமா இருக்கு. உங்க பொண்ணை நீங்க எனக்கு கல்யாணம் பண்ணி தருவதற்கு கல்யாணத்துக்கு நீங்க செய்த செலவை நான் வேணாம்னு சொல்லி தடுத்தேனா?. இல்லையே. அப்ப உமா உங்க பொண்ணு. நீங்க எல்லாம் செஞ்சீங்க நானும் எதுவும் கேட்கல. இப்ப என் பொண்டாட்டி ஆகிவிட்டாள். அப்ப என் பொண்டாட்டிக்கு நான் செய்வது தானே முறை. இதுவே நீங்க கேட்ட கேள்விக்கு இப்பவே உங்களுக்கு சரியான பதில் சொல்லுவேன். ஆனா அது உங்களை காயப்படுத்தும் வேணாம் விடுங்க மாமா. மிஞ்சி மிஞ்சி போனா இன்னும் ஒரு 25 வருடம் காத்திருங்க உங்க பேத்திக்கு நான் எப்படி கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு நீங்களே பாருங்க. வாங்க இத பத்தி இனி எப்பவுமே பேச வேணாம். சாப்பாடு சூடு ஆறும் முன்னாடி சாப்பிடலாம்.” என்று அவரை அழைத்துவிட்டு அங்கே உமா இருந்த இடத்திற்கு சென்றான்.
பழனிச்சாமியும் இனிமேல் பேசி பயன் இல்லை என்பதை உணர்ந்து கொண்டு அங்கே சென்றுவிட்டார்.
சித்ரா ஒட்டு கேட்டுக் கொண்டிருந்ததை பார்த்த பழனிச்சாமி நாளைக்கு தங்கையை அழைத்து பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.
உள்ளே வந்தவன் உமாவை பார்த்து ” மாதவி இதெல்லாம் உனக்குத் தான் நாளைக்கு பொறுமையா பார்த்துக் கொள்ளலாம். இப்ப போய் சீக்கிரம் குளிச்சு டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு எல்லாருக்கும் சாப்பாடு எடுத்து வைக்க ஏற்பாடு பண்ணு. ” என்று அவனது மனைவிக்கு உத்தரவிட்டு விட்டு மச்சான்னுடன் சற்று நேரம் கலகலப்பாக பேசிக்கொண்டு இருந்தான் மகேஷ்.
இதைப் பார்த்த கமலா மனதுக்குள் மகள் எவ்வாறு இவனுடன் தாக்குப் பிடிப்பாள் என்பதை யோசித்துக்கொண்டு மகளுக்கு இட்ட கட்டளையை அவர் செய்ய ஆரம்பித்தார்.
உமாவும் சற்று நேரத்தில் குளித்து தயாராகி வெளியே வந்ததும் அனைவருக்கும் அவரவருக்கு பிடித்த உணவை எடுத்து கொடுத்தாள்.
என்ன சத்தமும் ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அனைவரும் உணவு உண்டதும். கமலா சாந்தி மூத்ததை பற்றி எவ்வாறு கூறுவது என்று தெரியாமல் சித்ராவை அழைத்தார்.
” அண்ணி சாந்தி மூர்த்துக்கு நேரம் குறித்து இருக்கு. இரவு 10 15 க்கு தான் நேரம் இருக்கு. அது தெரியாமல் அதுக்கு முதல் இவங்க அவசரப்பட்டுடுவாங்க. அவங்க கிட்ட சொல்லனும். அண்ணி எப்படி சொல்றதுன்னு தயக்கமா இருக்கு. என்னதான் இருந்தாலும் நான் பெத்த தாய். நீங்க உங்க மருமகளை கூப்பிட்டு தனியே இதை சொல்லிடுங்க அண்ணி.” என்றார் கமலா.
” இவங்க கெட்ட கேட்டுக்கு இவளுக்கு சாந்தி முகூர்த்தம் ஒண்ணுதான் இப்ப குறையா இருக்கு. இவ மருமகளா வந்தா பிள்ளைபூச்சி வாய் திறக்காது. நமக்கு எல்லா வசதியாவும் எப்பவும் கிடைக்கும்னு நாம நினைச்சா. வந்த அன்னைக்கே என் மகனுக்கு என்ன மந்திரம் பண்ணினாளோ எதுவுமே எங்களுக்கு நிரந்தரம் இல்லாமல் பண்ணிட்டாளே. இவளை நான் சும்மா விட போறதே இல்லை. ” மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்த சித்ராவை தோளில் தட்டி கமலா நடப்பிற்கு கொண்டு வந்தார்.
கமலா தட்டியதும் தான் அவர் சிந்தனையில் இருந்து கலைந்து கமலாவிடம் ” நானும் எப்படி பேசுறதுனு நினைச்சு தான் யோசிச்சிட்டு இருக்கேன் அண்ணி. என்னதான் காலங்கள் மாறினாலும் நமக்கு இப்படி எல்லாம் பேசுறதுக்கு கூச்சம் இருக்கும் தானே. இருங்க உமா கிட்ட பக்குவமா எடுத்து சொல்ல சொல்லுறேன். ” என்று கூறி மகளிடம் சென்றார் சித்ரா.
கமலா கூச்சம்பார்க்காமல் மகளை அழைத்து நாசுக்காக விஷயத்தை கோடிட்டு காட்டி இருந்தால் எதிர்வரும் காலத்தில் உமா சந்தோசமாக இருந்திருப்பாளோ என்னவோ. நல்ல நேரம் பார்த்து அதை கூறும் இந்த விஷயத்தினால் உமா மாபெரும் பிரச்சினை சந்திக்க காத்திருக்கிறாள் என்பது கமலாக்கு அப்பொழுது தெரியாமல் போய்விட்டது.
அண்ணியிடம் பொறுப்பு ஒப்படைத்து ஆகிவிட்டது என்று சந்தோசத்துடன் பழனிச்சாமி குடும்பம் அங்கிருந்து அவர்களது வீட்டிற்கு சென்று விட்டார்கள்.
அவர் நம்பிய அண்ணி மகேஷின் நலன் கருதிய தாயாக இருந்திருந்தால் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் சித்ராவோ நிஷாவின் தாயாக மாறிவிட்டார்.
இந்த ஒரு சிறு விஷயத்தின் தொடர்ச்சியே இனி உமாவின் வாழ்க்கையில் ஏற்பட போகும் பல பிரச்சினைகளுக்கு காரணமாகும்.
*************************
அவளை எங்கு தேடுவது அவள் எங்கு சென்று இருப்பாள் என்று சிறு அனுமானமும் இல்லாமல் என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டை விட்டு வந்த சோழன் யோசித்தபடியே அங்கிருந்த ஒரு மரத்தின் கீழே நின்று கொண்டிருந்தான்.
பெண்களின் சைக்காலஜி மனக்கவலையோ அல்லது தனிமை தேவைப்பட்டால் உடனே கோவிலுக்கு தான் செல்வார்கள் என்று யோசித்து அங்கிருந்து அருகே இருந்த கோயிலுக்கு சென்றான்.
கோவிலுக்கு சென்று இறைவனை வணங்கி விட்டு வந்த கடமைக்கு அவனது தாய்க்கும் பாட்டிக்கும் இருவர் பேரிலும் அர்ச்சனை ஒன்றை செய்துவிட்டு பிரகாரத்தை சுற்றி வரும் பொழுது அவனது கைபேசி அழைத்தது.
அழைத்தது வேறு யாரும் இல்லை. அவன் பாட்டிக்கு காவலுக்கு வைத்து விட்டு வந்த பக்கத்து வீட்டு சிறுமியே அழைத்து இருந்தாள்.
பாட்டிக்கு வயோதிகத்தால் தான் உடல் நிலை சரியில்லாமல் போனதே ஒழிய வேறு நோய் ஒன்றும் இல்லை.
அதனால் அவரின் கைக்கு எட்டும் தூரத்தில் ஒரு கைபேசியை வைத்து விட்டு தான் சோழன் வெளியே செல்வான்.
அந்த கைபேசியில் முதலாவது அவன் கைபேசி எண் இருப்பதால் அவரும் ஏதேனும் அவசரம் என்றால் உடனே அந்த கைபேசிக்கு அவனை அழைத்து விஷயத்தை கூறி விடுவார்.
அதில் தான் செல்லம்மா வீட்டிற்கு வந்ததும் யார் இவள் என்று தெரியாமல் அந்த சிறுமி பயந்து உடனடியாக வெளியே வந்து சோழனுக்கு அழைத்து
” அண்ணாத்த வீட்டுக்கு ஒரு அக்கா வந்திருக்கு. யாருன்னு கேட்டாலும் பதில் சொல்லலை. பாட்டிக்கு பக்கத்துல வந்து இருந்து அழுதுகிட்டே இருக்கு. பார்க்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு சீக்கிரம் வா. ” என்று கூறி கைபேசியை வைத்துவிட்டு சுற்றி யாரும் இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு வீட்டுக்குள்ளே சென்று விட்டாள்.
அந்த சிறுமி நிலாவின் பேச்சை கேட்டு உடனடியாக அங்கிருந்த பிள்ளையாருக்கு நன்றியை கூறிவிட்டு வேகமாக வீட்டுக்கு வந்தான்.
அவன் வீட்டுக்கு வந்ததும் காலையில் பார்த்தது போன்றே முழங்காலில் முகத்தை புதைத்து விசும்பி அழுது கொண்டிருந்தாள்.
அவன் வந்ததும் கைபேசியை கொடுத்துவிட்டு நிலாவும் வெளியேறி சென்றுவிட்டாள்.
அவன் தற்பொழுது நிதானமாக இருந்தும் அவளது முகத்தை பார்க்க முடியாமல் எவ்வாறு அவளை அழைப்பது என்று தயக்கத்தோடு நின்றான்.
அவளின் முன்னே நிழலாடுவதை கண்டு முகத்தை துடைத்து விட்டு நிமிர்ந்து பார்த்தாள்.
அவள் பார்க்கும் பொழுது அவளது முகத்தையே அவன் பார்த்துக் கொண்டிருந்தபடியால் என்னவென்று யோசிக்காமல் எழுந்து நின்று என்ன கேட்பானோ என்ன செய்வானோ என்று யோசனையோடும் பயத்தோடும் அவளும் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.