நீண்ட நேரமாக செல்லம்மா இருந்த இடத்திலேயே இருந்தாள் . சோழனின் பாட்டி உதவிக்கு அழைக்கும் பொழுது தான் அவள் யோசனையில் இருந்து கலைந்து இருந்த இடத்தை விட்டு எழுந்து அவரது அருகில் சென்றாள்.
அருகே சென்று அவரை எழுப்பி காட்டிலில் அமர வைத்து அவருக்கு தேவையானவற்றை செய்து விட்டு அவரை அழைத்துக் கொண்டு வந்து அங்கிருந்து ஈசி சேரில் அமர வைத்தாள்.
வீட்டு கதவு பூட்டி இருந்தபடியால் வீடு அடைப்பாக இருக்கவும் சுத்தமான காற்றும் இல்லாமல் வெளிச்சமும் இல்லாமல் இருட்டாகவே இருந்தது.
அது பாட்டிக்கு ஒரு அசௌகரியத்தை கொடுக்க நிலா பொண்ணை அழைத்து வீட்டு கதவை திறக்கும் படி கூறினாள்.
அவளோ சோழன் சொல்லாமல் திறக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கவும். அவளுக்கு இருந்த உடல் சோர்வு மனசோர்வினால் அந்த சிறு பெண்ணிடம் கூட அவளால் எதிர் வாதம் பண்ண முடியாத நிலைமையால் எழுந்து சென்று ஜன்னல் கதவை திறந்து வைத்து பாட்டியை காற்றாட அமர வைத்தாள்.
செல்லம்மாவை அழைத்த பாட்டியோ
“ காலையில எங்கம்மா போன உன்னை ஆளையே காணோம்?. இதுக்கு முதல் வேலைக்கு இருந்த பொண்ணு கடமைக்கு வேலை செஞ்சாலும் அதுல எந்த ஒரு அக்கரை பொறுப்புணர்ச்சி எதுவும் இருக்காது. நேத்து நைட்டு நீ என்னோட மருமகளை பாத்துக்கிட்டதும் என்னை பார்த்துக்கிட்டதையும் பார்த்து எனக்கு உன்னை ரொம்ப பிடித்துவிட்டது.. இனி எங்களை விட்டு எங்கேயும் போகாதம்மா. இந்த அன்பான சாந்தமான அழகும் அமைதியான குணமும் கொண்ட நீ எங்க சோழனுக்கு பொண்டாட்டியா வந்தால் நாங்க எவ்வளவு சந்தோஷப்படுவோம். நீ எங்க இருந்து மா வேலைக்கு வந்து இருக்க?. உன்னை வேலையாளா நினைக்கவே எனக்கு முடியல ஏதோ எனக்கு நெருக்கமான சொந்தம் மாதிரி தோணுது. எங்க சோழனை உனக்கு பிடிச்சிருக்கா?. நீ எங்க அவனை பார்த்து இருப்ப..! இரவு தானே இங்க வந்த. இரவு அவன் உன்னை அடிக்க வந்ததை பார்த்து அவனை தப்பா நினைத்து கொள்ளாதம்மா. பார்க்கத்தான் முரடன் மாதிரி ஆனா மனசு அளவில் குழந்தை மாதிரி. ரொம்ப அன்பானவன். அவனோட யாரு அதிகமா நம்பிக்கையா? அன்பா பழகுறாங்களோ அவனும் அவங்களோட அன்பா ஆதரவா அனுசரிச்சு நடந்து கொள்ளுவான். அதே மாதிரி எதிரி என்று வந்தால் அவங்களுக்கு நூறு மடங்கா இவன் எதிர்த்து நிற்பான். அவங்க அப்பன் செய்த துரோகத்தால் அவனே அவனுக்குன்னு உருவாக்கிட்ட பழக்கங்கள் மா இது எல்லாம். அதை விடு காலையில சாப்பிட்டியா?. ஏன்டா கண்ணு முகம் ஒரு மாதிரி சோர்வா இருக்கு?. உனக்கு ஏதாவது பிரச்சனையா இந்த பாட்டி மேல உனக்கு நம்பிக்கை இருந்தா தாராளமா சொல்லு. அதுக்கு சரியான தீர்வு நான் சொல்றேன்.” என்று பாட்டி அவள் தற்போது இருந்த மனநிலையை போக்குவதற்காக தலையை தடவியவாறு ஆறுதலாக அவளிடம் பேசிக் கொண்டிருந்தார்.
சிறு வயதிலிருந்தே பேச்சியின் அன்பான வளர்ப்பில் வளர்ந்ததால் அவளுக்கு பெரியவர்கள் என்றால் ஒரு தனி மரியாதை. அனைத்தையும் பலவாறாக யோசித்து அவள் இறுதியாக சோழன் சொன்னது போன்று இவர்களுக்காகவாவது திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்தாள்.
அவள் திருமணத்திற்கு சரி என்று சொல்வதை தவிர வேறு வழியும் இருக்கவில்லை.
இதைப்பற்றி முன்பே தெரிந்திருந்தால் சென்றவள் மீண்டும் வந்து இருக்க மாட்டாள். என்ன செய்வது வந்து விட்டாள். இனி எங்கும் செல்ல முடியாது. அவளுக்கென்று அக்கறையாக ஒரு நல்ல வாழ்க்கை தேடி வைப்பதற்கு யாரும் இல்லை. தெரியாத குள்ள நரியை விட தெரிந்த பாம்பே மேல். என்று தீர்க்கமாக முடிவெடுத்தப் படியால் எழுந்து பம்பரமாக சுழன்று வேலையை ஆரம்பித்து விட்டாள்.
வேலைக்கு என்று வைத்திருந்த பெண் அவர்களுக்கு கூட சரியான முறையில் சரியாக வேலை செய்ய மாட்டாள். சோழனும் எழுந்து சமைத்து வைத்துவிட்டு அவனால் முடிந்த அளவுக்கு வீட்டையும் துப்புரவு செய்துவிட்டு செல்வான். என்னதான் அனைத்தையும் ஓர் ஆண் செய்தாலும் பெண் கை பட்டு வீடு ஜொலிப்பது தனி அழகல்லவா. வீட்டின் பின் கதவை யாரும் பூட்டவில்லை. அந்த சிறுமிக்கும் தெரியவில்லை அதை சோழனும் சொல்லவில்லை. பின் கதவை திறந்து வீடு முழுவதும் ஜன்னலை திறந்து நன்றாக காத்தோட்டம் வெளிச்சம் வர வைத்து. சோழன் பாட்டி அவங்க அம்மா என அனைவரது உடைகளையும் கழுவி காய வைத்து. கூட்டி துப்புரவு செய்து சமையல் பொருட்கள் அனைத்தையும் ஒழுங்காக வைக்க வேண்டிய இடத்தில் வைத்து. அங்கிருந்து ஒரு சாமி படத்திற்கு பூ மாலை கட்டி வைத்து. என அனைத்தையும் பார்த்து பார்த்து செய்து முடித்தாள்.
பின்வாசல் வழியாக வீட்டிலிருந்து வெளியேறி வீட்டை சுத்தி கிடந்த நிலத்தில் புல் மண்டி போய் கிடந்தது. மண்வெட்டியால் அனைத்தையும் அவளுக்கு தெரிந்த அளவில் செருக்கி. அங்கும் துப்புரவு செய்து முடித்து விட்டாள்.
அவள் வேலை செய்யும் பொழுது பாட்டியை பின்வாசலில் வைத்து அவருடன் பேசிக்கொண்டே வேலை செய்தாள்.
நோயாளியோ வயோதிகரோ காத்தோட்டமாக புத்துணர்ச்சியாக வெளியிடங்களை காட்டி அவர்கள் மனதை அமைதி படுத்த வேண்டும். சுத்தமான வெளி காற்று உடலில் பட்டாலே பாதி நோய் குறைந்து விடும்.
ஆனால் இங்கு சோழன் இல்லாததால் அவர்கள் அந்த இருண்ட வீட்டிலேயே நாள் முழுவதும் அடைந்து கிடந்தார்கள்.
ஒருவரின் உதவியுடன் தான் பாட்டி நடந்து செல்வார். இன்று அவரை கையைப் பிடித்து நடத்தி அழைத்து வந்து சாய்வு நாற்காலி போட்டு அமர வைத்துவிட்டு அவள் வேலையை ஆரம்பித்தாள். ஒரு மணி நேரம் கடந்து வீட்டு வாசலுக்கு முன்பு இருந்த அனைத்து குப்பைகளையும் கூட்டி பத்தவைத்து வீட்டின் முன்பும் அழகாக மாற்றிவிட்டாள். அதன் பின் உள்ளே சென்று ஜூஸ் தயாரித்து இருவருக்கும் கொடுத்து விட்டு அவளும் குடித்துவிட்டு நிலாவுக்கும் கொடுத்தாள்.
சோழன் நல்ல காவலாளியை காவலுக்கு வைத்து விட்டு சென்றான்.
நிலாவோ கைபேசி கிடைத்ததும் கேம் விளையாடிக் கொண்டிருந்தவள் இதுவரையும் செல்லம்மா செய்த எதையும் கண்டு கொள்ளவில்லை. பின் வாசல் பூட்டாமல் இருந்ததால் செல்லம்மா தப்பி செல்ல நினைத்திருந்தால் தாராளமாக சென்று இருக்கலாம்.
அவளும் வெளியே சென்று குளிப்பதற்கு என்று இருந்த சிறிய அடைப்பில் முகம் கை கால் கழுவி விட்டு வந்து சோழன் வைத்திருந்த பவுடர் பூசி பாட்டியுடன் இருந்து பேசிக் கொண்டிருந்தாள்.
கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே வந்தவள் உடை பொட்கள் எதுவும் எடுத்து வராமல் வந்து விட்டாள்.
திருமணத்திற்கு அவளிடம் விருப்பம் கேட்டுவிட்டு அதற்கான உடைகளை எடுக்க சென்றவன் அவளிடம் என்ன இருக்கிறது இல்லை என்பதை தெரிந்து கொள்ளாமல் சென்று விட்டான். அவளுக்கு கல்யாணத்துக்குரிய உடைகளை மட்டுமே எடுத்து வந்தால் இனி மீண்டும் அனைத்தும் அவனே அவளுக்கு வாங்கி கொடுக்க வேண்டும். பிறை நெற்றியில் வைக்க பொட்டும் அவளிடத்தில் இல்லை ஆனாலும் அழகோவியமாகவே இருந்தாள்.
சரியாக மதிய உணவு வேளை நெருங்கியதும் சோழன் கை கொள்ளா பைகளுடன் ஆட்டோவில் இருந்து இறங்கி வீட்டுக்கு வந்தான்.
வந்தவன் சற்று நேரம் திகைத்து நின்று விட்டான்.
வீட்டு வாசல் பூட்டிய படியே இருந்தது. அவள் வெளியே வந்ததற்கான அனைத்து அறிகுறிகளும் இருந்தது.
அப்பொழுதுதான் அவனுக்கு புரிந்தது பின் வாசல் பூட்டாமல் விட்டது.
சோழனுக்கு மனதில் சற்று பயம் வந்து விட்டது. ஒருவேளை வேலைகள் செய்வதாக கூறிவிட்டு வெளியே வந்து வீட்டில் இருந்து சென்று விட்டாளோ என்று யோசிக்க ஆரம்பித்து விட்டான்.
அவனும் பின் வாசல் வழியாகவே உள்ளே சென்று வீட்டை சுற்றி பார்த்தான். அப்பொழுதுதான் அவள் சமையலறையில் இருந்து பாட்டிக்கும் அவனது தாய்க்குமான உணவை எடுத்துக் கொண்டு அவர்களை நோக்கி வந்தாள்.
அவளை அங்கு கண்டதும் தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது.
அவனது அறைக்குள் சென்று பைகளை வைத்து விட்டு அவனும் வெளியே வந்து மீண்டும் பின்வாசல் வழியாக சென்று முகம் கழுவி விட்டு சாப்பிடுவதற்காக வந்து இருந்தான்.
அவன் வந்ததைப் பார்த்தவள் இருந்ததையும் பார்த்து சாப்பிடுவதற்கு என்று புரிந்து கொண்டு தட்டில் உணவை வைத்து எடுத்து வந்து கொடுத்தாள்.
இவ்வளவு நடந்தும் கதவருகே இருந்த சோழனின் காவலாளி நிமிர்ந்து பார்க்கவில்லை.
நிலாவை பார்த்து சிரித்து விட்டு அவன் சமைத்ததாக இருந்தாலும் அவள் கையால் தந்ததும் உணவை என்றும் இல்லாமல் இன்று சற்று நிதானமாக ரசித்தே உண்டு முடித்தான்.
கை கழுவி விட்டு எழுந்ததும் “ புள்ள நீ சாப்பிட்டியா?. ” என்றான்.
பேச்சியின் இறப்பிற்கு பின் இப்படி ஒரு வார்த்தை அந்த வீட்டில் கேட்டதற்கு கூட அவளுக்கு ஆள் இருந்ததில்லை.
இந்த ஒரு கேள்வியே அவளுக்கு அப்படி ஒரு சந்தோஷத்தை கொடுத்தது.
அவனும் அக்கறையாக கேட்கவில்லை சாப்பிட்டு முடித்து இருந்தால் அடுத்த வேலையை அவளுக்கு கொடுப்பதற்காகவே கேட்டான்.
அவளும் புரிந்து கொள்ளவில்லை. “ இனி தான் சாப்பிடணும். ” என்றாள்.
“ சரி சீக்கிரம் சாப்பிட்டு முடித்ததும் உனக்கு எடுத்த புடவைக்கான பிளவுஸ் பீஸ் எடுத்துட்டு போய் இந்த தெருவுல இருக்கிற நாலாவது வீட்டில் மாலா அக்கா இருப்பாங்க. அவங்க கிட்ட அளவு கொடுத்து சாயந்திரம் வேணும் என்று சொல்லிட்டு வா. வீடு தெரியவில்லை என்றால் நிலாவை கூட்டிட்டு போ. நாளைக்கு விடிய காலை பிரம்ம முகூர்த்தத்தில் கல்யாணம் மச மச நிக்காம நான் சொல்ற வேலையை கடகடன்னு செய்து முடி. சாப்பிட்டதும் உள்ள போய் வாங்கிட்டு வந்ததை முதல் பாரு உனக்கு வேற எதுவும் தேவை இருந்தா பேப்பர்ல எழுதி எடுத்துட்டு வா திரும்பவும் எனக்கு பஜாருக்கு போற வேலை இருக்கு. வாங்கிட்டு வந்து தரேன்.” என்று சொல்லிவிட்டு சிகரெட் பிடிப்பதற்காக வெளியே வந்து விட்டான்.
சிகரெட் புகைத்துக் கொண்டு மாணிக்கத்தை அடுத்து என்ன செய்யலாம். இந்த திருமணத்தை அவனுக்கு தெரியப்படுத்துவதா வேண்டாமா என பல யோசனைகளுடன் இருந்தான்.
அவன் கோபத்தையும் அவசரத்தையும் பார்த்தவள் கொஞ்சமாக உணவை எடுத்து சாப்பிட்டுவிட்டு உள்ளே சென்று பார்த்தாள்.
அவனது உடைகள் அவளது உடைகள் என தனித்தனியே பிரித்து பைகளில் வைக்கப்பட்டிருந்தது.
புடவை அதற்கு மேட்சிங் பிளவுஸ் பீஸ். உள் பாவாடை. அவனால் முடிந்த அளவு ஒரு சவரனில் தோடு மோதிரம் காப்பு கொலுசு இனி அலங்காரத்திற்கு தேவையான பொருட்கள் அதில் பொட்டு குங்குமம் மஞ்சள் என அனைத்தையும் பார்த்து பார்த்து வாங்கி வந்திருந்தான்.
உள்ளாடைகளின் அளவுகள் தெரியாததால். இதுவரையும் அவன் பெண்களின் உள்ளாடைகளை பார்த்தது கூட இல்லை. அதனால் அதைப் பற்றி எதுவும் தெரியாததால் அவன் அதை மட்டும் வாங்கவில்லை.
அவளும் முக்கியமாக விடுபட்ட சில பொருட்களையும் எழுதி எடுத்துக்கொண்டு உள்ளாடைகள் இல்லை என்பதை எவ்வாறு அவனிடம் கேட்பது என்று தயக்கத்துடன் வெளியே வந்தாள்.
வந்தவள் வீட்டுக்கு பின் இருந்த மரத்தடியின் கீழ் நின்று அவன் புகை பிடிப்பதை பார்த்து முகம் சுளித்தவரே அருகே சென்றாள்.
சிகிரெட் மணம் அவளுக்கு பிடிக்காததால் இருமல் வந்துவிட்டது. அவள் எதிரே வந்து நின்று நீண்ட நேரமாக இரும்மி அவளது கண்ணில் இருந்து கண்ணீர் வந்ததை பார்த்தும் அவன் சிகரெட் முழுவதும் முடிக்காமல் அதை கீழே போடவில்லை.
நன்றாக புகையை உள்ளே இழுத்து வெளியே விட்டுவிட்டு சிகிரெட் முடிந்ததும் கீழே போட்டு விட்டு அவளை நிமிர்ந்து பார்த்தான்.
” இங்க பாரு இப்பவே சொல்லிடறேன் எனக்கு தண்ணி தம்மு பழக்கங்கள் எல்லாம் இருக்கு. நாளைக்கு உன் கழுத்துல தாலி கட்டி கல்யாணம் முடித்ததும் அதை விடுங்கனு சொல்லி என்னை திருத்துறேன் என்று இப்படி எல்லாம் முயற்சி செஞ்சு வீணா என்கிட்ட வாங்கி கட்டிக்காத. 15 வயசுல ஆரம்பிச்சது. நான் கவலையா துக்கமா சோகமா இருந்த நேரங்கள் எல்லாம் என் நண்பர்களாய் இருந்து எனக்கு மன ஆறுதல் கொடுத்தது இது மட்டும் தான். அதனால இதெல்லாம் என்னால எப்பவும் விட முடியாது. நான் என்ன வேலை செய்றேன் என்பதை பற்றி உன்கிட்ட இன்னும் சொல்லலை நாளைக்கு கல்யாணம் முடிஞ்சதும் நேரம் வரும்போது என்னை பற்றி கொஞ்சம் சொல்றேன். நீயும் உன்னை பற்றி சொல்லு. அப்புறம் இன்னொரு விஷயம். உள்ள போடுற உடுப்பு எதுவும் நான் எடுக்கலை. எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது. ரெண்டு தெரு தள்ளி போனால் ஊருக்குள்ள சின்னதா ஒரு உடுப்பு கடை இருக்கு. வெயில் தாழ்ந்ததும் சாயந்திரமா நிலாவும் நீயும் போய் உனக்கு தேவையானது வாங்கிட்டு வந்துடுங்க. நிலா இல்லாமல் நீ எங்கேயும் போகக்கூடாது. வெளியே விட்டுட்டான். நம்மளை நம்பிட்டான் என்று சொல்லி ஓடிப் போக நினைச்சா. பின் விளைவு விபரீதமா இருக்கும். நீ யாரு என்ன? என்று நீ போற இடங்களில் யாராவது கேட்டால் பக்கத்து ஊர்ல இருந்து என் வீட்டுக்கு வேலைக்கு வந்து இருக்கேன்னு மட்டும் சொல்லு. வேற எதுவும் உளறி வச்சுட்டு இருக்காத. சரி இந்தா பணம் பார்த்து சிக்கனமா தேவையானது வாங்கிக்கோ. பணம் கைக்கு வந்ததும் தாம் தூம் னு செலவு பண்ணாம செலவை சிக்கனமா பண்ணு.” என்று அவளிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறி சென்று விட்டான்.
‘ நாளைக்கு தாலி கட்டி இவளோட சேர்ந்து வாழ ஆரம்பிக்கும் வரை நம்ம கொஞ்சம் கவனமாக இவளை பார்த்துக்கொள்ளணும்.’ என்று நினைத்த படி மீண்டும் ஒரு ஆட்டோ பிடித்து பஜாருக்கு சென்றான்.
நேரங்கள் யாருக்கும் காத்திருக்காமல் சூரியன் மறைந்து நிலவும் வந்தது.
வெளியே ஆட்டோ நிற்கும் சத்தம் கேட்டு நிலா கதவை திறக்கும் பொழுது. மீண்டும் கைகளில் கொஞ்சம் பைகளை வைத்துக்கொண்டு சோழன் வந்து நின்றான்.
அவனின் வேலை முடித்து விட்டு வீட்டுக்கு செல்ல நேரம் ஆகும் என்று உணர்ந்து நிலாவின் கையில் இருக்கும் கைபேசிக்கு அழைப்பு விடுத்து அனைவருக்கும் அவன் இரவு உணவை வாங்கி வருவதாக கூறியிருந்தான்.
அவன் காலையில் வேலைக்கு செல்வதால் காலை மற்றும் மதியத்திற்கு மட்டும் உணவு சமைத்து விட்டு செல்வான்.
தேவைக்கு அதிகமாக வீட்டில் எந்த விதமான பொருட்களையும் வாங்கி வைக்கும் பழக்கம் இல்லை அவனுக்கு.
அதனால் பெரும்பாலும் இரவில் எந்த நேரம் வீட்டுக்கு வருவான் என்று தெரியாததால் பாட்டிக்கும் அம்மாவுக்கும் இடியப்பம் வாங்கி மாணிக்கத்திடம் வீட்டு வேலை செய்யும் சிறு பையனிடம் கொடுத்துவிட்டு அவனும் வெளியே சாப்பிட்டுவிட்டு தான் வருவான்.
பெரியவர்களுக்கு இடியாப்பமும் நிலா மற்றும் செல்லம்மாவிற்கு கொத்து பரோட்டாவும் வாங்கிகொண்டு அவன் குடித்து விட்டு அங்கேயே அவனும் சாப்பிட்டு விட்டு வந்தான்.
உள்ளே வந்து உணவு பையை அங்கிருந்த மேசையில் வைத்து விட்டு எனைய பைகளை அறைக்குள் சென்று வைத்துவிட்டு வந்து “ சாப்பிட்டு நிலாவும் நீயும் இந்த அறைக்குள்ள படுத்துக்கோங்க. பிளவுஸ் பீஸ் தைத்து உனக்கு தேவையானது எல்லாம் வாங்கிட்டியா?. விடிய காலை ரெண்டு மணிக்கு எழுந்து குளிச்சு தயாராகி இருக்கணும். நானும் தயாராகி இரண்டு பேரும் கோயிலுக்கு போறோம். பிரம்ம முகூர்த்தத்தில் கல்யாணம் பண்றோம். நான் சொல்றது புரிஞ்சுதா மச மச னு நிக்காம போய் படுத்து தூங்குற வழியை பாரு. ” என்று அவளை கடிந்து பேசிவிட்டு அவனும் அங்கிருந்த சிறிய கட்டிலில் போய் படுத்து சற்று நேரத்தில் உறங்கி விட்டான்.
அறைக்குள் தந்தவள் படுக்கையை ஒழுங்குப்படுத்தி கொடுக்க நிலா தூங்கியதும் ஒரு துளியளவு உறக்கம் இல்லாமல் கண்விழித்தே இருந்தாள்.
கண் விழித்து இருந்தவளின் நினைவுகள் எல்லாம் வீட்டை விட்டு வெளியேறும் முன் அங்கு நடந்தவற்றை நினைத்து பார்த்தாள்.