பேச்சி வாழ்ந்த காலங்களில் யாருக்கும் எவ்வித தீங்கும் செய்யாமல் மனதளவில் அனைவருக்கும் நல்லதே நினைத்து வாழ்ந்தவர். அவர் வளர்த்த தம்பி தங்கை அவரின் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என அனைவரையுமே நல்வழி படுத்த வேண்டும் என்று நற்பண்புகளை மட்டுமே கற்றுக் கொடுத்து நல்ல முறையில் தான் வளர்த்து அனைவரையும் ஆளாக்கினார்.
அப்படிப்பட்டவர் வளர்த்த பிள்ளைகள் அவர் இருக்கும் வரை அவர் நினைத்தது போன்று சொத்திற்கு மதிப்பு கொடுக்காமல் அன்பு பாசம் ஒற்றுமை விட்டுக்கொடுத்தல் என்று இருந்த பிள்ளைகள். அவரின் மறைவிற்குப் பின் கேட்பார் பேச்சைக் கேட்டு சகோதரர்கள் இடையே ஏற்பட்ட மனக்கசபால்தான் செல்லமாக்கு இந்த நிலை ஏற்பட்டது.
அந்த குடும்பத்தையே தாங்கி பிடித்து தூணாக இருந்த பேச்சி திடீரென்று உறக்கத்திலேயே மாரடைப்பால் இறந்துவிட்டார்.
நம்ப முடியாமல் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமலே வீட்டினர் அனைவரும் தவித்திருந்தார்கள்.
இதை தெரிந்துகொண்ட புகழின் குடும்பத்தினர் விரைவாக அங்கே வந்து. இறுதி சடங்கு வரை அனைத்தையும் அவர்களே எடுத்து நடத்தினார்கள்.
அதற்கான செலவுகள் அனைத்தையுமே புகழும் மதியும் பார்த்துக் கொள்வதாக கூறி விட்டார்கள்.
நேரம் தாழ்த்தாமல் இறுதி சடங்கு அனைத்தையும் செய்து முடித்து நல்லபடியாகவே அவரை அடக்கம் செய்தார்கள்.
பேச்சியின் தங்கை ராதா அக்கா ராணி அவர் மகள் லதா லதாவின் மகன் மற்றும் மகள். மதி புகழ் செல்லம்மா நிர்மல். பேச்சியின் இரண்டாவது மகன் தெய்வா என அனைவரும் துக்கத்தில் இருக்கும் பொழுது. புகழின் தாய் மற்றும் தந்த இருவரும் புகழையும் மதியையும் அவர்களது வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறினார்கள்.
பேச்சியின் குடும்பத்தில் அவருக்கு அடுத்து ஒரு அளவிற்கு அந்த குடும்பத்தை தாங்கும் சக்தி கொண்டவள் மதி மட்டுமே..!
காதலித்த போதும் திருமணத்தின் போதும் அவர்களை ஏற்றுக் கொள்ளாத புகழின் பெற்றோர் தற்பொழுது இங்கு வந்ததை கண்டதுமே மதிக்கு பயம் தொற்றிவிட்டது.
அவர்களை கண்டதுமே மதி புகழிடம் சொல்லிவிட்டாள்.“ அத்தை மாமாவும் வந்திருக்கிறாங்க. உங்களை அங்க அழைச்சிட்டு போக பேசினாங்கன்னா நீங்க எனக்காக வர முடியாதுன்னு சொல்லிருங்க. இப்பதான் பாட்டி இறந்துட்டாங்க இனி நம்ம தான் இந்த குடும்பத்தை தூக்கி நிறுத்தனும். நிர்மல் சின்ன பையன். ராதா பாட்டியும் வயசானவங்க. யாராலயும் இப்போதைக்கு உழைக்க முடியாது. அதனால நீங்க தான் இந்த குடும்பத்துக்கு மூத்த ஆம்பளை பிள்ளையா இருந்து இந்த குடும்பத்தை வழி நடத்தணும். ப்ளீஸ் எனக்காக நீங்க கட்டாயம் இதை செய்யுங்க.” என்று புகழ் மேல் இந்த நம்பிக்கையில் அவள் கேட்டாள்.
புகழுக்கும் மதியை மிகவும் பிடிக்கும் உண்மையாகவே விரும்பி கல்யாணம் செய்து கொண்டான். அவள் தவறாக எதுவும் கேட்கவில்லை. அவள் கேட்பதில் இருக்கும் நியாயத்தை புரிந்து கொண்டு அவளின் கோரிக்கைக்கு சம்மதமாகவே தலையாட்டினான்.
அதோ இதோ என்று மதி பயந்தது போன்று புகழின் தாய் அவர்களை வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறிவிட்டார்.
மாமியார் வீட்டிற்கு செல்ல மதிக்கு துளியும் விருப்பமில்லை.
தாயின் பேச்சை கேட்ட புகழ் தான் முதலில் தாயின் இந்த பேச்சை தடுக்க வேண்டும் என்று பேச ஆரம்பித்தான்.
“ அம்மா என்ன பேச்சு பேசுறீங்க? நீங்க பேசுறது சரியான பேச்சா?. இப்போ தானே பாட்டி இறந்து அவங்களுக்கான சடங்கு எல்லாம் செய்து முடிச்சோம். அவரோட இழப்பில் கவலையா இருக்கும்போது என்ன பேசணும் என்று தெரியாம இப்படி உளறிட்டு இருக்கீங்க. எங்க காதலை ஏற்றுக் கொண்டு எங்க திருமணத்தை நீங்களே பண்ணி வச்சு இருந்தா சந்தோஷமா நாங்க அங்க வந்து வாழ்ந்திருப்போம். ஆனா நீங்க அப்படி செய்யலை. எங்க காதலை ஏற்றுக் கொண்டு எங்களுக்கு திருமணம் செய்து வைத்து நல்லபடியா எங்களுக்கு வாழ்க்கை அமைத்துக் கொடுத்து வாழ்க்கைன்னா இப்படித்தான் இருக்கும். என்ற பல அறிவுரைகளை சொல்லி கொடுத்த பாட்டி இப்போ இல்லை.”
“ பாட்டி இறந்த இந்த வீட்டை விட்டு நான் எங்கேயும் வர மாட்டேன். அத்தோடு இன்னொரு விஷயம் இந்த குடும்பத்துக்கு இனி நான் தான் எல்லாமா இருக்க போறேன். நிர்மல் சின்ன பையன். இந்த குடும்பத்துக்கு மூத்த ஆம்பளை பிள்ளை நான் தான். இனி செல்லம்மாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும். அப்புறம் நிர்மலுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும். ராதா பாட்டியையும் தெய்வா மாமாவையும் பார்த்துக் கொள்ளணும். இங்க எங்களுக்கு நிறைய பொறுப்புகள் இருக்கு. பொறுப்பை தட்டி கழிச்சிட்டு நீங்க கூப்பிட்ட உடனே வர முடியாது.. இங்க இருக்க விரும்பினா இருங்க இல்லன்னா நீங்க உடனே கிளம்பிடுங்க. ” என்று தாய் தந்தையின் முன்பு அவனது முடிவை கூறிவிட்டான் புகழ்.
இதைக் கேட்ட புகழின் தாய் மார்பில் அடித்துக் கொண்டு மதி மகனை மயக்கி விட்டதாகவும். அவர்கள் நல்லா இருக்க மாட்டார்கள் என்றும் சாபம் விட்டு அழுது புலம்பி கொண்டு இருந்தார்.
அவரின் புலம்பலை கேட்ட லதா “ அக்கா இங்க பாருங்க. எனக்கும் ஒரு பையன் இருக்கான். நாளைக்கு அவனும் கல்யாணம் முடிச்சு மருமகளோட என் வீட்டில் இருக்க வேண்டும் அதுதான் என்னோட ஆசை. ஒரு தாயாக உங்களோட கவலை எனக்கு நல்லாவே புரியுது. உங்க விருப்பத்திலும் தவறு இல்லை. சில பெற்றோருக்கு காதல் பிடிக்கும். சில பெற்றோருக்கு காதல் பிடிக்காது. நாங்க காதலிச்சு திருமணம் செய்து கொண்டோம் அதனால் எங்க பிள்ளைகள் நல்லவர்களை காதலிச்சா கட்டாயம் நான் ஏற்றுக் கொள்வேன். உங்களுக்கு ஏனோ காதல் புடிக்காம போய் அவங்கள நீ ஏற்றுக்கொள்ளாமல் இருந்துட்டீங்க. அதுவும் உங்களோட விருப்பம். நீங்க கவலைப்படாதீங்க. மதி சித்தியோட கைக்குள்ளே இருந்து வளர்ந்த புள்ள அவளால திடீர்னு சித்தியின் இறப்பை ஏற்றுக் கொள்ள முடியலை. கொஞ்ச காலம் இங்கே இருக்கட்டும். சித்தியின் இறப்பை கொஞ்சம் கொஞ்சமா மதி அதை ஏற்றுக் கொண்டு அதற்கு பழகட்டும். நானே அவங்களை அழைத்து வந்து உங்க வீட்டுல விடுறேன். இப்ப இந்த துக்க நிலமையில் கொஞ்சம் இதை பற்றி பேச வேண்டாம். நீங்க தாராளமா என்னை நம்பலாம்.” என்றாள் லதா.
லதாவின் பேச்சைக் கேட்டு கோவம் கொண்ட புகழ் “ இங்க பாருங்க அம்மா இப்ப சொல்றது தான் என்னோட முடிவு. நாங்க சின்ன பிள்ளைங்க இல்ல எங்களை அங்க யாரும் அழைச்சிட்டு வர முடியாது. எங்க விருப்பம் இல்லாமல். இங்க இருந்து எங்கேயும் வர மாட்டேன். பாட்டி என்னையும் அன்பா பார்த்துக் கொண்டாங்க. கல்யாணம் முடிச்சு நான் வேற வீட்டில் வந்து இருக்கிறேன் என்ற பீலே எனக்கு வரலை. என்னையும் நிர்மல் மாதிரி அவங்களோட பேரனா என்னை நினைச்சு அன்பு பாசம் காட்டி இந்த ரெண்டு வருஷம் பாத்துக்கிட்ட அவங்களுக்கு இப்ப என்னால செய்ய முடிஞ்சது அவங்களுக்கு ஆத்மா சாந்தியை கொடுக்க விரும்புகிறேன். அவங்களுக்கு பிறகு நானும் மதியும் இங்கிருந்து வந்துட்டா இந்த குடும்பம் ரொம்ப கஷ்டப்படும். அதை பார்த்து அவங்க ஆத்மா சாந்தி அடையாது. அதனால் என்னால இங்கிருந்து எங்கேயும் வர முடியாது என்னை மன்னிச்சிடுங்க.” என்று தாயிடம் கூறிவிட்டு மனைவியை அழைத்துக்கொண்டு அவர்களது அறைக்கு சென்று விட்டான்.
இப்படியே அந்த பேச்சு அன்று அடங்கியதும் அடுத்த நாள் காலை புகழின் குடும்பம் அவர்களது வீட்டிற்கு புறப்பட தயாராகியது. அப்பொழுது புகழ் இல்லாத நேரம் பார்த்து மதியிடம் வந்த புகழின் தாய் “ சீ நீ எல்லாம் என்ன பொண்ணு டி. என்ன மாயாஜாலம் பண்ணி என் பையன கைக்குள்ள போட்டுட்டு என்கிட்ட இருந்து பிரிச்சியோ எனக்கு தெரியாது. மரியாதையாக உன்னையும் நான் சேர்த்து இப்ப அழைக்கும் போதே நீ எங்க வீட்டுக்கு வந்துடு. உன் குடும்பம் தான் உனக்கு பெருசுன்னு நீ இருந்தா அப்புறம் எப்படி என் மகனை உன் கிட்ட இருந்து பிரிச்சு அவனுக்கு வேற கல்யாணம் பண்ணி கொடுக்கணும் என்பது எனக்கு நல்லாவே தெரியும். அவனை உன் கிட்ட இருந்து பிரிச்சுட்டு அவனுக்கு வேற பொண்ண கல்யாணம் பண்ணி வச்சா நீ நிரந்தரமா இந்த குடும்பத்திலேயே இருக்கலாம். அப்புறம் உன் தம்பி தங்கச்சி எல்லாம் கல்யாணம் பண்ணினதுக்கு பிறகு அந்த பெருசுங்க ரெண்டும் செத்ததுக்கு பிறகு நீ அனாதையா இருக்க போற. எங்க வீட்டுக்கு வந்து புகழோடு வாழும் வாழ்க்கை உனக்கு விருப்பமா?. இல்லை புகழ் இல்லாமல் இங்க இந்த குடும்பத்தில் இருக்க போறது உனக்கு வேணுமா?. இதுல நீ தான் சரியான முடிவு எடுக்கணும். இப்ப நான் போறேன். நான் சொன்ன மாதிரி உனக்கு ரெண்டு மாசம் டைம் தரேன். அதற்கிடையில் என்ன சொல்லி சமாதானப்படுத்துவியோ எனக்கு தெரியாது. புகழை அழைச்சிட்டு நீயா அங்க வரணும். அப்படி இல்லன்னா எதை பற்றியும் யோசிக்காமல் நான் சொன்னதை செய்து விட்டு போய்கிட்டே இருப்பேன்.” என்று அவளை மிகவும் பயம் காட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்கள்.
அதன்பின் நாட்கள் செல்ல செல்ல ராணி லதா அவர்கள் குடும்பம் அவர்களது வீட்டிற்கு சென்று விட்டார்கள். பேச்சியை தவிர்த்து மற்ற ஆறு பேரும் முகத்தில் சிறிதும் சந்தோஷம் இல்லாமல் வாழவேண்டும் என்பதற்காக உணவு உண்ண வேண்டும் என்பதால் கைக்கு கிடைத்த உணவுகளை சமைத்து உண்டு நிம்மதியற்று வாழ்ந்தார்கள்.
இதற்கு இடையில் தான் லதாவிற்கு பல சிந்தனைகள் ஏற்பட்டது.