லதாவின் சிந்தனைகளுக்கு புகழும் மதியும் தடையாக இருப்பார்கள் என்பதை தெரிந்து கொண்டு. மதி நிர்மல் செல்லம்மா மூவரையும் வைத்து மதி இங்கிருந்தால் அக்காவின் வாழ்க்கை பாலாகும் என்று இல்லாதது பொல்லாதது அனைத்தையும் அவர்களுக்கு கூறி ஒருவாறு அவர் நினைத்தது போன்று புகழின் தாய் கொடுத்த காலக்கெடுவில் அவர்களை அங்கே அழைத்து சென்று விட்டுவிட்டு வந்தார்.
புகழுக்கு இந்த குடும்பம் இனி தனது பொறுப்பு என்னும் வாக்கையும் கொடுத்திருந்தார் லதா. மதியும் புகழின் தாயின் பேச்சைக் கேட்டு பயந்து இருந்ததால் அவளின் வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள புகழின் மனதை மிகவும் கரைத்தே புகழுக்கு விருப்பம் இல்லாமல் அவர்களின் வீட்டிற்கு அழைத்து சென்றாள்.
அதன்பின் மதியம் புகழும் இந்த வீட்டிற்கு வரவே இல்லை.
செல்லம்மா வீட்டு வேலைகள் செய்வது சமைப்பது என்று அவள் நாட்கள் கடந்தது. லதாவின் உதவியால் நிர்மல் தந்தையின் தொழிலான தச்சு பட்டறை தொழிலை பழகுவதற்கு அதற்கான கோர்ஸ் எடுத்து படிக்க ஆரம்பித்தான். இப்படியே காலம் சென்று இதோ பேச்சியின் முதலாம் ஆண்டு நினைவு நாளும் வந்துவிட்டது. அதற்கும் மதியும் புகழும் வரவில்லை.
பேச்சியின் நினைவு நாளை முடித்ததும். பேச்சி இறந்து ஒரு வருடம் ஆனதால் லதா 19 வயதாகிய செல்லம்மாவிற்கு திருமணம் செய்து வைக்க தீர்மானித்தார்.
18 வயதான நிர்மல் அவன் படித்த கோர்ஸை முடித்துவிட்டான்.
லதாவின் மகனுக்கு செல்லம்மா மாதங்களில் மூத்தவள் என்பதால். செல்லம்மாவிற்கு லதா வெளியே தான் மாப்பிள்ளை பார்த்தாள்.
நிர்மலுக்கும் லதாவின் மகளுக்கும் மூன்று வயது வித்தியாசம். அவள் தற்போது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள்.
துக்கம் நடந்த வீட்டில் ஒரு நல்ல காரியம் நடக்க வேண்டும் என்பதற்காக ராதாவும் தெய்வாவும் செல்லம்மாவின் திருமணத்திற்கு சம்மதித்தார்கள்.
ஆனால் திருமணத்திற்கு சம்மதமா என்று லதாவோ வேறு யாருமோ செல்லமாவிடம் கேட்கவில்லை.
அந்த வீட்டில் தற்பொழுது நிர்மல் மட்டும்தான் சிறுவன் என்பதால். சரியாக காய் நகர்த்தி அவரின் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் அதற்கு அவன் தான் சரியான ஆள் என்று நினைத்த லதா ஒரு நாள் நிர்மலை அழைத்துக் கொண்டு வெளியே சென்றாள்.
அத்தை அழைத்ததும் என்னவென்று கேட்காமல் அவனே அவரையும் அழைத்துக்கொண்டு அவர் சொன்ன பூங்காவிற்கு இருவரும் சென்றார்கள்.
இருவரும் சற்று தள்ளி அங்கு யாரும் இல்லாத இடத்தில் இருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்தார்கள்.
“ நிர்மல் இப்ப நான் ஏன் உன்னை தனியா அழைச்சிட்டு வந்தேன்னா உன்கிட்ட சில முக்கியமான விஷயங்கள் பேசணும். அப்புறம் சரியா நீ மட்டும் தான் அந்த குடும்பத்தில் புரிந்து கொள்வ. அதனாலதான் உன்கிட்ட பேச முடிவெடுத்தேன். நீ வயசுல சின்னவனா இருந்தாலும் ரொம்ப பக்குவமானவன். நேரடியா விஷயத்துக்கு வரேன். என் பொண்ணு கோபியை உனக்கு பிடிக்குமா?. ” என்று அவனிடம் கேட்டு அவரின் சகுனி ஆட்டத்தை ஆரம்பித்தார்.
இதுவரையும் நிர்மலுக்கு கோபியை பற்றி எந்த தவறான எண்ணமோ காதலோ வந்ததில்லை. சம்மந்தமே இல்லாமல் திடீரென்று அத்தை இவ்வாறு கேட்கவும் சற்று குழம்பி விட்டான்.
“ ஏன் அத்தை இப்படி கேக்குறீங்க? கோபியை எனக்கு பிடிக்கும் தான். ” என்றான்.
“ ஏன் கேட்கிறேன் என்றால் நிர்மல் இப்ப உனக்கு 18 வயசு . உனக்குன்னு ஒரு தொழிலை பழகிவிட்டாய். அதுக்கு சரியான ஊக்கம் கொடுத்து முதலீடு போட்டால். நம்ம குடும்பத் தொழிலில் நீ ஐந்து வருஷத்துல முன்னுக்கு வந்துடுவ. எனக்கு உன் மேல அந்த நம்பிக்கை தாராளமா இருக்கு. இப்படி திறமையான என் தம்பி மகன் இருக்கும்போது நான் என் பொண்ணுக்கு வெளியே ஏன் மாப்பிள்ளை பார்க்கணும்?. கைலயே தங்கமான மாப்பிள்ளையை வச்சிருக்கேன். அப்படிப்பட்ட உன்னை நான் விட முடியுமா?. என் தம்பி ராஜன் மாதிரியே நீயும் எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாமல் சித்தியோட வளர்ப்புல நல்லபடியா வளர்ந்து இருக்கிற. அதனால் நீ தான் கோபியை கட்டிக்க போற. இப்ப நான் சொல்றேன் நல்லா கேட்டுக்கோ. கோபி பிளஸ் டூ முடித்து அவளுக்கு 18 வயது ஆனதும் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம்.. ” என்றார்.
அதை கேட்ட நிர்மல். “ என்ன அத்தை சொல்லுறீங்க. எனக்கும் கோபிக்கும் கல்யாணமா?.. ” என்னை கோபிக்கு பிடிக்குமா?. ” என்றான் நம்ப முடியாத அதிர்ச்சியில்.
“ என்னடா நீ அதெல்லாம் அவளுக்கு பிடிக்கும். நான் பேசும் போது குறுக்க பேசாம நான் சொல்வதை முழுசா கேளு. அப்புறம் உன் சந்தேகம் எல்லாம் கேளு. இப்ப உனக்கும் செல்லமாக்கும் சொத்து பிரிக்கிற வயது வந்திருச்சு. கோபிக்கு 18 வயது ஆவதற்கு இன்னும் மூன்று வருஷம் இருக்கு. அந்த மூன்று வருஷம் தான் உனக்கு எல்லாத்துக்குமான டைம். அதுக்கு இடையில நீயும் உன்னோட தொழிலில் ஒரு நல்ல இடத்துக்கு வந்துடனும். செல்லம்மாவும் கல்யாணம் முடிச்சு இங்க இருந்து போய்டணும். ராதா சின்னம்மாவும் தெய்வாவும் உன்னோட இருந்தாலும் எனக்கு பிரச்சினை இல்லை. எந்த பிக்கல் புடுங்கலும் இல்லாமல் நல்லபடியா நீயும் என்னோட பொண்ணும் சந்தோசமா வாழணும். பேச்சி சின்னம்மா சொத்துக்கள் எதையும் யார் யாருக்கு என்று உயில் எழுதி வைக்கல. அது இப்ப நமக்கு ரொம்ப நல்லதா போய்விட்டது. இப்ப இருந்து நீ தான் அந்த குடும்பத்தை பார்த்து கொள்வது போன்று ஊரில் எல்லாரையும் நம்ப வைக்கணும். சின்னம்மா இறந்ததும் மதி உங்களை எல்லாரையும் தனிய விட்டுட்டு புருஷனோட போய்விட்டாள். செல்லம்மாவும் கல்யாணத்துக்கு தயாராகி விட்டாள். நீதான் ராதா சித்தியையும் தெய்வாவையும் பார்த்துக்கொள்வதாகவும் அவர்களுக்கான அனைத்தையும் செய்வதாகாவும் ஊரை நம்ப வைக்கனும். அப்படி நீ செய்தால் தான் அந்த ரெண்டு வீடும் உனக்கு கிடைக்கும். உங்க அப்பாவோட தொழில் உபகரணங்கள் உங்க அப்பா தொழில் செய்த நிலம் எல்லாம் உனக்கே கிடைக்கும். குடும்ப சொத்து எப்பவும் ஆண்களுக்கு மட்டும்தான் சொந்தம். நீ தான் இப்ப அவங்களோட ஒரே ஆண் வாரிசு. இவ்வளவு சொத்தும் உனக்கு கிடைச்சா ஐந்து வருஷத்துல நீ ஒரு பெரிய தொழிலதிபர் ஆயிடுவ. உன்னோட தொழிலுக்கோ உன்னோட தேவைக்கோ எதுக்குமே நீ யாரிடமும் போய் கடன் கேட்க தேவையில்லை. இது தவறோன்னு நீ கொஞ்சமும் யோசிக்க தேவை இல்லை நிர்மல். சித்தி சொல்லி வளர்த்த மாதிரி அன்பு பாசம் விட்டுக்கொடுத்தல் எல்லாம் இருக்க தான் வேணும். ஆனா இதையெல்லாம் நாம மட்டுமே செய்யக்கூடாது. நம்ம கூட இருக்கிறவங்களும் நமக்கு செய்யணும். இப்ப பார் செல்லம்மா கல்யாணம் கட்டி போயிட்டா நாளைக்கு உனக்கு அவசர தேவை அப்படின்னா பணம் தருவாளா?. இல்லை அவளோட புருஷன் தான் கொடுக்க விடுவானா?. மதி கல்யாணம் கட்டின இடம் லேசு பட்ட இடம் இல்லை. உழைக்காமலே இருந்து பத்து தலைமுறைக்கு சாப்பிடலாம் அவங்களுக்கு அவ்வளவு சொத்து இருக்கு. அதிகம் சொத்து இருக்கிறவங்களுக்கு மதிக்கு நீ கொடுக்க போற இந்த சின்ன வீடு பெரிய விஷயமே இல்லை. அதுவும் அவளுக்கு தேவைப்படாது. அதுவே உனக்கு அது இருந்தால் நீ உன் பிள்ளைக்கு வீடு கட்ட தேவை இல்லை. மதி சித்தி அவளுக்கு போட்ட 5 சவரன் நகை மட்டும் எடுத்துட்டு போயிட்டாள். அதே மாதிரி செல்லம்மாவுக்கு இருக்கிற ஐந்து சவரன் நகையை கொடுத்து நான் பார்த்து வைத்திருக்கிற மாப்பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி கொடுத்துடலாம். அதுக்கு பிறகு உனக்கு எந்த சிக்கலும் இல்லை. நானும் என் ரெண்டு பிள்ளைகளுக்கும் வீடு கட்டி வைத்திருக்கேன். நீயும் கோபியும் கல்யாணம் முடிச்சா கோபிக்கு கொடுக்க வேண்டிய வீடும் உங்களுக்கு தந்துவிடுவேன். உங்க கல்யாணத்துக்கு பிறகு மூன்று வீட்டையும் உங்க இரண்டு பேர் பெயரிலேயே பத்திரப்பதிவு பண்ணிடலாம். உங்களுக்கு ரெண்டு பிள்ளைகள் பிறந்தால் அவர்களுக்கு இரண்டு வீட்டையும் கொடுத்துட்டு நீங்க ஒரு வீட்ல சந்தோசமா வாழலாம். என் பொண்ணுக்கு தேவையான நகை பாத்திரம் பண்டங்கள் எல்லாமே நான் சீதனமா கொடுப்பேன். நான் ஏன் உனக்கு இவ்வளவு விஷயத்தையும் பக்குவமா எடுத்து சொல்கிறேன் என்றால். எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். நீயும் என் மகளும் கல்யாணம் கட்டினால் ரெண்டு பேருக்கும் ஜோடி பொருத்தம் அம்சமா இருக்கும். உனக்கு கல்யாணம் செய்து வைக்கிறதுக்கு இப்போதைக்கு யாரும் இல்ல. ராதா சித்தியும் தெய்வாவுக்கும் கல்யாணம் செய்து வைக்கிறது பற்றி எதுவும் தெரியாது. அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணாமல் வாழ்பவர்கள். யாரையோ தெரியாத ஒரு பொண்ணை காதலிச்சு கல்யாணம் கட்டி உன் வாழ்க்கையை சீரழிக்கிறதுக்கு பதிலா. அத்தை பெத்த முறை பொண்ணை நீ கல்யாணம் கட்டி சந்தோசமா இரு. உங்க வாழ்க்கைக்கு எல்லா வகையிலுமே வழிகாட்டியாகவும் உதவியாகவும் நான் இருப்பேன். வா இப்ப ரெண்டு பேரும் புறப்படணும் வந்து ரொம்ப லேட் ஆயிடுச்சு. ” என்று நிர்மலிடம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரமாக அவர் மனதில் இருந்த அனைத்தையும் பேசிவிட்டு இருவரும் மீண்டும் லதாவின் வீட்டுக்கு வந்தார்கள்.
பிறந்ததிலிருந்து விவரம் தெரிய ஆரம்பித்த பின் கோபியை நிர்மல் பார்த்திருக்கிறான். இன்று லதா சொன்னதன் பின்பு தான் காதல் கல்யாணம் எனும் கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பித்திருக்கிறான். பதினைந்து வயதில் குழந்தையாக இருந்தாலும் அழகாகவே இருந்தாள். அவளுடன் இன்னும் மூன்று வருடத்தில் திருமணம் செய்து வாழப் போகும் வாழ்க்கையை எதிர்பார்த்து அவனின் சொந்த அக்காமார் இருவரையும் பகைத்துக் கொள்ள போகிறான்.
அவர்கள் இருவரும் பேசி முடிவெடுத்த அந்த நாளைக்கு பின் நிர்மலிடம் பல மாற்றங்கள் ஏற்பட்டு இருந்தது.