சோழன் இவ்வளவு உழைத்தும் அவனுக்கென்று எதுவும் இதுவரை வாங்கியதில்லை.
திருமணம் ஆனவுடன் இனி அவனின் வாழ்க்கையும் மாறப்போவதால் தொட்டது அனைத்திற்கும் ஆட்டோ பிடித்த செல்வது அவனுக்கு பாதுகாப்பில்லை என்று உணர்ந்து அவனுக்காக இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கினான்.
நேற்று மாலை தான் அது டெலிவரி செய்யப்பட்டது.
இதோ அந்த பல்சர் பைக்கில் இருவரும் ஒன்றாகவே திருமணம் செய்வதற்கு கோயிலுக்கு சென்று விட்டு இனிதாக திருமணம் முடித்து மீண்டும் வீட்டிற்கு வந்தார்கள்.
அந்த நேரத்திலும் வந்ததும் அவள் நேராக சென்று முகம் கழுவி விட்டு சாமியறையில் விளக்கேற்றி விட்டு. உறங்கிக் கொண்டிருந்த பாட்டி மற்றும் சோழனின் தாய் வள்ளி இருவரின் காலையும் தொட்டு ஆசீர்வாதம் வாங்கினாள்.
வீட்டுக்கு வந்ததிலிருந்து அவளது செயல்களை பார்த்துக் கொண்டிருந்தவன் அவளை அழைத்தான்.
“ ஏய் இங்க வா..!
அவளைத்தான் அழைக்கிறான் என்று தெரிந்தும் ‘ ஏய்..! என்று அழைத்ததால் அவளுக்கு செல்ல விருப்பமில்லை. ஆனாலும் அவனை கோபப்படுத்தி அவனிடம் அடி வாங்கவும் அவளுக்கு தைரியம் இல்லை.
சற்று நேரத்தின் பின் அவன் அழைத்ததும் எதிரே வந்து நின்றாள்.
“ அம்மாவும் பாட்டியும் எழுந்துக்க முன்னால் உன்கிட்ட சில விஷயங்கள் பேசணும். ரெண்டு பேருக்கும் காபி போட்டு எடுத்துட்டு சீக்கிரம் வீட்டுக்கு பின் இருக்கிற வேப்ப மரத்துக்கிட்ட வந்துடு. ” என்று கூறிவிட்டு சிகரெட் பிடிப்பதற்காக அவன் சிகரெட் எடுத்துக் கொண்டு சென்றான்..
அவன் சொன்னது போன்று அவளும் சற்று நேரத்தில் இரண்டு கப் காபி எடுத்துக்கொண்டு அங்கே சென்றாள்.
“ ம்ம் இப்படி வச்சுட்டு நீயும் இரு.”
அவன் கூறியதைக் கேட்டு அவனுக்கு எதிரே இருந்த இருக்கையில் அவளும் இருந்து அவனுக்கு அருகே காபியை வைத்துவிட்டு அவளும் கையில் எடுத்து பருக ஆரம்பித்தாள்.
“ இங்க பாரு முதல்ல உன் பேர் என்னன்னு சொல்லு?.
‘ கல்யாணமே முடிஞ்சிடுச்சு ராசா..! இப்பதான் மனைவியா வந்த பொண்ணோட பேரே தெரிஞ்சுக்க கேக்கறீங்க.. கொஞ்சம் தாமதித்தால் முதலிரவு நடந்து பிள்ளையும் பிறந்ததுக்கு பிறகுதான் பிள்ளைக்கு பிறப்பு பதிவு பெயர் வைக்க அம்மாவோட பேரை கேட்டீங்க போல..’ என்று அவனது மனசாட்சி காரி துப்பியது..
“ செல்லம்மா.. ” என்றாள்
“ அட ராமா..! உங்க அம்மாக்கு நீ செல்லம்மா இரு. இல்ல சக்கரகட்டியா இரு. நான் உன் செல்ல பேர் எல்லாம் கேட்கலை. உனக்கு உங்க அம்மா அப்பா வைத்த பெயர் என்ன? அதை சொல்லுடி. ” என்றான்.
தற்பொழுது அவள் தான் முழித்துக் கொண்டிருந்தாள். பெயர் என்னவென்று கேட்டான். அவளும் பெயரை கூறிவிட்டாள் அப்படி இருந்தும் மீண்டும் அம்மா அப்பா வைத்து பெயர் என்ன என்றால் எதை கூறுவாள்.
அவள் அமைதியாக இருந்து யோசிப்பதை பார்த்து “ ஏய் உன்னோட சாவகாசமா இருந்து கதை பேச எனக்கு நேரமில்லை. நான் கேட்டதுக்கு பதில் சொல்லு சீக்கிரமா உன்னிடம் சில விஷயங்களை பேசி விட்டு நான் போகணும்.” என்றான்..
ஐயாவுக்கு கோவம் வந்துவிட்டது.
அதிகம் வாய் வார்த்தைகள் பேசாமல் மாணிக்கத்தின் பேச்சை கேட்டு அவன் கொடுக்கும் வேலையான ஆளைக் கொல்லும் தொழிலை செய்பவனை இவ்வளவு பொறுமையாக இருந்து பேச வைத்திருக்கிறாள்.
“ ஓ அதுதான் உன்னோட உண்மையான பெயரா?. சரி உன் பேர் செல்லம்மா என்பதால் உன்னை அம்மானு கூப்பிடவோ தனியா செல்லம்ன்னு கூப்பிடவோ முடியாது. நீ வேற பாக்குறதுக்கு ரொம்ப குட்டி பொண்ணு மாதிரி இருக்கிற. அதனால் இனி உன்னை செல்லாக்குட்டின்னு கூப்பிடுறேன். அப்புறம் நான் ரொம்ப சாதுவான விளையாட்டான ஆள் எல்லாம் இல்லை.. எனக்கு ரொம்ப கோவம் வரும். இனி நீதான் என் பொண்டாட்டி. நீ எனக்கு ஏத்த மாதிரி என்னை புரிஞ்சு நடந்துக்கணும். நமக்கு இடையில் சண்டை வந்தா எனக்கு உன்னை கொஞ்சி சமாதானப்படுத்தவோ பரிசு பொருள் எல்லாம் வாங்கி தருவோ தெரியாது. அதனால் பெரும்பாலான அளவில் சண்டை வராமல் இருந்துட்டா நல்லது.
என்னை பற்றி உனக்கு எதுவும் தெரியாது அதே மாதிரி உன்னை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. முதல் நீ உன்னை பற்றி சொல்லு.. ” என்று காபியை கையில் எடுத்து குடிக்க ஆரம்பித்த படி அவளைப்பற்றி கதை கேட்க ஆரம்பித்தான்.
அவளைப் பற்றியும் அவள் வளர்ந்த விதம் அனைத்தையும் அவள் கூற ஆரம்பித்த பொழுது அவனது கைபேசி அழைப்பு விடுத்தது.
கந்தசாமி தான் அவனுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அவரின் எண்ணை பார்த்து உடனே அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.
“ சோழா புதுசா எனக்கு ஒரு தகவல் வந்திருக்கு. இந்த ஆளுங்கட்சிக்காரர்களோட அழிச்சாட்டியம் ரொம்ப அதிகமா போகுது. நம்ம தலைவர் சண்முகத்தையும் போடறதுக்கு நேரம் குறிச்சு இருக்காங்க. இப்பவும் மாணிக்கம் கைக்கு தான் வரும். அவனுக்கு இப்படியான ஒரு வேலை வந்தாலே அடுத்து உனக்கு தானே வரும். பார்த்துக்க. மாணிக்கம் உனக்கு தலைவரை போட வேலை தந்தால் உடனே தலைவரையும் நான் இருக்கிற இடத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு வேலையை முடித்துவிடு.. அப்புறம் நல்லா இருட்டினதும் என்னை வந்து பாரு.! நான் இப்ப சொன்னது நேற்று சொன்னது எல்லாமே உன் ஞாபகத்துல இருக்கணும்.. சோழா நமக்கு கூடிய சீக்கிரமே நல்ல காலம் பிறந்து நாமளும் ஆட்சிக்கு வருவோம். என்று நம்பிக்கையா எல்லாம் பண்ணு நல்லதே நடக்கும். நான் வைக்கிறேன். அந்த பொண்ணோட பக்குவமா பேசி அன்பா நடந்துக்கோ.” என்று வேலையும் நம்பிக்கையும் ஆறுதலும் கொடுத்துவிட்டு அலைபேசியை துண்டித்தார்.
அலைபேசியை வைத்ததும் அவளது பக்கம் திரும்பி “ உன் பேர் என்னன்னு தெரிஞ்சுக்கவே ரெண்டு நாள் ஆகிவிட்டது. எனக்கு ஒரு வேலை வந்துடுச்சு. அதனால போர போக்குல பொறுமையா உன்னை பற்றி தெரிந்து கொள்கிறேன். இப்ப நான் சொல்றத கேளு..! ” என்று அவன் பிறந்தது வள்ளியை அவளது கணவன் விட்டு சென்றது. அதன் பின் வள்ளியின் நிலை பாட்டியுடன் அவன் இருந்தது அதன்பின் மாணிக்கதிடம் தினமும் வேலைக்கு சென்றது இப்பொழுது வரை அனைத்தையும் கூறி முடித்தான்.
ஏனோ மாணிக்கத்தின் சூழ்ச்சி மற்றும் கந்தசாமி யார் என்பது அவர்களின் திட்டம் என்ன என்பது பற்றி அவளுக்கு கூற விரும்பவில்லை அவன்.
சில விஷயங்களை கேட்டதும் அவளது கண்கள் கலங்கிவிட்டது.
அதை அவனுக்கு காட்டாமல் மறைத்து விட்டு அவளது முகத்தையே பார்த்திருந்தாள்.
“ எனக்கு ஒரு நல்ல வழிகாட்டியா நான் கடவுள் மாதிரி பார்க்குற சாமி ஐயா சொன்னதால தான் உன்னை பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமல் திடீரென்று கல்யாணம் பண்ணிக்க வேண்டியது ஆகிடுச்சி..
அதனால உன்னை பிடிக்காதுன்னு எல்லாம் இல்லை. போக போக நானும் உன்னை பத்தி புரிஞ்சுகிட்டு நம்மளுடைய வாழ்க்கையை சந்தோஷமா அமைத்துக் கொள்வோம்.. என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. ஒரு முக்கியமான விஷயம்.. நான் வேலைக்கு போறேன்னு சொன்னேன். ஆனா..! என்ன வேலைன்னு உனக்கு நான் சொல்லலை. அப்புறம் எனக்கு விபரம் தெரிஞ்ச வயசுல இருந்து இப்படி நெருங்கி இருந்து ஒரு ஆணோட கூட நான் சகஜமாக இதுவரை பேசினது இல்லை. இப்ப உன்னோட மட்டும்தான் இப்படி பேசுறேன். நான் மாணிக்கத்துக்கு அடியாளா தான் வேலை செய்றேன். ஏன் சும்மா பூசி மறச்சுக்கிட்டு கொலையே செய்வேன். ஆனா இதுவரைக்கும் நான் கொலை செய்ததற்கு எந்த ஆதாரமும் நான் விட்டு வைத்ததில்லை.. அதனால் போலீஸ்ல மாட்டாமல் இருக்கிறேன். இனி படிப்படியா இதெல்லாம் குறைச்சிட்டு என்னோட கவனம் மொத்தத்தையும் நான் அரசியல் பக்கம் திருப்பப் போறேன். அதனால அதிகமா வீட்டு பக்கம் எனக்கு வர்றதுக்கு நேரம் கிடைக்காட்டி நீதான் பக்குவமா தைரியமா அம்மா பாட்டி இரண்டு பேரையும் பார்த்துட்டு நீயும் கவனமா இருக்கணும். ஏம்மா நான் கொலைகாரன் என்று உன் கிட்ட சொன்னதை நீ வீடியோ போன்ல பதிவு செஞ்சு வாக்கு மூலமா போலீஸ்ல கொடுத்து என்னை மாட்டி விடமாட்டியே. அப்படி மட்டும் நீ செஞ்சி என்னை அதாவது உன் புருஷனை காலத்துக்கும் வெளியே பார்க்கவே முடியாது. அப்புறம் கொலைகாரன் பொண்டாட்டி ஜெயிலுக்கு போனவன் பொண்டாட்டின்னு தான் உன்னை சொல்லுவாங்க பார்த்துக்க. அப்புறம் நான் கொலைகாரன்னு தெரிஞ்சதுக்கு பிறகு என்னை பார்த்து பயந்து நடுங்கிட்டு எல்லாம் நீ இருக்க வேணாம். சகஜமா உங்க வீட்ல எப்படி இருப்பியோ அதே மாதிரி இங்கே தாராளமா இருக்கலாம். இப்ப நான் காலையில ஒன்பது மணிக்கு எல்லாம் வேலைக்கு போகணும் சீக்கிரம் போய் சாப்பாடு பண்ணி தா…. அம்மா கையில தான் சாப்பிட எனக்கு கொடுத்து வச்சதில்லை. இனியாவது பொண்டாட்டி என்கிற பெயரில் ஒரு பொண்ணு கையால வாய்க்கு ருசியா பக்குவமா சாப்பிடுவதற்கு கிடைச்சிருக்கு. இன்னைல இருந்து சமையலறை ஆட்சியை உன்கிட்ட தந்துட்டு அதில் இருந்து நான் ரெஸ்ட் எடுக்கிறேன்.. சரி பேசி முடிச்சாச்சு இன்னும் ஏதாவது இருந்தால் பேசுவதற்கு நமக்கு வாழ்க்கை முழுக்க காலம் இருக்கு போடி போ சீக்கிரம் போ பசிக்குது.. ” என்று கூறி அவளை அனுப்பி வைத்துவிட்டு.
காலையில் அவள் குளிப்பதற்க்கு சிரமப்பட்டதை பார்த்திருந்தவன். அவர்களின் அறைக்கு பக்கத்தில் இருந்த சுவற்றை தட்டி விட்டு அதோட சேர்த்து குளியலறை ஒன்று கட்ட வேண்டும் என்று தீர்மானித்திருந்தான்.
தீர்மானிப்பதோடு மட்டுமல்லாமல் அதை உடனே செயல்படுத்த வேண்டும் என்று நினைத்து ஊரில் மிகவும் பிரபலமாக இருக்கும் மேஸ்திரி ஒருவரை அழைத்து அந்த வேலைக்கான பொருட்கள் அனைத்தையும் இன்று பறிக்கும்படியும் நாளையில் இருந்து வேலையை ஆரம்பிக்கும்படியும் கூறினான்.
அவன் யாரையும் அதிகம் நம்ப மாட்டான் அதனால் அவனுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது.
சல்லி பைசாவும் கொடுக்காமல் அவர்களை வைத்து வேலையை வாங்கிவிட்டு வேலையில் குறையில்லாமல் தரமாக முடித்திருந்தால் மட்டுமே அதற்கான முழு பணத்தையும் பேரம் பேசாமல் கொடுத்து விடுவான்.
அவர்தான் இந்த வீட்டை கட்டி கொடுத்தார.. அதனால் அவனைப் பற்றி அந்த மேஸ்த்திரிக்கு நன்றாக தெரிந்ததால் அவரும் சம்மதித்து அவன் சொன்னதை செய்ய ஒத்துக் கொண்டார்.
நேரத்தை கடத்தாமல் வேகமாக அன்று அந்த தலைவரை கொலை செய்ய வேண்டும் என்று மாணிக்கம் சொன்னால் என்னவெல்லாம் செய்து அவரை காப்பாற்றலாம்.. எனும் திட்டத்தை சரியான முறையில் தீட்டி விட்டு. அவனின் திட்டத்தை பற்றி சாமியிடமும் பேசிக்கிட்டு அவரின் ஆலோசனையும் கேட்டுவிட்டு. நேரம் சரியாக 9:00 மணியாக இன்னும் 15 நிமிடம் இருப்பதால் சாப்பிட்டுவிட்டு கதிர் வருவதற்காக காத்திருந்தான்.
அவன் காத்திருந்தது போன்ற கதிரும் சரியாக வந்து சேர்ந்தான்.
இவரும் பேசியபடி வழமை போன்று மாணிக்கத்தின் வீட்டிற்கு சென்றார்கள்.
அவர்களும் சென்று அங்கிருந்த இருக்கையில் இருந்ததும் மாணிக்கமும் அவர்களுக்கு எதிர் இருந்திருக்கையில் உணவினை உண்டு விட்டு வந்து இருந்தான்.
“ சோழா நேற்று லீவு எடுத்த வேலைக்கு ஆள் பிடிச்சிட்டியா?.. இல்ல ஏன் கேக்குறேன்னு சொன்னா வேலைக்கு ஆழ்த்த அடி கஷ்டப்பட்டு கொஞ்ச நாளில் அந்த பொண்ணு திரும்ப போயி உனக்கு ஒரு சிரமம் தானே சொல்ல அதனால எனக்கு தெரிஞ்ச தூரத்தில் இருக்கிற ஒரு பொண்ணு இருக்கு அந்த பொண்ணுங்க உனக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டா அந்த பொண்ணும் காலத்துக்கும் உன் காலடி கிளியே கடந்து உன் அம்மாவுக்கும் பாட்டிக்கும் சேவை செஞ்சிட்டு உன்னோட சந்தோசமா குடும்பம் நடத்தும் தானே..! நீங்க எத்தனை நாளைக்கு தான் ஒண்டிக்கட்டையா இருந்து சமைச்சு வச்சுட்டு வீட்டுக்கு வேலை செஞ்சிட்டு தொழிலுக்கும் வந்து கஷ்டப்படுவ வேலைக்கு வேலைக்குனு ஆள் தேடியே நீ காலத்தை கழிக்கிற.. என்ன சோலா சொல்ற கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்கட்டுமா?.. ” என்றான் மாணிக்கம்.
‘ அடேய் முட்டா குரங்கு, நான் இன்னைக்கு காலையில தான்டா கல்யாணம் பண்ணினேன்.. அடுத்து எத்தனை கல்யாணத்தை நான் பண்ணுறது. முதல் நான் கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போறேனோ இல்லையோ இந்த ஆள் பேச்சை கேட்டு அடுத்தடுத்து கல்யாணம் பண்ணினா கட்டாயம் ஜெலிலுக்கு போவேன் போல இருக்கே..’ என்று மாணிக்கத்தின் பேச்சுக்கு மனதில் திட்டி கொண்டிருந்தவனை கதிர் அவனை சுரண்டி நிகழ்வுக்கு கொண்டு வந்தான்.
“ ஐயோ ஏன் ஐயா உங்களுக்கு என்னால கஷ்டம்..
என்னை எல்லாம் நம்பி யாரு பொண்ணு கொடுப்பா?.. நமக்கு இந்த கல்யாணம் எல்லாம் செட் ஆகாது. யாரையாவது குத்தி கிழிக்கும் போது ஆகாதவன் எவனாவது வீடியோ எடுத்து அதை பேப்பர்ல டிவில போட்டுட்டாங்கன்னு வைங்க அதோட ஜெயிலுக்கு போக வேண்டி வரும். அப்போ எனக்கு பொண்டாட்டி குழந்தை என்று குடும்பம் வந்தால் அவங்க நிலைமை என்ன ஆகும். இருக்கிற வரைக்கும் இருந்துட்டு இப்படியே வாழ்ந்துட்டு அம்மாவையும் பாட்டியையும் பார்த்துட்டு போயிடுவோம். பக்கத்து ஊர்ல எனக்கு தெரிஞ்சவங்க ஒருத்தவங்க மூலமா விசாரிச்சு ஒரு பொண்ணை இன்னைக்கு வேலைக்கு வரச் சொல்லி இருக்கிறேன். கத்துவிட்டு சாவி கொடுத்துட்டு இருக்கேன் அந்த பொண்ணு வந்ததும் வேலையை ஆரம்பிக்கும். பல இனி அம்மாவ பாட்டியை பற்றி கவலை எனக்கு இல்லை. என்ன வேலையை விட்டு போறதா இருந்தா முன்கூட்டியே சொல்லணும்னு சொல்லி இருக்கேன்.. அப்ப தானே திரும்ப யாராவது ஒரு பொண்ணு தேடிக் கொள்ள முடியும். வாழைக்காய் பஜ்ஜி சாப்பிடனுமா இருந்தா வாழை தோட்டத்தையா விலைக்கு வாங்க முடியும்.. வேலைக்குப் ஆள் தேவைப்பட்டதுக்காக நம்ம வசதிக்காக ஒரு பொண்ணோட வாழ்க்கையை சீரழிக்க எனக்கு விருப்பம் இல்லை.. கல்யாண பேச்சு வேண்டாம் ஐயா. ” என்று பேச்சை முடித்துக் கொண்டான் சோழன்.
சோழன் பேசியதை கேட்டு மாணிக்கத்திற்கு கோபம் வந்தாலும் தற்பொழுது அதை காட்டிக் கொள்ளும் இடத்தில் மாணிக்கம் இல்லை..
அவன் போட்ட ஒரு திட்டம் முளைக்கும் முன்பே கருகிவிட்டது..
திருமணம் என்னும் பெயரில் வீட்டில் அவனை கண்காணிக்க ஒரு பெண்ணை அனுப்ப முயற்சி செய்த திட்டம் நடக்காமல் போனதால் கோபப்பட்டு இனி வரும் காலங்களில் அவனை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை..
பெரிய பெரிய இடங்களில் இருந்து மாணிக்கத்தை நம்பி தொழில் இன்னும் வருகிறது அவனும் நன்றாக காசு பார்க்கிறான்.. என்றால் அதற்கு ஒரே காரணம் சோழன் மட்டுமே..