திருமணம் செய்து அடுத்த நாளே அவள் என்னதான் பிழை செய்திருந்தாலும் எடுத்து சொல்லி பக்குவமாக அதை திருத்தாமல் அவளை அடித்து காயப்படுத்தி விட்டு வந்ததை அடுத்து மகேஷால் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை..
கமலாவை அழைத்து வீட்டிற்கு சென்று அவளைப் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு வந்தாலும் ஏனோ ஒரு இடத்தில் அவனால் அமர்ந்து வேலையை பார்க்க முடியவில்லை..
அவனுக்குள் ஏற்பட்ட இந்த புதுவிதமான தவிப்பை வளர விடாமல் முயன்று தன்னை வேலையில் ஈடுபடுத்தினான்..
இயற்கை உபாதைகளை எவ்வாறு கட்டுப்படுத்த முடியாததோ அதை போன்று சில நேரங்களில் மனதில் ஏற்பட்ட சஞ்சலங்கள் மற்றும் குற்ற உணர்வுகளையும் கட்டுப்படுத்த முடியாது..
பொருத்து பொருத்து பார்த்தவன் இனி இயலாது என்று முடிவெடுத்து. அதுவும் காலையில் அவளை அவ்வாறான ஒரு மோக நிலையில் பார்த்து அதன் பின் அந்த மோக வலை அறுவதற்கு அவளின் செயலே காரணமாக முன் நின்று அவளை தாக்கியது நினைவில்லையே ஓடிக்கொண்டிருந்தது அவனுக்கு..
அதனால் வருவது வரட்டும் என்று அன்றைய சமையலுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் நண்டும் வாங்கி எடுத்துக் கொண்டு அவளுக்கு பிடித்த ஐஸ்கிரீமும் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றான்..
அவனும் வீட்டுக்கு வரும் பொழுது தான் கமலா குடும்பத்தினர் சென்ற பின் வந்த சித்ராவும் நிஷாவும் பேசிக் கொள்வதை கேட்க நேர்ந்தது..
ஐஸ் கிரீமை கொடுத்து அவளை சமாதானப்படுத்தி விட்டு அவள் உணவு சமைக்கும் வரை சித்தரா மற்றும் நிஷாவிற்கு வாங்கி வைத்திருந்த அங்கிருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு தாயிடம் கொடுத்துவிட்டு அவர்களுக்கும் வாங்கி வந்த காய்கறிகள் மற்றும் நண்டையும் கொடுத்துவிட்டு வரலாம் என்று நினைத்து அவன் வீட்டுக்கு வந்தான்..
மகேஷுக்கும் அவனது தங்கை நிஷாவை பற்றி ஓரளவுக்கு தெரியும்..
ஒரு பெண்ணால் முடியாதது என்று எதுவும் இல்லை என்ற கூற்று நிஷாவில் பொய்யானது..
நிஷாவின் கணவன் இப்படி சோம்பேறியாக இருப்பதற்கு அவளும் ஒரு காரணம்..
அவள் நினைத்திருந்தால் அவனை மிரட்டி உருட்டி ஏதோ காரணம் சொல்லி அவனை வேலைக்கு அனுப்பி ஒரு நல்ல நிலையில் இருந்திருக்கலாம்..
அவளும் சோம்பேறியாக இருந்து அவன் உழைக்க வேண்டும் எனும் அக்கறையும் பொறுப்பும் இல்லாத ஊதாரி தனத்தை கண்டு கொள்ளாமல் அண்ணனின் உழைப்பிலேயே வாழ்ந்து காலத்தை கழித்து விடலாம் என்ற நினைப்பில் அவள் இருந்தாள்..
சிறு வயதிலிருந்து கஷ்டப்பட்டு உழைத்து இந்த உயர்ந்த நிலைமைக்கு வந்திருக்கும் மகேஷிற்கு தங்கையின் குணத்தை கண்டுபிடிப்பது பெரும் கஷ்டமாக இருக்கவில்லை..
அவர்களிருவரும் பேசியதை கேட்ட பின்பு தான் சித்ராவும் நிஷாவுடன் சேர்ந்து இவ்வாறு மாறிவிட்டார்.. அவரின் குணமும் இதுவரை காலமும் இவ்வாறு தான் இருந்திருக்கிறது என்பதை தெரிந்து கொண்டான்..
மகன் என்றும் பாராமல் அவனது வாழ்க்கையை கெடுப்பதற்காக தவறான ஒரு சதியை செய்துள்ளார்கள்… என்பதை அவனால் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..
யாருக்கும் பாதகம் இல்லாமல் அவ்வாறு கூறினால் தான் நிசாவின் கணவனும் ஓரளவிற்கு உழைத்து தனது குடும்பத்தை காப்பாற்ற முயற்சி செய்வான். என்று நினைத்து தான் மகேஷ் நேற்று இரவு அப்படி கூறினான்..
பழனிச்சாமி குடும்பத்திற்கு முன் அப்படி கூறினாலும் தங்கையை கைவிடும் எண்ணம் அவனுக்கு சற்றும் அதுவரை இருந்ததில்லை..
இவர்களின் குறுக்கு புத்தியையும் கெட்ட எண்ணத்தையும் தெரிந்து கொண்டவன் இனி அவர்களுக்கு தான் எதுவும் செய்யப் போவதில்லை என்னும் முடிவை உறுதியாக எடுத்துக் கொண்டான்..
வழமையாக அவன் பைக்கில் செல்பவன் இன்று ஏதோ மனம் சரியில்லாததால் காரில் சென்றான்..
முன்பு சித்ராவின் வீட்டில் இருக்கும் பொழுது அங்கே கார் பார்க்கிங் எல்லாம் செய்து வைத்திருந்தான்
ஆனால் இங்கு வீடு இப்பொழுது தான் கட்டி குறையாக இருப்பதால் அதற்கான எந்த ஏற்பாடும் செய்யவில்லை..
அதனால் சற்று தள்ளியே ஒரு மரத்தின் கீழ் காரை நிறுத்திவிட்டு பைகளை கையில் எடுத்துக் கொண்டு நடந்து வந்தவனது காதில் தான் இவர்கள் பேசியது அச்சரம் பிசகாமல் தெளிவாக அவனால் கேட்க முடிந்தது..
ஆட்டோ வருவதற்காக காத்திருந்த தாயும் மகளும் அந்த நேரத்தில் அங்கே மகேஷ் வரவை எதிர்பார்க்கவில்லை. என்பதை அவர்கள் முகத்தில் தெரிந்த அதிர்வே கூறியது..
“ என்னம்மா இந்த பக்கம்.?. “
“ ஒன்னும் இல்ல மகேஷ். உமாவை பார்த்துட்டு நீ வாங்கி வச்ச பொருள்களையும் எடுத்துட்டு போகலாம்னு வந்தோம்..” என்றார் சித்ரா.
“ சரிமா நானே எடுத்துக் கொண்டு வந்து தருவோம்னு தான் இருந்தேன்.. நீங்களே வந்துட்டீங்க. எனக்கு ஒரு வேலை மிச்சம். இதுல இன்னைக்கு தேவையான காய்கறியும் நண்டும் இருக்கு. இதையும் எடுத்துட்டு போங்க.. டீ காபி ஜூஸ் ஏதாவது குடித்தீர்களா?. “
“ அண்ணி காபி கொடுத்தாங்க அண்ணா.. ” என்றாள் நிஷா.
“ ரொம்ப நேரமா நிக்கிறீங்களாமா ஆட்டோ வர லேட் ஆனா வாங்க நான் கொண்டு போய் வீட்டில் விட்டுவிட்டு வரேன். “
“ ஆமாம்பா ரொம்ப நேரமா நிக்கிறோம் ஆட்டோக்கு கால் பண்ணிட்டோம் இன்னும் வரலை.. முட்டி எல்லாம் வலிக்குது நீயே..! கொண்டு போய் வீட்டில் விட்டுவிடு.. ” ஆடு தானாக காசாப் கடைக்கு செல்வது போன்று சித்ரா தலையை கொடுத்தார்.
“ சரிமா இருங்க இதை கொண்டு போய் உள்ள குடுத்துட்டு வரேன்.. ” இதற்காக தானே மகேஷ் காத்திருந்தான்.
கொண்டு போய் விட்டுட்டு இரண்டு டோஸ் குடுத்துட்டு வருவதற்கு.
“ என்னமா நீ இப்படியே போய் புடவை எடுத்துட்டு தானே மா வீட்டுக்கு போவோம்.. இப்ப அண்ணாவோட கார்ல போனா அது முடியாதே..! ” என்றாள் நிஷா. அவள் கவலை அவளுக்கு.
“ புடவை எடுக்கப்போனால் திரும்பி ஆபிஸ் போகும் போது வீட்டுக்கு வருவோம் என்று நினைத்து மகேஷ் வரும்போது நம்ம அங்க இல்லாட்டி நம்ம மேல சந்தேகம் வரும் டி… நாம புடவை எடுக்க போனா உடனே ஒரு பத்து பதினஞ்சு நிமிஷத்துக்குள்ள வந்துருவோமா என்ன?.. அங்கயே அரை நாளை போகாட்டி விடுவோம்.. அப்புறம் நண்டு வாங்கி தந்திருக்கிறான் சமைச்சு சாப்பிட்டு விட்டு சாகவாசமா சாயந்தரம் போகலாம்.. நமக்கு நல்ல சந்தர்ப்பம் அவனே கொண்டு போய் விடுறேன்னு சொல்றான்.. அங்க வீட்டுல வச்சு அழுது புலம்பி மூணு மாசம் அவன் செய்வதை லைப் லாங் மாத்திடலாம்.. ஆட்டோக்காரனுக்கு கொடுக்கிற 300 ரூபா காசும் மிச்சம்.. ” என்றார் சித்ரா..
“ ஆமாம்மா நீ சொல்றதும் சரிதான்.. ” என்று சித்ராவின் பேச்சுக்கு நிஷா தலையாட்டினாள்..
காலையில் அடித்த பின் அவளை எவ்வாறு அழைப்பது என்று தயக்கத்தில் உள்ளே சென்று சமையலறையை எட்டிப் பார்த்தான்.
அவன் எதிர்பார்த்தது போன்று அங்கு தான் உமா நின்றிருந்தாள்.
“ மாதவி இந்தா இதுல காய்கறியும் நண்டும் இருக்கு இன்னைக்கு சமைச்சுடு. அப்புறம் இதுல உனக்கு பிடித்த பிளேவர் ஐஸ்கிரீம் இருக்கு. சாப்பிடு.. அப்புறம் மிச்சம் இருந்தால் பிரிட்ஜில் வைத்துவிட்டு விருப்பப்படும் போது சாப்பிடு.” என்று கூறி மற்றவற்றை கீழே வைத்து விட்டு ஐஸ்கிரீம் கவரை அவளது கையில் கொடுத்துவிட்டு. “அம்மாவையும் நிஷாவையும் வீட்ல விட்டுட்டு வரேன்.. சமைச்சுடு சாப்பிட்டு தான் திரும்ப ஆபிஸ் போவேன்.” என்று கூறிவிட்டு வெளியே சென்று அவர்களையும் அழைத்துக் கொண்டு சித்ராவின் வீட்டுக்கு சென்றான்..
நேற்று காலையில் திருமணத்திற்கு மாப்பிள்ளை மண்டபத்திற்கு அழைத்துப் போகும் பொழுது அங்கிருந்து சென்ற மகேஷ் மீண்டும் தனியாக இப்பொழுதுதான் அங்கே வருகிறான்..
வீட்டுக்குள் வந்தவனை இருக்குமாறு கூறிவிட்டு குடிப்பதற்கு பிரிட்ஜில் இருந்த ஜூஸை எடுத்து வந்து கொடுத்தாள் நிஷா..
அதை வாங்கி அருகே இருந்த சிறு மேசையில் வைத்து விட்டு “ இப்படி எதிர் சோபாவில் இருங்க ரெண்டு பேரும்.. உங்க கூட கொஞ்சம் பேசணும்.. இந்த குளிர் ஜூஸை விட உங்களோட பேச்சு என் மனசை ரொம்ப குளிர வைத்துவிட்டது..” எனறான் மகேஷ்.
மகன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் ஏதோ நாம் அவனுக்கு நல்லது செய்து விட்டோம் என்று நினைத்து “ என்னப்பா சொல்ற?. ஒன்னும் புரியல. நாங்க உனக்கு கல்யாணம் பண்ணி வைத்ததையா சொல்ற?. ” என்றார் சித்ரா.
“ ஆமா ஆமா ரொம்ப நல்லா பேசாவே கல்யாணம் பண்ணி வச்சிட்டீங்க.. அதைத்தான் சொல்ல வரேன் கேளுங்க.. கல்யாணம் ஆகி இன்னும் முழுதாக ஒரு நாள் கூட முடியல.. அதுக்குள்ள என்ன அழகா எங்களை பிரிக்கிறதுக்கு ரெண்டு பேரும் திட்டம் போடுறீங்க.. நான் உங்களுக்கு என்ன குறை வச்சேன்.. சொல்லுங்க?.. இன்னைக்கு எல்லாத்தையும் பேசிடணும்.. என்னும் முடிவோடு தான் இருக்கேன்..” என்றான் ஏகத்துக்கும் அவனது குரலில் கோபம் வழிந்து ஓடியது..
“ என்ன அண்ணா கேக்குறீங்க புரியல.?
“ அட அட..! அண்ணா என்று உன் வாயால் சொல்லி கேட்கும் போது எவ்வளவு ஆனந்தமா இருக்கு.. என்ன நடிப்பு நடிக்கிறீங்க இரண்டு பேரும்.. ஆள் எதிர்க்க இருந்தால் காரியம் ஆவதற்கு அண்ணா என்பதும்.. இல்லாத நேரம் மகேஷ் அவனே இவனேனு பெயர் சொல்லி நல்லா வாய்க்கு வந்த மாதிரி திட்டுவதும்.. உன்னை பத்தி ஆரம்பத்திலேயே எனக்கு கொஞ்சம் தெரியும்.. ஆனா இவ்வளவு கஷ்டப்பட்டு நான் வளர்ந்து இந்த நிலைமையில் இருந்து உங்களை எல்லாம் நல்லா பார்த்துக் கொள்ளும்போது இந்த அம்மாவும் இப்படி தலைகீழா மாறி இருப்பாங்கன்னு நான் நினைச்சு கூட பாத்ததில்லை..” அவனது குரலில் என்ன உணர்வு இருந்தது என்று அறிய முடியவில்லை.. கோவமா? வெறுப்பா?. விரக்தியா? என்று தெரியாமல் பல உணர்வுகளை கலந்து கட்டி அவனது வார்த்தைகள் வெளிவந்தது..
இன்று ஒரே நாளில் அவனது மனமும் ரணப்பட்டு போயிருந்தது..
அன்பு பாசம் காட்ட தேவை இல்லை ஆனால் உண்மையாக நேர்மையாகவாவது இருந்திருக்கலாம்..
அன்பு பாசமும் இல்லாத இடத்தில் நேர்மையை எதிர்பார்த்தது அவனது தவறுதான்..
அவனது குடும்பமே அவனை இப்படி ஒரு நிலைக்கு ஆளாக்கிவிட்டது என்ற கவலையே அதிகம் இருந்தது அவனுக்கு..
மன உணர்வுகள் அனைத்தையும் முகத்தில் வெளிக் காட்டாமல் வார்த்தையில் அழுத்தம் கூட்டி இன்றே பேசி ஒரு முடிவு எடுக்க வேணும் என்று நினைத்து பேச ஆரம்பித்தான்..
“ நீங்க ரெண்டு பேரும் மனித ஜென்மங்கள் தானா என்று எனக்கு சந்தேகமா இருக்கு?.. ஏன்மா பழசு எல்லாத்தையும் நீ மறந்துட்டியா என்ன?.. பழனிச்சாமி என்னும் ஒரு மனுஷன் யார் மா உனக்கும் எனக்கும்?.. உனக்கு கூட பிறந்த அண்ணன் அதனால எனக்கு அவர் தாய்மாமா.. அவர் ஒரு ஆள் இல்லன்னு சொன்னால் நீ இன்னைக்கு இப்படி கல்யாணம் கட்டி சொந்தமா ஒரு வீட்ல சந்தோசமா வாழ்ந்துட்டு இருப்பியா?.. இல்லை நான் தான் இப்படி ஒரு உயர்ந்த நிலையில் இருக்க முடியுமா?.. சொல்லு வாயை திறந்து பதில் சொல்லு அமைதியா இருந்தா சரி வராது..? ” என்று தாயை அதட்டினான்..
“ ஏன்பா இப்ப பழைய பேச்சு எல்லாம்.. அவர் எனக்கு அண்ணன் அதனால் எனக்கு எல்லாம் செஞ்சாரு. அதே மாதிரி நீயும் நிஷாவுக்கு எல்லாம் செய்யணும்னு தானே நான் எதிர்பார்க்கிறேன்.. ” என்றார்.
“ நான் இந்த நன்றி கெட்டவளுக்கு இனி உதவி செய்வது ஒரு பக்கம் இருக்கட்டும்.. நீ எல்லாத்தையும் கொஞ்சம் நினைச்சு பாரு அம்மா.. உங்க அம்மா அப்பா இல்லாமல் போனதுக்கு பிறகு மாமா எவ்வளவு கஷ்டப்பட்டு உன்னையும் வளர்த்து ஆளாக்கி உனக்கு எல்லா சீரும் செஞ்சு சிறப்பா தானே கல்யாணம் பண்ணி கொடுத்தார்.. அது மட்டுமா அப்பா சும்மா குடிச்சு குடிச்சு அழிஞ்சு இறந்து போனதுக்கு பிறகும் உன்னை விட்டாரா?. அதுக்கு பிறகும் உனக்கு செய்ய வேண்டியது எல்லாத்தையும் செய்தார் தானே.! அவர் நினைச்சிருந்தா எப்படியும் போங்கன்னு விட்டு இருக்கலாம்.. அப்ப அவருக்குன்னு ஒரு குடும்பம் குழந்தை குட்டிகள் எல்லாம் வந்திருச்சு.. அத்தை கூட ஏன் இன்னும் அவங்களுக்கு செய்றீங்கன்னு ஒரு கேள்வி கேட்டிருந்தா கட்டாயம் மாமா செய்யாம விட்டிருப்பார்.. “
“ ஆனா அத்தை அவர் செய்த எதுக்குமே தடை போடல.. உன்னை தங்கையா இல்லாம மகளா தான் மா பார்த்தாங்க.. மாமா முயற்சி செஞ்சு எனக்கு ஒரு உழைப்பை கொண்டு வந்து தராமல் இருந்திருந்தால்.. நான் இப்படி ஒரு உயர்ந்த நிலையில் இல்லாமல். ஒரு பொறுக்கியாவோ இல்ல ஊதாரியாவோ கொலைகாரனவோ ரோட்டுல திரிஞ்சு இருப்பேன்.. “