பழனிச்சாமி மகனுக்கு அழைத்து மகேஷ் அடித்ததை கூறி அவர்களை உமாவின் வீட்டிற்கு வரும்படி கூறியதும் நேற்று போன்று இன்றும் பழனிச்சாமி குடும்பம் சித்ரா நிஷா என அனைவரும் மகேஷ் வீட்டில் கூடிவிட்டார்கள்..
முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் திடீரென அவளது குடும்பம் மீண்டும் வந்ததை பார்த்து சந்தோஷப்படுவதா அல்லது தந்தையின் முகத்தில் இருந்த கோபத்தை பார்த்து பயப்படுவதா என்று புரியாமல் கைகளை பிசைந்தபடி அவர்களை வரவேற்று வரவேற்பு அறையில் இருந்து சோபாவில் அமர வைத்துவிட்டு கணவனின் வருவைக்காக காத்திருந்தாள்..
அவனும் ஏகத்துக்கும் சித்ரா மற்றும் நிஷாவை முறைத்து விட்டு அவர்களையும் அந்த காரில் அள்ளிப் போட்டுக் கொண்டு அவனது வீட்டிற்கு சற்று நேரத்தில் வந்து சேர்ந்தான்..
அவனது வருகைக்காக காத்திருந்த பழனிச்சாமி கோபம் சற்றும் குறையாமல் இங்கேயும் அவனது சட்டையை பிடித்து “ ஏன் டா என் பொண்ணை அடிச்ச?..” என்று கேள்வி கேட்டு அவனை போட்டு உலுக்கினார்..
அவனது சட்டையில் இருந்த அவர் கையை சற்று கீழே எடுத்து விட்டு “ ஏன் அடிச்சேன்னு உங்க பொண்ண கேளுங்க மாமா …! எனக்கு பொய் சொல்றது பிடிக்காது.. நான் யாருக்கும் பொய்வாக்கு கொடுக்கிறதும் இல்ல பொய் சொல்றதும் இல்லை.. அவளும் அப்படித்தான் இது காலம் வரையும் இருந்தாள்.. அத்தையோட பக்குவமான வளர்ப்பு பார்த்து தான் உமாவை தவிர எனக்கு ஏற்ற வேற பொண்ணே இல்லன்னு தான் நான் மறு பேச்சு பேசாம நீங்க கேட்டதுமே உமாவை கல்யாணம் கட்டிக்க சமாதித்தேன்.. அப்படி ஆசை ஆசையா கல்யாணம் கட்டின என்னை உங்க பொண்ணு பொய் சொல்லி ஏமாத்தினா எனக்கு கோபம் வர கூடாதா?.. ” என்றான்..
“ அப்படி என் பொண்ணு பொய் சொல்றதுக்கு யாருடா காரணம்?.. உன் அம்மா காரியும் உன் தங்கச்சியும் தானே..! “
“ அவங்க தான் காரணம் என்பது எனக்கும் காலையில் வீட்டுக்கு வரும் பொழுது தான் தெரியும்.. இப்ப அவங்க ஒரு பிழை செஞ்சதும் உங்க தங்கச்சி என்பதை வசதியா நீங்க மறந்துட்டு இப்ப என் அம்மான்னு என் மேல பழி போறீங்க.. கேளுங்க தாராளமா என்ன கேள்வி வேணும்னாலும் கேளுங்க.. உங்க பொண்ணோட வாழ்க்கையை சீர்குலைக்க பார்த்தவர்களுக்கு நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் குறுக்க நான் வரமாட்டேன்.. அதே மாதிரி எனக்கு உமா பொய் சொன்னாள்.. அந்த பொய் என்னால ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. அதனால் நான் உமாவை அடிச்சேன்.. இப்பவும் நான் சொல்லுறேன் உமா என்னோட பொண்டாட்டி என்னோட பொண்டாட்டி பிழை செஞ்சா நான் தான் கேட்பேன் வேற யாரும் கேட்க முடியாது.. ” என்று மகேஷ் அவனது தரப்பு நியாயத்தை கூறினான்..
“ வார்த்தைக்கு வார்த்தை நீ என் பொண்டாட்டி என் பொண்டாட்டின்னு சொல்றத கேட்க எங்களுக்கு நல்லாத்தான் இருக்கு.. ஆனா நீ சொல்ற வார்த்தையில் மட்டும் தானே உன் பொண்டாட்டின்னு வெளிப்படுது செயல்ல இல்லையே..! கல்யாணம் கட்டி இத்தனை வருஷத்துல ஒரே ஒருமுறை என்னால ஏற்றுக்கொள்ள முடியாத பிழை என்பதால் மட்டும் உங்க அத்தையை நான் கைநீட்டி அடிச்சேன்.. அதுக்கு பிறகு நானே அடித்தது பிழைனு உணர்ந்து மன்னிப்பு கேட்டு அன்னைக்கு உங்க அத்தைக்கு சத்தியம் பண்ணி கொடுத்தேன் இனிமேல் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நான் உன்னை கை நீட்டி அடிக்க மாட்டேன் என்று சொல்லி.. இப்போ வரைக்கும் நான் அந்த வாக்கை காப்பாத்திட்டு இருக்கேன்.. அதுக்கு ஏத்த மாதிரி எதுவும் பிழைகள் செஞ்சாலும் உங்க அத்தை என்கிட்ட மன்னிப்பு கேட்டு அது சரி செய்வதற்கான அடுத்த கட்ட வேலையை பார்த்துடு வா.. நீ என்னடான்னா நேத்து நாங்க பார்த்து பார்த்து கல்யாணம் பண்ணி கொடுத்த பிள்ளைக்கு இன்றைக்கு கை நீட்டி அடித்து காயப்படுத்தி இருக்க.. நீ அங்க பேசினதெல்லாம் நான் காதால கேட்டுகிட்டு தான் இருந்தேன்.. என் பொண்ணுக்கு நான் ஆசையா செய்த சீரை ஏன் வேணாம்னு சொன்னன்னு நான் கேட்டேன்.. என்னோட உடம்பில் தெம்பிருக்கிற வரைக்கும் இன்னும் என்னோட நாலு பிள்ளைகளுக்கும் என்னால செய்ய முடியும்.. அப்படியே எனக்கு ஏதாவது ஒன்னு நடந்தாலும் என் மகன் அடுத்த என்னோட மூணு பிள்ளைகளையும் என்னோட ஸ்தானத்துல இருந்து பாத்துக்குவான்… அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு.. அப்படித்தான் நான் புள்ள வளர்த்து இருக்கேன்.. நாங்க இவ்வளவு சீர் செய்தும் நீ வேண்டாம் என்று சொல்லி உன்னோட விருப்பத்துக்கு நீ கல்யாணம் கட்டிட்டு வந்து இவ்வளவு உறவுகள் தம்பி தங்கை அம்மா அப்பா இருந்தும் என் பொண்ணு உன்கிட்ட அடி வாங்கி சித்ரவதைப் படுகிறாள் என்றால். அப்படியாப்பட்ட ஒரு வாழ்க்கை என் பொண்ணுக்கு இனி தேவை இல்லை.. ” என்றார் பழனிச்சாமி..
கணவனின் பேச்சை கேட்டு ஒரு நிமிடம் உறைந்து போய் நின்ற கமலா
“ ஏங்க என்ன பேசுறோம்னு தெரிஞ்சு புரிஞ்சுதான் பேசுறீங்களா?.. இது நம்ம பொண்ணோட வாழ்க்கைங்க.. என் மேல தாங்க முழுபிழையும்.. சொல்ல வேண்டியதை பக்குவம் நானே என் பொண்ணு கிட்ட சொல்லி இருக்கணும்.. அதை இன்னொருத்தவங்க மூலமா சொல்லி அனுப்பினது என்னோட பிழை தானுங்க.. அவங்க மேல நான் நம்பிக்கை வைத்ததும் என் பிழை தானே..! இந்த சின்ன பிரச்சனைக்கு பிரிவு தீர்வு இல்லைங்க.. ப்ளீஸ் இனிமே இந்த பேச்சை பேசாதீங்க.. சாதாரணமா நம்ம வார்த்தையால் சொல்லி பிரிச்சு அவங்களை பிரித்து பொண்ணை கூட்டிட்டு போயிடலாம்.. ஆனா இதுல யாருக்கு சந்தோஷம் என்று சொல்லுங்க.. யாரு முகத்துலையும் மருந்துக்கும் சிரிப்போ சந்தோசமோ இருக்காது.. பிள்ளைகளும் ஆளுக்கு ஒரு திசையில் கஷ்ட பட்டு காலம் முழுக்க கண்ணீர் விடுவதை பார்க்கறதுக்கா இவ்வளவு கஷ்டப்பட்டு சீரும் சிறப்புமாக கல்யாணம் பண்ணி வச்சோம்?… காலக் நேரம் நமக்கு பிழையா இருக்கு போலங்க.. யார் கண் பட்டுச்சோ தெரியலை பிள்ளைகளுக்கு.. இப்படி ஒரு தவறு நடந்து அதால மருமகனும் கை நீட்டிட்டார்.. இந்த ஒருமுறை இந்த தவறை நம்ம பெரிய மனசு பண்ணி மன்னிச்சு அவர்கிட்ட பக்குவமா சொல்லி உமாவுக்கு சில விஷயங்கள் எடுத்துச் சொல்லி புரிய வைத்து அவங்களை விட்டுட்டு போவோம்ங்க அதுக்கு பிறகு அவங்க வாழ்க்கை சந்தோசமா வாழ்ந்து காட்டுவாங்க.. ” என்று அவரால் முடிந்த மட்டும் மகளுக்காக அவளது வாழ்க்கைக்காக பேசினார்..
“ நீ பேசாம இரு கமலா.. என் பொண்ண நான் கையோடு அழைச்சிட்டு தான் போக போறேன்.. இவன்கிட்ட விட்டுட்டு போயி இன்னும் அவங்க அம்மாட பேச்சை கேட்டு என்ன எல்லாம் ஆடுவான் என்று யாருக்கு தெரியும்.. ஒவ்வொரு நேரமும் புள்ளை சாப்பிட்டாலா?. நல்லா இருக்கலா?. அவன் அடிச்சி கொடுமைப்படுத்தினானோ என்று நினைத்து அங்க இருந்து கவலைப்பட்டுடு இருக்கிறதை விட கண்ணீரும் சோறும் என்றாலும் நம்ம வீட்டில் நம்ம கண்ணு எதிர்ல நம்ம புள்ள சாப்பிடுவா. மனிதல் சந்தோசம் இல்லாட்டியும் ஒரு அமைதியாவது என் பொண்ணுக்கு கிடைக்கும்.. எப்ப இவங்க சூழ்ச்சி செய்து நம்ம பொண்ணு வாழ்க்கையை கெடுப்பாங்க என்னும் கவலை நமக்கு இருக்காது.. ” என்றார்..
சித்ராவும் நிஷாவும் வந்ததிலிருந்து அவர்களது பேச்சை பார்த்துக் கொண்டிருந்தார்கள்… ஆனால் பழனிச்சாமி அவர்களது முகத்தை கூட ஏறெடுத்தும் பார்க்கவில்லை..
இவ்வளவு பிரச்சினை நடந்தும் அவர்கள் மீது தான் தவறு அவர்களை மன்னித்து கணவன் மனைவியை பிரிக்க வேண்டாம் என்று அவர்கள் வாயிலிருந்து இன்னமும் ஒரு வார்த்தையும் வரவில்லை..
பழனிச்சாமி பேசியதை கேட்டுக் கொண்டு இருந்த மகேஷ் “ நீங்க நினைக்கிற மாதிரி இது பொம்மை கல்யாணம் விளையாட்டு விஷயம் இல்லை மாமா.. உமா தான் என் பொண்டாட்டி.. நான் சாகுற வரைக்கும் அவ என் கூட தான் வாழணும்.. நிஷாவை பற்றி தெரியும்.. ஆனால் எங்க அம்மா இப்படி மோசமா இருப்பாங்க ன்னு நான் தெரிந்து கொண்டிருந்தால் முன்னமே கொஞ்சம் நானும் அலர்ட்டா இருந்து இருப்பேன்.. நான் இந்த விஷயத்துக்கு உமாவை அடிச்சது எனக்கு தவறா படல.. இனி அவங்களுக்கு என் வீட்டுக்குள்ள இடம் இல்லை.. நீங்க இனி எதற்கும் பயப்படாம நம்பிக்கையா உமாவை விட்டுட்டு போகலாம்.. அப்புறம் உமா நல்லது கெட்டது சூழ்ச்சிகளை புரிந்து கொள்ளாமல் இப்படி மண்டு மாதிரி வளர்ந்து இருப்பதற்கு காரணமும் நீங்க தான் மாமா.. +2 வரைக்கும் படிச்சு முடிச்சதோட எங்கேயும் தனியா அவளை அனுப்பி எதையும் புரிஞ்சிக்க விடலை.. ஒரு கடைக்கு சரி அவளை அனுப்பவோ இல்லை.. வேறு ஏதாவது கோர்ஸ் எடுத்து படிக்க வைத்திருக்கலாம்.. அப்படியாவது வெளி உலகத்தை எந்த வழியிலேயும் நீங்க அவளுக்கு காட்டலை… நீங்களும் அத்தையும் உங்க பிள்ளைகளை குடும்பத்துக்குள்ள பொத்தி பொத்தி வளர்த்துட்டிங்க.. வெளியில் அனுப்பி நாலு மனுசர்களோட குணம் எப்படி அவங்களோட எண்ணம் சிந்தனை எப்படின்னு யாரோடயும் பழகி தெரிஞ்சுக்கலாமல் அவள் வளர்ந்து நிற்கிறது தான் இப்ப இவங்க இலகுவா அவளை ஏமாற்ற முடிஞ்சது.. உங்க வீட்டுக்குள்ள நீங்க பொத்தி பொத்தி வைத்திருந்ததால உங்க குணத்தை மட்டும் பார்த்து வளர்ந்த புள்ள உங்களை மாதிரி எல்லாருமே உண்மையான நேர்மையா நல்லவங்களா இருப்பாங்கன்னு அவள் மனசுல ஒரு நெனப்பு வந்துருச்சு.. இவங்க ரெண்டு பேரையும் மட்டும் தானே பார்த்து இருக்கா.. இதே மாதிரி இன்னமும் உமா பார்த்து பக்குவப்பட வேண்டியது நிறைய விஷயம் இருக்கு.. உங்க வளர்ப்பில் நான் குறை சொல்லுறேன்னு என்னை தவறா நினைக்க வேண்டாம் மாமா உண்மை இதுதான்.. ” என்றான் மகேஷ்..
“ என்னடா?.. நீ என் வளர்ப்பில் என்ன தவறை கண்ட.. தொலைச்சிடுவேன் தொலைச்சு கவனமா பேசு.. பெண் பிள்ளையை பெத்தவங்களுக்கு தான்டா வலி தெரியும்.. புள்ள போற இடத்துல சந்தோசமா வாழணும்னு நாங்க பார்த்து பார்த்து ஒவ்வொன்னும் செய்தோம்.. அவள் ரொம்ப சாது அமைதியான குணம் கொண்டவள் என்று தெரிஞ்சுதா தான் என் பிள்ளையை நான் வெளில விடவில்லை.. அதனால் என் புள்ளைக்கு ஏதாவது பாதிப்பு வந்துருமோன்னு பயந்து தான் என் பிள்ளையை நாங்க வீட்டுக்குள்ளே கைக்குள்ள பொத்தி வளர்த்தோம்..
அப்படி பட்ட எங்க வளர்ப்பை நீ இவ்வளவு லேசா தவறுன்னு சொல்லுற.. குரங்கு கையில பூமாலை கொடுத்த மாதிரி என் பொண்ணை அடிச்சு எப்படி கன்னம் சிவந்து போயி உதடு கிழிஞ்சு இரத்தம் வந்திருக்குன்னு உன் அவிஞ்சி போன கண்ண வச்சு பாரு என் புள்ள முகத்தை.. எப்ப என் பிள்ளைக்கு இப்படி ஒரு அநியாயம் செய்ய நினைச்சாங்களோ அவங்கள பத்தி இனி எனக்கு எந்த எண்ணம் சிந்தனையோ கவலையோ இல்லை.. நான் அங்க வந்தது நீ அவங்களுக்கு செய்யாமல் விட்டால் பரவாயில்லை கவலைப்படாதீங்க நான் உங்களுக்கு உதவி செய்றேன்னு சொல்றதுக்காகத்தான்.. ஆனா இதுவரைக்கும் நான் செய்ததற்கு எந்த மதிப்பும் மரியாதையும் இல்லை அதனால் இனி செய்யப் போறதும் இல்லை.. நிஷாவோட புருஷன் உழைச்சி சோறு தின்னாலும் சரி இல்லை பிச்சை எடுத்து சோறு தின்னாலும் சரி என்கிட்ட இருந்து எந்த ஒரு உதவியும் இனி அவங்களுக்கு கிடைக்காது.. அவங்க எனக்கு இனி எந்த உறவும் இல்லை..” என்றார் பழனிசாமி..
“ அவங்க முகத்தைப் பார்த்து ஏன் என் பொண்ணுக்கு எப்படி ஒரு துரோகம் செஞ்சிங்கன்னு கேட்க கூட எனக்கு வாய் கூசுது.. உமா வாம்மா போகலாம்.. நேத்து வந்து இன்னைக்கு நீ திரும்பி வாரத்துக்கு தான் நீ எந்த ஒரு பொருளும் எடுக்காமல் வந்தியோ..! என்னவோ..! கடவுளுக்கு தான் தெரியும்.. நான் சொல்றேன் கேட்டுக்கோ மகேஷ் நீயும் ஒரு பொண்ண பெத்து உனக்கும் இப்படி ஒரு நிலைமை வரும்போது தான் ஒரு தகப்பனா என்னோட வலி உனக்கு புரியும்.. கூடிய சீக்கிரமே விவாகரத்து நோட்டீஸ் வரும் சைன் பண்ணி அனுப்பிட்டு நீ யாரை வேண்டுமானாலும் கல்யாணம் பண்ணிக்கோ இனி என் பொண்ண பார்த்துக்க எனக்கு தெரியும்.. உங்களுக்கும் சொல்லனுமா வாங்க மச மசன்னு நினைக்காம..” என்று கோவப்பட்டு சத்தம் போட்டுவிட்டு சென்றார்..
பழனிச்சாமி அழைத்ததும் எதைப் பற்றியும் யோசிக்காமல் அவருடன் வாசல் வரை உமா சென்று விட்டாள்..