அவளும் தற்போது அவனது சூழ்நிலையின் அவசரம் புரிந்து மேலும் அவனோட தர்க்கம் பண்ணாமல் “ பேரும் விலாசமும் சொல்லுங்க அண்ணா.. எனக்கு தெரிஞ்சா நான் சொல்லுவேன்.. இல்லாட்டி உடனே அப்பாவுக்கு கால் பண்ணி பேசி கேட்டு சொல்றேன்.. ” என்றாள்..
“ பேர் மகேஸ்வரன்.. ” என்று அவர்களது வீட்டு விலாசமும் கூறினான்..
“ ஐயோ அண்ணா என் வீட்டுக்காரர் பேர் மகேஸ்வரன் தான்.. நீ சொல்லுற விலாசமும் எங்க வீட்டு விலாசம் தான்.. அப்ப அவருக்கு தானா ஆக்சிடென்ட் ஆயிடுச்சு?.. ஐயோ கடவுளே எப்படி ஆச்சு. இப்ப எங்க அண்ணா வச்சிருக்கீங்க.. எந்த ஹாஸ்பிடல்ன்னு சொல்லு நான் இப்ப வரேன்..” என்று அவன் ஹாஸ்பிடல் விலாசம் சொன்னதும் கைபேசியை வைத்து விட்டு உடனே தந்தைக்கு அழைத்து விஷயத்தை கூறி வீட்டிற்கு வந்து அவர்களை அழைத்துச் செல்லும்படி கூறி அழுது கதறினாள் உமா..
என்னதான் மகேஷ் மேல் கோபம் இருந்தாலும் அவன் தான் அவளது கணவன் என்று தந்தை பேசிய அன்றிலிருந்து அவனை மனதில் நினைக்க ஆரம்பித்து விட்டாள்..
மகேஷ் பெரிதாக இவளிடம் முகம் கொடுத்து கூட பேச மாட்டான்.. ஆனால் இவள் அப்படி இல்லாமல் அத்தான் அத்தான் என்று வீட்டுக்கு வந்தால் கவனிப்பதும் சரி பேசுவதும் சரி மனதில் அவன் தான் கணவன் என்று அந்த வயதிலேயே பதித்து விட்டாள்..
பிரிந்து தந்தை உடன் சென்றாலும் அங்கிருந்து அந்த ஒரு மாத காலமும் அவனது நினைவு அதிகமாக வாட்டியது.. என்ன காரணமாவது கூறி உடனடியாக வீட்டிற்கு செல்ல வேண்டும் அவனுடன் பேசி மன்னிப்பு கேட்டு சேர்ந்து வாழ வேண்டும்.. என்று அவளது மனதில் தோன்றிக் கொண்டிருந்தது..
அதை ஆதரிப்பது போன்று கமலாவும் கணவனின் அருமை பெருமைகளை எடுத்துக் கூறி என்னதான் தாய், தந்தை சகோதரர்கள் இருந்தாலும் கடைசி வரை கணவன் மட்டுமே நிரந்தரமானவன்.. என்றும் சிறு விஷயங்களுக்கும் பெண்கள் தாய் வீட்டுக்கு வரக்கூடாது என்றும் அவன் கோபப்பட்டாலும் அன்பாக பேசி அனுசரித்து செல்ல வேண்டும் என்றும் அறிவுரைகளையும் கூறி பிரிவை தற்காலிகமாக அவள் மனதில் இருந்து மறக்கவைத்து அவர் பேச்சினால் அவன் மீது அதிக விருப்பத்தை ஏற்படுத்தினார் கமலா..
அவளது வீட்டுக்கு வந்து சமைத்து வைத்துவிட்டு ஒரு நேரமாவது அவனுடைய வாயால் உணவு கேட்க மாட்டானா?.. அல்லது அவனாக எடுத்து கூட உண்ண மாட்டனா?.. என்று பல தடவை எதிர்பார்த்து ஏமாந்து தவித்து போயிருக்கிறாள்..
அவன் வந்ததும் அவள் தண்ணி எடுத்து கொடுத்தாலும் குடிக்க மாட்டான்.. அவளாக வழியே சென்று பேச முற்படுவாள். ஆனால் மகேஷ் அறைக்குள் சென்று கதவை அடைத்தான் என்றால் அடுத்த நாள் காலையில் தான் கதவை திறப்பான்..
அவனுக்கு அவள் தந்தை அழைத்ததும் அவள் உடனே சென்றது மட்டும்தான் அதிக கோபத்தை ஏற்படுத்தி இருந்தது..
அவனுக்கோ தெரியவில்லை அவன் இருக்கும்போது எதற்காக அவள் உடனே அவனை வேண்டாம் என்று விட்டு செல்ல வேண்டும்..
இப்படி போலீஸ் கேஸ் கோர்ட் என்று செல்லாமல் இருந்திருந்தால் இன்று வரையிலும் அவள் இங்கே வந்திருக்க வாய்ப்பே இல்லை என்பதும் அவனுக்கு நன்றாகவே தெரியும்..
அதனால் இங்கு தந்தையுடன் இருப்பதாகவே நினைத்துக் கொண்டு இருந்து விடட்டும்.. அவனால் எந்த ஒரு தொல்லையும் அவளுக்கு தேவை இல்லை.. என்ற முடிவில் தான் அவளை தவிர்த்து வந்தான்..
திருமணம் முடித்து அடுத்த நாளே பிரிவு என்று வந்து நிற்பவளை என்ன செய்தாவது அவனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது அவனது விருப்பமில்லை.. அவளாக மனம் உவந்து இந்த வாழ்க்கை வேண்டும் அவனோடு சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நினைத்தால் மட்டுமே எந்த பிரச்சனை வந்தாலும் அவர்களது வாழ்க்கை நிலைத்து நிற்கும்..
அவள் தற்பொழுது பேசுவதற்காக ஆசைப்பட்டு அவனும் பேசி அவளோடு சேர்ந்து ஒன்றாக வாழலாம்.. ஆனால் எப்பொழுது என்ன காரணத்திற்காக மீண்டும் பிரிந்து செல்வாள் என்று தெரியாத ஓர் மன உறுத்தலோடு அவனால் வாழ முடியாது..
அதனால் அவள் அவனுடன் இருக்கிறாள் என்ற ஓர் உணர்வே அவனுக்கு போதுமானதாக இருந்தது தற்பொழுது..
திருமணத்திற்கு முன்பு அவளுடன் பேசி சிரிப்பதற்கு அவனுக்கும் ஆசை இல்லாமல் இல்லை.. ஆனால் பேசி சிரித்து அவளது மனதில் ஆசைகளை வளர்த்து விட்டு ஏதேனும் ஒரு காரணத்துக்காக அந்த திருமணம் நடக்காமல் போய்விட்டால் அதனால் அந்தப் பெண்ணின் மனம் ஏங்கும் பாவமும் அவன் மனம் தவிக்கும் தவிப்பும் அவனால் தாங்கிக் கொள்ள முடியாது.. என்ற காரணத்தினாலே அவளாக பேசினாலும் சாதாரண தலையை அசைப்போது ஓரிரு பேச்சு வார்த்தைகளோடு அதிகம் பேசாமல் தவிர்த்து விடுவான்..
திருமணம் செய்தால் எங்கே செல்ல போகிறாள்.. அவனோடு தானே சேர்ந்து வாழ வேண்டும்.. அதனால் அப்பொழுது அனைத்தையும் பேசி சந்தோசமாக அவர்களுடைய வாழ்க்கையை வாழலாம் என்று நினைத்து காத்திருந்தான்..
சிலர் மனதில் நல்லதை நினைப்பார்கள்.. ஆனால் அதை வெளிக் காட்டாமல் விட்டால் அந்த நல்லதும் அவர்களுக்கு தீங்கே செய்யும்..
பழனிச்சாமிக்கு சீர்வரிசை மூலம் அவன் நல்லது செய்ய நினைத்தான் அதுவும் தீங்காகவே முடிந்தது..
அது போல் உமா விஷயத்திலும் அவன் அப்படித்தான் நினைத்து ஆரம்பத்தில் ஒதுங்கி இருந்தான். ஆனால் அவளுக்கு தான் தன் மீது விருப்பம் இல்லையோ அதனால் தான் இவன் ஒதுங்கி நின்றான் தந்தையின் கட்டாயத்தினால் தான் இவன் திருமணம் செய்து கொண்டான்.. என்று நினைத்து அவளும் காதல் இல்லாமல் தன்னை அவன் திருமணம் செய்து கஷ்டப்பட வேண்டாம் என்று நினைத்து தான் தந்தையுடன் சென்றுவிட்டாள்..
அதை அவளும் வாயால் என்ன காரணம் என்று கூறவும் இல்லை.. அவனுக்கு அவளை பிடிக்கும் என்று அவனும் கூறவில்லை.. அதனால் இருவருக்கும் பிடித்த விஷயம் இருவருக்கும் தெரியாமலே அவர்களது பிரிவு நடந்து மீண்டும் ஒரு வாய்ப்பாக இருவரும் சேர்ந்து வாழ கிடைத்த வாழ்க்கையையும் ஒத்தி வைத்திருந்தார்கள்..
இருவருக்குள் இருக்கும் உண்மையான அன்பு மற்றும் காதலை உணர்ந்து கொண்ட விதியே இனியும் அவர்களை தள்ளி வைக்க வேண்டாம் என்று நினைத்து ஒன்று சேர்க்கவே இந்த விபத்தை ஏற்படுத்தியதோ என்னவோ..!
சோழன் சொன்னதைக் கேட்ட உமா உடனே தந்தைக்கு அழைத்து மகேஷ்க்கு விபத்து ஏற்பட்டு விட்டதை கூறி கதறி அழுது தன்னை வந்து அழைத்து செல்லுமாறு கூறியவள் அனைத்தையும் தயார் செய்து வைத்துக்கொண்டு தந்தையின் வரவிற்காக காத்திருந்தாள்..
மகேஷின் விபத்தை கேள்விப்பட்டு சிறியவர்கள் மூவரையும் வீட்டில் விட்டுவிட்டு பழனிச்சாமி காமலா மற்றும் அவர்களது மூத்த மகன் வந்து ஆட்டோவில் உமாவையும் ஏற்றிக்கொண்டு அவள் கூறிய மருத்துவமனைக்கு விரைந்து சென்றார்கள்..
மகேஷ்க்கு தலையில் அடிபட்டு அதிகமாக இரத்தம் போனதால் உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர் கூறிவிட்டார்..
சோழனுக்கு அழைத்து மகேஷ் அவளது கணவன் தான் அவர்கள் உடனடியாக வருவதாக கூறி அது வரையும் அவனை அங்கே இருக்குமாறு கேட்டுக் கொண்டாள்..
மகேஷ் யார் என்று தெரிந்ததும் சோழனுக்கு கவலையாகிவிட்டது.. சிறு வயதில் அவர்கள் இருவரும் ஓரளவுக்கு நெருங்கிய நண்பர்கள் தான் இங்கே வரும் காலங்களில்..
பழனிச்சாமி வள்ளியை ஒரு முறை திட்டியதன் பின் அவர்கள் அன்று சென்றவர்கள் தான் அதன் பின் இங்கே வரவே இல்லை..
அதனால் இந்த ஊர் இந்த உறவுகள் என அனைத்தையும் சோழன் மறந்து விட்டான்..
விரைந்து வந்த உமா என்ன நடந்தது எது நடந்தது என்று சோழனை கேள்வி மேல் கேள்வி கேட்டு அழுது அழுது அவனை ஒரு வழி ஆக்கிவிட்டாள்..
பழனிச்சாமியிடம் சென்று “ அப்பா எனக்கு அத்தானை ரொம்ப பிடிக்கும்.. நான் அவருக்கு சரியான ஏத்த பொண்ணு இல்லை.. எனக்கு அவரோட வாழ்ற அளவுக்கு புத்திசாலித்தனம் பத்தாதுன்னு சொல்லித்தான் நான் அவரை விட்டுட்டு நீங்க கூப்பிட்டதும் வந்துட்டேன்… எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும் பா.. எனக்கு அவரோட சேர்ந்து வாழணும்… எனக்கு அவர் வேணும் பா.. எப்படியாவது நீங்க என்ன செலவானாலும் பார்த்து எனக்கு அவரை காப்பாற்றி என்கிட்ட சேர்த்திடுங்கப்பா.. இனி நான் அவரோட பேசி சண்டை பிடிக்காமல் சந்தோஷமா வாழுவேன்.. அவரை பாக்கணும் அவருக்கு என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுக்கணும்.. இனி அவர் அடிச்சாலும் உதைத்தாலும் அவரை விட்டு எங்கேயுமே வரமாட்டேன் அப்பா எனக்கு அவர் நல்லபடியா வேணும்.. என்று பழனிச்சாமி நெஞ்சில் சாய்ந்து கதறி கதறி அழுதாள்…” அப்பொழுதுதான் பழனிச்சாமியும் மகளது வாழ்க்கையை அவரே ஒரு சின்ன விஷயத்துக்காக கெடுத்து விட்டதை உணர்ந்து கொண்டார்..
மருமகனுக்கும் அவருக்கும் பகைத்தது இனி பகைத்தது தான்.. ஆனால் அதற்காக மகளது வாழ்க்கையில் இனி அவர் எந்த ஒரு தலையிடும் செய்யாமல் இனி அவர்களை நல்ல முறையில் வாழவைக்கவே நினைத்தார்…
அப்பொழுது இரத்தம் தேவைப்படுவதாகவும் இரத்த வங்கியில் கூட இந்த வகை இரத்தம் இல்லை என்றும் தாதி பெண் கூறினாள்…
மகேஷுக்கும் உமாவின் தம்பிக்கும் ஒரே வகை இரத்தம் என்பதால் அவனை உடனடியாக மகேஷுக்கு இரத்தம் கொடுக்குமாறு பழனிச்சாமி கூறினார்..
அக்காவிற்காக உயிரை கொடுக்கச் சொன்னாலும் கொடுப்பவன் இரத்தமாக கொடுக்க மாட்டான்..
எந்த ஒரு மாற்று பேச்சும் பேசாமல் அந்த தாதி பெண்ணிடம் “ எங்க மாமா உயிர் பிழைக்க எவ்வளவு இரத்தம் வேண்டுமானாலும் எடுத்துக்கோங்க.. ” என்று கூறி இரத்தம் கொடுக்கும் இடத்திற்கு சென்றான்..
அவனிடம் இருந்து இரத்தத்தை பெற்றுக்கொண்டு அந்த இரத்தத்தை செலுத்தி மகேஷின் ஆப்ரேஷனை முடித்துவிட்டு அப்பொழுது தான் மருத்துவர் வெளியே வந்தார்..
அவர் வந்ததும் அவரை சூழ்ந்து கொண்டார்கள் அனைவரும்..
“ வலது கால் கை மற்றும் சோல்டர் எல்லாம் ரொம்பவே அடிபட்டு பிராக்சர் ஆகிவிட்டது.. தலையில தான் அடி பலம். அவர் கண் முழிச்சாத்தான் ஸ்கேன் பண்ணி பாத்துட்டு அடுத்து என்னன்னு எங்களால கூற முடியும்.. ” என்று கூறிவிட்டு அவரது அறையை நோக்கி அவர் சென்று விட்டார்..
அவரை பின் தொடர்ந்து சென்ற சோழனும் பழனிச்சாமியும் அப்பொழுதுதான் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்..
சோழனைப் பார்த்ததும் பழனிச்சாமிக்கு முதலில் அடையாளம் தெரியவில்லை.. உமா சொல்லி இருந்தாள்.. மகேஷை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்திருப்பது சோழன் அண்ணா தான் என்பதை.. அதனால் இவன் தான் சோழனாக இருக்க வேண்டும் என்று நினைத்து குற்ற உணர்வுடன் தான் அவனைக் கடந்து மருத்துவரின் அறைக்கு அவரும் சென்றார்..
அவனும் பழனிச்சாமியுடன் பேசுவதற்கு நினைக்கவில்லை..
இருவரும் ஒன்றாக அறைக்கு சென்று ஒரே மாதிரியான கேள்வியை மருத்துவரிடம் கேட்டார்கள்.. “ எங்ககிட்ட இருந்து ஏதாவது மறைகிறிங்களா?. டாக்டர்.. இல்லை எங்க மாப்பிள்ளைக்கு பெரிய பிரச்சனை எதுவும் இல்லையா?..” என்று கேள்வி கேட்டார்கள் தந்தையும் மகனும் ஒன்று சேர்ந்தது போன்று..
ஆம் இவர் தான் அந்த ஊரில் வள்ளியை திருமணம் செய்து சீதனம் கொடுக்கவில்லை என்று ஏமாற்றி சென்ற சோழனின் தந்தை பழனிச்சாமி ஆவார்..
வள்ளியும் கமலாவும் ஒன்றுவிட்ட அக்கா தங்கைகள் என்று தெரியாமலே பசஞ்சோலை கிராமத்திற்கு வந்து வள்ளியை விரும்பி கல்யாணம் செய்து கொண்டார்..
வள்ளியிடம் இல்லாத ஒன்று கமலாவிடம் ஈர்த்ததால் வள்ளியிடம் இல்லாத காசு பணம் கமலாவிடமும் இல்லை என்று தெரிந்து கொண்டும் கமலாவை விட்டு செல்ல அவருக்கு சற்று விருப்பமில்லை…
கமலாவின் தாயின் இறப்பிற்கு பின் வள்ளியும் சோழனும் கமலாவை இங்கே பார்ப்பதற்காக வந்திருந்தார்கள்..
அப்பொழுதுதான் எதிர்பாராத விதமாக அங்கே பழனிச்சாமி வந்ததும் வள்ளிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இவர் எப்படி இங்கே என்று தெரிந்து கொள்ள வள்ளி காத்திருந்தார்..
எந்த பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது அவல நிலை அவரது கணவனை தங்கையும் கல்யாணம் செய்து இருப்பதை அறிந்து கொண்டு தங்கையின் வாழ்க்கை கெடக்கூடாது என்று யாருக்கும் தெரியாமல் தனியாக பழனிச்சாமியை சந்தித்து அவர் திட்டி விட்டு வீட்டை விட்டு வெளியேற இருக்கும் பொழுது.. சொந்த மனைவியே பழனிச்சாமியை தவறான உறவிற்கு அழைப்பதாக கூறி பழனிச்சாமி அவர்களை அங்கிருந்து விரட்டி அடித்தார்..