அலுவலகம் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
கோவிலூர் கிராமம். கோயில்களுக்கு பிரசித்தம் பெற்றது அதனால் கோவிலூர் எனும் பெயர் வந்தது.
இந்த ஊரில் வசிக்கும் மக்கள் அனைவரும் அவர்களது தேவைக்கு உடனடியாக நம்பிக்கையான இடத்தில் பணம் பெற முடியும் என்றால் அது மகேஷ் பினான்சில் மட்டுமே.
மகேஷும் கேட்போருக்கு தொகைக்கு ஏற்றவாறு ஆதாரம் வாங்கி வைத்துக்கொண்டு பணத்தை வட்டிக்கு கொடுப்பான்.
மகேஷ் கொடுக்கும் கால தவணைக்குள் பணத்தை திருப்பி செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாவிட்டால் அவர்கள் கொடுக்கும் ஆதாரம் வாகன பத்திரமோ,வீட்டு பத்திரமோ, நகையோ எதுவாயினும் அவனுக்கே சொந்தமானதாகும்.
அநியாய வட்டி என்றுமே எடுப்பதில்லை குறைந்த வட்டிக்கே பணம் கொடுப்பான். அதனால் தொழில் விஷயத்தில் அதுவும் பண விஷயத்தில் யாருக்கும் எப்பொழுதுமே இரக்கம் காட்ட மாட்டான் மகேஷ்.
பணவிஷயத்தில் கடுமையாக இருப்பான் ஆனாலும் அடிதடி ரவுடிசம் எதுவும் இல்லாமல் அமைதியாக தீர்க்கமாகவே பெற்றுக் கொள்வான்.
அவனின் வாய் பேச்சு திறமையே அவன் இந்த தொழிலில் நீடிப்பதற்கு காரணமானது.
அலுவலகத்தில் மக்கள் அவர்களது தேவைகளுக்கு பணம் பெற்றுக் கொள்வதற்காக ஆதாரங்களை வைத்துக்கொண்டு வரிசையில் காத்திருந்தார்கள்.
ஒருமுறை பணம் வாங்கி மீண்டும் பணத்தை ஒழுங்காக செலுத்தினால் மட்டுமே அடுத்த முறை வட்டிக்கு பணம் கிடைக்கும்.
இல்லாவிட்டால் உயிரே போகிறது பணம் வேணும் என்றாலும் மகேஷ் மனம் இறங்கி பணம் கொடுக்க மாட்டான்.
அதனால் அந்த ஊர் மக்களும் அவனைத் தவிர அவசரத்துக்கு பணம் கொடுக்க யாரும் இல்லாததால் அவனிடம் அதிகம் வம்பு வழக்குகள் வைத்துக் கொள்ள மாட்டார்கள்.
பணம் கொடுக்கும் இடம் வாங்கும் இடம் என தனித்தனியாக அவர்களுக்கான இடத்தில் வரிசையில் நின்று பணம் கையில் கிடைத்ததும் சந்தோஷமாகவே சென்றார்கள்.
பண விஷயம் என்பதால் அதிக சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு இருந்தது. அங்கு நடக்கும் காட்சிகளை அவனது பிரத்தியேக அறையில் இருந்து அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருந்தான் மகேஷ்.
அலுவலகத்திற்கு வந்ததும் வீட்டு எண்ணில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை அதிகமாக தவிர்த்து விடுவான் மகேஷ்.
ஆனால் தற்பொழுது அவனது குடும்பம் கல்யாண வேளையில் ஈடுபட்டிருப்பதால் அவன் தாயிடம் இருந்து அடிக்கொரு தரம் அவனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருக்கும்.
அதனால் தற்பொழுது அவனது தாய் பெண் வீட்டுக்கு போகும் வேலை இருப்பதால் அவனை வருமாறு அழைக்கவே அலைபேசியில் அழைப்பு விடுத்தார்.
” ச்சே மனுசன நிம்மதியா கொஞ்ச நேரம் பிசினஸ் பார்க்க விடுதுங்களா?. எவன்டா அந்த கல்யாணம் என்ற பந்தத்தை கண்டுபிடிச்சவன். அவன் மட்டும் என் கைல கிடைச்சான்னு வை அவனுக்கும் வட்டிக்கு பணம் கொடுத்து நீ முதல் கல்யாணம் பண்ணி தொலை தருதலை நாயேன்னு வட்டிக்கு மேல வட்டி வாங்கியே ஒரு வழி பண்ணி இருப்பேன். ” என்று அருகில் இருந்த அவனது பிஏவிடம் கத்திவிட்டு தாயின் அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.
மகேஷ் அழைப்பை ஏற்றதும் அவனது தாய் பேச ஆரம்பித்தார்.
” ஹலோ கண்ணா அம்மா சொல்லி இருந்தேனே. இன்னைக்கு பொண்ணு வீட்டுக்கு போகணும் அதனால வட்டி கடைக்கு போயிட்டு சீக்கிரமாக வீட்டுக்கு வர சொல்லி. நீ ஏன் இன்னும் வரல. உன்னை கூப்பிடறதுக்கு அம்மா மேல கோவப்படாத கண்ணா. சீக்கிரம் வா அம்மா உனக்காக தான் காத்திருக்கிறேன். போயிட்டு கல்யாணத்துக்கு நாள் குறிச்சிட்டு வந்துருவோம்.” என்றார்.
அதற்கு மகேஷ் சரி என ஒரு வார்த்தை சொல்லிவிட்டு அவனது பிஏவிடம் அலுவலகத்தை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு அங்கிருந்து அவனது பைக்கை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்று விட்டான்.
தாய் தங்கை இருப்பதால் வீட்டுக்கு ஒரு கார் வாங்கி வைத்திருக்கிறான்.
அதிகம் காரைவிட பைக்கே விருப்பம் என்பதால் அவனது தனி பாவனைக்கு எங்கு சென்றாலும் பைக்கில் தான் செல்வான்.
அதேபோல் இம்முறையும் வீட்டிற்கு சென்று தயாராக தாய் தங்கை மற்றும் தங்கையின் கணவன் குழந்தை என அனைவரையும் ஏற்றிக் கொண்டு காரில் பெண்ணின் வீட்டிற்கு சென்றார்கள்.
சித்ராவிற்கு வெளி ஆட்கள் வேறு யாரும் சொந்தம் இல்லாததால் அவர்களது குடும்பம் மட்டுமே நாள் குறிப்பதற்காக பெண் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.
இந்நிகழ்வையே பெண்பார்க்கும் படலமாகவே பழனிச்சாமியின் குடும்பம் ஏற்பாடு செய்து வைத்துள்ளது.
உமாதேவி அழகான பட்டுப் புடவையில் தேவையான அளவு நகை அணிந்து பார்க்க பார்க்க தெவிட்டாத அழகில் இருந்தாள்.
அவளின் அழகிற்கு கொஞ்சமும் குறைவில்லாமலே சித்ராவின் மகனும் ஆறடிக்கும் சற்று அதிகமான உயரத்தில் மாநிறத்தில் கட்டுக்கோப்பான உடல் அளவில் இருந்தான்.
இருவருக்கும் அற்புதமான ஜோடி பொருத்தம் என ஊரே மெச்சியது.
மாப்பிள்ளை விட்டார்கள் வந்ததும் பழனிச்சாமியும் கமலாவும் தம்பதி சகிதமாக வரவேற்று அவர்களை அமர வைத்துவிட்டு அவர்களுக்கு குடிப்பதற்கு உண்பதற்கு என கொடுத்து அனைத்தையும் பார்த்து பார்த்து செய்து அவர்களை கவனித்தார்.
அதன்பின் சித்ரா மருமகளுக்கு முறைப்படி பூ வைத்து உறுதிப்படுத்தி நிச்சய தாம்பூலம் மாற்றிக் கொண்டார்கள்.
சபையில் வைத்து பழனிச்சாமி மகளுக்கு என்னவெல்லாம் செய்ய இருப்பதாக கூறினார்.
” தங்கச்சி குடும்பமாவே இருந்தாலும் என் பொண்ணு அங்க வாழ போறா அதனால எந்த குறையும் இல்லாமல் சந்தோஷமா வாழணும். அதனால என் மகளுக்கு என்ன எல்லாம் நான் செய்யவேண்டும் என்று நினைத்து இருக்கேனோ அது எல்லாத்தையும் ஒன்னும் குறை இல்லாம செஞ்சுடுவேன். ” என்றார்.
அதற்கு சித்ராவோ ” என்னோட அண்ணன் தானே நீ. எனக்கு இதெல்லாம் சொல்லனுமா என்ன? உன் மகளுக்கு என்னவெல்லாம் செய்து வைச்சிருக்கேன்னு எனக்கு தான் முன்னமே தெரியுமே அது எல்லாம் ஏன் பொதுவுல நீ சொல்லிட்டு இருக்க வேணாம் விடு.” என்றார் சித்ரா.
சித்ரா பேசியதும் அவரது கையை சுரண்டி சித்ராவை அருகே அழைத்தாள் நிஷா.
” என்ன மா நீ. இப்படி சொல்லிட்ட. மாமா இப்பவே என்னென்ன போட போறேன்னு சொன்னா தானே அது நமக்கு பயன்படுமா இல்லையானு தெரியும். இன்னும் இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறாங்க அதனால குறைவா செய்துட்டார்னு வை நாள பின்ன நம்ம எதுவும் கேட்டு வைக்க முடியாது பாத்துக்கோ. பேசுறது எல்லாம் இப்பவே வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுனு பேசிடு. இப்ப நீ மாப்பிள்ளையோட அம்மா அந்த கெத்த அண்ணன் தானேன்னு எங்கேயும் விட்டுக் கொடுத்துடாத. அப்புறம் நீ எப்பவுமே உன் அண்ணனுக்கு அடிபணிந்த தங்கச்சியா மட்டுமே இருக்க முடியுமே தவிர உன் மகனுக்கு அம்மாவா மருமகளுக்கு மாமியாரா இருக்கிறது ரொம்ப கஷ்டம் இப்பவே சொல்லிட்டேன் பார்த்து சூதானமா நடந்துக்கோ. ” என்று கூறி நன்றாக குழம்பிய குட்டையில் தூண்டிலை வீசிவிட்டு அவள் வந்த வேலை முடிந்தது என அமைதியாக அவளிடத்தில் போய் இருந்து விட்டாள் நிஷா.
நிஷா கூறியவை அனைத்தும் சித்ராவிற்கு சரியாகவே தெரிந்து அதனால் அவர் அமைதியாக எதுவும் குறுக்கே பேசாமல் இருந்து விட்டார்.
என்னதான் தங்கையாக இருந்தாலும் அவரும் மகனை கொடுத்தால் மகளுக்கு மாமியாராக வேண்டும் என்பதால் சபையில் வைத்து பழனிச்சாமி அனைத்தையும் உடைத்து பேசி விட்டார்.
” சபையில் பொது மக்களுக்கு முன்பே வச்சு என்னோட பொண்ணுக்கு நான் என்ன எல்லாம் செய்வேன்னு எல்லாத்தையும் இப்பவே சொல்லிடுறேன். நான் ரெடி பண்ணி தயாராகவே வச்சிருக்கேன். அதனால எனக்கு சீர் செய்வது பற்றி எந்த கவலையும் இல்லை. என் பொண்ணுக்கு வீடு கட்டி வச்சிருக்கேன்.
என் பொண்ணுக்கு குழந்தை பிறந்த பிறகு என் பொண்ணுக்கும் அவளோட குழந்தைக்கும் சேர்த்து அந்த வீட்டை பத்திரம் கிரையம் பண்ணி கொடுப்பேன்.”
” என் பொண்ணுக்கு இது ஒரு பாதுகாப்பு என்பதாலும் இது இந்த ஊர் பழக்கம் அதைத்தான் நானும் செய்தேன். இதில் தவறு எதுவும் இல்லை என்று நான் நினைக்கிறேன்.
” அப்புறம் வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வாங்கி வச்சிருக்கேன். சமையல் பாத்திரங்கள். டிவி,பிரிட்ஜ், வாஷிங்மெஷின், கட்டில், மெத்தை, ஃபேன்,ஏசி,பீரோ, ஷோகேஸ், சோபா செட், “
“அப்புறம் நகை பதினொரு பவுன் தாலிக்கொடி. அதைத் தவிர மற்ற நகை எல்லாம் சேர்த்து நூறு பவுன் நகை போடுறேன்.
மாப்பிள்ளை பொண்ணு அவங்க குடும்பம் எல்லாம் சொகுசா சேர்ந்து பயணம் போறதுக்கு வசதியான கார். ஐந்து லட்சம் ரூபாய் பணம் இது எல்லாம் என் பொண்ணு போற இடத்துல சந்தோசமா வாழ நாங்க கொடுக்குறோம். நான் இப்ப சொன்னது எதுவுமே மாறாமல் கல்யாணம் அன்று ஊர் மக்களுக்கு முன்பு வச்சி காட்டி கொடுப்பேன். அப்புறம் தான் என் பொண்ணுக்கு தாலி ஏறும்.” என்று உறுதியாக பழனிச்சாமி சித்ரா மட்டும் ஊர் மக்களை வைத்து பேசி முடித்ததும் இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் அதுக்கு முதல் நாள் நிச்சயதார்த்தம் என்று நாள் குறிக்கப்பட்டு இந்த விசேஷ நிகழ்வு முடிக்கப்பட்டது.
அதன்பின் மதிய உணவு உண்டு விட்டு அனைவரும் கலைந்து சென்றதும் மாப்பிள்ளை அங்கிருந்து பழனிச்சாமியிடம் சொல்லி விட்டு சென்று விட்டான்.
சித்ரா மற்றும் நிஷா இருவருக்கும் வாயில் இருக்கும் மொத்த பல்லும் தெரியும் அளவிற்கு சிரித்து பேசிய படியே அங்கிருந்து அவர்கள் வீட்டிற்கு சென்றார்கள்.
பெண் வீட்டுக்கு சென்று மீண்டும் அலுவலகத்திற்கு வந்ததும் மகேஷின் முகம் கடுகடுவன இருந்தது.
அவன் பிஏ ராஜேஷ் என்னவென்று கேட்க முடியாமல் தயங்கி அவனது அருகில் நின்று கொண்டிருந்தான்.
மகேஷின் கோபத்தை பார்த்து ராஜேஷ் யாரையும் அறைக்குள் விடாமல் அவனை எவ்வித தொந்தரவும் செய்யாமல் ராஜேஷும் அறையை விட்டு வெளியே வந்து விட்டான்.
மகேஷிடம் யாராவது கையில் கிடைத்தால் அடித்து நொறுக்கி விடுவான். அவ்வாறான கோபம் அவனது முகத்தில் தீ போன்று எரிந்தது.
அவர்கள் மனதில் நினைத்து அனைத்தையும் கூறி நிச்சயத்திற்கும் திருமணத்திற்கும் நாள் குறித்த சந்தோஷத்தில் பழனிச்சாமி கமலா தம்பதியினர் குடும்பத்தோடு சந்தோஷமாக அன்றைய நாளை கழித்தார்கள்.
இறைவன் செயல் விதி என அனைத்தும் இருந்தும் இந்த மக்கள் அவர்களின் ஆசை கனவுகள் அனைத்தும் நிறைவேறும் என்று அல்ப சந்தோஷத்திலேயே அவர்களின் நாட்களை கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.