அவனை முறைத்த தோஷி, “என்ன டாக்டர், கலாய்க்குறீங்களா?” என வினவினாள்.
“ஹாஹா… கலாய்க்குறதுன்னா என்ன தோஷி?”
“அடிங்க… டாக்டர் இப்பலாம் என்னை மாதிரியே பேச ஆரம்பிச்சுட்டீங்க!”
“ஆமா! உன்னை ஒட்டி உரசிட்டே தான 24 மணி நேரமும் சுத்துறேன்ல. அதான் உன்னை மாதிரி ஆகிட்டேன் நான்.”
“இருக்கும் இருக்கும். சரி, அதை விடுங்க. இப்ப நம்ம எங்க போறோம்?”
“உனக்கு ட்ரெஸ் எடுக்க தான் போறோம்.”
“ஹம்ம்… ஆமா! நானும் கல்யாணம் ஆனப்பிறகு புருஷன் பர்சை ஒரு தடவையாவது காலி பண்ணணும்னு நினைச்சேன். நீங்களே சான்ஸ் கொடுத்துட்டீங்க!” என்று அவன் கால்சராயில் கையை விட்டு அவனுடைய பணப்பையை வெளியே எடுத்தவள், “என்ன டாக்டர், பர்ஸூ புள்ளத்தாச்சி மாதிரி இல்லாம, அபார்ட் ஆன மாதிரி இருக்கு?” என வினவினாள்.
“சே! சே! பேராசை எல்லாம் இல்ல டாக்டர். கடையை வாங்கி, எதுக்கு அடுத்தவங்க பொழப்புல மண்ணை அள்ளி போடணும். நமக்கு தேவையான ட்ரெஸ் மட்டும் எடுத்துக்குவோம்!” தோளை குலுக்கிக் கொண்டே பெருந்தன்மையாக கூறினாள் தோஷி.
“ரொம்ப பெரிய மனசு மேடம் உங்களுக்கு!”
“ஆமா! பின்ன இல்லைன்னா, உங்களை மாதிரி ஒரு சுமாரான பையனுக்கு எல்லாம் வாழ்க்கை கொடுத்து இருக்கேன்ல?” குறும்பாக அவனை பார்த்து கண்ணடித்தாள் தோஷி. அதில் பற்கள் தெரிய புன்னகையை விரிவுபடுத்தினான் ஹன்ஷித். அவன் முகத்தையே உற்று கவனித்தாள் பெண்.
அலை அலையாக முன் நெற்றியில் கேசம் புரண்டது. எப்போதும் சிரிக்கும் கண்கள், கூரான மூக்கு, பளிச்சென எல்லோரையும் கட்டியிழுக்கும் அழகான புன்னகை, பால் நிறத்தில் இருந்தான். லேசாக முகம் அங்காங்கே சிவந்து இருந்தது.
தன்னை குனிந்து பார்த்தாள் தோஷி. மாநிறத்திற்கும் குறைவான நிறம், அவனை போன்று கட்டுக்கோப்பான உடலமைப்பு இல்லை. மிகவும் மெலிந்த தேகம். முகம் கூட சுமாரன ரகம் தான். பேரழகி எல்லாம் இல்லவே இல்லை. ஒரு முறை பார்க்கலாம். அவ்வளவே! மற்றபடி தன்னிடம் என்ன உள்ளது? என ஆராய்ந்தாள் பெண். ஆனால், விடை என்னவோ சுழியம் தான்.
அவளின் மௌனத்தை கவனித்தவன், திரும்பி அவள் முகத்தைப் பார்த்தான். தன்னையே விழி அகற்றாமல் பார்க்கும் மனைவியை அள்ளி கொஞ்சிட மனம் விழைந்தது.
தொண்டையை செருமியவன், ‘என்ன?’ என்பதாய் புருவத்தை உயர்த்தினான். அந்த பாவனை அவளை ஏதோ வசியம் செய்தது. இமைகளை கீழிறக்கி, பார்வையை தழைத்தவள், “ஒன்னும் இல்ல டாக்டர்.” என்றாள்.
அவனை தெரிந்த இரண்டு மாதங்களில், முதல் முறையாக இன்று தான் அவனை ஊன்று கவனித்தாள் பெண். ‘ஷாருக்கானுக்கே டஃப் கொடுப்பாரு போல நம்ம டாக்டர்!’ மனதில் நினைத்ததை வெளியே கூறவில்லை பெண். எனோ காதலனாய், காதலனாய் என்ன அவன் மீது காதல் உள்ளதா? என்றெல்லாம் அவள் ஆராய்ச்சி நடத்தவே இல்லை. இதுவரைக்கும் யார் மீது ஏற்படாத பிடித்தம் ஒன்று அவனின் புறம் தன்னை ஈர்த்து கட்டிவிட்டது. எனோ அதன் முடிச்சுகளை அவிழ்க்க பெண் மனம் விழையவில்லை. அந்த முடிச்சுகளின் சுவாரஸ்யத்தையும், அவனின் மொத்த அன்பையும் தானே எடுத்துக் கொண்டு, அவனுடன் வாழ வேண்டும் என்று ஆசை கொண்டது பெண் மனம். யோசித்த ஒரே ஒரு நொடியில், அவனின் மனச்சிறை மட்டுமல்ல, கைச்சிறைக்குள்ளும் அகப்பட்டு இருந்தாள் பெண். அன்றைய நினைவில் முகம் செம்மையாக, அலைப்பாயும் விழிகளுடன், அவனை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே வந்தாள் தோஷி.
அவளது செயல்களை தன்னுள் வாங்கிக் கொண்டிருந்த ஹன்ஷித்திற்கு, அவள் என்ன நினைக்கிறாள் என்று விளங்காவிடினும், அவள் முகச்சிவப்பும், ஓரக்கண்ணால் தன்னை பார்க்கும் பாவனையும் ஒரு புன்னகையை ஜனிக்க செய்ய, இதழில் உறைந்த புன்னகையுடன் அவளைப் பார்த்தான்.
“உலகத்துல எந்த பொண்டாட்டியும் புருஷனை திருட்டுத்தனமா சைட்டடிக்க மாட்டா!” இதழை மடித்து கேலியுடம் கூறியவனை முறைத்தவள், “நான் எதுக்கு திருட்டுத்தனமா பார்க்கணும். அதான் லைசென்ஸ் கொடுத்து இருக்கீங்களே! ரைட் அண்ட் லாயலா பார்ப்பேன் டாக்டர்!” என தோஷி கூற, அவர்கள் மகிழுந்து துணிக்கடையை அடைந்து இருந்தது. இருவரும் உள்ளே நுழைந்தனர். என்ன தான் தோஷி ஒரு பேச்சுக்கு அவன் பணம் முழுவதையும் தீர்த்துவிடுவேன் என்று கூறினாலும், அவளுக்கு அதிக விலை கொடுத்து துணிகள் வாங்க விருப்பம் இல்லை.
இருப்பதிலே விலை குறைந்த உடையை அவள் எடுக்க, “தோஷி, விலையை பார்க்காத! ட்ரெஸ் உனக்கு பிடிச்சு இருக்கதை எடு!” என்று அவன் பலமுறை கூறியும் அவள் காதில் வாங்கவில்லை.
அவளது கையை பிடித்து இழுத்துச் சென்றவன், “நல்லா அழகான ட்ரெஸா காட்டுங்க. ரேட் நோ ப்ராப்ளம்!” என்றவன், விலை மற்றும் உயர்ந்த தரத்தில் ஆடைகளை எடுத்து குவித்தான்.
“டாக்டர், பணம் என்ன மரத்துலயா காய்க்குது? ஏன் இவ்ளோ விலைல ட்ரெஸ் எடுக்குறீங்க? அதுவும் இத்தனை ட்ரெஸ்!” என அவள் பல்லை கடிப்பதை அவன் காதில் வாங்கவே இல்லை.
“என்ன டாக்டர், பழி வாங்குறீங்களா?” அவள் கோபப்படுவதை ஹன்ஷித் கண்டு கொள்ளவில்லை.
“சரி, போகலாமா தோஷி? போதுமா? இல்லை வேற எதுவும் வேணுமா?” என ஹன்ஷித் வினவ,
“ஆங்… எல்லாம் என்னை கேட்டு தானே வாங்குனீங்க? இதை மட்டும் கேக்குறீங்க?” முறுக்கிக் கொண்டாள் பெண்.
சிரித்துக் கொண்டே பணம் செலுத்தும் இடம் நோக்கிச் சென்றவனின் கண்கள் ஓரிடத்தில் பளிச்சிட, “இவ்ளோ வாங்குனேனே தோஷி. முக்கியமான ஒன்னு வாங்க மறந்துட்டேன்!” என்றவன், உள்ளே சென்று ஒர் உடையை எடுத்து வந்தான். அதை பார்த்து வாயைப் பிளந்த தோஷி, “சீ! என்ன கருமம் டாக்டர்? இதெல்லாம் ஒரு ட்ரெஸ்ஸா? இதை மட்டும் நான் போட்டுட்டு போனேன், உங்க மானம் தான் கப்பலேறும். பார்த்துக்கோங்க!” முகத்தை சுழித்தாள் தோஷி.
விஷம சிரிப்பை உதிர்த்த ஹன்ஷித், “எதுக்கு வெளிலலாம் போட்டுட்டு போற. எனக்கு மட்டும் ரூம்ல போட்டு காமி!” என்றான்.
“யூ மீன்?” கேள்வியாக நிறுத்தினாள் தோஷி.
“ஹாங்… ஐ மீன், தட் வஞ்சர மீன் தான். அதை நீ போட்ற, டாட். அவ்ளோதான்.” என அவன் பணம் செலுத்தும் இடம் நோக்கிச் செல்ல, ‘ஓ… இவர் சொன்னா, நான் போடணுமா? நெவர்!’ என சிலுப்பிக் கொண்டாள் பெண். ஆனால், அதையும் தான் அணியும் நிலை வரும் என் அறியவில்லை பேதை.
***********
மறுநாள் ஞாயிற்றுக்கிழமையாக இருக்க, தூக்கத்தில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்த தோஷியை, எதோ ஒரு சத்தம் எழுப்ப, ‘சண்டே கூட ஜாலியா தூங்க முடியலை. ஹூ இஸ் திஸ் நான்சென்ஸ்?’ என புலம்பிக் கொண்டே எழுந்தவள், பல்லை விளக்கிவிட்டு வெளியே வர, ஆண்கள் மூவரும் தொலைக்காட்சியில் பாடலை ஒலிக்க விட்டு, நடனமாடிக் கொண்டிருந்தனர். அதை பார்த்து வாயைப் பிளந்த தோஷி, ‘அடப்பாவிகளா! வெளிய பணக்கார வேஷம் போட்டு டிப்டாப்பா இருக்க எல்லாரும் வீட்ல இப்டி லுங்கியோட டான்ஸ் ஆடுவாங்க போல! பரவாயில்லை. நம்மளும் போய் ஐக்கியமாவோம்!’ என நினைத்து, பவ்யமாக அவர்கள் அருகில் சென்றாள்.
“அண்ணி, வாங்க நீங்களும் டான்ஸ் ஆடுங்க!” என அவள் கையை பாஸ்கர் பிடித்து இழுக்க, எட்டி சமையலறையை நோட்டமிட்ட தோஷி, ‘அப்பாடா! நம்ம மாமியார் இல்ல. தைரியமா ஆடலாம்!’ என அவர்களுடன் சேர்ந்து நடனமாடத் துவங்கினாள். சில நிமிடங்களில் தனது நடனத்திறமை முழுவதும் அவள் காண்பித்து மூச்சு வாங்க நின்றாள்.
“வாவ் அண்ணி! செம்மையா டான்ஸ் ஆடுறீங்க!” என பாஸ்கர் புகழ, ஹன்ஷித்தும் அவளை பார்த்து புருவமுயர்த்தினான்.
அதில் சிவந்தவள், “நன்றி கொழுந்தனாரே!” என தலையை குனிந்து நிமிர, அவள் முன் குந்தவி நின்று இருந்தார். அவரைப் பார்த்து தோஷி நாக்கை கடிக்க, அவளை முறைத்து விட்டு சமையலறைக்குள் புகுந்து கொண்டார் அவர்.
‘சே! வந்ததுல இருந்து நம்ம மாமியாரை இம்ப்ரஸ் பண்ணவே முடியலை. சரி, இன்னைக்கு ட்ரை பண்ணுவோம்!’ என நினைத்து, அவர் பின்னே சமயலறைக்குள் நுழைந்தாள்.
குந்தவி மடமடவென சமையல் வேலையை கவனிக்க, அவருக்கு உதவுகிறேன் என்ற பெயரில் அவரின் முறைப்பயே பரிசாக பெற்றுக் கொண்டு அவர் பின்னே சுற்றிக் கொண்டிருந்தாள்.
“மரகதம், இன்னைக்கு மதியம் நான் சொன்னது மாதிரி சமைச்சுடு. சாயங்காலம் தான் நான் வருவேன்!” என குந்தவி தனது அறைக்குள் நுழைந்து கொண்டார்.
பாத்திரத்தை கழுவிக் கொண்டிருந்த மரகத்திடம் சென்றவள், “மரகதம்க்கா, ஏன் இன்னைக்கு உங்க சமையல்?” என வினவினாள்.
“அது, குந்தவியம்மா இன்னைக்கு எதோ விஷேசத்துக்குப் போறாங்களாம். அதான் இன்னைக்கு மதியம் என்னை சமைக்க சொன்னாங்க.” என பதில் கூறிய மரகத்தின் கன்னத்தில் கிள்ளியவள், “ரொம்ப தாங்க்ஸ் கா. இன்னைக்கு நான் தான் சமைப்பேன். நீங்க எனக்கு ஹெல்ப் மட்டும் பண்ணுங்க…” என கூறி, ‘இன்னைக்கு மதிய சாப்பாட்டை எப்படியாவது நல்லா செஞ்சு, மாமியாரை இம்ப்ரஸ் பண்ணிடணும்.’ என மனதில் குதூகலித்தாள் தோஷி.
காலை உணவை உண்டுவிட்டு அவரவர் வேலையை கவனிக்க செல்ல, குந்தவி வெளியே கிளம்பிவிட்டார். குளித்து முடித்த தோஷி, “டாக்டரே! இன்னைக்கு என்கையால என் மாமனாருக்கு சமைச்சு போட்டு அசத்தப் போறேன்!” என அலுங்காமல் ஒரு குண்டை அவன் தலையில் போட்டுவிட்டு, சமையலைறக்குள் புகுந்தாள் தோஷி.
குளிர்சாதன பெட்டியில் இருந்து கறியை வெளியே எடுத்தவள், தனக்கு தெரிந்த சமையல் வித்தைகளை காட்ட ஆரம்பித்தாள். இரண்டு மணி நேரத்தில், சமையலை முடித்துவிட்டிருந்தாள். அருகில் ஒரு கிண்ணத்தில் எதோ இருக்க, திறந்து பார்த்தாள். ‘அட காலைல செஞ்ச தேங்காய் சட்னி. குழம்பு வேற தண்ணியா இருக்கு. தேங்காய் அரைச்சு ஊத்துறதுக்கு பதிலா இதையே ஊத்திடலாம்!’ என அந்த தேங்காய் சட்னியை குழம்பில் ஊற்றிவிட்டாள்.
மதிய உணவிற்காக எல்லோரும் மேஜையில் அமர, “வெல்கம் டு ஆல். இன்னைக்கு என்னோட சமயலை தான் நீங்க டேஸ்ட் பண்ண போறீங்க!” என கையில் கரண்டியுடன் குனிந்து தோஷி வரவேற்க, மூவர் முகத்திலும் புன்னகை.
“மாமா, நல்லா சாப்டுங்க. அப்ப தான் ஹெல்த்தியா இருக்க முடியும்…” என அவருக்கு இறைச்சியை அள்ளி அள்ளி வைத்தவள், பாஸ்கருக்கு வைத்து விட்டு, இறுதியாக ஹன்ஷித்திற்கு வைத்தாள்.
அவள் சமையலை ருசி பார்த்த சந்திரகாந்த், “அடடா! சூப்பரா சமைச்சு இருக்க மருகளே” என பாரட்ட, “அண்ணி! மாஸ் காட்டிட்டீங்க.” என பாஸ்கரும் புகழ்ந்தான். அதில் புன்னகைத்தவள், ஹன்ஷித்தை காண, அவன் சாப்பிடாது அவளை பார்த்து விழித்தான்.
“என்னாச்சு டாக்டரே! ஏன் சாப்டாம இருக்கீங்க?” என்ற தோஷியின் கேள்வியில் மற்ற இருவர் கவனமும் ஹன்ஷித் மீது விழுந்தது.
“அண்ணி, அண்ணா வெஜிடேரியன். நான் வெஜ் சாப்டமாட்டாரு.” என பாஸ்கர் கூற, ஹன்ஷித்தை பார்த்தாள் ‘அப்படியா?’ என்பது போல.
“அவன் சின்ன வயசுல இருந்தே கறி, மீன் எல்லாம் சாப்பிட மாட்டான்ம்மா.” என சந்திரகாந்த்தும் கூறினார்.
“பரவாயில்லை பா. என் பொண்டாட்டி ஆசையா முதன்முதலா சமைச்சு இருக்கா. நான் கண்டிப்பா சாப்டுவேன்.” என ஹன்ஷித் உணவை வாயின் அருகே கொண்டுச் செல்ல, அவன் கையை பிடித்து தடுத்தவள், “வேணாம், ஒரு நிமிஷம் இருங்க…” என்று கூறி, அவனுக்கு வேறு ஒரு தட்டில் சாதம் வைத்து ரசத்தை ஊற்றினாள்.
“ஒரு டூ மினிட்ஸ் இருங்க, வந்துட்றேன்.” என கூறி, உள்ளே சென்றவள், அவசர அவசரமாக உருளைகிழங்கை சீவி, அதை பொறித்து எடுத்து வந்து அவனிடம் கொடுத்தாள். ஹன்ஷித் எதுவும் பேசாமல் உண்டான். தோஷி தான் அமைதியாகி விட்டாள் எதோ போல.
சந்திரகாந்த்தும், பாஸ்கரும் அவளை புகழ்ந்து தள்ள, அதை சிறிய தலையசைப்புடன் ஏற்று கொண்டாள் பெண். அனைவரும் உண்டு முடிய, “மரகதம் அக்கா, நான் அப்புறம் சாப்ட்றேன். நீங்க எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டு, சாப்ட்டு கிளம்புங்க.” என்று கூறி அறைக்குச் சென்று விட்டாள்.
சாப்பிட்டு முடித்து விட்டு அறைக்கு சென்ற ஹன்ஷித், தோஷியை பார்த்தான். சாரளத்தின் வழியே வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் பெண்.
கதவை பூட்டிவிட்டு, அவளுக்கு அருகே சென்றவன், அவள் வயிற்றில் கையை கோர்த்து, அவளை நன்றாக ஒட்டி நின்று, அவள் கழுத்தில் தன் தாடையை வைத்தவன், “என்னாச்சு என் பொண்டாட்டிக்கு?” என வினவினான். பெண்ணிடம் பதில் இல்லை; துள்ளி விலகவும் இல்லை.
தன்னை நோக்கி அவளை திருப்பியவன், அவளது முகத்தை கைகளில் ஏந்திக் கொண்டான்.
லேசாக விழிகள் கலங்கி, தவிப்பான முகத்துடன் தன்னை ஏறிட்டவளை கண்டவன், “ம்ப்ச்… என்னாச்சு டா?” என வினவினான்.
“ஏன் டாக்டர், உங்களுக்கு நான்-வெஜ் பிடிக்காதுன்னு சொல்லலை. எதுக்கு அன்னைக்கு நான் சர்ச்ல பிரியாணி குடுக்கும் போது சாப்டீங்க?”
“தெரியலை, எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பெண்ணு. ஃபர்ஸ்ட் டைம் எனக்கு ஊட்டிவிடுறா. அதை வேண்டாம்னு சொல்ல மனசு வரலை.”
“போங்க டாக்டர், இனிமே இப்டி பண்ணாதீங்க. உங்களுக்கு பிடிக்கலைன்னா, வாயை தொறந்து சொல்லணும். ஏன்னா, நான் மந்திரவாதி எல்லாம் இல்லை. அதே மாதிரி சினிமா ஹீரோயினும் இல்ல, உங்க முகத்தை பார்த்தே, உங்களுக்கு பிடிக்காததை கண்டு பிடிக்க. புரிஞ்சுதா?” என வினவினாள் தோஷி.
“ஹம்ம்… புரிஞ்சுது.”
“என்ன புரிஞ்சுது உங்களுக்கு?”
“அது, நீ ஹீரோயினும் இல்ல, மந்திரவாதியும் இல்ல.” என்றான் சிரித்துக் கொண்டே.
தன்னிடம் அவன் விளையாடுகிறான் என்று உணர்ந்தவள், “ப்ம்ச்… டாக்டர்” என சிணுங்கினாள் பெண். அவள் கன்னத்தில் அழுந்தி முத்தமிட்டவன், “சரி, வா சாப்டலாம். நீ இன்னும் சாப்டலை இல்ல?” என வினவினான்.
“இல்ல டாக்டர், மாமாவும் பாஸ்கரும் என்னை பாராட்டுனதே எனக்கு மனசு நிறைஞ்சு போச்சு. பசிக்கவே இல்ல டாக்டர்.”
“பரவாயில்லை, மனசு நிறைஞ்சாலும், வயிறும் நிறையணும். நீ இரு…” என்று அறைக்கே உணவை எடுத்து வந்தான்.
“கொடுங்க டாக்டர்” என தோஷி கையை நீட்ட, “இல்ல… நானே ஊட்டுறேன்…” ஹன்ஷித் அவளுக்கு உணவை ஊட்ட வர,
“நான் வெஜ் டாக்டர் இது!” என கண்ணை விரித்தாள் பெண்.
“ஆங்.. சாப்ட தான் மாட்டேன். பட் தொட கூட மாட்டேன்னு சொல்லவே இல்லை. என் பொண்டாட்டிகாக இதை கூட செய்ய மாட்டேனா?” என அவனை பாசமாக பார்த்து கூறிய ஹன்ஷித்தை விழியகற்றாமல் பார்த்தவள், உணவை உண்டாள்.
ஹன்ஷித் தட்டை கழுவி வைத்து விட்டு வர, அவனை பின்னிருந்து இருகைகள் அணைத்துக் கொள்ள, அவனுக்கு புன்னகை ஜனித்தது. “டாக்டர், வர வர நீங்க ரொம்ப என்னை இம்ப்ரெஸ் பண்றீங்க. நான் நல்லா பண்றனோ இல்லையோ, நீங்க நல்லா பண்றீங்க…” என அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே வெளியே எதோ சத்தம் கேட்க, இருவரும் விரைந்து வெளியே வந்தனர். சந்திரகாந்த் தான் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார்.