சந்திரகாந்த் வாந்தி எடுப்பதைப் பார்த்து பதறிய தோஷியும் ஹன்ஷித்தும் அவர் அருகில் விரைந்தனர்.
“ப்பா… என்னாச்சு?” என ஹன்ஷித் தண்ணீரை எடுத்துக் கொண்டு செல்ல, தோஷி, அவரது தலையை பிடித்துக் கொண்டாள்.
சந்திரகாந்த் வாந்தி எடுத்து முடித்ததும், அவருக்கு நீரை புகட்டி அருகில் உள்ள நீள்விருக்கையில் அமர வைத்தனர்.
“என்ன பண்ணுதுப்பா?” என ஹன்ஷித் ஒரு மருத்துவராக அவரை சோதிக்க, தோஷி கண்கள் கலங்க அவர் அருகில் நின்றிருந்தாள்.
“ஒன்னும் இல்லைபா, சாப்பிட்டது ஒத்துக்கலை. அவ்ளோதான்.” என அவர் கூற, அவருக்கு கீழே மண்டியிட்டு அமர்ந்த தோஷியின் கண்களில் நீர் திரையிட்டது.
“சாரி மாமா, நான் சமைச்சதை சாப்டதால தான் உங்களுக்கு இப்டி ஆகிடுச்சு!” என அவள் வருத்தம் தொனித்த குரலில் கூற,
“எனக்கு ஒன்னும் இல்லை மருமகளே! நான் நல்லா ஆரோக்கியமா தான் இருக்கேன். இது ஸ்ட்ராங்கான பாடி டா. அவ்ளோ சீக்கிரம் எதுவும் ஆகாது எனக்கு!” என தோஷியின் தலையை வாஞ்சையாக தடவினார்.
“இல்லை மாமா, இனிமே நான் சமைக்க மாட்டேன்.” என தோஷி எதோ கூற வர, அதற்குள் ஹன்ஷித் தன் அறையில் இருந்து மருத்துவ உபகரணங்களை எடுத்து வந்துவிட்டிருந்தான். அவன் வந்ததும், தோஷி எழுந்து நிற்க, ஒரு நிமிடம் அவரை பரிசோதித்தவன், “ஃபுட் பாய்சன். அதனால் தான் வாமிட் பண்ணியிருக்கீங்க அப்பா” என்று அவருக்கு ஒரு ஊசியை செலுத்தியவன், சில மாத்திரைகளையும் விழுங்கச் செய்தான்.
ஏனோ தவறு செய்த குழந்தையை போல, ஹன்ஷித்தின் அருகில் நின்றிருந்த தோஷி, அவரையே விழி எடுக்காமல் பார்த்தாள். லேசாக புன்னகைத்த சந்திரகாந்த், “இங்க வாடா!” என அவளை அருகில் அமர்த்தியவர்,
“எனக்கு ஒன்னும் இல்லை டா. சாப்பாடு தான் ஒத்துக்கலை. இப்ப பாரு, மாத்திரை போட்டதும், நல்லாகிட்டேன். இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை டா. இதுக்காக இனிமே சமைக்க மாட்டேன்னு எல்லாம் சொல்ல கூடாது. நீ சமைச்ச அந்த கறிக்குழம்பு அவ்ளோ சூப்பரா இருந்துச்சு…” என்றார்.
“ஐயோ மாமா, அந்த குழப்புல தான் காலைல மிச்சமான சட்னியை ஊத்துனேன்.” என்றவள், நாக்கை கடித்துக் கொண்டு நிமிர, சந்திரகாந்த் வாய்விட்டு சிரிக்க, ஹன்ஷித் அவளை முறைத்தான்.
“மாமா, அவரு என்னை முறைக்குறாரு!” சந்திரகாந்த்திடம் முகத்தை சுருக்கி முறையிட்டாள் பெண்.
“டேய் ராஸ்கல், என் மருமகளை ஏன் முறைக்குற நீ?” சிரிப்புடன் ஹன்ஷித்தை அதட்டினார் அவர்.
“பின்ன என்ன செய்றது பா. மீதமான சட்னியை ஊத்துனதால தான் ஃபுட் பாய்சனாகிருக்கு. அதை கீழ ஊத்தாம, ஏன் டி குழம்புல ஊத்துன?”
“ம்ப்ச்… சாப்பாட்டை யாரும் வேஸ்ட் பண்ணுவாங்களா? அவ்ளோ சட்னி வேஸ்ட்டா கீழ ஊத்த மனசு வரலை. அதுவும் குழம்பு தண்ணியா வேற இருந்துச்சு. இதை ஊத்துனதும் திக்கா மாறிடுமேன்னு ஊத்துனேன்.” முந்திரிக் கொட்டை போல முந்திக் கொண்டு பேசியவளின், கழுத்தை தன் கைகளால் வளைத்து, அவளது தலையில் செல்லமாக குட்டியவன், “இனிமே எது மீதம் இருந்தாலும், அதை யூஸ் பண்ண கூடாது. அது நம்ம பாடியால ஏத்துக்க முடியாது. இதான் உனக்கு லாஸ்ட்.” என அவளை ஹன்ஷித் விடுவிக்க,
“மாமா, உங்க முன்னாடியே இவரு என்னை அடிக்குறாரு பாருங்க.” தோஷி புகாரளிக்க, ஹன்ஷித்தின் தோளில் வலிக்காதவாறு அடித்த சந்திரகாந்த், “என் மருமக மேல இனிமே கையை வச்ச!” என போலியாக மிரட்டியவரை பார்த்து இருவரும் வாய்விட்டு சிரிக்க ஆரம்பிக்க, சந்திரகாந்த்தும் அவர்களுடன் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தார்.
காலில் அணிந்த செருப்பை அகற்ற முடியாது தடுமாறிய குந்தவி, சுவரின் மீது கையை வைத்து செருப்பை கழட்டிக் கொண்டு இருந்தவர், அவர்கள் உரையாடல் முழுவதும் கேட்டுவிட்டிருந்தார். இதுவரைக்கும் தான் கண்ணும் கருத்துமாக கவனித்த தன் கணவரை ஒரே நாளில் இப்படி உடல்நிலை சரியில்லாதவராக மாற்றிவிட்டாளே என்ற ஆதங்கம் முகம் முழுக்க பரவி, அவரை சினம் கொள்ள செய்தது.
விறுவிறுவென உள்ளே நுழைந்த குந்தவியின் கண்கள், முதலில் ஆராய்ந்தது சந்திரகாந்த்தை தான். அவரை தலை முதல் கால் வரை ஆராந்தவர், பெரிதாக ஒன்றும் இல்லை என மூச்சை இழுத்து விட்டார். இருந்தும் காலையில் பார்த்தததற்கு, இப்போது மிகவும் சோர்ந்து காணப்பட்டார் சந்திரகாந்த். தோஷியின் புறம் திரும்பிய குந்தவி, அவளை முறைத்து விட்டு, “மரகதம்!” என உரக்க அழைத்தார்.
“சொல்லுங்க மா…” என மரகதம் வெளியே வர,
“நான் உன்னை தானே சமைக்க சொன்னேன். நீ ஏன் வேண்டாத வேலை பார்த்து இருக்க? உனக்கு சமைக்க இஷ்டம் இல்லைன்னா, இனிமே நீ வேலைக்கு வர வேண்டாம். வீடலயே இருந்துக்க!” கோபம் கொப்பளிக்க கூறியவரை பார்த்து மரகதம் செய்வதறியாது கையை பிசைந்து கொண்டிருந்தார்.
“அத்த, மரகதம் அக்கா மேல எந்த தப்பும் இல்ல. அவங்க சமைக்க வேண்டாம்னு தான் சொன்னாங்க. நான் தான் கேட்காம, சமைச்சேன். திட்றதா இருந்தா, என்னை திட்டுங்க. அவங்க பாவம்” என தோஷி ஒரெட்டு முன்னே வர, ஹன்ஷித் தான் என்ன செய்வது, யாருக்கு ஆதரவாக பேசுவது என தெரியாமல் நின்று விட்டான்.
“உன்னோட புருஷனை மட்டும் நீ கவனிச்சா போதும். என் புருஷனை கவனிக்க தேவையில்லை. என் உடம்புல தெம்பு இருக்க வரைக்கும் அவரை நான் பார்த்துக்குறேன். இன்னும் நான் சாகலை!” வார்த்தைகள் என்னும் கூறிய ஆயுதத்தால் அவளை தாக்கிய குந்தவி, சந்திரகாந்த்தை அழைத்து கொண்டு அறைக்குள் சென்றுவிட்டார்.
அவர் பேசியதில் இரண்டு நிமிடங்கள் சமைந்து விட்டாள் தோஷி. விழிகளில் நீர திரையிட, அறைக்குள் சென்று படுக்கையில் விழுந்து விட்டாள். குந்தவி பேசியதே காதில் ஒலிக்க, எதோ தவறு செய்து விட்டது போல குற்ற உணர்வு அவளை ஆட்கொள்ள, தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள் பெண். நடந்த அனைத்தையும் வேடிக்கை பார்த்த ஹன்ஷித், நெற்றியை அழுந்தத் தேய்த்து விட்டு, குந்தவியை பிறகு சமாதானம் செய்து கொள்ளலாம் என நினைத்து, தனது அறைக்கு சென்றான். தலையணையில் முகத்தை புதைத்து தேம்பி அழுதுக் கொண்டிருந்தவளை பார்த்த ஹன்ஷித்திற்கு உள்ளே எதோ ஒன்று உடைவது போல இருந்தது.
அவள் அருகில் சென்றவன், அவளது தோளை தொட்டு, “தோஷி, எழுந்திரி டி…” என அவளை எழுப்ப முயல, அவள் எழவே இல்லை.
“பச்… அழாத டி. மனசு கஷ்டமா இருக்கு!” என குரல் கரகரக்க கூறியவனை பெண் உணர்ந்தாலும் எழவே இல்லை.
“தோஷி, இப்ப எழுந்துக்க போறீயா? இல்லையா?” என அவளை அதட்டியவன், அவளை வலுக்கட்டாயமாக எழுந்து அமரச் செய்தான். விழிகளில் நீர் நிற்காமல் வழிந்தது பெண்ணுக்கு.
அவள் கன்னத்தை அழுந்த துடைத்தவன், “தோஷி, இங்க பாரு என்னை” என அவளது முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தியவன்,
“யாரு உன்னை திட்டுனது? என் அம்மா தானே டி? நான் தான் உன்கிட்ட முன்னாடியே சொல்லிருக்கேன்ல. என் அம்மா மட்டும் எங்க வீட்ல கொஞ்சம் கோபக்காரங்க, அட்ஜெஸ்ட் பண்ணிக்கன்னு. அம்மா, ரொம்ப நல்லவங்க டி. எதுவா இருந்தாலும் முகத்துக்கு நேரா சொல்லிடுவாங்க. மனசுல எதுவும் வச்சுக்க மாட்டாங்க. அவங்களுக்காக நான் சாரி கேக்குறேன். அம்மாக்கு அப்பான்னா ரொம்ப பிடிக்கும். அவருக்கு ஒன்னுன்னா, தாங்க மாட்டாங்க. நீ வேற என்ன பண்ணியிருந்தாலும், இவ்ளோ கோபமா பேசிருக்க மாட்டாங்க. அப்பா விஷயம்ன்றதால, இப்டி பிகேவ் பண்ணிட்டாங்க!” என்று அவளை சமாதானம் செய்ய விழைந்தான் ஆடவன். அவன் கூறியவற்றை காதில் வாங்கினாலும், அழுகையை அவள் நிறுத்தவில்லை.
ஹன்ஷித்தின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள், எம்பி அவனை இறுக்கி கழுத்தில் முகத்தை புதைத்து தேம்பிக் கொண்டே, “சாரி டாக்டர், நான் வேணும்னு பண்ணலை. அத்தை கோபப்பட்டது நியாயம் தான்.” என கூறியவளின் பதிலில் அவனது இதழ்கள் லேசாக விரிந்தது. அவளது தலையை பிரிவாக ஹன்ஷித் தடவ, சில நொடிகளில் அவளது அழுகை நின்றது. இருந்தும் தேம்பிக் கொண்டே இருந்தாள்.
“ஏன் குந்தவி, அந்த பொண்ணு கிட்ட இவ்ளோ கோபமா பேசுன. அவ ஆசையா எனக்கு சமைச்சு கொடுத்தா!” என சந்திரகாந்த் எதோ கூற வரும் முன், “போதும் நிறுத்துங்க. அவளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு என்கிட்ட வராதீங்க!” என்ற குந்தவி, கோபத்துடன் சமையலறைக்குள் நுழைந்தார்.
சென்றவர், சில பல நிமிடங்களில் கையில் ஒரு குவளையுடன் சந்திரகாந்த்திடம் வந்து, “இந்தாங்க, இந்த கஷாயத்தை குடிங்க. சாப்ட்டது செரிச்சுடும்.” என நீட்ட, சந்திரகாந்த் முகத்தை திருப்பிக் கொண்டார்.
“ம்ப்ச்… சரி. சரி, நான் பேசுனது தப்பு தான். பட், என் புருஷனுக்கு ஒன்னுன்னா, என்னால சும்மா இருக்க முடியாது. காலைல நான் கிளம்பும் போது ஜம்முன்னு இருந்த நீங்க, வரும் போது வாடிப் போன இலை மாதிரி இருந்தீங்களா, அதான் எனக்கு கோபம் வந்துடுச்சு. மத்தபடி, அவளை நான் திட்டணும்னு திட்டலை” தன்னிலை விளக்கம் கொடுத்த மனைவியின் கையை தன் கைகளுக்குள் அடக்கிக் கொண்டவர், “குந்தவி, எல்லாரும் எல்லா விஷயத்திலும் பெர்ஃபெக்டா இருக்குறது இல்லைமா. அந்த பொண்ணு அப்பா, அம்மா இல்லாம வளர்ந்த பொண்ணு டா. எங்க எப்டி எது பண்ணணும், பண்ண கூடாதுன்னு, நம்ம தான் சொல்லித் தரணும். நமக்கு பெண் குழந்தை இல்லைன்னு, எத்தனை நாள் நீ வருத்தப்பட்டு இருக்க. வரம்போற மருமகளை மகள் மாதிரி பார்த்துக்கணும்னு எவ்ளோ ஆசை பட்ட. அந்த குந்தவி எங்க? என்னோட பொண்டாட்டிக்கு யாரையும் இந்த அளவுக்கு காயப்படுத்த தெரியாதே! அவ எல்லார்கிட்டயும் அன்பா நடந்து தான் நான் பார்த்திருக்கேன். அவ எங்கன்னு தேடுறேன் இன்னைக்கு” சூழ்நிலையை, தோஷியின் மீது தவறு இல்லை என்பதை சந்திரகாந்த் எடுத்துக் கூற முனைய, குந்தவிக்கு எதோ புரிவது போல இருந்தது. தான் அதிகப்படியாக பேசிவிட்டோம் என்று மனதின் ஓரத்தில் கேட்ட குரல் நடு மூளையில் வந்து ஜம்பமாக அமர்ந்து கொண்டு, அவர் செய்த தவறை சுட்டிக் காட்ட விழைய, தலையை சிலுப்பிய குந்தவி, “இல்லைங்க…” என எதோ மறுத்துப் பேச வர, அவரை தடுத்தார் சந்திரகாந்த்.
“குந்தவி, எப்போதுல இருந்து நீ ஈகோ பார்க்க ஆரம்பிச்ச? அவ நம்ம வீட்டு மருமக. நம்ம குலம் அவளால தான் தழைக்கப் போகுது. எனக்குத் தெரியும், நீ ஹன்ஷித்க்கு பொண்ணு பார்த்து, ஆசை ஆசையாக கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைச்ச. ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலை, அவன் தோஷியை விரும்பிட்டான். நீயா பார்த்து தேடியிருந்தா கூட, தோஷி மாதிரி ஒரு பொண்ணை நீ கண்டுபிடிச்சு இருக்க முடியாது. இதை வெறும் வாய் வார்த்தையா சொல்லலை!
உறவுகளுக்குள்ளயே ஈகோ, வெட்டி பந்தா காட்டிட்டு, குடும்பத்தை பிரிக்குற பெண்களுக்கு மத்தியில, எந்த ஒரு அலட்டலும், திமிறும் இல்லாம என் கிட்ட வந்து பேசுனா. ‘நான் சிந்தாரிப்பேட்டை தான் மாமா. இதுவரைக்கும் நான் வாழ்ந்த வாழ்க்கை வேற, ஆனால் இனிமே வாழப்போற வாழ்க்கை முற்றிலும் வேற. கண்டிப்பா இந்த வாழ்க்கைக்கு என்ன நான் செட் பண்ணிக்க கொஞ்ச நாள் ஆகலாம். அதுவரைக்கும் நான் எதாவது சின்ன சின்ன தப்பு பண்ணா, அதை மன்னிச்சு ஏத்துக்கோங்கன்னு சொன்னா. அத்தை கிட்ட இதையெல்லாம் சொல்லணும்னு ஆசை. அம்மா பாசம், அப்பா பாசம், குடும்பம் எப்டி இருக்கும்னு இதுவரைக்கும் நான் உணர்ந்தது இல்லை. வெறும் படத்துல அப்புறம் தூரமா இருந்து தான் பார்த்து இருக்கேன். இப்ப அதை உங்களோட உங்க குடும்பத்துக்கு வந்து வாழ்ந்து, அதை நிஜமா உணரணும்னு ஆசையா இருக்கு மாமா. என்னை உங்களோட மருமகளா ஏத்துக்குவீங்களான்னு’ கேட்டா. அந்த நிமிஷம் தோணுச்சு. பணம் என்ன பணம், படிப்பு. எல்லாத்தையும் விட குணம் தான் முக்கியம். இதெல்லாம் நான் எதுக்கு உன்கிட்ட சொல்றேன்னா, அந்த பொண்ணு செய்ற எல்லாத்தையும் தப்பா கண்ணோட்டத்துல பார்க்குற குந்தவி. உன் மகன் தேர்ந்தெடுத்த பொண்ணுன்னு அவளை பார்க்காம, நம்ம வீட்டு மருமகன்னு பாரு. ஒரு பொண்ணு மனசை, இன்னொரு பொண்ணுக்கு தான் புரிரியும்னு நினைக்குறேன்!” என குந்தவியின் கைகளில் அழுத்தம் கொடுத்தார் சந்திரகாந்த். அவர் கூறிய அனைத்தையும் மூளை வழியே ஆராயாமல், மனதிடம் ஒப்படைத்து இருந்தார் குந்தவி.
குந்தவியின் குழப்பமான முகத்தை பார்த்த சந்திரகாந்த், “ஒன்னும் அவசரம் இல்லை. பொறுமையா யோசிச்சு முடிவு எடு குந்தவி. இப்ப இந்த வெஷத்தை அதாவது கஷாயத்தை கொடு!” குந்தவியை சகஜமாக்கும் பொருட்டு அவர் கூற, “இருங்க, உங்களுக்கு விஷத்தை வாய்ல ஊத்துறேன்!” என முறைத்துக் கொண்டே குந்தவி அவர் மூக்கைப் பிடித்து வாயில் ஊற்ற, புன்னகையுடன் அதை குடித்து முடித்தார் சந்திரகாந்த்.
“கொலை! கொலை… என் பொண்டாட்டி என்னை கொலை பண்ண பார்க்குறா!” சிரித்துக் கொண்டே அவர் கூற, அவரது மண்டையில் கொட்டினார் குந்தவி.
தன் தாயை சமாதானம் செய்யும் நோக்கோடு குந்தவியின் அறைக்குள் நுழைந்த ஹன்ஷித், அவர்களது சண்டையை பார்த்து புன்னகையுடன் நின்று விட்டான்
அவன் எதிர்பார்த்த ஒன்று தான் இது. குந்தவியும் சந்திரகாந்த்தும் எப்போது சண்டையிட்டாலும், சில நிமிடங்களிலே சமாதானமாகிவிடுவர்.
“ம்கூம்… கல்யாணமான பையனை வச்சுக்கிட்டு, நீங்க ரெண்டு பேரும் இங்க கொஞ்சிட்டு இருக்கீங்க!” என சன்னமான சிரிப்புடன் அவன் உள்ளே நுழைய,
“டிசன்சி இல்லையா டா மகனே உனக்கு? நானும் என் பொண்டாட்டியும் ரொமான்ஸ் பண்றதை கெடுக்குறதுக்காவே வந்துருக்கியா நீ?” பொய் கோபத்துடன் வினவிய சந்திரகாந்த்தை பார்த்து தன் தலையில் அடித்துக் கொண்டார் குந்தவி.
“ஓஹோ… அப்டியா! யூ மீன் நந்தியா டாடி நானு?” என வினவிக் கொண்டே அவர்களை பிரித்து விட்டு இடையில் அமர்ந்தான்.
“என்னை கட்டுனதும் விவஸ்தை கெட்டது. எனக்கு பொறந்ததும் விவஸ்தை கெட்டது.” நகரப் பார்த்த குந்தவியை இழுத்து அமர வைத்து அவரது மடியில் முகத்தை புதைத்துக் கொண்டான் ஹன்ஷித்.
“டேய்! நான் தான் என் பொண்டாட்டி மடியில படுப்பேன்!” என அவனை எழுப்ப முயன்ற சந்திரகாந்த் கையில் அடித்த குந்தவி, ஹன்ஷித் தலையை கோதினார்.
“ம்மா…” என சிணுங்கிய ஹன்ஷித், “சாரிம்மா. அவ வேணும்னு செய்யலை மா. பாவம் அவ. இனிமே எதுனாலும் தன்மையா சொல்லுங்க மா. நான் தப்பு செஞ்சா, என்னைக்காவது நீங்க திட்டியிருக்கீங்களா?” தலையை உயர்த்தி பார்த்து வினவியவனை பார்த்து புன்னகைத்தார் குந்தவி. அதில் அவரிடம் இருந்து பிரிந்து, அவர் முன்னே கால்களை மடக்கி அமர்ந்தவன், அவரது கைகளை பிடித்துக் கொண்டு, “ம்மா… எனக்காக செய்வீங்களா மா? அவளை ஏத்துப்பீங்களாமா?” கண்களில் எதிர்பார்ப்புடன் கேட்டவனைப் பார்த்து தலையை நாலு பக்கமும் ஆட்டினார் குந்தவி.
“ம்மா… இதெல்லாம் போங்காட்டம். ஒத்துக்க முடியாது! ப்ளீஸ் மா” கண்களை சுருக்கி கெஞ்சுபவனைப் பார்த்து சிரித்தவர், “சரி டா.” என்றார்.
தாவி அவரை அணைத்த ஹன்ஷித், அவரது கன்னத்தில் முத்தமிட்டு, “குட் மம்மி!” என்றான் குதூகலத்துடன்.
“போடா! போடா! பொண்டாட்டிக்கு சப்போர்ட் பண்ணிட்டு, அம்மாவை கண்டுக்கலைல நீ?” கோவம் கொண்ட குந்தவின் முகத்தை பிடித்து செல்லம் கொஞ்சியவன்,
“ம்மா… அப்டிலாம் இல்லைம்மா. உனக்கு சப்போர்ட் பண்ண அப்பா இருக்காரு. ஆனால், அவ பாவம் இல்லையாம்மா? அவளுக்கு என்னை விட்டா யாரும் இல்லை, சாரி நம்மளை விட்டா யாரும் இல்லை. தப்பு பண்ணா, சின்ன வயசுல என் காதை பிடிச்சு திருகுவீங்களே! அந்த மாதிரி அவளையும் திட்டுங்க மா, என்ன செய்யணும்னு நீங்களே சொல்லிக் கொடுங்க மா!” என்றான்.
“ம்கூம்… போடா. எனக்கு தெரியும் என் மருமகளை பார்த்துக்க.” நொடித்துக் கொண்டே குந்தவி வெளியேறினார்.
ஷப்பா என ஆசுவாசாக அமர்ந்த ஹன்ஷித், “டாடி, எப்டி உங்க அம்மாவையும் எங்க அம்மாவையும் ஒன்னா சமாளிச்சீங்க? இப்பவே எனக்கு மூச்சு முட்டுது” என்றவனைப் பார்த்து சிரித்தவர், “டேய் மகனே! அதெல்லாம் ஒரு காலம் டா. போக போக ரெண்டு பேரும் ராசியாகிட்டு, என்னை டீல்ல விட்டடாங்க. அதே மாதிரி தான் இங்க நடக்கப் போகுது பாரு” என்றார் அவன் தோள் தட்டி.
நேரம் இரவை எட்ட, வெளியே சென்றிருந்த பாஸ்கர் வந்து விட்டான். குந்தவி எல்லோரையும் சாப்பிட அழைக்க, ஹன்ஷித் தோஷியை எவ்வளவு வற்புறுத்தி அழைத்தும் வரமாட்டேன் என்று மறுத்துவிட்டாள். சரி, தான் உண்டுவிட்டு, அவளுக்கு ஊட்டிவிடலாம் என அவன் நினைத்து உணவருந்த வந்தான்.
அவன் தனியாக வருவதைப் பார்த்த குந்தவி, “என்ன டா, மகாராணியை தனியா வெத்தலை பாக்கு வெச்சு அழைக்கணுமா?” என கேட்டார்.
“இல்லை மா, அவளுக்கு பசிக்கலைன்னு சொல்றா. எவ்ளோ கூப்ட்டாலும் வர மாட்டேன்னு சொல்லிட்டா. நான் அவளை அப்புறமா சாப்ட வைக்கிறேன்ம்மா”
“இரு, நான் போய் அவளை கூட்டிட்டு வர்றேன். நீங்க எல்லாரும் சாப்டுங்க.” என்று அனைவருக்கும் உணவை பறிமாறியவர், தோஷியை அழைக்கச் சென்றார்.
“நீ இல்லாதப்ப இந்த வீட்ல ஒரு சம்பவம் நடந்துச்சு டா.” என்று நடந்ததை சுருக்கமாக ஹன்ஷித் கூற, “அட! இவ்ளோ நடந்து இருக்கா? எனக்கு தெரியலையே!” என்றான் பாஸ்கர்.
“அதுக்கு நீ வீட்ல இருக்கணும் டா. மால் மாலா சுத்தக் கூடாது!” அவனது தலையில் ஹன்ஷித் தட்ட, அசடு வழிந்தான் பாஸ்கர்.
குந்தவி அறைக்குள் நுழைய, அரவம் கேட்டு திரும்பிய தோஷி,
அவரை பார்த்ததும் அடித்து பிடித்து எழுந்தமர்ந்தாள். அழுதழுது முகமெல்லாம் வீங்கி, சிவந்து இருந்தது. அவர் அருகில் சென்றவர், “என்ன டி… உன்னை தனியா வெத்தலை பாக்கு வெச்சு அழைக்கணுமா சாப்ட? வரமாட்டியா நீ.” குரலில் அதட்டல் இருந்தாலும், முகத்தில் மென்மை படர்ந்து இருந்தது அவருக்கு.
“எதோ கோபத்துல ரெண்டு வார்த்தை பேசிட்டேன். அதுக்காக நீ சாப்டாம சத்தியாகிரகம் பண்ணுவியா? நான் இப்டி தான். என் புருஷம் புள்ளைங்க தான் என் உலகமே. அவங்களுக்கு எதாவது ஆச்சுன்னா, நான் சும்மா இருக்க மாட்டேன். அதான் கோபமா பேசிட்டேன். அதெல்லாம் மனசுல வச்சுக்காத. அழுதழுது மூஞ்சியெல்லாம் வீங்கிடுச்சு பாரு. போய் முகத்தை கழுவிட்டு, சாப்ட வாடி. சண்டை போடாத மருமக, மாமியாரை எல்லாம் இந்த உலகத்துல கண்டுபிடிக்க முடியாது! போடி போய் ப்ரெஷாகிட்டு வா!” இறுதியில் வாஞ்சையுடன் முடித்த குரலில், தாவி அவரை அணைத்த தோஷிக்கு அழுகை நிற்காமல் வழிந்தது.
“சாரி அத்த, சாரி… நான் செஞ்சது தப்பு தான். என்னை மன்னிச்சுடுங்க!” என ஜெபம் போல அதையே தோஷி கூற, அவளது முதுகை ஆதரவாக தடவியவர், “சரி, அந்த தப்புக்கு தனியா உன்னை பனிஷ் பண்ணிக்கிறேன். இப்ப போய், மூஞ்சியை கழுவிட்டு வா…” என்று குந்தவி கூற, “உங்க கிட்ட பேசணும் அத்தை…” என்றாள் பெண் அழுகையினூடே.
“பேசலாம் பேசலாம் பொறுமையா. இப்ப வா, சாப்டலாம். எனக்கும் பசிக்குது!” என அவர் கூற, முகத்தை கழுவி விட்டு அவருடன் வந்தாள் பெண்.
ஹன்ஷித் மெல்லிய புன்னகையுடன் இருவரையும் பார்த்தான்.
“அடடே! மாமியாரும் மருமகளும் சமாதான கொடியை பறக்க விட்டுட்டீங்க போல?” கேள்வி கேட்ட பாஸ்கரை முறைத்த குந்தவி, “பேசாம சாப்டு டா!” என்றார்.
தோஷிக்கு உணவை தட்டிலிட்டவர், தானே எடுத்து ஊட்ட ஆரம்பிக்க, கலங்கிய கண்களுடன் அவரை பார்த்த தோஷி, உண்ண ஆரம்பித்தாள். தூக்கிய புருவங்களுடன் ஹன்ஷித் இதை ஆச்சரியமாக பார்க்க, வாயைப் பிளந்த பாஸ்கர்,
“போடா! இன்னைக்கு என் மருமகளுக்கு மட்டும் தான் ஊட்டிவிடுவேன்!” சிரிப்புடன் கூறினார் குந்தவி.
“யார் யாரோ மம்மி என்று ஏமாந்த நெஞ்சம் ஒன்று!” நெஞ்சில் கையை வைத்து பாடியவனை பார்த்து தோஷிக்கு சிரிப்பு வர, சிரித்து விட்டாள்.
“அட! நல்ல பெர்பமன்ஸ் பாஸ்கரு” தன்னைத் தானே பாராட்டிக் கொண்டவன், “மம்மி, எனக்கு ஒரு டவுடு. அண்ணியை இவ்ளோ பாசமா பார்த்துக்குறீங்க இல்ல. அதே மாதிரி என் பொண்டாட்டியையும் பாசமா பார்த்துக்குவீங்களா?” கேள்வி கேட்டவனை தலையில் தட்டியவர், “முளைச்சு மூனு இலை விடலை. பேச்சைப் பாரு” என அவனை அதட்டினார் குந்தவி.
அனைவரும் சாப்பிட்டு முடிய, எல்லாவற்றையும் ஒதுங்க வைத்துக் கொண்டிருந்த குந்தவிக்கு தோஷி உதவி செய்தாள். “அதை இங்க தான் வைக்கணும். இதை இப்டி பண்ணு!” என அதட்டல் தொனியில் அவர் கூற, ஒரு வார்த்தை கூட மறுத்துப் பேசாமல், அவர் கூறியதை செய்துக் கொண்டிருந்தாள் தோஷி.
வேலைகள் அனைத்தும் முடிய, சந்திரகாந்த் அவரது அலுவலக அறைக்குள் நுழைந்து கொண்டார். ஹன்ஷித்தும் பாஸ்கரும் தங்களது அறைக்குள் புகுந்து கொள்ள, தோஷி குந்தவியுடவன் அவர்களது அறைக்குள் நுழைந்தாள்.
கட்டிலில் அமர்ந்த குந்தவி, அவளை அருகில் அமர வைத்து, “சரி, என்ன பேசணும்னு சொல்லு.’ என்றார்.
“அது அத்த… மதியம்” என ஆரம்பித்தவளை இடைமறித்த குந்தவி, “அதை விடு தோஷி. நடந்தது நடந்தது தான். வேற எதாவது பேசு. நீ பண்ணதும் தப்பு, நான் கோபப்பட்டு வார்த்தையை விட்டதும் தப்பு தான்.” என்றவரை புரியாது விழித்தாள் பெண்.
அதில் சிரித்தவர், “என்னடி இந்த குழந்தை மாதிரி முழிச்சு, என்னை ஏமாத்த பார்க்குறீயா? நீ ஒரு கேடின்னு எனக்குத் தெரியும்.” என்றார்.
அசடு வழிந்த தோஷி, “இல்ல அத்த…” என்றாள்.
“ம்ம்… இந்த தோஷி நல்லாவே இல்லை. கல்யாணத்துக்கு முன்னமே தைரியமா, திமிறா பேசுன அந்த தோஷியை தான் எனக்கு பிடிச்சிருக்கு. நான் சொல்றதுக்கு எல்லாம் தலையாட்ற இந்த தோஷி நல்லாவே இல்லை!”
“அது… என் இயல்பே அப்டி தான் அத்தை.”
“அந்த இயல்போடவே இங்கேயும் நீ இருக்கலாம். இது நம்ம வீடு தான், யாருக்காகவும் நடிக்க தேவையில்லை.”
தலையை ஆட்டியவள், “சரிங்க அத்தை!” என்று பதில் இயம்பினாள்.
“என்ன பேசணும் என்கிட்ட?”
“அது… இதுக்கு முன்னாடி, நான்னா, அது நான் மட்டும் தான் அத்தை. ஆனால், இப்ப எனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு. என இஷ்டப்படி, வாழ்ந்துட்டேன் அத்தை. வரை முறை எல்லாம் வச்சு வாழலை நான். அப்படியே அதன் போக்குல வாழ்ந்துட்டேன். இப்பவும் அதே மாதிரி இருக்கது தப்புன்னு எனக்கு புரியுது. அதை கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்க ட்ரை பண்றேன். எனக்கு ஒரு குடும்பம்னா, இப்படிதான் இருக்கும்னு கூட இங்க வந்து தான் அத்தை தெரியும். எது எது எப்படி செய்யணும், யார் கிட்ட எப்டி நடக்கணும்னு எனக்குத் தெரியாது அத்தை. நீங்க சொல்லிக் கொடுத்தா கண்டிப்பா, அதை நான் கத்துப்பேன் அத்த.”
“சரி, எல்லாத்தையும் கத்துத் தரலாம். அதுக்கு எனக்கு நீ லஞ்சம் கொடுக்கணும்”
“என்ன வேணும் அத்த?”
“அழகான பேரனோ, பேத்தியோ பெத்துக் குடு. எத்தனை நாள் தான் அடுத்த வீட்டு பிள்ளைகளை கொஞ்சுறது.”
அவர் கூறியதும் லேசாக சிவந்தவள், “சரிங்க அத்த!” என்று தலையை ஆட்டினாள்.
“ம்ம்…”
“அத்த, எனக்கு அம்மா பாசம் எப்டி இருக்கும்னு தெரியாது. நீங்க இப்ப அவர் கூட பேசும் போது, பாஸ்கரை திட்டும் போது இப்டி தான் அம்மா எல்லாரும் இருப்பாங்களான்னு யோசிச்சு இருக்கேன் அத்தை. இருந்தவரைக்குமே என் அம்மா என்னை கிட்ட சேர்த்தது இல்ல அத்தை. அவங்க பக்கத்துல கூட என்னை அண்ட விட மாட்டாங்க. அப்பா தான் என்னை பார்த்துப்பாரு. உங்களை எல்லாம் பார்த்தா, கொஞ்சம் இல்ல ரொம்பவே பொறாமையா இருக்கு அத்தை. உங்க மடியில கொஞ்ச நேரம் படுத்துக்கவா அத்தை. அம்மா மடியில படுத்தா எப்டி இருக்கும்னு உணரணும்னு ஆசையா இருக்கு.” லேசாக குரல் கமறியது பெண்ணுக்கு.
“கொஞ்சம் இல்ல, நிறைய நேரம் கூட படுக்கலாம்!” என அவளை தன் மடியில் படுக்க வைத்த குந்தவி, “மடியில படுக்க வைச்சேன்றதுக்காக ஓவர் அட்வாண்டேஜ் எல்லாம் நீ எடுத்துக்க கூடாது. நான் ஒரு ஸ்க்ரிட்டான மாமியார் தான்.” குரலில் போலியான கண்டிப்புடன் கூறியவரை பார்த்து விழிகள் கலங்க, லேசாக புன்னகைத்தாள் பெண்.
அவரது மடியில் தலையை புதைத்தவளுக்கு, எனோ இந்த ஒரு நொடி, கடவுளுக்கு மனதார நன்றி நவில வேண்டும் என்று தோன்றியது. ‘என் அம்மாவும் இப்படி பாசமாக இருந்திருந்தால், அப்பா என்னுடன் இருந்திருந்தால் தன்னுடைய வாழ்க்கையும் இவ்வளவு அழகாக இருந்திருக்குமோ? அத்தை மடியில் படுத்ததற்கே இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறதே! என் அம்மாவின் மடியில் படுத்திருந்தால், இதை விட சந்தோஷமாக இருக்குமோ?’ எண்ண அலைகள் அவளை சுழற்ற, லேசாக விசும்பியவளின் தலையை கோதிய குந்தவி, “ஒன்னும் இல்லை மா. தூங்கு.” என்று கூற, சிறிது நேரத்திலே உறங்கி விட்டாள் பெண்.
குந்தவியை காண சென்ற தோஷியை காணவில்லை என அவரது அறைக்குள் நுழைந்தவனுக்கு கண்ட காட்சியில் இதழ்கள் தானாக விரிய, “பார் டா. மாமியாரும் மருமகளும் கொஞ்சுறதை!” கேலியுடன் கூறினான்.
“நானும் என் மருமகளும் கொஞ்சிப்போம், அடிச்சுப்போம். அதுக்கு இடைல நீ வரக்கூடாது டா!” என குந்தவி கூற, “ஓஹோ… அப்டியா?” என வினவியவன், “நான் இவளை ரூம்க்கு தூக்கிட்டு
போறேன் ம்மா…” என அவளை தன் கைகளில் ஏந்தியவன், அறைக்கு சென்று கட்டிலில் கிடத்தினான். லேசாக அழுத தடம் அவளது தெரிந்தாலும், எதோ ஒரு நிம்மதி பரவி இருந்தது அவள் வதனத்தில்.
அவளது நெற்றியில் மென்மையாக முத்தமிட்டவன், “மனுஷனை பாடாப்படுத்துற டி அப்பவும் சரி, இப்பவும் சரி!” என புலம்பியவன், அவளை இறுக அணைத்துக் கொண்டு, நித்திரையை தழுவினான்.