ஹன்ஷித் மற்றும் தோஷி தேனிலவு சென்று வந்து இரண்டொரு திங்கள் கடந்திருந்தது. இந்த இரண்டு மாதங்களில் ஹன்ஷித் தோஷியை உள்ளங்கையில் வைத்து தாங்கினான். காதல் செய்தான், கரைகளே இல்லாத காதல் செய்தான். அவளையும் காதலிக்க வைத்தான், காதலிக்க கற்றுக் கொடுத்தான்.
இரண்டு பேருமே நல்ல புரிதலுடன் வாழ்க்கையை அனுபவித்து வாழத்துவங்கினர். பழைய காயங்கள் பெண் மனதின் ஒரு ஓரத்தில் இருந்தாலும், அதை ஹன்ஷித் தன் காதல் கொண்டு துடைத்தெறிந்து விட்டான். தன்னை மட்டுமே அவளது வாழ்வில் நிரப்பினான். அவளை தன் வாழ்வாக மாற்றிக் கொண்டான் அக்காதலன்.
சில சில செல்ல ஊடல்கள் இருவருக்கிடையில் நிகழ்ந்த போது ஆடவன் விட்டுக் கொடுத்து, காதலை மட்டுமே அவளிடமிருந்து பெற்றுக் கொண்டான். கசப்பான பக்கங்கள் யாவும் மறைந்து காதலே ஆட்சி செய்ய ஆரம்பித்து இருந்தது.
காதல் காயங்களை ஆற்றும் சக்தி உடையது மட்டுமன்று. வாழ்க்கைக்கு புதிய அர்தத்த்தை கொடுத்து, தித்திப்பான பக்கங்களை உருவாக்கி, நம்ம ஆச்சரியத்தில் மூழ்க வைத்திடும் வல்லமை பெற்றது.
ஒரு காதல் என்ன செய்திடும்? உன் வாழ்க்கையை மாற்றி அமைக்கும். உன்னை புதுபித்து புதிய மனிதனாக்கும். அந்த முயற்சியில் தான் ஹன்ஷித் இப்போது வெற்றி பெற்றிருக்கிறான்.
தோஷியும் ஓரளவுக்கு எல்லாரையும் அனுசரித்து செல்ல பழகி இருந்தாள். குந்தவி ஒரு தாயின் அன்பை பல இடங்களில் வெளி காட்டினாலும், தன் மாமியார் என்ற இடத்தை எங்கேயும் இறங்க விடவில்லை. அவளுக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தார். அவ்வ போது அவளது சேட்டைகளால், இருவருக்கும் இடையில் சின்ன வாக்குவாதங்கள் நிகழ்ந்தால், அதில் ஹன்ஷித் தான் பகடைக் காயாக மாறினான். இருபுறமும் அவனது தலை உருட்டப்பட, தாயா? தாரமா? என்று அல்லல் பட்டான். சில நேரங்களில் பாஸ்கர் ஆபத்பாந்தவனாக மாற, சில நேரங்களில் சந்திரகாந்த் மாறினார்.
மொத்தத்தில் தோஷி ஒரு சுத்த இந்திய மருமகளாக உருப்பெற்று விட்டிருந்தாள். வெளியே செல்லும் போது உடைகளில் இருந்து, பேச்சு வரை தன் குடும்பத்தின் தகுதியை குறைக்காத வகையில் தன்னை மாற்றிக் கொண்டாள். மாற்ற முடியாது என தோன்றும் விஷயங்களை, கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. தனக்காக அவர்கள் அந்த விஷயத்தில் மாறட்டும் என்று மனதில் வீம்பு பிடித்தாள்.
பெண் அழகாக பொருந்தி விட்டாள் ஹன்ஷித் குடும்பத்துடன். இத்தனை நாள் வாழாத வாழ்வை எல்லாம் ரசித்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவ்வப் போது ஹன்ஷித்தை காதல் மழையில் நனைய வைத்து திண்டாட்டுவாள்.
அடிக்கடி கடவுளுக்கு மனதில் நன்றி நவில்வாள். ஹன்ஷித்தை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வருவாள். ஒரு சில நேரங்களில் அவனை தவிர்த்து விட்டு, குந்தவியுடன் கோவிலுக்கு சென்று பொழுதை கழிப்பாள்.
பாஸ்கரை அவ்வப் போது சீண்டி, வம்பிழுத்து மகிழ்வாள். பாஸ்கரும் தோஷிக்கு சற்றும் சளைத்தவன் இல்லை என்று வாதாடுவான். இருவருக்கும் இடையில் நல்ல தோழமை உருவாகி இருந்தது. அதை கண்டு கொண்டாலும், அவர்கள் முன்னே வெளிக்காட்டதவன், தனிமையில் புன்னகைத்துக் கொள்வான் ஹன்ஷித்.
“அத்த, இன்னைக்கு உங்க ராசிக்கு சரியில்லைன்னு சொன்னாங்களே! என்னவாம் அத்த?” என வினவிக் கொண்டே கண்களில் வழியும் நீரை பொருட்படுத்தாது வெங்காயத்தை அரிந்து கொண்டிருந்தாள் தோஷி.
“என்னென்னு தெரியலை தோஷி.
சந்திராஷ்டமம்னு சொல்லிருக்காங்க. வாயை அடக்கணும் நான்.” பதில் இயம்பிக் கொண்டே, அடுப்பில் கவனத்தை பதித்து இருந்தார் குந்தவி.
“தோஷி!” வீடே அதிரும் படி அவளை அழைத்தான் ஹன்ஷித்.
“போடி! போ. உன் புருஷன் மைக் செட்டை தொறந்துட்டான். நீ வர்றதுக்கு முன்னாடி அவன் இருக்க இடம் தெரியாது. இப்ப… ம்க்கூம்…” நொடித்துக் கொண்டார் குந்தவி.
“நான் வர்றதுக்கு முன்னாடி வரைக்கும் அவருக்கான சுதந்திரக்தை நீங்க தரலை அத்த. அதான் அமைதியா இருந்திருப்பாரு. இப்ப தான் நான் ஃபுல் ப்ரீடம் கொடுத்துருக்கேனே!”
நாக்கை துருத்தி விட்டு அறைக்கு விரைந்த தோஷியை முறைத்த குந்தவி, “உனக்கு வாய் அதிகமாகிடுச்சு டி.” என்று கண்டித்தார். அதையெல்லாம் கண்டு கொண்டால், அவள் தோஷி அல்லவே?
“என்னங்க? ஏன் இப்படி என் பேரை ஏலம் போடுறீங்க?” வினவிக் கொண்டே அறைக்குள் நுழைந்தாள் தோஷி.
“என்னோட ரெட் ஷர்ட்டை காணோம். அதை போட்டுட்டு தான் கான்ஃபரன்ஸ போனா தான் லக்கியா இருக்கும். அதனால நான் போகலை.” பாவமாக மூஞ்சியை வைத்துக் கொண்டு கூறும் ஹன்ஷித்தை ஏற இறங்க பார்த்தவள்,
“ஓ… அந்த சிகப்பு சொக்காவ தானே கேக்குறீங்க? அதை நான் தான் பத்திரமா இருக்கட்டும்னு கட்டிலுக்கு அடியில ஒளிச்சு வச்சேன்.” குனிந்து கட்டிலுக்கு அடியில் உள்ள சிவப்பு நிற சட்டையை கையில் எடுத்தாள் தோஷி.
அவளை பார்த்து அசடு வழிந்த ஹன்ஷித், “அது… தெரியாமல் அங்க போய்டுச்சு.” என்றான்.
“என்ன பண்றது டாக்டர், இப்பலாம் சொக்காக்கு எல்லாம் கை கால் முளைக்குது. சரி விடுங்க. இதை முதல்ல போடுங்க.” அவனிடம் சட்டையை எறிந்தவள், அவன் பையில் எல்லாம் சரியாக உள்ளதா? என ஆராய்ந்து கொண்டிருந்தாள்.
அந்த சட்டையை தூக்கி கட்டிலின் மீது எறிந்தவன், அவளை பின்னிருந்து அணைத்து, கழுத்தில் முகத்தை புதைத்தான். தோஷிக்கு லேசாக புன்னகை அரும்பியது. “தோஷி… நான் கண்டிப்பா கான்ஃப்ரன்ஸ் போகணுமா டி?” என்றான் குழைவான குரலில்.
அப்போது தான் அவன் குளித்து வந்திருக்க, அவனது கேசத்தில் இருந்து வழிந்த சொட்டு நீர், அவளது கன்னத்தை தொட்டது. அவன் மீதிருந்து வந்த சுகந்ததை ஆழ்ந்து சுவாசித்தவள், அவன் புறம் திரும்பி, அவனது முகத்தை பார்த்தாள்.
தனக்கு காரியம் ஆக வேண்டும் என்று தாயின் முன் நின்று கெஞ்சும் குழந்தையின் பாவம் ஹன்ஷித் முகத்தில். அவனது இரண்டு கன்னத்தையும் கிள்ளி உதட்டில் வைத்துக் கொண்டவள், “ம்ப்ச்… உங்களை பார்த்தாலும் பாவமா தான் இருக்கு டாக்டர். என்ன பண்ணலாம்?” கையை நாடியில் வைத்து யோசித்தாள். அவள் கூற்றிற்கு, “ஆமா டி!” வேகமாக தலையை ஆட்டினான் ஆடவன்.
“ஆனால், இந்த கான்ஃப்ரன்ஸ் ரொம்ப முக்கியம் தானே டாக்டர். சோ, சமத்து பையனா அடம்பிடிக்காம கிளம்புவீங்களாம்.” அவன் தலையை துண்டால் துவட்டியபடி கூறியவளின் கையை வெடுக்கென தட்டி விட்ட ஹன்ஷித், முகத்தை திருப்பிக் கொண்டான்.
அதில் அழையா விருந்தாளியாக புன்னகை ஒன்று பாவை முகத்தை ஆக்கிரமிக்க, “டாக்டர், வெறும் ஒரு வாரம் தானே? போய் இருந்துட்டு கான்ஃப்ரன்ஸ் அட்டென்ட் பண்ணிட்டு வந்துட போறீங்க. அதுக்கு எதுக்கு இந்த அக்கப்போரு?” என வினவினாள்.
“பச்… ஒரு வாரம்னா, ஏழு நாள் டி.
168 மணி நேரம் உன்னை எப்படி நான் பார்க்காம இருப்பேன்? கஷ்டமா இருக்கும் டி.” அவளை இழுத்துக் இறுக்கமாக அணைத்துக் கொண்டான் ஹன்ஷித்.
மெல்லிய புன்னகையுடன் அவனை அணைத்தவள், அவனது வெற்று மார்பில் கன்னத்தை வைத்து, கண்களை மூடிக் கொண்டாள். இந்த ஹன்ஷித் அவளை மேலும் மேலும் பிடித்தம் கொள்ள செய்தான். தானும் பித்தனாகி, அவளையும் பித்தாக்கினான்.
சில நொடிகளில் கண்களை திறந்தவள், எக்கி அவன் கன்னத்தில் முத்தமிட்டு, “டாக்டர், ஏன் 168 மணி நேரம்னு பெருசா சொல்றீங்க? வெறும் 7 நாள் தான். கண்ணை மூடி கண்ணை திறக்குறதுக்குள்ள காணம போய்டும். சோ, என்னோட செல்ல டாக்டர், பட்டு டாக்டர், சமத்து பையனா கிளம்புவீங்களாம்.” என தானே அவனுக்கு சட்டையை அணிவித்து, கிளப்பி விட்டாள்.
அவனது தலையை எக்கி வார கஷ்டப்பட்டவளை இடையோடு அவன் தூக்க, சிரிப்புடன் அவனது தலையை கலைத்து விளையாடியவள், இறுதியாக தலையை அழகாக சீவினாள்.
அவனது பையை வாயிலில் எடுத்து வைத்து விட்டு, “டைமாச்சு டாக்டர், இப்ப சாப்பிட்டு கிளம்புனா தான் கரெக்டா இருக்கும். சோ, வாங்க.” என அவன் கைகளை பிடிக்க, அவளது கைகள் இரண்டையும் தன் கைகளுக்குள் அடக்கியவன், அவள் இதழில் ஆழமாக முத்தமிட்டான். இந்த ஒரு வார பிரிவை ஒரு யுகம் போல எண்ணி ஆழமாக முத்தமிட்டவனின் அன்பில் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டவள், ஆழ்ந்து அனுபவித்தாள். ஏனோ முதல் கூடலுக்கான பின்னர் அவனின் ஒவ்வொரு முத்தமும் அவளின் ஊயிர் வரை சென்று ஊடுருவியது. அவன் விலகப் பார்க்க, தன் கையை அவனிடமிருந்து விலக்கியவள், அவனது செயலை தனதாக்கிக் கொண்டாள். ஆழமாக, அழுத்தமாக, காதலாக, நேசமாக அவனை முத்தமிட்டாள். ஹன்ஷித்தும் கண்களை மூடி அதை ஆழ்ந்து அனுபவித்தான்.
அவனிடமிருந்து விலகியவள், அவனின் கசங்கிய சட்டையை சரிசெய்து கொண்டே, “டாக்டர், நான் உங்களை ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணவே மாட்டேன். இங்கேயே டேரா போடாம, கிளம்புற வழியைப் பாருங்க.” என அவனது உடைமைகளை தூக்க முடியாமல் இழுத்துக் கொண்டே பெண் வெளியேற, அவளிடமிருந்து அதை பெற்றுக் கொண்டவன், அவளது கையை பிடித்துக் கொண்டே, வீட்டின் கூடடத்திற்கு வந்தான்.
“அத்த, உங்க மகனை ஒரு வழியா கிளப்பி கூட்டிட்டு வந்துட்டேன். சமைச்சுட்டீங்களா?” தோஷி குரல் கொடுக்க, “ஆச்சு டி…” என்றபடி, தான் சமைத்தவற்றை குந்தவி உணவு மேஜை மீது அடுக்கினார்.
ஹன்ஷித் அமர, குந்தவி உணவை பறிமாறினார். சந்திரகாந்த்தும் பாஸ்கரும் இடையில் வந்து இணைந்து கொண்டனர்.
“என்ன ப்ரோ, யூ எஸ் போற போல? என்ஜாய் ப்ரோ. அங்க பிகர் எல்லாம் நல்லா கலர் கலரா இருப்பாங்களாமே!” என அவன் பேசிய ரகசியம் ஹன்ஷித்தை தவிர அனைவரது காதிலுமே விழுந்தது.
குந்தவி அவனது தலையில் நறுக்கென்று ஒரு கொட்டு கொட்ட, அடுத்ததாக தோஷியும் கொட்டினாள்.
“அத்த, என் கொழுந்தனாரை ஏன் திட்டுறீங்க?” பாசமாக பேசி, பாஸ்கர் தட்டில் உணவை குனிந்து வைத்த தோஷி, “கொழுந்தனாரே! பல உண்மைகளை வெளிய சொல்ல வேண்டி வரும் போலவே!” என கூறினாள்.
“ஹம்ம்… பேச்சுல இருக்க பணிவு செயல்ல இல்லியே கொழுந்தனாரே!”
“அண்ணியின் கட்டளையே என் சாசனம். இப்ப என்ன பண்ணணும்னு சொல்லுங்க அண்ணி!”
“ஒன்னும் பண்ண வேணாம். வாயை மூடிகிட்டு சாப்டுங்க கொழுந்தனாரே!” என அவள் கூற, மறுப்பேதும் இல்லை பாஸ்கரிடம்.
ஹன்ஷித் சாப்பிட்டு முடிய, வெளியே அவனுக்காக மகிழுந்து காத்திருந்தது. குந்தவியும் சந்திரகாந்த்தும் அறிவுரைகளை வழங்க, அதை சிறு தலையசைப்புடன் கேட்டுக் கொண்டவன், அனைவரிடமும் இருந்து விடைபெற்றான்.
இதற்கு முன்பு ஹன்ஷித் பலமுறை இதே போல மருத்துவம் மற்றும் வேலை சம்பந்தமாக வெளியூருக்கு பயணப்பட்டு இருப்பதால், பெற்றவர்களுக்கு அது பெரிதாக தோன்றவில்லை. ஆனால், திருமணத்திற்கு பின்னான முதல் பிரிவு அந்த காதல் ஜோடியை வாட்டி வதைக்க காத்திருந்தது. என்ன தான் அவனை கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்திருந்தாலும், பெண்ணையும் பசலை நோய் வதைத்து என்னமோ உண்மை.
அவனில்லாத வெறுமையை விரட்ட, குந்தவியுடனே சுற்றினாள் தோஷி. அவருடன் சமையலில் ஈடுபட்டாள். தொலைக்காட்சியில் கவனத்தை வைத்தாள்.
இரவு கவிழ துவங்க, ஹன்ஷிதிடமிருந்து அழைப்பு வந்தது குந்தவிக்கு. நன்றாக ஊருக்கு சென்று விட்டதாக அவரிடம் தெரிவித்தவன், மேலும் இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு, அழைப்பை துண்டித்து விட்டான். தன்னிடம் அவன் பேசுவான் என்றெண்ணி காத்திருந்த சந்தோஷிக்கு ஏமாற்றமே மிஞ்ச, அதை முகத்தில் பிரதிபலிக்காதவள், பெயருக்கு எதையோ உண்டு விட்டு, அறைக்குள் நுழைந்தாள்.
ஹன்ஷித் இல்லாத வெறுமையான அறையே அவளை வரவேற்றது. சில நேரங்களில் காதலாக, சில நேரங்களில் சீண்டலாக, சில நேரங்களில் அறிவுரையாக தன்னை நிரப்பும் தன்னவன் இங்கில்லை என்று தோன்ற, லேசாக கண்கள் கலங்கி வெளிவர துடித்தது பெண்ணுக்கு. இமையை சிலுப்பி அதை உள்ளிழுத்துக் கொண்டவள், அவன் முதல் மாத திருமண நாளிற்கு பரிசளித்த ஆளுயுர பொம்மையை எடுத்து அதை அணைத்துக் கொண்டு உறங்க முற்பட்டாள்.
சென்னையின் வெம்மையில் வெந்து தனிந்தவனை நியூயார்க்கின் குளுமை உடலை குளிர்வித்தாலும், உள்ளத்தை குளிர்விக்கவில்லை. உள்ளம் வெம்மையை சுமக்க, போர்வையை போர்த்தி கண்களை மூடியவன், பல தடவை தோஷியின் எண்ணை எழுதி எழுதி அழித்து, அழைப்பை விடுக்காமல் கோபத்தில் தூங்கி போனான்.
அவனில்லாது முதல் நாள் எனோ தானோவென்று கடக்க, அடுத்த நாளும் அவ்வாறே கடந்தது.
மூன்றாவது நாள், சாப்பிட்டு முடித்து அறைக்குள் நுழைந்த தோஷி லேசாக தடுமாறி, சுவற்றில் கையை வைத்தாள்.
“என்ன இது? எதையும் தாங்கும் பாடி ஆச்சே நம்மது. என்னாச்சு இன்னைக்கு ஜெர்க்காகுது?” என நினைத்து தன்னை நிதானப்படுத்தியவள், தனது அலைபேசியை எடுத்து உபயோகிக்க ஆரம்பித்தாள்.
‘அட! சுமங்கலி நேத்து பார்க்கலை இல்ல?’ என தனக்கு தானே பேசிக் கொண்டு அலைபேசியில் நாடகத்தை ஓட விட்டாள். திரையில் ஒரு பெண் மயங்கி விழுவதும், அடுத்து மருத்துவர் அவளை சோத்தித்து அவள் தாய்மை அடைந்து இருப்பதாகவும் காட்சிகள் அமைந்திருக்க, தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து சட்டென எழுந்தாள் பெண்.
“அடடே! இப்படி ஒன்னு வேற இருக்கோ?” என தன்னையே கேள்வி கேட்டவள், “இதை எப்டி செக் பண்றது?” என யோசித்து ஹன்ஷித்தின் உடைமைகளை ஆராய்ந்தாள்.
‘என்னய்யா இது? ஒரு டாக்டர் வீட்ல ப்ரக்னென்சி கிட் இல்லையா? ஐயஹோ! அவமானம்.’ என அவனது உடைகள் அனைத்தையும் கலைத்து போட்டாள்.
‘யோவ் டாக்டரே! ஒரு ப்ரெக்னன்சி கிட் வச்சுக்க மாட்டீயா?’ அவனை நிந்தித்துக் கொண்டே அவனது பையை எடுத்தவள், ‘ஷப்பா! கிடைச்சுடுச்சு. சாரி டாக்டர்.’ மானசீகமாக அவனிடம் மன்னிப்பு வேண்டியவள், அதை எடுத்துக் கொண்டு பரிசோதனை செய்தாள்.
அந்த கருவி இரண்டு கோடுகளை காட்டி நேர்மறையான முடிவை தர, லேசாக சிரித்தவள், தன் வயிற்றை கைகளால் தடவினாள். கண்கள் லேசாக கலங்கியது பெண்ணுக்கு. ‘டாக்டரே! சரியான நேரத்துல பக்கத்துல இல்லாம போய்ட்டீங்களே!’ என நினைத்தவளுக்கு இப்போதே அவனை காண வேண்டும் என்று தோன்ற, தனது அலைபேசியை எடுத்து அவனுக்கு புலனத்தில்(வாட்சப்) காணொலி அழைப்பை விடுத்தாள்.
கையில் அலைபேசியை வைத்துக் கொண்டு, தங்கள் இருவரது புகைப்படத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தான் ஹன்ஷித். அவள் அழைப்பு வந்த நொடியில் ஏற்றான் ஆடவன்.
“டாக்டர்!” என அழைத்தவளுக்கு குரலே எழவில்லை. லேசாக குரல் கமறியது. ஹன்ஷித் தான் அவளை விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். ஏனோ இந்த இரண்டு நாட்கள் பிரிவே அவனை கொன்று தின்றிருந்தது.
தலையெல்லாம் கலைந்து, கண்கள் சிவக்க, அதற்கு மாறாக புன்னகையுடன் தன் முன்னே அமர்ந்திருக்கும் மனைவியை விழிகளில் நிரப்பிக் கொண்டான் அக்காதலன்.
அவனைக் கண்டதும் பொங்கும் விழி நீரை அழுந்த துடைத்துக் கொண்டவள், “டாக்டர்ர்ர்… உங்களை நான் ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன். எப்ப வரீங்க?” என வினவியளைப் பார்த்து புருவத்தை உயர்த்தினான் ஹன்ஷித்.
“யாரோ என்னை மிஸ் பண்ண மாட்டேன்னு சொன்னாங்க?”
“ம்ப்ச்... அது அப்போ மிஸ் பண்ணலை. பட் இப்போ பண்றேன்.”
“ஓஹோ… நான் வந்தா, என்ன தருவ எனக்கு?”
“அது… ஒரு நூறு முத்தம் தரேன் டாக்டர்.” யோசிக்காமல் கூறியவளைப் பார்த்து சட்டென சிரித்து விட்டான் ஆடவன்.
“எனக்கு நூறு எல்லாம் பத்தாதே!”
“ம்ப்ச்… டாக்டர், ரொம்ப ஓவரா பண்ணாதீங்க. ஏதோ எப்ப பார்த்தாலும் உரசிக் கிட்டு, சீண்டீட்டு இருந்த மனுஷன் கூட இல்லைன்னு கூப்பிட்டேன். ஆனால், நீங்க ரொம்ப ஓவரா சீன் போட்றீங்க. இப்ப உங்களால வர முடியுமா முடியாதா?”
அவளது கேள்விக்கு தலையை இடம் வலமாக ஆட்டியவன், “அதான் அந்த பொம்மை பக்கதுல இருக்கே. என்னை நினைச்சு அதை கட்டிக்கோ.” உதட்டை வளைத்து சிரிப்புடன் கூறினான் ஹன்ஷித்.
அவனது விழிகளை நேராக பார்த்தவள், “டாக்டர், இதோ இந்த பொம்மை, இங்க இருக்க கட்டில், பீரோ, உங்க ட்ரெஸ் எல்லாம் என் கூடவே தான் இருக்கு. ஆனால் பாருங்க, இதுக்கு எல்லாம் ஹன்ஷித் மாதிரி என்னை அன்பா ஒரு பார்வை பார்க்க தெரியாது. நான் சாப்டேன்னு தெரிஞ்சாலும், சாப்டியான்னு உங்களை மாதிரி கேட்கத் தெரியாது. உங்களை மாதிரி என்னை இறுக்கமா கட்டிக்க தெரியாதுல்ல?” கண நேரத்தில் அவள் விழிகள் என்ன கண்டான் ஹன்ஷித். காதலா? ஏக்கமா? நேசமா? என்ன அது என்று அவனால் பிரித்தரிய முடியவில்லை. தலையை தழைத்துக் கொண்டாள் பெண். இப்பொழுதே அவனிடம் இதை கூறி விட வேண்டும் என்று ஆர்வம் இருந்தாலும், அதை கடினப்பட்டு அடக்கினாள் பெண்.
“ஹேய் தோஷி… நிமிர்ந்து என்னை பாரு டி.” அவன் பேச்சிற்கு தலையை நிமிர்த்தவே இல்லை பெண்.
“தோஷி, என்னடி? ஏன் இப்படி பேசுற நீ? என்கிட்ட எதுவும் சொல்லணுமா?” ஹன்ஷித் வினவியதற்கு, குனிந்து கொண்டே ஆம் என பாவை தலையை ஆட்ட, “என்ன சொல்லணும் தோஷி மா? எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு?” கனிவாய் அக்கறையாய் வெளிப்பட்ட அவன் குரலில் நிமிர்ந்து அவனை தோஷி பார்த்த நொடி, ஹன்ஷித் அலைபேசி உயிரை விட்டிருந்தது.
‘சே! இதுவேற சார்ஜ் இல்லாம ஆஃபாகிடுச்சு!’ என அதை தூர எறிந்தவன், கண்ணை மூடி இருக்கையில் சாய்ந்தான். மூடிய இமைகளுக்குள், தோஷியின் அந்த கண நேர பார்வை வந்து இம்சிக்க, சில நொடிகள் அமைதியாக இருந்தவன், எழுந்து சென்று அறையில் இருந்த அலைபேசி மூலம் யாருக்கோ அழைப்பு விடுத்து, அவசரமாக தான் ஊருக்கு செல்ல வேண்டும் என்று கூறி, ஒரு முறைக்கு இரு முறை மன்னிப்பை வேண்டிவிட்டு, அடுத்த விமானத்திலே இந்தியாவிற்கு பறந்தான்.
அன்றைய இரவும் அந்த பொம்மையை கட்டிக் கொண்டு, அதனுடன் பேசிக் கொண்டே உறங்கிவிட்டாள் தோஷி.
ஹன்ஷித்திற்கு மறுநாள் காலை சென்னையில் தான் விடிந்தது. அதிகாலையிலே வந்திறங்கிய ஹன்ஷித்தை, “என்ன டா, ஒரு வாரமாகும்னு சொன்ன. போய் நாலு நாள்ல திரும்பிட்ட.” என குந்தவி கேள்வி கேட்க,
“திரீ டேஸ்ல கான்ஃப்ரனஸ் முடிஞ்சுடுச்சும்மா. அதான் உன்னை பார்க்க ஓடி வந்தேன்.” அவர் கன்னத்தில் கிள்ளியபடி கூறினான்.
“ம்க்கூம்… புது பொண்டாட்டியை பார்க்க ஓடி வந்துட்டு, எனக்கு ஐஸ் வைக்கிறான் பாருங்க.” என குந்தவி சந்திரகாந்த்திடம் புகாரளித்தார்.
“என் பையன் என்னை மாதிரி தானே இருப்பான்.” என அவர் பெருமையாக கூற, “பச்… பிள்ளைங்க முன்னாடி என்ன பேசுறீங்க நீங்க?” என முறைப்புடன் நகர்ந்து விட்டார் குந்தவி.
அவர்களது உரையாடலைக் கேட்டுக் கொண்டே சின்ன சிரிப்புடன் தனது அறைக்கு விரைந்தான் ஹன்ஷித்.
அறைக்கதவை தாழ் போடாமல், அந்த பொம்மையுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த தோஷி தான் ஹன்ஷித் கண்ணில் பட்டாள். அவனது சட்டை மற்றும் கால் சராயை எடுத்து அணிந்திருந்தாள் பெண்.
கதவில் கையைக் கட்டிக் கொண்டு, அவளையே விழிகளால் பருகிக் கொண்டு இருந்தவனின் பார்வை தந்த குறுகுறுப்பில் நிமிர்ந்தவள், அவனை அக்கணம் எதிர்பாராது விழிகளை விரித்தாள்.
“டாக்டர்ர்ர்… வந்துட்டீங்களா?” என கட்டிலில் இருந்து குதித்தவள், சில நொடிகள் கழித்து, ‘ஐயோ! பாப்பா இருக்குன்றதை மறந்துட்ட போல தோஷி.’ என தன்னை கடிந்து கொண்டே, ஓடிச் சென்று அவனை அணைத்து மார்பில் முகத்தை புதைத்துக் கொண்டாள்.
‘ஹன்ஷித்… ஐ யம் பாலிங் இன் லவ் வித் யூ.’ என உதட்டை மெதுவாக அசைத்து, அவன் புரியும் படி கூறியவளை இப்போது ஆச்சரியமாக நோக்கினான் ஹன்ஷித்.
“ஹே உப்மா, என்ன டி சொன்ன? சத்தமா சொல்லு. எனக்கு கேட்கலை!” உல்லாசமான குரலில் சந்தோஷத்துடன் ஹன்ஷித் வினவ,
“டாக்டர்ர்ர்… நான் உங்களை காதலிக்கிறேன். ரொம்ப ரொம்ப காதலிக்கிறேன்.” என சத்தமாக கூறியவளை சிரிப்புடன் இறுக்கி அணைத்தவன், “ஏன்டி… இத்தனை நாள் கூட இருக்கும் போது எத்தனை தடவை கெஞ்சி இருப்பேன். அப்ப எல்லாம் சொல்லாம, ஒரு நாலு நாள் நான் ஊருக்குப் போனதும் மேடம்க்கு லவ் வந்துடுச்சோ?” என்றான் கேலிக் குரலில்.
அவனை தள்ளி விட்டவள், “டாக்டர், அதெல்லாம் முன்னாடி இருந்தே பண்றேன். பட் இப்ப தான் சொல்ல தோணுச்சு. இதெல்லாம் அனுபவிக்கணும் டாக்டர், ஆராயக் கூடாது!” என்றாள்.
“அது சரி…” என்று புன்னகை பூத்தவன், பின்னந்தலையை கைகளால் கோதியபடி, “ஆமா! ஊர்ல இருந்து வந்ததும் எதோ தர்றேன்னு சொன்னல்ல. அதை இப்ப கொடு.” என்றான் ஒற்றை காலை எடுத்து கதவை சாத்தியபடி.
“சாரி டாக்டர், அதோட எக்ஸ்ப்ரரி நேத்தோட முடிஞ்சது. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.” என சாவகாசமாக கூறி கட்டிலில் பெண் அமர, “அடிங்க… எக்ஸ்ப்ரரி டேட் வேற?” என கேட்டுக் கொண்டே அவளை தள்ளி, அவள் மீது ஏறிபடுத்தான்.
“ஆமா! யாரை கேட்டு டி என் சட்டையை எடுத்து போட்ட நீ?” என அவன் வினவ,
“என்னடி வந்ததுல இருந்து நாங்க, எங்கன்னு பன்மைல பேசிட்டு இருக்க நீ?” அவளிடமிருந்து பிரிந்து எழுந்து அமர்ந்து கொண்டே புரியாமல் அவளை பார்த்தான் ஹன்ஷித்.
“அட மக்கு பையா! வந்ததுல இருந்து இன்டேரக்டா உன்கிட்ட எத்தனை தடவை சொல்லிட்டேன். இன்னும் புரியலையா?” தலையை சரித்து கைகளை அவனை நோக்கி நீட்டி, இதழில் குறும்பு புன்னகையுடன் அவனை பார்த்தாள் தோஷி.
லேசாக புரிந்தும் புரியாமலும் சிரிப்புடன் அவளை பார்த்தவன், எட்டி அவளது இரு கைகளையும் பிடித்து, “ஹே! என்ன டி சொல்ற?” என்றான்.
“ஹாஹா… புருஷன் பதவில இருந்து அப்பன் பதவிக்கு உங்களை ப்ரமோட் பண்ணிட்டேன் டாக்டர்.”
“ஏய்! சும்மா விளையாட்றீயா டி?”
“டாக்டர்ர்ர்… இந்தாங்க நீங்களே செக் பண்ணுங்க.” அவன் முன் தன் கைகளை நீட்டினாள் தோஷி.
அவள் முகத்தில் தெரிந்த பூரிப்பை கண்டவனுக்கு அடிவயிற்றில் எதோ செய்தது.
புன்னகையுடன் அவனது உணர்வுகளை படித்துக் கொண்டிருந்த தோஷியின் முகத்தை எட்டி பிடித்தவன், முகம் முழுவதும் ஆவேசத்துடனும் ஆசையுடனும் முத்தமிட்டான். கைகள் நடுங்கியது ஆடவனுக்கு. அவளை இழுத்து இறுக அணைத்துக் கொண்டவனின், உடல் நடுங்குவதை உணர்ந்தவள்,
அவனது முதுகை தடவிக் கொண்டே, “இதுக்கே இப்படின்னா, பிள்ளையை பெத்து கைல குடுத்ததும் மயங்கிடுவீங்களா டாக்டர்?” கேலி குரலில் வினவினாள் பெண். ஆனால், அது எல்லாம் அவன் காதில் ஏறவே இல்லை. கண்களை மூடி அந்த கணத்தின் இனிமையை உள்வாங்கினான்.
சில நிமிடங்களில் அவளிடமிருந்து விலகியவன், அவளது முகத்தையே ஊற்றுப் பார்க்க, “ம்க்கூம்… எவ்வளோ நேரம் தான் என் மூஞ்சியை உத்து உத்து பார்ப்பீங்க. ஹம்ம்… போய் இப்ப அத்தை மாமா கிட்ட நீங்க தான் இந்த விஷயத்தை சொல்லணும். எனக்கு கூச்சமா இருக்கு டாக்டர்.” என தோஷி கூற, அவன் அசையவில்லை.
“இப்படி எல்லாம் சொன்னா கேட்க மாட்டீங்க நீங்க…” என அவனை வெளியே இழுத்துச் சென்றவள், “அத்தை, உங்க பையன் எதோ முக்கியமான விஷயத்தை உங்க கிட்ட சொல்லணுமாம். என்னென்னு கேளுங்க.” என கூற,
அவனை பார்த்தவர், “என்ன டா, என்கிட்ட பேச உன் பொண்டாட்டி ரெக்கமண்ட் பண்றா. அப்படி என்ன பேச போற நீ?” என்றவர், தோஷியின் புறம் திரும்பி, “என்ன ட்ரெஸ்டி இது?” என வினவினார்.
அவரைப் பார்த்து தயங்கிய ஹன்ஷித், “ம்மா… நீங்க பாட்டி ஆகப்போறீங்க.” என்றான் இதழில் நகையுடன்.
“டேய்! ரொம்ப சந்தோஷமா இருக்கு டா.” என்று ஆர்பரித்த குந்தவி, சந்திரகாந்த்தையும் பாஸ்கரையும் அழைத்து கூறிவிட்டு, தோஷியின் கைகளை பிடித்தார். அவரது கைகள் லேசாக நடுங்க, ‘அட! அவர் மாதிரியே அத்தைக்கும் கை நடுங்குது. பச், அத்தை மாதிரி அவருக்கு போல. ஓ… அப்ப என் புள்ளை என்னை மாதிரி தானே வருவான். ஹாஹா… ஊர் வம்பை எல்லாம் இழுத்துட்டு வரப்போறான். பாவம் அத்தை, இப்பவே சந்தோஷப்பட்டுகிட்டும். அப்புறம் வருத்தப்படுவாங்க.’ என மனதில் குதூகலித்தாள் பெண்.
பாஸ்கர் ஹன்ஷித்தை அணைத்து மகிழ்ச்சியை தெரியபடுத்த, சந்திரகாந்த் கண்கலங்கினார். “ப்பா…” என ஹன்ஷித் அவரை அணைத்தான்.
“சந்தோஷமான விஷயத்தை ஸ்விட் செஞ்சு கொண்டாடணும்.” என குந்தவி கேசரியை செய்து அனைவருக்கும் கொடுத்தார்.
தனது அலைபேசியை எடுத்த குந்தவி, எல்லோருக்கும் இந்த விஷயத்தை கூறி தன் மகிழ்ச்சியை வெளிபடுத்த, அவரை புன்னகையுடன் பார்த்தான் ஹன்ஷித்.
“இன்னைக்கு நம்ம மம்மி, போனை கீழ வச்ச மாதிரி தான்.” என பாஸ்கர் அலுத்துக் கொள்ளும் அளவிற்கு அலைபேசியை கீழே வைக்கவில்லை குந்தவி.
சிரிப்புடன் ஹன்ஷித் அறைக்கு விரைய, அவன் பின்னே சென்றாள் தோஷி.
அவன் சென்று கட்டிலில் சாய்ந்து அமர, அவன் முன்னே கைகளை கட்டிக் கொண்டு நின்றாள் தோஷி.
“என்ன… என்ன வேணும் மேடம்க்கு. சாரி உங்களுக்கு… உங்க ரெண்டு பேருக்கு?”
“பச்… டாக்டர், உங்க பையன் உங்களை கட்டிக்க ஆசை படுறான். அவனுக்காக தான். எனக்காக ஒன்னும் இல்லை. நான் உங்களை கட்டிக்கவா?” தலையை சரித்து வினவுபவளை, இரண்டு கைகளையும் விரித்து அழைத்தான் ஹன்ஷித்.
ஓடிச் சென்று அவனுள் பாந்தமாக பெண் பொருந்த, அவளது நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டவன், “எப்போவுமே கட்டிக்கலாம்.” என்றான்.
“ஆங்… எனக்காக எல்லாம் இல்லை டாக்டர். நான் எதோ
உங்க பையனுக்காக போனா போகுதுன்னு கட்டிக்கிறேன்.” என அவள் ஹன்ஷித்தை இறுக்கி அணைக்க, வலிக்காதவாறு அவளது தலையில் கொட்டினான் ஹன்ஷித். “டாக்டர்ர்…” என சிணுங்கிக் கொண்டே அவனுள் புதைந்தாள் பெண்.