ஊதா வண்ணப் பூக்கள் எங்கும் மின்னிக் கொண்டிருக்க, மேடையின் கீழே பெண்கள் அமர்ந்து தங்களுக்குள் வளவளத்துக் கொண்டிருந்தனர்.
அலை அலையாய் முன் நெற்றியை ஆக்கிரமித்திருக்கும் கேசத்தை ஒரு கையால் கோதிக் கொண்டு, காலையில் இருந்து அலைந்ததின் விளைவால் முகத்தை அபிசேகம் செய்த வியர்வையை புறங்கையால் துடைத்துக் கொண்டே, வேட்டியோடு போராடி விசேஷவிற்கு வருகை தந்த அனைவரையும் புன்னகை ததும்பும் முகத்துடன் வரவேற்றுக் கொண்டிருந்தான்.
கையில் வண்ண வண்ண வளையல்களை சுமந்த படி சுற்றிக் கொண்டிருந்த பெண்களின் முகத்தில் மகிழ்ச்சி மின்னிக் கொண்டிருந்தது.
அரிதாக சந்திக்கும் தனது பால்ய நண்பர்களுடன் ஐயக்கியமாகி விட்ட சந்திரகாந்த், மாமனார் மற்றும் அப்பா பொறுப்பில் இருந்து சற்றே விலகி, தனது கல்லூரி கால கதைகள் மூலம் பருவ வயதிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றி அமர்ந்திருந்தவர்கள் எல்லாம் சிரித்துக் கொண்டே, பழைய நினைவுகளை மீட்டிக் கொண்டிருக்க, சந்திரகாந்த் புன்னகையுடன் பேசிக் கொண்டிருந்தார்.
மேடையில் எல்லாம் சரியாக உள்ளதா? என சோசித்து விட்டு, மஞ்சளையும் குங்குமத்தையும் தட்டில் இட்டு திரும்பிய குந்தவி, சந்திரகாந்த்தை முறைத்தார். அதை துளியும் கண்டு கொள்ளாதவர், தன்னுடைய பேச்சை தொடர்ந்தார்.
வளையலை ஒரு தட்டில் அடுக்கிய குந்தவி, அதை நங்கென்று மேடையில் வைக்க, “ம்மா… ஏன் இப்படி?” என பாஸ்கர் அவரிடமிருந்து தட்டை வாங்கினான்.
“ஒருத்தி இங்க மாங்கு மாங்குன்னு வேலை செஞ்சுக்கிட்டு இருக்கேன். இவரு உக்காந்து கதை பேசிட்டு இருக்காரு. போய் வர்றவங்களை வான்னு கூப்பிடலாம் இல்லை.” மூக்கை விடைத்துக் கொண்டு அவர் கூற, அதில் சிரித்தவன்,
“சரி விடும்மா. அவரே என்னைக்காவது ஒரு நாள் தான் அவர் ஃப்ரண்ட்ஸை பார்க்குறாரு. அது உனக்கு பிடிக்கலை. எப்படிம்மா இந்த பொண்டாட்டிங்களுக்கு எல்லாம் புருஷனோட ஃப்ரண்ட்ஸை புடிக்கவே மாட்டுது?” என கேட்டு, அவரின் முறைப்பை மேலும் பெற்றுக் கொண்டான்.
“ஒரு நிமிஷம் இரு டா.” என சிலுப்பி இருந்த தோஷியின் தலை முடியை காமாட்சி சரி செய்ய முனைய, “ம்மா… அது நான் பண்ண ஹேர் ஸ்டைல். இப்ப எதுக்கு நீ அதுல கையை வைக்குற?” என முனைத்துக் கொண்டாள் சந்தியா.
“கருமம்... மேடைல வளைகாப்புல உட்கார போற பொண்ணு தலையை எந்த அளவுக்கு கேவலமாக்க முடியுமோ? அவ்ளோ ஆக்கிட்ட நீ?” காமாட்சி முறைக்க,
“ஏன் ம்மா… உங்க காலத்துல இருந்த மாதிரியே எண்ணெய் வச்சு தலையை பிண்ண சொல்றீயா நீ? இதுதான் இப்ப ட்ரெண்ட். நீ அதை கலைக்காம இருந்தாலே போதும். போய் நீ வெளிய எதாவது வேலைய பாரும்மா.” என காமாட்சியை வெளியே அனுப்பிய சந்தியா, பெரு மூச்சை விட்டாள்.
தோஷி அவர்கள் சண்டையை பார்த்து சிரித்துக் கொண்டிருக்க, “அண்ணி, உங்களுக்கு காமெடியா தெரியுதா இதெல்லாம். எங்கம்மாவை சாமாளிக்குறதுக்கே எனக்கு இவ்ளோ கஷ்டமா இருக்கே. வெளிய இருக்க 70ஸ் கிட்ஸ்க எல்லாம் என்ன பண்ண காத்திருக்காங்களோ?” என அலுத்துக் கொண்டாள்.
“சந்தியா, அப்பா, அம்மான்னா அப்படி தான் இருப்பாங்க டா. அவங்க காலம் வேற? நம்ம காலம் வேற இல்ல?”
“அதான் அண்ணி நானும் சொல்றேன். அவங்க காலம் வேற, நம்ம காலம் வேற இல்ல? அதை ஏன் புரிஞ்சுக்க மாட்றாங்க? அவங்க காலத்துல இருந்த மாறியே எல்லாம் இருக்கணும்னு நினைக்குறாங்களே!”
“ஹாஹா… அவங்க மனநிலை அப்படி இருக்கும் டா.” என்றவள், “டைமாகிடுச்சு. நம்ம மேடைக்கு போகலாம். அத்தை எட்டு மணிக்கு வர சொன்னாங்க.” என்ற தோஷி, தனது ஒன்பது மாத கருவை ஒற்றைக் கையால் பிடித்து கொண்டு எழ, “அண்ணி… வெயிட் பண்ணுங்க. ஏன் இப்படி? நான் ஹெல்ப் பண்ண மாட்டேனா?” என கேட்டுக் கொண்டே தோஷியின் கையை பிடித்தாள்.
“ஹே சந்தியா, ஒன்னும் இல்லை டா. நான் நடந்து வந்திடுவேன்.” என தோஷி கூற,
“பரவாயில்லை, பரவாயில்லை. நானும் உங்க கூட மேடைக்கு வருவேன்.” என சந்தியாவும் உடன் வந்தாள்.
இன்று தோஷிக்கு வளைகாப்பு ஏற்பாடு செய்ய பட்டிருந்தது. அவள் கருவுற்றிருப்பதை அறிந்தவுடன், வீட்டில் உள்ள அனைவரும் அவளை தாங்கினர். ஒரு வேலை கூட செய்யவிடல்லை குந்தவி. அவரே தோஷிக்கு எது வேண்டும் என்று கேட்டு செய்து கொடுத்து, தனது அன்பில் குளிப்பாட்ட, அவள் திக்கு முக்காடி போனாள்.
ஹன்ஷித் ஒரு புறம் அவளை நேச மழையால் நனைய வைத்து, காதல் செய்து கொண்டிருந்தான். மொத்ததில் பாவை, சொர்க்கம் என்பதை கண்ணார பார்த்துக் கொண்டிருந்தாள். முன்பு கூட குந்தவி ஒரு சில நேரங்களில் கடினமாக பேசிவிடுவார். ஆனால், தோஷி கருவுற்ற பிறகு, ஒரு வார்த்தை அவளை திட்டுவதில்லை.
அதோ இதோ என்று எல்லோருடைய கவனிப்பிலும் நாட்கள் செல்ல, ஒன்பதாவது மாத்த்தை தொட்டிவிட்டிருந்தது. ஏழாவது மாதத்தில் வளைக்காப்பு வைக்கலாம் என்ற யோசனையில் குந்தவி ஜோசியரிடம் செல்ல, அவர் ஒன்பதாம் மாதத்தில் வைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறிவிட்டார். அதனால் அந்த முடிவை கைவிட்ட குந்தவி, ஒன்பதாம் மாதத்தில் வளைகாப்பை வைத்துக் கொள்ளலாம் என்று எல்லாவற்றையும் ஏற்பாடு செய்தார். பெண் வீட்டு பக்கம் யாரும் இல்லை என்ற குறையை தீர்ப்பதற்காக சீதா, தாய் ஸ்தானத்தில் இருந்து எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வதாக கூற, எல்லோருக்கும் மனம் நிறைந்து விட்டது.
“பொறுமையா உக்காரு டா தோஷி!” என சீதா, அவளை இருக்கையில் அமர வைத்தார்.
“குந்தவி, நல்ல நேரம் வந்துடுச்சு. காலகாலத்துல ஆரம்பிச்சா தான மதியத்துக்குள்ள முடிக்க முடியும். பாவம் புள்ளை தாச்சி, எவ்ளோ நேரம் சேர்ல உக்காந்துட்டு இருப்பா. கால் வீங்கிடும்.” கூட்டத்தில் இருந்த ஒரு பெண்மணி தனது கருத்தை கூற, நேரத்தை பார்த்த குந்தவி, சரி என்பதாய் தலையை அசைத்து விட்டு, “பாஸ்கர், உங்க அண்ணனை கூட்டிட்டு வா.” என அவனை அனுப்பி வைத்தார்.
வெளியே வாயிலுக்கு விரைந்த பாஸ்கர், “ப்ரோ, நல்ல நேரம் வந்துடுச்சாம். அம்மா கூப்பிடுறாங்க. நீ போ, நான் எல்லோரையும் இன்வைட் பண்றேன்.” என அவனை உள்ளே அனுப்பி வைத்தான்.
மஞ்சள் நிறத்தில் முழு நீள உடையணிந்து, முன்புறம் உள்ள முடிகளை மட்டும் சின்ன க்ளிப்பில் அடக்கியவாறு, எதோ தெரியாத இடத்தில் நின்று விழிக்கும் குழந்தையின் சாயலில் நகத்தை கடித்து துப்பிக் கொண்டே, மற்றொரு கையால் தனது கைப்பயை கெட்டியாக பிடித்து இருந்தாள் ரோஸ்லின்.
விழாவிற்கு வருபவர்களை எல்லாம் வரவேற்று கொண்டிருந்த பாஸ்கரின் கண்கள் அவளில் நிலைத்தது. அவளை அக்கணம் பாஸ்கர் எதிர்பார்க்கவில்லை. தான் அவ்வளவு கூறியும், காதில் வாங்காமல் திமிறாக சென்றவள், வளைகாப்பிற்கு நிச்சயமாக வரமாட்டாள் என்று எண்ணியிருந்தான். அவனை ஏமாற்றவென்றே வருகை தந்து இருந்தாள்.
“மாமா, கொஞ்சம் நேரம் வர்றவங்களை உள்ள கூப்டுங்க. எனக்கு முக்கியமான வேலை இருக்கு.” என குரலில் துள்ளலுடன், வேக நடை போட்டு அவள் அருகில் சென்றான்.
ரோஸ்லின் பின்புறம் சென்று தொண்டையை கணைத்த பாஸ்கர், “ஹே ப்யூட்டி. என்னை தானே தேடுற?” என ஹஸ்கி குரலில் அவன் பேச, திடுக்கிட்டு திரும்பியவளின் முகம் அதிர்ச்சியை வெளிபடுத்தினாலும், சற்றே ஆசுவாசம் அடைந்தது.
“ம்க்கூம்… நினைப்பு தான். நான் தோஷி அக்கா வைளைகாப்புக்கு வந்தேன்.” என கூறியுவளின் முகத்தில் கீற்றாய் புன்னகை. அதை அவனுக்கு காண்பிக்காமல் மறுபுறம் திரும்பி கொண்டவளின் கன்னக் கதுப்புகள் அவளது புன்னகையை பறை சாற்றியது.
“எப்படி டி, எந்த ட்ரெஸ் போட்டாலும் என் கண்ணுக்கு அழகாவே தெரியுற. அப்டியே அள்ளுது டி.” பிடரியை கோதியவனின் முன்பு முறைக்க முயன்று தோற்றவள், இரண்டு எட்டு முன்னே வைத்து நடக்க, அவளுடன் பாஸ்கரின் கால்களும் நகர்ந்தன.
“கேடி டி நீ? எவ்ளோ கெஞ்சுனேன். வான்னு கூப்டேன். வர மாட்டேன், வர மாட்டேன்னு சொல்லிட்டு முத ஆளா வந்து நிக்குற?”
“உனக்காக யாரு வந்தா? நான் தோஷி அக்காவுக்காக தான் வந்தேன். நினைப்பு தான்.”
“ஒத்துக்க மாட்டல்ல டி… எனக்காக தான் வந்தேன்னு.”
“உனக்காக வந்ததா தான் ஒத்துக்க முடியும். நான் தான் உனக்காக வரலையே!” என்றவள், மேடையை நெருங்க, இதற்கு மேல் அவளுடன் பேச முடியாது என்றுணர்ந்தவன், “பங்கசன் முடியட்டும். உன்னை பார்த்துக்குறேன்.” என்று அவன் நகர்ந்து விட, அவனை கண்டு கொள்ளாமல் பெண்களுடன் சென்று அமர்ந்து விட்டாள்.
மேடையில் நடுவே முகம் கொள்ளா பூரிப்புடன் அமர்ந்து இருக்கும் மனைவியை பார்க்க பார்க்க, அவ்வளவு நிறைவாக இருந்தது ஹன்ஷித்திற்கு. அவளது புன்னகை உள்ளே துளி துளியாய் தித்திப்பை பரவச் செய்ய, புன்னகையுடன் அவளருகே சென்றான்.
“டேய் ஹன்ஷித், இந்த வளையலை அவ கைல போட்டுவிட்டு, மஞ்சள் குங்குமத்தை மூஞ்சில பூசி விடு.” என்று குந்தவியின் சொல்லுக்கு இணங்கியவன், வளையலை அவள் கைகளில் அணிவித்து விட்டு, மஞ்சள் குங்குமத்தை அவளது வதனத்தில் பூசினான். சில நொடிகள் அவளது முகத்தையே பார்த்த ஹன்ஷித்தை கண்டு வெட்கப்பட்டவள், “டாக்டர், ரூம்ல இருக்கும் போது இருக்குமே, அதே மூஞ்சி தான் இது. இப்டி எல்லார் முன்னாடியும் உத்து உத்து பார்த்து என் மானத்தை வாங்காதீங்க!” என்றாள்.
“என் பெண்டாட்டி, நான் பார்த்தா யாரு கேட்ப்பா?” என்றவன், குனிந்து அவளது நெற்றியில் அழுத்தமாக முத்தம் ஒன்றை வைக்க, பெண் உடல் சிலிர்த்தது.
கண்களை இறுக மூடி திறந்தவள், “போதும் டாக்டர், ப்ளீஸ் கீழே போங்க” என அவனை கெஞ்சி கூத்தாடி கீழே இறங்கச் செய்தாள்.
குந்தவி, சீதா, காமாட்சி என ஒவ்வொருவராக தோஷிக்கு வளையலை அணிவித்தனர். அடுத்து சொந்த பந்தங்கள் எல்லாம் வந்து, தோஷியை வாழ்த்தி விட்டு சென்றனர்.
ஹன்ஷித் ஒரு ஓரமாக நின்று தன் மனைவியை ரசித்துக் கொண்டிருந்தான். “பச்… யாராவது சொம்பு இருந்தா கொண்டு வாங்க. இங்க ஒரு ஆறு ஆறா ஓடுது!” என அவனை கலாய்த்துக் கொண்ட நிலா அவன் அருகில் வந்து நின்றாள்.
“அடிங்க…” என அவள் தலையில் நறுக்கென்று கொட்டியவன், “எப்போ டி வந்த?” என வினவினான்.
“அடப்பாவி! உன் பொண்டாட்டி பங்கசன் நல்லா நடக்கணும்னு மிட் நைட் 4 மணிக்கே என்னை எழுப்பி உசுரை வாங்கி என் அம்மா என்னை கூட்டிட்டு வந்தா, எப்ப வந்தன்னு கேக்குற நீ? ஹம்ம்… வந்தவங்களை கவனிச்சா தானே? பொண்டாட்டியை ஒரமா நின்னு சைட்டடிக்குற பையனுக்கு எங்க புத்தி இருக்க போவுது. ஒரு காபி குடிக்குறீயான்னு கூட கேக்கலை டா நீ?” மூச்சு வாங்க வசனம் பேசியவளின் முன்பு பழச்சாறை நீட்டினான் பாஸ்கர்.
“வா டா, வா டா பாஸூ, நீ தான் என் உண்மையான கசின். இவனும் தான் இருக்கானே!” என அலுத்துக் கொண்டே பழச்சாறை பருகியவளை கண்டு புன்முறுவல் பூத்தான் ஹன்ஷித்
“அப்புறம் மூன், எப்படி இருக்க நீ? வீட்டு பக்கம் ஆளையே காணோம்?”
“நான் ஒருத்தி இருக்கேன்னு உங்களுக்கு எல்லாம் ஞாபகம் இருக்கா டா. காரியம் ஆகணும்னா மட்டும் அண்ணனும் தம்பியும், நிலா, பலான்னு வரவேண்டியது. இப்ப வந்து ஆளைக்காணோம்னு நலம் விசாரிப்பு வேற.” என லேசாக முறைத்த நிலாவின் தோளில் கையைப் போட்ட பாஸ்கர், “மூன், ஏன் இவ்ளோ டென்ஷன். பீ கூல்…” என கூறி அவளை சமாதானம் செய்து, சிரிக்க வைத்தான்.
நிலாவுடன் நின்று பேசிக் கொண்டிருந்த பாஸ்கரை, யாருடைய பார்வையோ குறுகுறுக்க வைக்க, சுற்றும் முற்றும் பாரத்தான். தன் கையில் உள்ள குவளையை இறுக்கி பிடித்த படி, அவனை ஏகத்துக்கும் முறைத்துக் கொண்டிருந்தாள் ரோஸ்லின்.
சட்டென்று நிலாவின் தோளில் இருந்து பாஸ்கர் கையை எடுக்க, “என்னாச்சு டா?” என வினவினாள் நிலா.
“ஹிஹி… சேஃப்டி பர்பஸ்க்கு. உனக்குலாம் புரியாது டி.” என அவளிடம் இருந்து நழுவி விட்டான்.
ரோஸ்லின் அருகே உள்ள இருக்கையில் அமர்ந்த பாஸ்கர், “என்ன டி, கோபம் எல்லாம் வருதோ?” என அடக்கப்பட்ட புன்னகையுடன் கேட்டான்.
“எனக்கு எதுக்கு கோபம் வரணும். நீ யார் கூட பேசுனா எனக்கென்ன?” முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“அடேங்கப்பா… கழுத்து சுழுக்கிக்க போவுது. அவ என்னோட கசின் தான் டி.”
“ஓ… கசினா. அப்ப பேசு, அவளையே கரெக்ட் பண்ணிக்க. என் பின்னாடி எதுக்கு டா வர்ற?” பல்லை கடித்தாள் ரோஸ்லின்.
“ஏய்! அவளுக்கு என்னை விட 4 வயசு கூட!”
“ஓ… ரொம்ப பீலிங்கோ?”
“ஏய்…?”
“என்ன, இப்ப தான் வயசுக்கு மூத்த பொண்ணை கட்டிக்கிறது பேஷனா போய்டுச்சே! அப்படி தானே நினைக்குற?”
“சுத்தம்… அவ எனக்கு அக்கா மாதிரி. அதுவும் இல்லாம, அவ ஆளு என்னை தலைகீழ கட்டி வச்சுடுவான்!” பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு பாஸ்கர் கூறினான்.
அவனை ஏற இறங்க பார்த்தவள், “சரி சரி. அழாத நம்புறேன். ஆனால், பயம் விட்டு போச்சுல்ல உனக்கு?” புருவத்தை தூக்கி வினவ,
“சத்தியமா இனி எந்த பொண்ணு கூடவும் பேச கூட மாட்டேன் டி!”
“அந்த பயம் இருக்கட்டும்.” என்றவள், மேடையேறினாள்.
ரோஸ்லினை பார்த்து ஆச்சரியப்பட்ட தோஷி, “ஹே ரோஸ், நீ எங்க இங்கே? சாரி டி. உன்னை கூப்ட முடியலை. அவரு தான் எங்கேயும் வெளிய அனுப்ப மாட்டேன்னு சொல்லிட்டாரு.” என மன்னிப்பை வேண்டினாள்.
“என்ன என்ன சொல்ற? வயசு பையனை வீட்ல வச்சு இருக்கோமேன்னு பயம் இருக்கா உங்களுக்கு. ஹம்ம்… லோ லோன்னு ஒரு வருஷமா என் பின்னாடி சுத்தி கரெக்ட் பண்ணிட்டான்!”
“இது எப்போ டி?”
“ரொம்ப லேட் அப்டேட் கா நீங்க. அதெல்லாம் எப்பவோ ஆச்சு. ஆனால், நான் இன்னும் அவனுக்கு ஒகே மட்டும் சொல்லலை!”
“இந்த அளவுக்கு போய்டுச்சா?”
“ஆமா! ஆமா! என் கல்யாணத்துக்கு நீங்க தான் தலைமை தாங்கணும். அதுக்கு முன்னாடி என்ற தகப்பன் ஆரோக்கிய ராஜ் கிட்ட ஆரோக்கியமான முறைல முறையா பேசி கல்யாணத்தை நடத்தி வைங்க.”
“ஏய்! உனக்கு எப்படி அவனை தெரியும் டி?”
“எல்லாத்தையும் என் கிட்டவே கேட்காதீங்க. உங்க வீட்டு பையன் கிட்ட கேட்க கொஞ்சம் வச்சுக்கோங்க.” என்றவள், “சரிங்க கா. எனக்கு நேரமாச்சு. நான் கிளம்புறேன். பத்ரமா இருந்துக்கோங்க. பாப்பா பிறந்ததும் நான் வந்து உங்களை பார்க்குறேன்!” என புன்னகையுடன் மேடையை விட்டு கீழே இறங்கி வாசலை நோக்கி விரைந்தாள்.
செய்த வேலையை அப்படியே விட்டுவிட்டு, அவள் பின்னே பாஸ்கர் ஓட, தோஷி தான் விரலை வாயில் வைத்தாள். ‘அடப்பாவி பாஸ்கர், இந்த பூனையும் பால் குடிக்குமான்னு இருந்துட்டு, ஃபுல் பாரின் சரக்கே அடிக்குறீயே டா! அண்ணனுக்கு தப்பாம பொறந்து இருக்க!’ என நினைத்தாள்.
ரோஸ்லின் பேருந்து நிலையத்தில் நிற்க, அவளருகே நின்றவன், “பஸ்ல வேணாம். ஆட்டோல போடி…” என கூறி அவள் பதிலை எதிர்பார்க்காமல் வழியே செல்லும் தானியை கையைக் காட்டி நிறுத்தியவன், “அண்ணா, சிந்தாரிப்பேட்டை சர்ச் பக்கத்துல இறக்கி விடுங்க.” என்று கூற, அவனை கண்டு கொள்ளாதவள், பேருந்தை நோக்கி விரைந்தாள்.
அவளது கையை பிடித்தவன், “சொல்ற பேச்சை கேட்க கூடாதுன்னே இருக்கியா டி. ஒழுங்கா ஆட்டோல போ. பஸ்ல போனா, இறங்கி எவ்ளோ தூரம் நடப்ப நீ? உங்க அப்பா, ஆரோக்கிய ராஜ் இல்ல அறிவுக்கெட்ட ராஜ் வீட்டை கொண்டு போய் காட்டுக்குள்ள கட்டி வச்சுருக்காரு.” என கடைசி இரண்டு வரிகளை வாய்க்குள் முணுமுணுத்தவன், “ப்ளீஸ் டி, ஏறு…” என்றான் வார்த்தை இல்லாமல் உதட்டை அசைத்து.
அவனிடமிருந்து கையை உதறியவள், தானியில் ஏறி அமர, “அண்ணா, பத்ரமா இறக்கி விட்ருங்க” என்றவன், “போய்ட்டு மெசேஜ் பண்ணு டி” என்றான். அவளிடம் அதற்கும் பதில் இல்லை.
‘ரொம்ப ஏத்தம் டி உனக்கு. பார்த்துக்குறேன்’ என பற்களை கடித்த படியே சென்றவனை எட்டிப் பார்த்தவள், ‘கோவம் வந்துச்சா? எனக்கும் அப்படி தானே இருக்கும். அந்த குட்டச்சி கூட நீ சிரிச்சு சிரிச்சு பேசும் போது. சார்க்காக நம்ம காலேஜை கட்டடிச்சுட்டு, ஆயிரம் பொய் வீட்ல சொல்லிட்டு இங்க வந்தா, கண்டுக்காம சீனை போட்றான். இரு டா உனக்கு ஓகே சொல்லாம அலைய விட்றேன்.’ என மனதில் குதூகலித்தாள் ரோஸ்லின்.
வளைகாப்பு நன்முறையில் முடிவுற, அனைவரும் வீட்டை நோக்கி புறப்பட்டனர். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருந்ததன் விளைவால், தோஷியின் கால்கள் சற்றே வீக்கமாகியிருந்தது.
“தோஷி, நீ ரூம்ல போய் ரெஸ்ட் எடு டி. ஹன்ஷித் அவளை கூட்டிட்டு போடா!” என குந்தவி கட்டளையிட, புன்னகையுடன் தலையை அசைத்தவன், தோஷியின் தோளில் கையைப் போட்டு, அறைக்கு அழைத்து சென்றான்.
கட்டிலில் ஒரு தலையணையை எடுத்து ஓரமாக சாய்த்து வைத்து, அவளை வசதியாக அமர வைத்தவன், கழிவறைக்கு சென்று வந்தான்.
“டாக்டர், அந்த ஏசியை கூட வைங்க. ரொம்ப புழுக்கமா இருக்கு.” தோஷி கூற, குளிர் பதனாக்கியின் வெப்பதை குறைத்தான்.
“டாக்டர், இந்த தலைகாணி சின்னதா இருக்கு. அந்த பெரிய தலைகாணியை எடுத்துட்டு வந்து வைங்க.” என தோஷி இயம்ப, வேறொரு தலையணையை எடுத்து வந்து வைத்தான்.
“டாக்டர், தாகமாக இருக்கு. அந்த ஜக்ல இருக்க தண்ணியை எடுத்து தாங்க.” என அவள் பேசி முடிக்கும் முன்பே, அவளிடம் தண்ணீரை நீட்டினான் ஹன்ஷித்.
“டாக்டர், இந்த நகை எல்லாம் ரொம்ப வெயிட்டா இருக்கு. ப்ளீஸ் கழட்ட ஹெல்ப் பண்ணுங்க!” கூறிக் கொண்டே தன் கழுத்தில் உள்ள நகைகளை பெண் அகற்ற போராட, அவளுக்கு அருகில் சென்றவன், அவளது நகைகள் ஒவ்வொன்றாக கழட்டினான்.
“அதை அப்படியே பீரோவை தொறந்து உள்ள வச்சுடுங்க.” என்றவள், நன்றாக சாய்ந்து அமர்ந்தாள்.
கால்கள் லேசாக வலிக்க, “டாக்டர், ரூம் கதவை சாத்தீட்டு வந்து இங்க உக்காருங்க.” என தன் இருக்கைக்கு அருகில் கை காட்டினாள்.
ஹன்ஷித் அறை கதவை மூடிவிட்டு, அவளருகில் வந்து அமர, அவன் மீது தன்னுடைய இரண்டு காலைகளையும் தூக்கி வைத்தாள்.
“கால் வலிக்கு டாக்டர். அமுக்கி விடுங்களேன்!” என இறைஞ்சும் பார்வை பார்த்த பாவையை சிரிப்புடன் நோக்கியவன், அவளது கால் விரல்களில் அழுந்த முத்தமிட்டான். அதில் விரல்களை கூச்சத்தில் மடக்கியவள், “டாக்டர், நான் உங்களை காலை அமுக்க தான் சொன்னேன். வேற எதுவும் பண்ண சொல்லலை.” என கூறியவளை குறும்புடன் பார்த்தவன், “நானும் அமுக்க தான் செய்றேன்” என்று அவளது கால்களை மென்மையாக பிடித்து விட்டான்.
“ஏன் டாக்டர், வந்ததுல இருந்து உங்களை இத்தனை வேலை வாங்குறேனே! ஒரு தடவை கூட உங்களுக்கு என்னை திட்டணும்னு தோணலையா?”
தலையை இடம் வலமாக ஆட்டியவனின் உதட்டில் சன்னமான சிரிப்பு.
“டாக்டர்ர்ர்…” என சிணுங்கியவள், “இப்பலாம் நீங்க என்னை திட்றதே இல்லை. முறைச்சு கூட பார்க்க மாட்றீங்க. போங்க டாக்டர். இந்த சிரிச்ச மூஞ்சியை எப்பவுமே பார்க்க முடிலை. எனக்கு என்னை ஓரக்கண்ணால் முறைச்சு பார்க்குற ஹன்ஷித் தான் வேணும்.” என கூற, அவளது மறுபுறம் வந்து அமர்ந்தவன், அவளை தோளோடு அணைத்திருந்தான்.
“இப்ப என்ன? உன்னை திட்டணுமா? அடிக்க கூட செய்றேன் கண்ணை மூடு டி” என கூறியவனை ஆச்சரியமாக பார்த்தவள், “டாக்டர், ஹாஹா… நீங்களாவது என்னை அடிக்கிறதாவது. சும்மா உதார் விடாதீங்க.” என்றாள்.
“நீ உன் கண்ணை மூடு. கன்னத்துல சப்புன்னு அறையுறேன்.” என்றவனை நம்பாது நோக்கியவள் கண்களை மூட, அவளது கன்னத்தில் தனது இதழ்களை ஆழமாக புதைத்துக் கொண்டவனின் வெப்பமான மூச்சு காற்று பாவையின் வதனத்தை தீண்டியது.
சிரிப்புடன் அவனது முகத்தை கைக்கொண்டு தள்ளியவள், “டாக்டர், கண்ட கண்ட படத்தை எல்லா பார்த்துட்டு மொக்கையா பண்றீங்க டாக்டர். இதெல்லாம் நல்லா இல்லை.” என்றவளை, மாறாத சிரிப்புடன் நோக்கினான் ஹன்ஷித்.
“சிரிச்சது போதும், இங்க வாங்க!” என அவனை அழைத்தவள், அவனது மார்பில் முகத்தை புதைத்துக் கொண்டாள். அவளது சூடான கண்ணீர் தன்னை நனைத்ததும் தான் அவள் அழுகிறாள் என்று உணர்ந்தவன், “ஹே தோஷி, என்னாச்சு டா?” என அவளது முகத்தை நிமிர்த்தி வினவினான்.
“இல்லை டாக்டர். நான் அழணும்னு நினைக்கலை. பட், நீங்க எல்லாரும் என்னை அழ வச்சு பார்க்குறீங்க. என்னை மக மாறி பார்த்துக்குற அத்தை, லவ் பண்ணி டார்ச்சர் பண்ற புருஷன், சேட்டைகார கொழுந்தேன், அம்மா, அப்பா, தங்கச்சின்னு இவ்ளோ பாசமானவங்க எல்லாம் என்னை சுத்தி இருந்து பார்த்துக்குறீங்க. பச்… போங்க டாக்டர். ஹாஸ்டல்ல இருக்கும் போது நான் தான் ரொம்ப அன்லக்கின்னு நினைப்பேன். ஆனால், இந்த செகண்ட் நான் தான் உலகத்துலேயே ரொம்ப ரொம்ப லக்கி பெர்சன். சந்தோஷமா வாழ்க்கை. ஏன் டாக்டர் அன்னைக்கு ஹாஸ்பிடல் நான் வந்தப்ப நீங்க என்னை பார்க்காம இருந்திருந்தா, நான் இந்த மாதிரி ஒரு குடும்பத்தை ரொம்ப மிஸ் பண்ணி இருப்பேன்.” அழுதுகொண்டே தேம்பினாள் பெண்.
“தோஷி… ஒன்னும் இல்லை டி. இதெல்லாம் நார்மலா எல்லாருக்கும் கடவுள் கொடுக்குற உறவுகள் தான். பட் உனக்கு கொஞ்சம் லேட்டா கொடுத்துட்டாரு. அவ்ளோ தான்.” என்றவன் அறிந்து வைத்திருந்தான் பெண்களுக்கு இது போல நேரங்களில் ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும் என்று. அதனாலே தோஷி அதிகம் உணர்ச்சி வசப்படுகிறாள் என்பதை உணர்ந்தவன், அவளை படுக்க வைத்து தட்டி கொடுத்தான். சிறிது நேரத்திலே அவள் உறங்கி போனாள்.
***
வளைகாப்பு முடிந்து இரண்டு வாரங்கள் கடந்து விட்டிருந்தது. ஹன்ஷித் மருத்துவமனைக்கு சென்று விட்டிருக்க, அவரவர் வேலையை பார்த்தனர். பாஸ்கருக்கு தேர்வுக்கு படிக்க விடுமுறை விட்டிருந்ததால், அவன் அறையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தான்.
எந்த ஒரு வேலையும் செய்ய கூடாது என்று குந்தவி கட்டளையிட, அவரிடம் கெஞ்சி கூத்தாடி காய்நறுக்கும் வேலையை வாங்கி இருந்தாள்.
உணவு மேஜையின் மீது அமர்ந்திருந்தபடி, காய்களை நறுக்கிக் கொண்டு, தொலைக்காட்சியில் ஓடும் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தவளின் முன்பு வந்த குந்தவி, “இந்த ஜூஸை குடிச்சுட்டே, காயை வெட்டு தோஷி. காலைல சாப்ட்டது நீ. இப்ப மணி 12 ஆச்சு.” என்றவரை பாவமாக பார்த்தாள் தோஷி.
“இந்த பார்வை எல்லாம் வேணாம். ஒழுங்கா குடி.” என்றவரின் கட்டளையான குரலில் படக்கென்று பழச்சாற்றை அருந்தினாள்.
“போதும் காய் நறுக்குனது. ஹால்ல உக்காந்து டீவியை பாரு நீ.” என அவளை துரத்தி விட்ட குந்தவியை முறைத்துக் கொண்டே அந்த நீள்விருக்கையில் அமர சென்றவளின் வயிற்றில் சுலீரென்று ஒரு வலி ஏற்ப்பட்டது.
கையை வயிற்றில் வைத்தவளுக்கு, நிற்க முடியவில்லை. வலி அசுர வேகத்தில் பரவ, “அத்தை… வலிக்குது அத்தை!” என்று அலறியவளின் குரலுக்கு இரண்டு நொடிகளில் அவளது அருகில் வந்தார் குந்தவி.
“ஒன்னும் இல்லை டா தோஷி, இப்டி உக்காரு நீ!” என அவளை நீள்விருக்கையில் அமர்த்தியவர், அடுப்பை நிறுத்திவிட்டு, “பாஸ்கர், காரை எடு டா. உன் அண்ணிக்கு வலி வந்துடுச்சு.” என விவேகத்துடன் செயல்பட்டு, மருத்துவமனைக்கு விரைந்தார். போகும் போதே ஹன்ஷித்திற்கு அழைத்து விஷயத்தை கூறியிருந்தார்.
அவர்கள் மருத்துவமனையை அடையவும், ஹன்ஷித் வரவும் சரியாக இருந்தது. வயிற்றில் ஒரு கையை வைத்துக் கொண்டு, அவனை பார்த்து வலுக்கட்டாயமாக சிரித்தவளை பார்த்தவனுக்கு படக்கென்று உள்ளே அடித்துக் கொண்டது. அவளிடம் விரைந்தவன், “ஒன்னும் இல்ல டா தோஷி. வா உள்ள போகலாம்!” என அவளை கைத்தாங்கலாக அழைத்துச் செல்ல, “டாக்டர், எனக்கு ஒன்னும் இல்லை. நீங்க பதறாதீங்க. நல்ல உங்களை மாதிரி கலர்ல என்னை மாதிரி அழகுல ஜம்முன்னு ஒரு புள்ளையை உங்க கைல கொடுக்குறேன். நம்ம பர்ஸ்ட் ரிலீஸ்க்கு என்ன பேர் வைக்கிறதுன்னு மட்டும் யோசிங்க. நான் கொஞ்ச நேரத்துல பிள்ளையோட வரேன்.” என்று கூறியளைப் பார்த்து அந்த நேரத்திலும் அவனுக்கு சிரிப்பு வந்தது.
“ஹான்… இதான் டாக்டருக்கு அழகு!” என கூறி வலியில் பல்லைக் கடித்தாள் பெண்.
“உள்ளே வாங்க மா!” என செவிலி பெண் தோஷியை அழைக்க, அவளது கைகளை ஹன்ஷித் விடவே இல்லை. அவன் அருகில் சென்றவள், புன்னகைத்து விட்டு, தனது கையை விடுவித்துக் கொண்டு, அறுவை சிகிச்சை அறைக்குள் நுழைந்தாள்.
அறைக்கு வெளியே உள்ள இருக்கையில் அமர்ந்த ஹன்ஷித்திற்கு படபடவென்று தான் இருந்தது. என்ன தான் ஒரு மருத்துவன் என்றாலும், அவனும் ஒரு சாதாரண மனிதன் தானே?
ஹன்ஷித்தின் தோளில் ஆதரவாக கையை வைத்த பாஸ்கரை பார்த்து முறுவலிக்க முயன்றான் ஹன்ஷித்.
“ப்ரோ, சில். அண்ணியே எவ்ளோ தைரியமா இருக்காங்க.” என்று ஹன்ஷித்தின் கைகளை அழுத்தினான்.
“டேய் மகனே! என் மருமக தைரியசாலி. நானும் ரெண்டு புள்ளை பெத்தவ தான். அதனால பயப்படாத!” என்று குந்தவி கூற, லேசாக சிரித்தான் ஹன்ஷித்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடந்து விட, மருத்துவர் வெளியே வந்தார். “மிஸ்டர் ஹன்ஷித், உங்களுக்கு பையன் பொறந்து இருக்கான். நார்மல் டெலிவரி தான். டோன்ட் வொர்ரி.” என்று கூற, அப்போது தான் எல்லோருக்குமே நிம்மதி பிறந்தது.
“ரொம்ப நன்றி டாக்டர், என் பையனும் டாக்டர் தான். வேற எதுவும் செய்யணும்னா அவன் கிட்டயே சொல்லுங்க!” என்று குந்தவி கூற,
“ஓ… நைஸ் டு மீட் யூ டாக்டர் ஹன்ஷித். நான் எதுவும் சொல்ல வேணாம், உங்களுக்கே தெரியும்னு நினைக்குறேன்.” என்று மருத்துவர் கூற, தலையை அசைத்தான் ஹன்ஷித்.
குந்தவியும் சந்திரகாந்த்தும் உள்ளே செல்ல, தோஷி மயக்கத்தில் இருந்தாள். அவளுக்கு அருகில் தொட்டியில் குழந்தையை கிடத்தியிருந்தனர்.
பால் வண்ண நிறத்தில், தன் முத்துப் பற்களை காட்டி சிரித்துக் கொண்டிருந்தான் அந்த சின்ன கண்ணன். பார்க்க பார்க்க தெவிட்டவில்லை குந்தவிக்கு. வெள்ளை துணியில் சுற்றியிருந்த குழந்தையை கையில் தூக்கியவர், “என் ராசா, அப்படியே உங்க அப்பா மாதிரியே இருக்க.” என கூறி, அவன் முகத்தை எச்சில் செய்தார்.
சந்திரகாந்த்தும் அவனை தூக்கி கொஞ்ச, “ம்மா… என்கிட்ட கொடுங்க.” என பாஸ்கர் ஆர்வத்துடன் கையை நீட்ட, “பார்த்து தூக்கு டா!” என பொறுமையாக அவன் கையில் குழந்தையை கொடுத்தார்.
பாஸ்கருக்கு குழந்தையை கீழே வைக்கவே மனமில்லை. குழந்தை அவனை பார்த்து சிரிக்க, அதில் மனம் கொள்ளை போனது. ஹன்ஷித் ஒரு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
“ப்ரோ, நீ தான் முதல்ல தூக்கியிருக்கணும். நாங்க முந்திக்கிட்டோம். இந்தா ப்ரோ!” என பாஸ்கர் குழந்தையை ஹன்ஷித் கைகளில் கொடுக்க, ஹன்ஷித்திற்கு கைகள் நடுங்கியது.
குழந்தையை வாங்கி அவன் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டவனின், முன்னுச்சியை முடியை கைகளால் பிடித்து இழுத்தான். ஹன்ஷித்தின் புன்னகை மேலும் அதிகரித்தது.
குழந்தையை தொட்டிலில் கிடத்தினான்.
“அவங்க கண் முழிக்க 2 மணி நேரம் ஆகும்.” என்று கூறிவிட்டு செல்ல, “நான் போய் அவளுக்கு மாத்து ட்ரெஸ் எடுத்துட்டு, வேணும்ன்றதை வாங்கிட்டு வரேன்” என குந்தவி சந்திரகாந்துடன் வீட்டிற்கு கிளம்பினார்.
பாஸ்கர் குழந்தை அருகில் அமர்ந்து அவனுடன் பேசிக் கொண்டிருக்க, ஹன்ஷித் தோஷி அருகில் அமர்ந்து அவளது கைகளை பிடித்துக் கொண்டு அமர்ந்தான். சிறிது நேரம் கடந்திருந்தது.
“ப்ரோ, நான் போய் எதாவது குடிக்க வாங்கிட்டு வரேன்” என பாஸ்கர் வெளியேறினான்.
தோஷியிடம் லேசாக அசைவு தெரிந்தது.
கண்களை மெதுவாக திறந்தவளின் முன்பு ஹன்ஷித் அமர்ந்திருந்தான். அவனை பார்த்ததும், அவளது முகத்தில் அழையா விருந்தாளியாக புன்னகை ஒன்று அமர்ந்தது.
தோஷியை எழுப்பி நேராக அமர வைத்தவன், அவளுக்கு தண்ணீரை புகட்ட, அருந்தியவள், அவனை பார்த்து கண்ணடித்தாள்.
“என்ன டாக்டர், சொன்ன மாதிரி நல்லா லட்டு போல ஒரு பையனை பெத்துக் கொடுத்துட்டேனா?” என கேட்டவளை பார்த்து சிரித்து விட்டான் ஹன்ஷித்.
“நான் சொன்னதை செஞ்சுட்டேன். உங்களுக்கு சொன்ன வேலையை முடிச்சுட்டீங்களா?” தோஷி வினவ, ‘என்ன?’ என்பது போல ஹன்ஷித் பார்த்தான்.
“ம்ப்ச்… மறந்துட்டீங்களா? குழந்தைக்கு பேர் யோசிக்க சொன்னேனே!”
“சாரி டி. மறந்துட்டேன். நீ உள்ள இருக்கும் போது அதெல்லாம் எனக்கு ஞாபகம் வரலை!”
“ஓ… எனக்குத் தெரியுமே டாக்டர் நீங்க மறந்துடுவீங்கன்னு. அதான் நான் ஒரு பேர் யோசிச்சுருக்கேன். அது ஆர்.ஏ.வி.ஐ.” என்று குரலில் குதூகலத்துடன் கூறியவளை பார்த்த ஹன்ஷித்,
“அதென்னடி ஆர்.ஏ.வி.ஐ?” என புருவத்தை சுருக்கினான்.
“டாக்டர், அந்த ஸ்பெல்லிங்கை கூட்டி வாசிங்க!”
“ஆர்.ஏ.வி.ஐ” என உச்சரித்தவன், “ரவி-ன்னு வருது டி.” என்றான்.
“ஆமா டாக்டர், ரவி தான். இப்பலாம் க்ரஷ் நேமை பிள்ளைக்கு வைக்கிறது தான் பேஷன். அதான் என் பழைய க்ரஷ் நேமை செல்க்ட் பண்ணேன்.” என்று கேலி இழையோட கூறியவளை ஏகத்துக்கும் முறைத்த ஹன்ஷித், “இந்த வாய் மட்டும் உனக்கு குறையவே குறையாது டி!” என வலிக்குமாறு அவள் தலையில் கொட்டினான்.
“பார்த்தீங்களா? பார்த்தீங்களா? குழந்தை பிறந்த பிறகு என்னை அடிக்குறீங்கல்ல? இருங்க என் அத்தை வரட்டும். உங்களை சொல்லித் தரேன்!” என்று மிரட்டியவளின் கன்னத்தை பிடித்து கிள்ளி, “சொல்லிக்க டி. எனக்கு ஒன்னும் பயம் இல்ல!” என்றவன், குழந்தையை தூக்கி அவள் மடியில் வைத்தான்.
“அப்படியே சைனீஸ் சப்பை மூக்கனை மாதிரியே பிறந்து இருக்கியே டா மகனே!” என தன் மகனை கொஞ்சியவளை பலமாக தலையில் கொட்டினான் ஹன்ஷித்.
“ஆ… வலிக்கு டாக்டர்!” என அவள் அலற, குழந்தை அழ ஆரம்பித்தான்.
“ஹாஹா… பாருங்க, என் புள்ளை எனக்கு தான் இப்பவே சப்போர்ட் பண்றான். உங்க அப்பாவை அடி டா!” என்று குழந்தையின் கையை எடுத்து ஹன்ஷித் மீது வைத்தவளை புன்னகையுடன் பார்த்தான் ஆடவன்.