“சிந்துநதி ஓடத்தில் சிதறி வந்த செம்மீனே! நதி நீர் வற்றும் முன்னே என் இருப்பிடம் சேர்வாயோ? தகிக்கும் தனலில் மெழுகாய் நான் கரைய, ஆற்றுப்படுத்த எப்போது நீ வருவாயோ என் ஆலிங்கனமே! இம்மையும் மறுமையும் என இம்மியும் அகலாது, உன் கை சிறையில் நான் வந்து சேரும் நாள் எதுவோ! என்னை சேர துடிக்கும் உன் மனதை எங்கனம் காட்டுவாயோ என் இனியவளே? உன் இதயம் எனக்காய் துடித்தும் அழகாய் உன் விழியில் மறைத்தாயே! கள்ளம் விடுத்து என் மனம் புரிந்து விரைந்து வா அன்பே, அன்று நானும் உன் முன்னே பறந்து வந்திடுவேன் என் நிலவழகியே!!” -அன்புடன் இளா!!
இளங்காலை தென்றல் மெல்லினமாய் அங்கிருந்த மரங்களை வருடி செல்ல அதற்கு சற்றும் பொருந்தாது அந்த மருத்துவ கல்லூரி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
ஆனால் அந்த பரபரப்பு என்னை எதுவும் செய்யவில்லை என்பது போல் ரசனையான அந்த வரிகளை முகத்தில் மெல்லிய புன்னகையுடன் வாசித்து கொண்டிருந்தாள் அவள்.
“நிலா!” பின்னால் இருந்து சத்தமாக கேட்ட குரலில் இருந்தே தெரிந்தது வந்தது யாரென. எனவே முகத்தில் இருந்த அதே புன்னகையுடன் திரும்பி பார்த்தாள் அவள், நிலவழகி.
“என்ன நிலா காலைலையே கவிதை வந்திருச்சு போல. முகம் பூரா சிரிப்பா இருக்கு. இன்னைக்கும் என்ன மானே தேனே பொன்மானே தானா”
கிண்டலாக கேட்டுக் கொண்டே வந்து நிலாவின் அருகே அமர்ந்தாள் அவள் தோழி மஞ்சரி. “மஞ்சு!” என்ற நிலாவின் குரல் கண்டிக்கும் தொனியில் வந்தாலும் அவள் முகத்தில் அது சுத்தமாக இல்லை.
நிலவழகி மற்றும் மஞ்சரி இருவரும் கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் நான்காம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
முதலாம் ஆண்டில் இருந்து இருவரும் சேர்ந்து படித்து வருவதால் இவர்கள் இருவருக்கிடையே எந்த ரகசியமும் இருந்ததில்லை. அந்த வரிசையில் உள்ளது தான் இந்த தினசரி கவிதையும்.
“பின்ன என்னடி அந்த மனுஷனும் நாலு மாசமா கவிதையா அனுப்பி தள்ளுறாரு. நீ என்னடான்னா அதை தினமும் படிச்சு பார்த்து ஒரு ரிப்ளை கூட பண்ண மாட்டேங்குற”
மஞ்சு அலுத்துக் கொண்டாலும் அவள் கூறியது முற்றிலும் உண்மை தான். நான்கு மாதங்களுக்கு முன்னர் நடந்த அனைத்தும் இப்போது நிலாவிற்கு நினைவு வந்தது.
ஒரு நாள் நிலா மஞ்சுவுடன் கல்லூரியின் அருகில் இருந்த பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள். அப்போது அவள் முன்னர் எதுவோ நிழலாட நிமிர்ந்து பார்த்தாள் நிலா.
அவள் எதிரே இளமாறன் பூங்கொத்துடன் நிற்க, அவன் யாரென தெரியாது முழித்து வைத்தாள் நிலா. அவள் முகத்தை புன்னகையுடன் பார்த்த இளமாறன்
“ஹாய் நிலவழகி! நான் இளா, இளமாறன், சாப்ட்வேர் எஞ்சினியரா இருக்கேன்” என தன்னை முதலில் அறிமுகப்படுத்தி கொண்டான்.
“நிலா நான் என் வாழ்க்கையில நிறைய பொண்ணுங்கள தாண்டி வந்திருக்கேன். ஆனா உன்னை பார்த்த அப்புறம் என் மனசுல நீ நின்னது போல யாரும் நின்னது இல்லை. உன்னை பத்தி நினைக்கும் போதே அவ்ளோ சந்தோஷம் வருது. அதே சந்தோஷம் என் வாழ்க்கை பூரா இருக்கனும்னு நான் ஆசைப்படுறேன். ஐ லவ் யூ நிலா! என் வாழ்க்கை முழுசும் என்கூட நீ வருவியா?”
இளா எந்தவித மேல்பூச்சும் இன்றி தன் காதலை கம்பீரமாக கூறி பூங்கொத்தை நீட்டி நின்றான். அதில் நிலாவை காட்டிலும் அதிர்ந்து நின்றது என்னவோ மஞ்சு தான். அவள் முகத்தை கண்டு சிரித்து விட்ட இளா
“என்னங்க உங்க ஃபிரண்ட் நிலாகிட்ட தானே நான் புரபோஸ் செஞ்சேன். நீங்க ஏன் இப்படி பேய் அடிச்ச மாதிரி நிக்கிறீங்க” என்றுவிட்டு நிலாவை நோக்கி திரும்பினான்.
“நிலா இது என்னடா யாரு என்னன்னே தெரியாத ஒருத்தன் பார்த்த முதல் நாளே வந்து இப்படி பூங்கொத்து கொடுத்து லவ் சொல்லிட்டு நிக்கிறான்னு யோசிக்கிறியா. ஆனா உன்னை எனக்கு மூனு மாசமா தெரியும்.
இத்தனை நாள் உனக்கு தெரியாம பாலோ செஞ்சிட்டு இருந்தேன். இனிமே உனக்கு தெரிஞ்சே உன் பின்னாடி வரப் போறேன். ஆனா அதுக்காக நீ உடனே எதுவும் சொல்ல வேண்டாம்.
நீ நல்லா யோசிச்சு எனக்கு பதில் சொன்னா போதும். நான் உன்னை போர்ஸ் பண்ண மாட்டேன். டேக் யுவர் ஓன் டைம். அன்ட் எனக்கு ரொமான்ஸ் எல்லாம் அவ்வளவா வராது.
என் புரபோஸல் நல்லா இல்லைனாலும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோமா. இப்போ பாய்!” என்று கூறி கண்ணடித்து விட்டு பூங்கொத்தை அவள் அருகே வைத்துவிட்டு கிளம்பிவிட்டான்.
அதன்பின் தினமும் விடாது வந்து அவள் பதிலுக்காய் காத்துக் கொண்டும் நின்றான். ஆனால் நிலா அவனுக்கு எந்த பதிலும் கூறவில்லை. அதற்காக இளாவும் அமைதியாக இருந்துவிடவில்லை.
அவனால் இப்படி தினமும் வந்து நிற்கவும் முடியவில்லை. அவன் வேலை நேரம் அதற்கு ஒத்துவராததால், தன் நினைவு நிலாவிற்கு இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இளா ஆரம்பித்தது இந்த கவிதை எழுதும் படலம்.
“நிலா என்னால தினமும் உன்னை வந்து பார்க்க முடியலைமா ரொம்ப சாரி. நமக்காக நான் கொஞ்சமாவது பணம் சம்பாதிக்கனுமே அதான். ஆனா நான் வந்தாலும் வரலைனாலும் என் சார்பா இந்த கவிதை உனக்கு வரும்.
நீ எவ்ளோ டைம் வேணா எடுத்துக்கோ பதில் சொல்ல. எவ்ளோ வருஷம் ஆனாலும் காத்திருக்க நான் ரெடி தான்”
நிலாவிற்கு அவன் அனுப்பும் வரிகள் எல்லாம் இளாவின் குரலாகவே அவள் மனதிற்குள் ஒலிக்கும்.
அன்று இளமாறன் திடீரென வந்து காதல் சொல்லி நின்ற போது நிலவிற்கு அவ்வளவு அதிர்ச்சி தான். ஆனால் அதன்பின் வந்த நாட்களில் இளமாறனின் கண்ணியமான செய்கை அவளை கவர்ந்து தான் விட்டது. ஆனால் நிலா இன்னும் தன் மனதை திறக்க துணியவில்லை.
“நிலா! நிலா! நிலவழகி மேடம்!!”
மஞ்சு போட்டு உலுக்கிய பின்னரே தன் நினைவுகளை விடுத்து திரும்பி பார்த்தாள் நிலா.
“என்னடி கனவு உலகத்துக்கு போயாச்சா. உன் ஆள்கிட்ட இதுக்கு சம்மதம்னு சொல்லிட்டு அவர்கூட சேர்ந்து டூயட் ஆட வேண்டியது தானே. ஏன்டி இன்னும் அவரை அலையவிட்டு நீயும் தனியா கனவு கண்டுட்டு இருக்க”
மஞ்சு சற்று கடுப்புடனே கேட்டு வைத்தாள். பின்னே காதல் வந்தால் சொல்ல வேண்டும் இல்லை என்றால் மறுக்க வேண்டும். இரண்டும் அல்லாமல் அவனை அலைய விடுவது ஏன் என்ற கடுப்பு மஞ்சுவுக்கு.
அதற்கும் ஒரு புன்னகையே மஞ்சுவிற்கு கிடைத்தது. அதே நேரம் நிலாவின் கவனம் எங்கோ இருப்பதை கண்ட மஞ்சு அந்த இடத்தை பார்க்க அங்கு நின்றது என்னவோ இளமாறன் தான்.
“வாட்ச்மேன் வந்தாச்சா!” மஞ்சு கிண்டலாக கூறினாலும் உண்மை அதுதான். இளா அவனுக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம் வந்து நிலாவை தூரமாக நின்று பார்த்து விட்டு செல்லுவான்.
அவனுக்கு அதுவே போதுமாக இருந்தது போல். இன்றும் நிலாவின் மலர்ந்த முகத்தை பார்த்து விட்டு மகிழ்வுடன் சென்றான் இளா.
“நான் ஏன் அவருக்கு ஓகே சொல்லாம இருக்கேன்னு உனக்கு தெரியாதா மஞ்சு”
இளா சென்றதை பார்த்துவிட்டு பேசிய நிலாவின் இந்த வரிகளில் இருந்த வருத்தமே கூறியது அவளுக்கு இளமாறனின் மீது இருக்கும் காதலை. ஆனால் அவள் சம்மதம் கூற எண்ணும் நேரம் அவள் குடும்பமே அவள் கண் முன்னர் வந்து நின்றது.
நிலா அவள் பெற்றோர் ரகுவரன் ஆனந்தியின் ஒரே மகள். அவள் பெற்றோருக்கு நிலா தான் உலகமே. அவ்வளவு பாசம் வைத்துள்ளனர் அவள் மேல்.
ஆனால் அவர்கள் இருப்பது கூட்டு குடும்பம். அவர்கள் இருப்பது திருப்பூர் மாவட்டத்தில். அங்கே நிலாவின் பெரியப்பா எடுப்பது தான் இறுதி முடிவு.
படிப்பதற்காகவே கோயம்புத்தூரில் தங்கி இருக்கிறாள் நிலா. அதனாலே அவள் தயங்குவது. அது மஞ்சுவிற்கும் நன்றாக தெரியும். எனவே சமாதானமாக அவள் தோளை பிடித்து விட்டாள் மஞ்சு.
“இது இப்படியே இருக்கட்டும் மஞ்சு. முடிவு எப்படி இருக்கும்னு என்னால யோசிக்க கூட முடியலை. அதனால நான் இப்ப எதுவுமே யோசிக்க போறது இல்ல. இப்ப வா எக்சாம்கு நேரம் ஆச்சு போகலாம்”
நிலா தன் முடிவை கூறிவிட்டு தன் புத்தப்பையை எடுத்துக் கொண்டு
வகுப்பறை நோக்கி நகர்ந்தாள். மஞ்சரியும் ஒரு பெருமூச்சுடன் அவள் பின்னே நகர்ந்தாள்.
ஆனால் நிலா அறியவில்லை அவள் வாழ்வையே புரட்டிப்போடும் நாள் விரைந்து கொண்டிருப்பதை. அப்படி அவள் உடையும் தருணம் அவளுக்கு முற்று முதல் துணையாக நிற்கப் போவது அவள் காதல் தான் என்று.
——————————————-
தர்மராஜ் மாளிகை பெயருக்கு ஏற்றார் போல் அது மாளிகையாகவே இருந்தது. பெரிய மதில் சுவர்களுக்கு உள்ளே இரண்டு அடுக்கு கொண்ட அந்த இல்லம் நன்கு விசாலமாகவே இருந்தது. அன்று அந்த காலை நேரமும் அவர் இல்லமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
“ஏய் வசந்தி சீக்கிரம் பூரிக்கு எல்லாம் ரெடி பண்ணு. தியாக்கு இன்னைக்கு கடைசி பரீட்சை. அவ கீழ வரும் போது எல்லாமே தயாரா இருக்கனும் புரிஞ்சிதா”
“ரவி காரை தயாரா வை. பாப்பா வரும்போது எல்லாம் தயாரா இருக்கனும்”
அந்த வீட்டின் தலைவி மோகனா அனைவருக்கும் கட்டளையிட்டு கொண்டிருந்தார்.
“மோகனா உன்னை தியா காலைல வந்து எழுப்பிவிட சொன்னாளோ எழுப்பிவிட்டுட்டியா?”
“ஐயோ மறந்ததே போய்ட்டேங்க. நல்ல வேளை ஞாபகப்படுத்துனீங்க. இதோ போய்ட்டேன்”
கனவர் செல்வராஜ் கூறிய பின்னரே தன் செல்ல மகளை இன்னும் எழுப்பவில்லை என்றுணர்ந்த மோகனா வேகமாக அவள் அறையை நோக்கி நகர்ந்தார்.
தர்மராஜ் கோயம்பத்தூரில் பெரிய தொழிலதிபர், அவர் துணைவியார் செல்லம்மா. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் மூத்தவர் செல்வராஜ் அவர் மனைவி மோகனா. இவர்களின் பிள்ளைகள் தியா மற்றும் பாலாஜி.
தர்மராஜின் இளைய மகள் ராணி அவர் தன் கணவர் சிவகுமாரோடு தந்தை வீட்டின் அருகிலேயே ஒரு வீட்டை வாங்கி வசித்து வருகிறார். அவர்களுக்கும் இரண்டு பிள்ளைகள். மூத்தவன் விஜயன் இளையவன் இளமாறன்.
இவர்கள் இரண்டு குடும்பத்திற்கும் ஒரே செல்லப்பிள்ளை என்றால் அது தியா மட்டுமே. அவளை இளவரசி போல் வளர்த்து வருகின்றனர்.
அதுவும் அவள் தாத்தா தர்மராஜுக்கு அவர் பேரக் குழந்தைகளில் மிகவும் பிடித்தது தியாவை தான். ஏனெனில் அவள் பிறந்த பிறகு தான் தொய்ந்து கிடந்த அவர்களின் தொழில் அசுர வளர்ச்சி அடைந்தது என்று எண்ணுகிறார்.
வெளியே எங்கேயும் திருமணம் செய்து வைத்தால் அவளை காண முடியாது என விஜயனுக்கு திருமணம் பேசி வைத்திருக்கின்றனர் பெரியவர்கள்.
“பாப்பா! தியா! எழுந்திருமா. நேரம் ஆச்சு பாரு. அப்புறம் பரீட்சை எழுத நேரம் ஆகிரும்ல. எழுந்திருமா” மாடிக்கு வந்த மோகனா தன் மகளை எழுப்ப முயற்சி செய்தார்.
“மம்மி இன்னும் கொஞ்ச நேரம் பிளீஸ்” கொஞ்சும் குரலில் அவள் பேச சிரித்துக் கொண்டே அவளை மீண்டும் பேசி பேசி எழுப்பி விட்டார் மோகனா.
தியா குளித்து கிளம்பி வருவதற்குள் அனைத்தும் தயாராக இருக்க உண்டு முடித்து கல்லூரிக்கு கிளம்பி விட்டாள். ஒரு இளவரசி போல் கிளம்பி செல்லும் மகளை பெருமையாக பார்த்து வைத்தனர் அவள் பெற்றோர்.
அடுத்த வீட்டில் வேலைக்கு கிளம்பி கொண்டிருந்த விஜயன் அவளை காதலுடன் பார்க்க, இளமாறனோ கடுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஏனெனில் அந்த வீட்டில் இளமாறனின் பெயர் உதவாக்கரை. வீட்டில் எல்லோருக்கும் தியா முதல் செல்லம் என்றால் தங்கள் சொல் பேச்சு கேட்டு நடக்கும் பாலாஜி மற்றும் விஜயன் அடுத்த செல்லப்பிள்ளைகள்.
ஆனால் வீட்டில் யாரின் பேச்சையும் கேட்காமல் குறும்பு செய்யும், தவறு என்றால் தாய் தந்தைக்கே எதிராய் நிற்கும் இளமாறன் என்றால் கொஞ்சம் என்ன நிறைய கடுப்பு தான் அனைவருக்கும்.
ஆனால் அது அவன் மனதை எவ்வளவு தூரம் காயப்படுத்தும் என்று அவர்கள் அறியவில்லை. அப்படி காயம் அடைந்த அவன் மனதிற்கு மருந்தாய் வந்திருப்பவள் தான் நிலா. அவனின் வானில் வந்த வெண்ணிலா.
——————————————-
“ம்மா…. ம்மா…. தினேஷ் என் வொய்ட் சர்ட்டை எடுத்து போட்டுட்டான். அவனை என்னன்னு வந்து கேளுமா” உச்சஸ்தாயியில் ஒருவன் கத்தும் சத்தம் கேட்க
“ஆரம்பிச்சுட்டானுங்க இவனுங்களோட தினமும் இதே ரோதனையா போச்சு” புலம்பியபடி சென்றார் ரேணுகா.
“ம்மா… வினோ என்னை அடிக்கிறான் மா. சீக்கிரம் வா”
இப்போது தினேஷ் கத்த ஆரம்பிக்க ரேணுகா கோபத்தில் அவர்கள் அறைக்கு செல்லும் நேரம் தடால் தடாலென எதோ விழுந்த சத்தம் கேட்டது. “என்னத்த டா போட்டு உடைச்சீங்க. இருங்கடா வரேன்” என ரேணுகா வேகவேகமாக போக
அதற்குள் அவரின் இரண்டு புத்திரர்களும் அறைக்கு வெளியே ஓடி வந்துவிட்டனர்.
ரேணுகா அவர்களை நெருங்கும் முன் அவர்களின் தந்தையான பார்த்திபனின் அருகில் சென்று அமர்ந்துக் கொண்டனர். அந்த வானரங்களின் அறையை போய் பார்த்து விட்டு திரும்பிய ரேணுகா கத்த ஆரம்பித்தார்.
“ஏன்டா நீங்க ரெண்டு பேரும் வளர்ந்து காலேஜ் போக ஆர்பிச்சாச்சு. வினோ நீ இன்னும் கொஞ்ச நாள்ல வேலைக்கே போகப் போற. ஒரு சட்டைக்கு எதுக்குடா இப்படி சண்டை போடுறீங்க.
ரூமையே குப்பையாக்கி விட்டுட்டு வந்திருக்கீங்க. என்னால சுத்தம் பண்ண முடியாது சாமி. காலேஜ் முடிஞ்சு சாயந்திரம் வந்து உங்க ரூமை நீங்கதான் சுத்தம் பண்ணுறீங்க”
ரேணுகா திடீரென கோபத்தில் கத்தி விட்டு சமையலறைக்கு சென்றுவிடவும் அதிர்ந்து போன சகோதரர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து முழித்து பின் தந்தையை தாஜா செய்ய ஆரம்பித்தனர்.
“அப்பா எப்படியாவது காப்பாத்துப்பா. அம்மாவ சமாதானப்படுத்து” என கெஞ்சி பார்க்க
பார்த்திபன் நைசாக கழன்று கொள்ள பார்க்க “ப்பா இப்ப மட்டும் நீ அம்மாவா சமாதானம் பண்ணல நீ போன வாரம் திருட்டு தம் அடிச்சியே அதை அப்படியே அம்மாட்ட போட்டு குடுத்துருவேன்”
பார்த்திபனின் மூத்த மகன் வினோத் மிரட்ட “ஆமா ப்பா. நான் அதுக்கு சாட்சி சொல்லுவேன். என்ன சொல்ற” என்றான் இளைய மகன் தினேஷ்.
“டேய் பசங்கலா எதுக்குடா இந்த கொலைவெறி. உங்க அம்மா என்னை கொன்னு போடுவாடா. இருங்க நான் போய் பேசிப் பாக்குறேன்”
பார்த்திபன் தன் விதியை நொந்தபடி தயங்கி தயங்கி சமையலறைக்குள் நுழைய அதை கண்டு “சக்சஸ்” என்று சகோதரர்கள் இருவரும் தங்கள் கைகளை அடித்துக் கொண்டனர்.
பார்த்திபன் உள்ளே நுழையும் போதே ரேணுகாவிற்கு புரிந்து போனது அவர் எதற்கு வருகிறாரென.
ரேணுகா முன்னெச்சரிக்கை செய்ய பாவமாக தன் மகன்களை பார்த்தார் பார்த்திபன். அவர்களோ வெளியே நின்று “பேசுங்க பேசுங்க” என்று சைகை செய்ய அடுத்து என்ன நடக்கும் என்று தெரிந்ததால் அதை ஏற்க தயாராகி நின்றுவிட்டார் பார்த்திபன்.
“அவனுங்க ரெண்டு பேரும் கெட்டு போறதுக்கு காரணமே நீங்கதான்” என்று ஆரம்பித்த ரேணுகா திட்ட ஆரம்பித்தவர் “அந்த ரூமை நீங்கதான் சுத்தம் பண்றீங்க. அதுக்கு அப்புறம் தான் உங்களுக்கு சாப்பாடு” என்று முடித்தார்.
இப்போது பார்த்திபன் தன் மகன்களை பாவமாய் பார்க்க அவர் தவப்புதல்வர்களோ எதோ தீவிரமாக பேசிக் கொண்டிருந்தனர். இல்லை பேசுவது போல் நடித்தனர். அதற்கு மேல் செய்ய ஒன்றுமில்லை என்று உணர்ந்த பார்த்திபன் சுத்தம் செய்ய சென்றார். இல்லையென்றால் சோறு கிடைக்காதே.
பார்த்திபன் ரேணுகா இருவரும் காதலித்து வீட்டை விட்டு வந்து திருமணம் செய்துக் கொண்டவர்கள். அவர்களின் இரு மகன்கள் வினோத் மற்றும் தினேஷ். இந்த பெற்றோர்களுக்கு இரண்டு பிள்ளைகள் தான் உலகமே.
அவர்களின் இந்த சின்ன உலகம் என்றும் மகிழ்வுடன் தான் இருந்து வருகிறது.
இப்படி வித்தியாசமான மூன்று குடும்பங்களை சுழற்றி அடிக்க புயல் ஒன்று மையம் கொண்டிருக்க, அதில் யார் யாரை சிக்கி சிதைப்பது என விதி மேலே ஒரு கணக்கை துவங்கி விட்டதை யார் அறிவாரோ!