பலவர்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் ஒரு அழகிய நந்தவனம். மல்லி முல்லை போன்ற மலர்களின் வாசம் அந்த காற்றில் நன்கு நிறைந்திருந்தது. அந்த நந்தவனத்தின் நடுவே புடவை உடுத்திய பெண் ஒருத்தி பூக்களோடு பூக்களாய் அமர்ந்திருந்தாள்.
தூரத்தில் இருந்து பார்த்த இளமாறனுக்கு நெஞ்சம் முழுவதும் பட்டாம்பூச்சிகள் பறந்தன. அவள் உருவத்தை வைத்தே அந்த பெண் பேரழகியாக தான் இருப்பாள் என்று கணித்து விட்டான் இவன்.
ஆனால் தூரத்தில் இருந்து பார்த்ததால் அவள் முகம் சரியாக தெரியவில்லை. எனவே மெதுவாக அந்த பூக்களை விலக்கி அவள் அருகே சென்றான்.
ஒரு பெரிய டாலியா மலரை கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்த அவள் முகம் அவன் நெருங்கி செல்ல செல்ல யாரையோ நினைவுப்படுத்தியது.
தன் முன்னே கேட்ட அரவத்தில் பெண்ணும் நிமிர்ந்து பார்த்தாள். அந்த பெண் வேறு யாரும் இல்லை இளமாறனின் நிலவழகி தான்.
அவள் பளிங்கு முகத்தை தற்போது ஆர்வத்துடன் கண்ட மாறன் தன் கையில் ஏந்தி, அவள் கண்ணோடு கண் நோக்கினான். கண் நான்கும் காதல் பாஷை பேசிட அந்த மயக்கத்தில் மாறன் அவள் இதழ் நோக்கி தன் இதழை கொண்டு சென்றான்.
மாறனின் இதழ் நிலாவை நெருங்கும் நேரம் “அத்தை… அத்தை…” என்று ஒரு குரல் தூரத்தில் கேட்டது.
அதை சட்டை செய்யாத மாறன் மீண்டும் நிலாவை நெருங்கும் சமயம் “அத்தை மாமா எல்லாரும் எங்க இருக்கீங்க..” என்று அதே குரல் மாறனின் காதில் கொடூரமாக வந்த விழ அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தான்.
மாறன் நிதானத்திற்கு வரவே சிறிது நேரம் பிடித்தது. அப்போது தான் புரிந்தது அவனுக்கு வந்தது எல்லாம் கனவு என. ஆனால் கனவில் கூட தன் காதலியை நெருங்க விடாத அவன் மாமன் மகளை எண்ணி பல்லை கடித்தான் மாறன்.
“ஸ்கூல் காலேஜ்னு போறப்ப நல்லா இழுத்து போத்தி தூங்கிட்டு, இப்ப காலேஜ் முடிஞ்சதும் காலங்காத்தால வந்து என் உயிர வாங்குது. இரு இந்தா வரேன்”
உள்ளே எழுந்த புகைசச்லில் சென்ற மாறன் நடுவீட்டிற்கு வந்து பார்க்க அவன் தாய் தந்தை தமையன் தியா என அனைவரும் அங்கே தான் அமர்ந்து சிரித்து பேசிக் கொண்டிருந்தனர்.
அதுவும் தியா “அத்தை மாமா” என கொஞ்சி கொஞ்சி எதுவோ பேசிக் கொண்டிருந்தாள்.
“நிறுத்துங்க எல்லாரும் ச்சே இது என்ன வீடா இல்ல வேற எதாவதுமா. வீக் என்ட் சண்டே இன்னைக்காவது நிம்மதியா தூங்க முடியுதா. காலைலையே அத்த நொத்தன்னு வந்து கத்திட்டு இருக்க”
தன் கனவு பறிபோன கடுப்பில் கத்திய மாறனை அனைவரும் குழம்பி போய் பார்த்தனர்.
தியா வழமை போல் தன் கொஞ்சும் குரலில் அத்தையிடம் மாறனை பற்றி குறைப் படிக்க மாறனுக்கோ அவள் குரலை கேட்டு தன் தலையை நங்கு நங்கென்று சுவற்றில் முட்டித் கொள்ளலாம் போல் இருந்தது.
“யாருக்கு தங்கம் தெரியும். அவன் கிடக்குறான் வெட்டிப்பய விடு. நீ வா நான் உனக்கு பிடிச்ச டிபன் செய்யப்போறேன் நாம உள்ள போகலாம்” என அவளை அழைத்து சென்றுவிட்டார் மாறனின் தாய் ராணி.
இவர்களிடம் நின்று தன்னால் பேச முடியாது என கடுப்பில் தன் அறைக்கே சென்று விட்டான் மாறன்.
இப்படி காலையிலே காண்டாக எழுந்த மாறனுக்கு இதற்கு மேல் நாள் நன்றாக செல்ல வேண்டும் என்றால் தன் நிலவை சென்று பார்த்து விட்டு வர வேண்டும் என முடிவு செய்து கிளம்பி விட்டான்.
மாறன் கிளம்பி கீழே வரும் நேரமும் அதே கூத்து தொடர்ந்து கொண்டிருக்க
“நடத்துங்க நடத்துங்க எத்தனை நாளைக்கு இந்த கொஞ்சல் எல்லா நடக்குதுன்னு நானும் பாக்க தானே போறேன். இந்த வீட்டுல மாமியார் மருமக சண்டை வராமையா போயிறும் அப்ப பேசிக்கிறேன்” என மனதிற்குள் கறுவியபடி கடந்து சென்றான்.
—————————————–
நிலா வெறுமையாக இருந்த அந்த அறையை சுற்றி பார்த்து நின்றாள். இந்த ஓராண்டு முழுவதும் அவள் சுக துக்கங்கள் என அனைத்தையும் பார்த்த அறையாயிற்றே.
நான்காம் ஆண்டு கல்லூரி வாழ்க்கை நிறைவுற்றது. இனி கடைசி வருடம் மட்டுமே. அதுவும் வெளி மருத்துவமனையில் பயிற்சி. அதற்கு வெளியே எதாவது அறை எடுத்து தான் தங்கி கொள்ளும்படி இருக்கும்.
அந்த நினைவில் நிலாவும் மஞ்சும் சில நிமிடங்கள் கழித்து விட்டு தங்கள் பைகளை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தனர்.
“நிலா கஷ்டமா இருக்குல்லடி. இனி ஒரு வருஷம் புல்லா இன்டர்ன் பண்ணனும். அப்புறம் வாழ்க்கை எப்படி இருக்குன்னு நினைக்கும் போதே கொஞ்சம் பயமா கூட இருக்குடி”
“விடு மஞ்சு நாமளும் லைப்ல அடுத்த கட்டத்தை பார்க்கனும்ல. சரி வா போகலாம். என் அண்ணா வேற வந்து வெயிட் பண்ண போறாரு”
மஞ்சுவிற்கு ஆறுதல் கூறியபடி வந்த நிலாவை அங்கிருந்த வேறொரு தோழி அழைக்கவும் அவள் அங்கேயே தேங்கி நின்று விட்டாள்.
மஞ்சுவோ ‘சரி நாம முன்னாடி போவோம்’ என்று முன்னே நகர்ந்தாள். அப்போது தான் அங்கே நிலாவின் அண்ணன் மித்ரன் வருவதை கண்டு அப்படியே நின்று விட்டாள்.
மித்ரன் நிலாவின் பெரியப்பா மகன். நிலாவின் மீது மிகுந்த பாசம் கொண்டவன். ஊரில் தந்தை சித்தப்பா பார்த்த கார்மென்ட்ஸ் தொழிலை இப்போது இவன் எடுத்து திறம்பட நடத்தி வருகிறான்.
நிலாவை கல்லூரியில் விட்டு செல்ல அழைத்து செல்ல வரும் போது தான் மித்ரன் மஞ்சரிக்கு அறிமுகம். அவன் நிலாவை பார்த்து கொள்ளும் பாங்கு மஞ்சுவை கவர்ந்து விட்டது எனலாம்.
அதிலிருந்து மித்ரன் மேல் ஒரு இனம்புரியா உணர்வு தான் மஞ்சுவிற்கு. அதை மறைக்காமல் நிலாவிடம் சொல்லியும் விட்டாள் மஞ்சு. அதேநேரம் அவனை பார்க்கும்போது இப்படி திகைத்தும் நின்றுவிடுவாள்.
அவள் மித்ரனை கண்டு மெய்மறந்து நிற்கும் நேரம் சரியாக போனில் அழைப்பு வந்தது. நிலா தன் கைப்பையை மஞ்சுவிடம் தந்து சென்றிருக்க அவளின் பையில் இருந்து தான் சத்தம் வந்தது. மஞ்சு எடுத்து பார்க்க அழைத்தது இளமாறன்.
இளமாறனின் முதன்முறை தொலைபேசி அழைப்பு. ஆனால் அது இருந்தது என்னவோ மஞ்சுவின் கையில்.
“ஹலோ நிலாமா”
“அண்ணா நான் மஞ்சரி. உங்க நிலா இப்ப அவைலபில் இல்ல”
தயக்கம் ஆர்வம் குதூகலம் என கலந்து அழைத்த மாறனுக்கு புஸ்சென்று ஆனது. அது அவன் “ஓஓ…” என்றதில் நன்றாக புரிந்தது மஞ்சுவிற்கு.
“ஹலோ பிரதர் உடனே சோக மோட்கு போயிறாதீங்க. நிலா இங்க ஒரு ஃபிரண்ட்கிட்ட பேசிட்டு இருக்கா. இப்ப வருவா அதுவரை நான் உங்கள எங்கேஜ் பண்றேன்” என மஞ்சு கூறியதும் தான் சற்று நிம்மதியானது.
“சரி என்னம்மா பண்றீங்க ரெண்டு பேரும்”
“அதுவா அண்ணா. இன்னைக்கு தான் எங்களுக்கு காலேஜ்ல கடைசி நாள். அதான் எல்லாரும் ஹாஸ்டலை காலிபண்ணி ஊரை பார்த்து கிளம்பிட்டு இருக்கோம். உங்க நிலாவ கடத்திட்டு போக என் ஆளும் வந்திருக்காரு”
மஞ்சுவும் பேச்சுவாக்கில் உலறிவிட “என்ன மஞ்சு சொல்ற. உன் ஆளு யாரு. அவரு எதுக்கு என் நிலாவ கூட்டிட்டு போகனும்” என படபடவென பொறிந்தான் மாறன்.
அப்போதே தான் உலறியதை உணர்ந்த மஞ்சு “ஐயோ!” என தன் நாக்கை கடித்துக் கொண்டாள்.
மாறன் வேறு அவன் யாரென்று சொல்லுமாறு கேட்டு குடைய மஞ்சு திக்கி திணறி மித்ரன் யாரென சொல்லி விட்டாள்.
“ஏய் மஞ்சு அப்ப உண்மையாவே நீ என் தங்கச்சி ஆகப்போறியா. சூப்பர் சூப்பர். அப்புறம் சிஸ்டர் நிலாவ பார்க்க நான் உங்க காலேஜ்க்கு வந்திருக்கேன். நீங்க ரெண்டு பேரும் எங்க இருக்கீங்கனு சொல்லு நான் அங்க வரேன்.
அப்படியே என் மச்சானையும் பார்த்துட்டு எப்படி மச்சான் இருக்கீங்கன்னு கேட்டுட்டு போறேன்”
மாறன் கூறியதை கேட்டு துள்ளிவிட்டாள் மஞ்சு. மித்ரனுக்கு ஏதேனும் சந்தேகம் வந்துவிட்டால் நிலாவின் நிலை என்ன என்று யோசித்து பார்த்த மஞ்சுவிற்கு தலைசுற்றியது.
இதில் சூழல் புரியாத மாறன் வேறு கிண்டல் செய்ய நெஞ்சு வலியே வந்துவிட்டது மஞ்சுவிற்கு. அதில் அப்போது தான் ஒரு விசயத்தை கவனித்தாள் மஞ்சு.
போனில் பேசியபடி இளமாறன் மித்ரனின் அருகில் வந்து நின்றிருந்தான்.
“இளா அண்ணா..” மஞ்சுவிற்கு அதற்குமேல் வார்த்தை வரவில்லை. நாக்கு பசைப்போட்டு ஒட்டிக் கொண்டது போல் ஆனது. அங்கே மாறன் “ஹலோ ஹலோ…” என கத்திக் கொண்டிருக்க
“எங்க எங்க இருக்காரு.. வேர் இஸ் மை மச்சான்…” மாறன் ராகமாய் இழுத்து நிறுத்த
“உ… உங்க பின்னாடி. என்னை ஆள விடுங்க அண்ணா” மஞ்சு விட்டால் அழுது விடும் குரலில் கூறி போனை வைத்துவிட்டாள்.
“என்னாது என் பின்னாடியா…?” ஜெர்க்கான இளமாறன் அப்படியே திரும்பிய நேரம் மித்ரன் நெருங்கிவிட்டான். அதில் மாறன் தடுமாறி மித்ரன் நெஞ்சில் மோதி விழப்போக அவன் விழாது மித்ரன் பிடித்துக் கொண்டான்.
படத்தில் ஹீரோ ஹீரோயின்க்கு வரும் காட்சி அட்சு பிசகாமல் மித்ரன் இளமாறனுக்கு நடந்துவிட அதை அப்படியே மஞ்சுவும் அப்போது என வந்த நிலாவும் பார்த்து திகைத்துப்போய் நின்றனர்.
சட்டென்று நடந்துவிட்ட நிகழ்வில் அதிர்ந்து நின்று சிறிது நேரம் கழித்தே விலகினர் மித்ரனும் மாறனும். அங்கே அதிர்ச்சியில் இருந்து விலகியிருந்த மஞ்சுவின் நிலாவும் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தனர்.
“நிலா உனக்கும் மாறன் அண்ணாவுக்கும் செட்டாகுதோ இல்லையோ. ஆனா கண்டிப்பா உன் அண்ணாவுக்கும் உன் ஆளுக்கும் கெமிஸ்ட்ரி செமையா ஒர்க் ஆகும் போலையே”
மஞ்சு அவர்களை கிண்டல் செய்து சிரிக்க சிறிது நேரம் தானும் சிரித்த நிலா இப்போது ஒரு குண்டை தூக்கிப் போட்டாள்.
“நான் மாறனை பத்தி எல்லா விஷயத்தையும் மித்ரன் அண்ணாகிட்ட சொல்லிட போறேன்டி”
“ஏய் என்னடி சொல்ற அப்ப மாறன் அண்ணாக்கு ஓகே சொல்ல போறியா. அப்போ ஏன்டி இவ்ளோ நாள் அவரை அலைய விட்ட” மஞ்சு ஆச்சரியமாக கேட்டாள்.
“ஆமா மஞ்சு ஓகே சொல்ல போறேன். இவ்ளோ நாள் ஏன் ஓகே சொல்லாம இருந்தேன்னா அதுக்கும் ஒரு காரணம் இருக்கு.
இந்த லவ் ரிலேஷன்ஷிப்ல யோசிக்காம சரின்னு சொல்லிட்டு பாதில விட்டுட்டு போகக்கூடாதுடி. கடைசி வரைக்கும் அதுல ஸ்ட்ராங்கா நிக்கனும்.
அதுக்கு தான் இவ்ளோ நாள் எல்லா பக்கமும் நான் யோசிச்சேன். எந்த சூழ்நிலையும் எனக்கு சாதகமா இல்லை. அதை நான் சொல்லியே ஆகணும். ஆனா அவருக்கு என்னால நோவும் சொல்ல முடியலை மஞ்சு.
மனசுல எங்கையோ வந்து உக்காந்துட்டாரு போல. அதான் என்ன பிரச்சினை வந்தாலும் பார்த்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். அதுக்கு முதல் படியா என் மனசுல இருக்கிற எல்லாத்தையும் என் அண்ணாட்ட சொல்ல முடிவு செஞ்சேன்.
அண்ணா கொஞ்சம் மார்டன் தான். சொன்னா புரிஞ்சுப்பான்னு நம்புறேன். அண்ணாட்ட சொன்ன உடனே மாறன்கிட்டையும் சொல்லிடுவேன்”
நிலாவின் பதிலில் அவளை ஆச்சரியமாக பார்த்து புன்னகைத்த மஞ்சு “ம்ம் தெளிவுதான். சரி அதைவிடு அங்க மாமன் மச்சான் ரொமான்ஸ் என்ன ஆச்சுன்னு பார்ப்போம்” என்றாள்.
நிலாவும் சிரித்தபடி அங்கே என்ன நடக்கிறது என பார்த்தாள். மித்ரனின் மேல் மோதிய மாறனே எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டு “சாரி சார்” என்றான்.
அவன் முழியை விநோதமாக பார்த்த மித்ரன் “இட்ஸ் ஓகே. பார்த்து போங்க” என்று தங்கையை நோக்கி சென்றான். அங்கே நின்ற தன் நிலவை கண்ட மாறனும் மகிழ்வுடன் கிளம்பினான். ஆனால் இன்னும் சில நாட்கள் அவளை பார்க்க முடியாது என மனதில் வருத்தமும் நிறைய இருந்தது.
—————————————–
விடுமுறை நாள் என்பதால் நண்பர்களுடன் நன்றாக ஊரை சுற்றிவிட்டு மாலை போல் வீடுவந்து சேர்ந்தான் வினோத்.
“டேய் பார்த்திபா இந்த புள்ள யாருடா” வினோத் வீட்டில் நுழையும் நேரம் முப்பத்தி இரண்டு பற்களையும் காட்டியபடி நடுவீட்டில் சட்டமாய் அமர்ந்திருந்தார் ஒரு மனிதர்.
வினோத் அவரை குழப்பமாக பார்க்க
“அவரு உன்னோட பெரியப்பா வினோத்”
“அண்ணா அவன் தான் என் மூத்த பையன் பேரு வினோத்”
பார்த்திபனே இருவருக்கும் பரஸ்பரம் அறிமுகம் செய்து வைத்தார். பார்த்திபன் காதல் திருமணம் ஆதலால் இதுவரை சொந்தங்கள் என யாரும் இவர்கள் வீட்டிற்கு வந்ததும் இல்லை. இவர்களும் யார் வீட்டிற்கும் சென்றதில்லை.
இப்போது புதிதாக ஒரு உறவினர் வந்தது நன்மைக்காக தீமைக்கா என புரியாது பார்த்து வைத்தான் வினோத்.