வீடெங்கும் தோரணம் கட்டப்பட்டிருக்க விசேஷத்திற்கு வந்திருக்கும் உறவினர்கள், விருந்தினர்கள் கை நிறைய வளையல், மஞ்சள் குங்குமம், வெற்றிலை, பாக்குடன் வெளியேறியபடி இருந்தனர்.
விழாவினில் கலந்துவிட்டு கிளம்புபவர்களுக்கு மறவாமல் தாம்பூலம் பைகளும் கொடுக்கப்பட்டது.
“ராகவ் நீ போய் சாப்பிட்டு வா. வர்றவங்களுக்கு நான் குடுக்கறேன்…” என்று வாசலில் நின்றிருந்த ராகவனிடம் நளன் கூற,
“நீங்க சாப்பிட்டாச்சா ண்ணா?…” என கேட்டுக்கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்து மேஜையை தாண்டி வெளியே வந்து நின்றான் ராகவ்.
“இவ்வளோ நேரம் என்னை சாப்பிட வைக்காம இருப்பாங்களா? அதெல்லாம் செம கவனிப்பு…” என்று காலரை தூக்கிக்கொண்டு நளன் கூற,
“பின்ன, வீட்டு மாப்பிள்ளை நீங்க. உங்களை தான முதல்ல கவனிப்பாங்க. நாங்க ஆப்ட்ரால் பொண்ணு குடுத்தவங்க தானே?…” என்று கிசுகிசுப்பாய் ராகவ் சொல்லவும்,
“கொஞ்சம் சத்தமா தான் சொல்றது. என் மாமியார், பொண்டாட்டி காதுல விழட்டும்…”
“ம்க்கும், அப்படி விழுந்தா கூட பிரச்சனை இல்லை. வேற யார் காதுலையும் விழுந்து அது இந்த வீட்டு அதிகாரி காதுக்கு கேட்டுட்டா….” என்றான் நெஞ்சில் கை வைத்து.
“என் தங்கச்சி அப்பவே சொன்னா, பேரை பார்த்து ஏமாந்துட்டோம் அண்ணான்னு. கேட்டோமா நாங்க? குடும்பத்தோட உங்க மச்சானுக்கு வாக்கப்பட்டு சிக்கி சின்னாபின்னமாகிட்டிருக்கோம்….” என்று சொல்லவும் வாசலில் கார் வந்து நிற்கவும் சரியாய் இருந்தது.
காரிலிருந்து காக்கி உடையில் இறங்கி வேகமாய் உள்ளே வந்துகொண்டிருந்தவன் முகத்தில் எப்போதும் போல அதே கடினம்.
“கஞ்சியை சட்டைக்கு மட்டும் போடாம உள்ளையும் ஊத்திக்கிட்டு விரைப்பா இருப்பாங்கன்னு சொல்லுவாங்களே? அதுக்கு பெர்பெக்ட் எக்ஸாம்பிள் என் தங்கச்சி புருஷன் தான்…” என்று நளன் காதில் மட்டும் கேட்குமாறு முகமெல்லாம் சிரிப்புடன் ராகவ் சொல்ல,
“அவனுக்கு லிப் ரீடிங் தெரியும்டா தம்பி. சிக்கிடாத…” என்று தானுமே சிரித்துக்கொண்டு ராகவ்வை பார்த்து பதிலளித்தான் நளன்.
“ஆத்தீ…” என்று சட்டென்ற திகைப்புடன் அங்கே பார்க்க, இவர்கள் இருவரையும் கவனித்தபடி வாசலை தாண்டிமுன் பகுதிக்கு வந்துவிட்டான் அவன்.
ப்ரியதர்ஷன். தற்போது திருச்சியில் காவல்துறை உதவி ஆணையராக பணிபுரிந்து வருபவன்.
“தேடி தேடி வச்சிருக்காங்க பார் ப்ரியதர்ஷனாம். சான்ஸ் கிடைச்சா ப்ரியமே இல்லாத தர்ஷன்னு மாத்திருவேன்…” என்று அவன் மனைவி புலம்பாத நாளில்லை இதனை சொல்லி.
இப்போதும் மனைவியின் வளைகாப்பிற்கு அவன் வந்து நிற்கும்நேரம் பார்த்து கேள்வி கூட கேட்க முடியாமல் பார்த்தனர்.
“வாங்க மாப்பிள்ளை…” என்று நலம் விசாரித்தான் ராகவ்.
“ஹ்ம்ம், பங்க்ஷன் முடிஞ்சதா?…” என தலையசைத்து கேள்வி எழுப்பியவன் வாசலில் இருந்த கற்கண்டை எடுத்து வாயில் போட்டுக்கொண்டே நளனை பார்த்தான்.
“இந்தா தெளிச்சிட்டேன்…” என்று நளனும் வந்தவனுக்கு பன்னீர் தெளிக்க,
“இப்போ தான் முடிஞ்சு எல்லாரும் சாப்பிட்டு கிளம்பிட்டிருக்காங்க மாப்பிள்ளை….” ராகவ் பதில் கூற,
“ஆமாமா, இந்தா தெளிச்சிட்டேன். நீங்க தான? அட போங்கண்ணே. என் வாய் இருக்கே. இப்ப எனக்கு பசியே போச்சு…” என்று நொந்துகொண்டு நிற்க,
“சரி, நீ உக்கார். இனிமே வீட்டு மாப்பிள்ளை கெத்தை எல்லாம் சுருட்டி பாக்கெட்ல வச்சுக்கனும் நான்…” என்றவன்,
“நான் போய் ப்ரியன் சாப்பிடும்போது உன்னை கூப்பிட சொல்லி என் பொண்டாட்டி அமலாட்ட சொல்லிட்டு வர்றேன்…” என உள்ளே சென்றான் நளன்.
உள்ளே வந்த ப்ரியதர்ஷன் வந்திருந்த அனைவருக்கும் பொதுவான வணக்கத்தையும், வரவேற்பான தலையசைப்பையும், சிறு புன்னகையையும் தந்துவிட்டு தாயின் அறைக்குள் நுழைந்துகொண்டான்.
அங்கே கட்டிலில் அமலாவின் பெண் துளசியும், ராகவ்வின் மகன் நிலவனும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.
நிலவனுக்கு தட்டிக்கொடுத்தபடி உறங்கியிருப்பாள் துளசி என பார்த்ததுமே தெரிந்துபோனது ப்ரியதர்ஷனுக்கு.
பிள்ளைகள் இருவரையும் பார்த்தபடி தன் சட்டையின் பட்டனை கழற்ற ஆரம்பிக்க மகனின் முதுகை பார்த்துக்கொண்டு நின்ற அங்கையிடம்,
“ம்மா, போய் பாருங்க…” என்று அமலா சொல்ல,
“நீ மட்டும் என்ன பன்ற? வா கூட….” அங்கையற்கரசி மகளையும் கையோடு இழுத்துக்கொண்டு அந்த அறைக்குள் நுழைந்தார்.
“வாப்பா, இப்ப தான் வர்றியா?…” என அங்கை மகளை பார்த்துவிட்டு மகனிடம் கேட்க,
“வந்ததை பார்த்துட்டு தான இருந்தீங்க?…” என்று பதில் மகனிடமிருந்து.
“அப்பறம் என்னம்மா? என்னமோ நானில்லாம விசேஷத்தை நடத்தாதது மாதிரி…” என்றதும் அங்கைக்கு தலை சுற்ற ஆரம்பித்தது.
“என்னம்மா, சைலன்ட் ஆகிட்டீங்க?…” என்று மீண்டும் அவன் தாயிடம் கேட்க அவர் தலையை மட்டும் அசைத்தார்.
‘வாய திறந்தாதானடா நீ பேசுவ?’ என்பதை போல அங்கை அப்படியே அமைதியாகிவிட்டார்.
“ஆரம்பிச்சிட்டான்…” என சத்தமின்றி முணுமுணுத்த அமலா,
“நீங்க பேசிட்டிருங்க. இன்னும் கொஞ்சநேரத்துல அவந்தி வீட்டுல புறப்பட்டுடுவாங்க. போய் என்னென்ன வேணும்ன்னு கவனிக்கனும்…” என்று நகர பார்க்க,
“அமலா, நில்லு…” என்றவன்,
“அவந்திகா எங்க? மாடியிலையா இருக்கா?…” என்றான்.
“இல்லப்பா, இந்த நேரம் மாடிக்கு எப்படி போவா? போகலை. கீழ என்னோட ரூம்ல தான் இருக்கா. ஹால்ல ஒரே வெக்கை. வெயில்ல கசகசப்பு. அதுவுமில்லாம ஹல்ல தான எல்லாருக்கும் பந்தி நடக்குது….” என வேகமாய் அமலா சொல்ல,
“வெயில் நேரம்ன்னு தெரியும் தானே? அப்படி என்ன அவசரம் ஏழாம் மாசமே வளைகாப்பு வைக்கனும்ன்னு?…” என்று ப்ரியதர்ஷன் எரிந்து விழ அமலாவும், அங்கையும் மாறி மாறி பார்த்துக்கொண்டனர்.
அவனிடம் சொல்லவா முடியும் உன் மனைவியின் விருப்பம் என்று. பிள்ளைத்தாச்சி பெண் ஆசைப்படுகிறாள் என்று நாள் பார்த்து குறித்த பின்னர் தான் மகனிடமே அங்கை சொல்லியது.
“ஏன் இத்தனை சீக்கிரம்? மருமகளை வச்சு பார்த்துக்க கஷ்டமா?…” என திருச்சியில் இருந்து சென்னை வெயிலுக்கு பெட்ரோல் ஊற்றுவதை போல கனன்றான்.
வாயே திறக்கவில்லை அம்மாவும், அக்காவும். அமைதியாக இருந்து அவனிடமிருந்து தப்பித்துக்கொண்டனர்.
“என்ன முழிக்கறீங்க?…” என்றவன்,
“இப்ப கீழ பந்தி நடக்குது. தாண்டி கூட வர சங்கடமா இருக்கு. மாடில வைக்க வேண்டியது தான? ஏன் இங்க வச்சீங்க?…” என்று கண்டிப்புடன் பார்த்தவன்,
தூக்கிவாரி போட்டது அமலாவிற்கு. ஏற்கனவே வீட்டில் ஒருமுறை சின்னதாய் ஒரு பிரச்சனை என்று தெரியாமல் தாய் வீடு வந்துவிட்டதற்கு இப்போது வரை அமலாவின் மாமியார், மாமனாரை பார்த்தாலே விசாரணையை ஆரம்பித்து விடுகிறான்.
இன்றைக்குமே அவர்கள் ப்ரியதர்ஷன் வரவில்லை என்ற பின்னர் தான் கிளம்பியே வந்தனர்.
“இதெல்லாம் ஒரு பேச்சாப்பா? அவன் என்ன பேசினா என்ன? நாம விசேஷத்துக்கு தான போறோம். இதுக்கு போய் வரமாட்டேன்னுட்டு. அவந்திகாவோட வீட்டுல என்ன நினைப்பாங்க நம்மளை?…” என்று நளன் தான் இழுத்து வந்திருந்தான்.
இப்போது அவந்திகாவின் பெற்றோரிடம் கலகலப்பாய் பேசிக்கொண்டிருந்தார்கள் அவர்கள்.
உண்மைக்கும் ப்ரியதர்ஷன் இல்லாத இடத்தில் சுதந்திரமான காற்றை சுவாசிப்பதை போல தான் அவர்கள் இருந்தனர்.
வந்த விஷயம் தெரிந்திருந்தால் சொல்லிக்கொள்ளாமலும் செல்ல முடியாமல், சொல்லிக்கொண்டு அவன் முன்பும் வர முடியாமல் என்ன செய்வார்களோ என்றானது அமலாவிற்கு.
“எந்த குடும்பத்துலையாச்சும் இப்படி பொண்ணை எடுத்தவங்க அரண்டு போய் ஓடறதை பார்த்திருக்கியா? உன்னை கட்டிக்கிட்டு வசமா சிக்கிருக்கேன்…” என புலம்ப ஆரம்பித்துவிடுவான் நளன்.
“அமலா…” என நளனின் குரல் கேட்கவும் அவள் திரும்பி பார்க்க,
“நீ போ. கூப்பிடறார்ல…” என்று அமலாவை அனுப்பினான் ப்ரியதர்ஷன்.
“நீ போய் அவந்திகாவை பாருப்பா…” என்றார் அங்கை மகனிடம்.
“முதல்ல நான் குளிக்கனும். இப்படியே அவக்கிட்ட போய் நிக்க முடியுமா?…” என்று சொல்லியவன் திரும்ப, அங்கே அவந்திகாவின் பெற்றோர் வந்துவிட்டனர்.
“வாங்க மாப்பிள்ளை, இப்ப தான் வந்தீங்களா?…” என்றார் முகிலரசன்.