“எல்லாருக்கும் சொன்ன பின்னாடி தானே வர முடியாது, லீவ் போடமாட்டேன்னு இவன் சொன்னான். இப்ப வந்து நிக்கறான்…” என அயர்ச்சியாய் சொல்லியவர்,
“நீங்க எதுவும் தப்பா நினைக்காதீங்க…” என்று அங்கை பேச,
“அட என்னம்மா நீங்க வேற? அவர் வேலை அப்படி. விடுங்க…” என்றவர்,
“கலா போய் அவந்திக்கிட்ட சொல்லு. அவளுக்கு தெரியுமோ இல்லையோ?…” என்று மனைவியை அனுப்பினார் அவர்.
“நீங்களும் வாங்க, எல்லாரும் இங்க இருக்கோம். இருக்கறவங்களை கவனிக்கனுமே?…” என்று அரசன் அங்கையை அழைத்து சென்றார்.
கலா மகளை தேடி அமலாவின் அறை உள்ளே செல்ல கட்டிலில் படுத்திருந்தாள் அவந்திகா.
அருகில் சேரில் அமர்ந்திருந்த தன் மருமகள் தரணியை பார்த்தவர் மகள் உறக்கம் கலையாமல் லேசாய் தோளை தட்டவும் தான் திரும்பினாள் தரணி.
“என்னத்தை?…” என்றவள்,
“எங்க நிலவனை காணும்? மாமாகிட்ட இருக்கானா?…” என்று தன் மகனை விசாரிக்க,
“அமலா பொண்ணு தான் விளையாட போறோம்ன்னு கூட்டிட்டு போனா. ரெண்டும் அப்படியே தூங்கிடுச்சுங்க…”
“சரியா போச்சு. வந்ததுல இருந்து அமலாக்காட்ட துளசி ஒரே அடம், நமக்கு எப்போ தம்பி வரும்ன்னு கேட்டு பாடா படுத்திட்டா. இன்னும் கிளம்பும்போது என் தம்பின்னு விடமாட்டேன்னு ஒரு அழுகை இருக்கு பாருங்க…” என தரணி சொல்ல,
“அண்ணன்னு சொல்லு தரணி. அவர் கேட்டா அதுக்கும் எதாச்சும் சொல்ல போறார்…” என்ற கலா,
“இவ என்ன தூங்கிட்டா? கிளம்பும்போது பாதில எழுப்பிட்டா தலை வலிக்க ஆரம்பிச்சிடும் அவந்திக்கு. அப்பறம் அதுக்கு ஒருமூச்சு பாட்டா பாடி நமக்கு தலைவலி வரவைச்சிருவா…” என கவலையாக,
“நான் தான் தூங்க சொன்னேன். வளையல் போட்டுட்டு அங்கயே உக்கார முடியாம பட்டு சேலை கசகசப்பு வேற. பிள்ளை அலண்டு போய்ட்டா. ரெஸ்ட் எடுக்கட்டும்…”
“நான் பார்த்துக்கறேன் த்தை. நீங்க போங்க. குளிச்சிட்டு வர நேரம் இருக்கு. அதுக்குள்ள நான் எழுப்பறேன்…” என அவரை அனுப்பிவிட்டு மீண்டும் கதவை லேசாய் சாற்றிய தரணி அவந்திகாவின் தோள் தொட்டு அதிராமல் லேசாய் அசைக்க, அவந்திகாவின் விழிகள் உறக்கம் கலைந்ததில் சுருங்கியது.
“ப்ச், ம்மா…” என முகம் சுருக்கி விழிகளை திறந்தவள்,
“என்னண்ணி, அதுக்குள்ள டைம் ஆகிடுச்சா? கிளம்பனுமா?….” என்று கேட்டு மெல்ல அசைந்து எழுந்து அமர்ந்தாள் அவந்திகா.
“நீ கிளம்பறதுலையே இரு….” என சிரித்த தரணி ப்ரியதர்ஷன் வந்த விஷயத்தை சொல்லும் முன் கைப்பேசி சத்தத்தில் திசை திரும்பினாள்.
“யார் அண்ணி? எனக்கா?…” என எங்கே கணவன் தான் அழைத்து விட்டானோ என்று கேட்க,
“ஆமா, பொருத்தம் பார்க்க போறாங்கன்னு சொன்னீங்க…” என்ற அவந்திகா எழுந்து சாய்வாய் அமர்ந்தாள்.
“ஹ்ம்ம், அதான். இரு பேசிட்டு வர்றேன்…” என்றவள் பேச ஆரம்பிக்க, அவந்திகா தண்ணீரை எடுத்து பருகினாள்.
தரணி பேசி முடிக்க காத்திருக்க புன்னகையுடன் சிலநொடிகளில் பேச்சுக்களும் முடிந்துவிட்டது.
“என்னண்ணி அதுக்குள்ள பேசிட்டீங்க?…” என அவந்திகா கேட்க,
“வீட்டுக்கு வந்துட்டு ஈவ்னிங் கூப்பிடறேன்னு சொல்லிட்டாங்க அவந்தி…” என்ற தரணி,
“பொருத்தம் எல்லாம் நல்லா வந்திருக்காம். சரிகாவுக்கும் மாப்பிள்ளையை ரொம்ப பிடிச்சிருக்காம்…” என்று சொல்லி மகிழ,
“இங்க தான் நாம யோசிக்க வேண்டிய நேரம் அண்ணி. புதுசா என்ன சொல்ல போறேன். போட்டோவை பார்த்தோ, பேரை பார்த்தோ எல்லாம் நாம விழுந்துடவே கூடாது….” என்று அவந்திகா சொல்லியவிதத்தில் தாரிணி குபீரென்று சிரிக்க,
“என் பிழைப்பு உங்களுக்கு சிரிப்பா?…” என்று சோகமாய் பார்த்தவள்,
“முதல்ல அந்த மாப்பிள்ளையை வெளி இடங்கள்ல எப்படி? சொந்தபந்ததோட எப்படின்னு எல்லாம் விசாரிங்க. இப்ப தான ஆரம்பிக்கறீங்க? அனுபவப்பட்டவ சொல்றேன். சொன்னா கேளுங்க அண்ணி…” என்று கூறவும் தரணிக்கு இன்னுமே சிரிப்பு.
“எல்லாம் தெரிஞ்சுக்கிட்டே நான் சொல்றதை கேலி பன்றீங்களே?…”
“சரி, சொல்லு என்ன பண்ணலாம்?…”
“சரிகாக்கிட்ட அந்த மாப்பிள்ளை நம்பர் குடுத்து பேச சொல்லுங்க. நீங்க எல்லாருமே பேசுங்க. அவர் எப்படி பேசறார்ன்னு பாருங்க…”
“ஹ்ம்ம், அப்பறம்…”
“அந்த பையன் வேலை செய்யிற இடத்துல எப்படின்னு விசாரிங்க. பொருத்தம் பொருந்திருச்சுன்னு பேசாம இருக்க கூடாது…”
“போதுமா அவந்தி?…”
“இனிமே தான் முக்கியமான விஷயம் அண்ணி. இந்த ஜோசியக்காரங்க சொல்றதை கண்ணை மூடி நம்பிடவே கூடாது. இந்த ஜாதகத்துக்குன்னே பிறந்த ஜாதகம் தான் இந்த பொண்ணுன்னு உருட்டுவாங்க. அங்க தான் நாம உஷாரா இருக்கனும்…”
“மூச்சு வாங்காம மெல்ல பேசு அவந்தி…” என்றாள் தரணி சிரிப்போடு.
“நீங்க வேற, நினைச்சாலே பத்திக்குது. அட போங்க அண்ணி….” என சலித்த அவந்திகா,
“நான் சீரியஸா சொல்லிட்டிருக்கேன்…” என்றும் கூற,
“சரி, புரியுது. எல்லாம் பார்த்துப்போம். ஆனா பாரு, நீ இவ்வளோ சொல்ற அளவுக்கு எல்லாம் இங்க நீ கஷ்டப்பட எல்லாம் இல்லை…” என்றாள் தரணி தன்மையாய் அவளிடம்.
“உன் அண்ணன் தானே? ப்ரியதர்ஷன் அப்படின்னு பேப்பர்ல எழுதி குடுத்தா கூட அட்டன்ஷன், அபவ்ட்டன்னு தானா பம்பரமா சுத்துவார். இதுல பெருமை வேற உனக்கு?…”
“அண்ணி…” என அவந்திகா சிணுங்க,
“இதை தான் சொல்றேன். எதிர்பார்ப்புகள் எல்லாம் நாம உருவாக்கிக்கறது. நான் நினைக்கிறது உனக்கு அமையாது. நீ நினைக்கிறது எனக்கு அமையாது. எல்லாம் நம்ம தலையில எழுதியிருக்கறது தான்….”
“அண்ணி போதும், போதும். அதுக்குத்தான் தலையில எழுதறதுக்கு முன்னவே விசாரிங்கன்னு சொல்றேன்…” என்று கூற,
“உனக்கு மட்டும் என்ன விசாரிக்காமலா குடுத்தோம்?…” தரணி கேட்கவும் அவந்திகா முகமே மாறிவிட்டது.
“அது என் கொழுப்பு. போட்டோ காமிச்சதும் பிடிச்சிருச்சு. பார்க்க மேன்லியா, பாஷா இருக்காங்க, கெத்தான போஸ்டிங், இதெல்லாம் பார்த்து மயங்கிடக்கூடாது. எனக்கு பிடிச்சிருச்சுன்னு வீட்டுல ஓகே சொல்லிட்டாங்க. விசாரிச்ச வரைக்கும் நேர்மையான பையன்னு புகழ் வேற. போதாதா?…” என்று சொல்லிக்கொண்டிருக்க,
“வேற என்ன வேணும் உனக்கு?…” என்ற ப்ரியதர்ஷனின் குரலில் தூக்கிவாரி போட பதறி திரும்பினாள் அவந்திகா.
தரணிக்கும் கூட அத்தனை சங்கடம், சட்டென ப்ரியதர்ஷன் வந்து நின்றதை பார்த்ததுமே.
அவனின் வருகையை பற்றி அவந்திகாவிடம் கூறாததில் மானசீகமாய் தலையில் அடித்துக்கொண்டாள் தரணி.
“வாங்கண்ணா…” என ப்ரியதர்ஷனை அழைக்கவும்,
“ஹ்ம்ம்…” என்று தலையசைத்தவன் உள்ளே வரும்முன்,
“மச்சான்…” என்று நளன் அழைக்க அங்கே திரும்பினான் ப்ரியதர்ஷன்.
அவன் பேசிவிட்டு திரும்பும்முன் தரணி அவந்திகாவிடம் பேச பார்க்க அவள் பேயறைந்ததை போல அமர்ந்திருந்தாள்.
“அவந்தி…” என்று தோளை தட்டியதும்,
“இவங்க எப்போ வந்தாங்கண்ணி? வரலைன்னு தான அத்தை சொன்னாங்க? எல்லாம் கேட்டிருப்பாங்களோ?…” என்று பார்க்க,
“நீ முழிக்கிறதுக்கு கொஞ்சம் முன்னாடி தான் வந்திருக்காங்க. அதுக்காக தான் உன்னை எழுப்பினேன். அதுக்குள்ள போன் வந்து டைவர்ட் பண்ணிடுச்சு…”
“நீங்களும் இதுதான் தும்முறதுக்கு சரியான நேரம்ன்னு என்னை மாட்டி விட்டுட்டீங்க? முதலை வாய்ல விழுந்துட்டேன். முழுங்காம விடமாட்டார்….” என்றவள் தரணியின் கையை பிடித்துக்கொண்டு,
“ப்ளீஸ், போயிடாதீங்க…” என்றாள் அவந்திகா.
“அடி வாங்குவ நீ. கிட்டத்தட்ட ஒன்றரை மாசம் ஆகிருக்கும் நீங்க பார்த்துக்கிட்டு. அவங்களுக்கும் உன்கிட்ட பேச ஆசை இருக்கும்ல…” என்றவள் சொல்லிக்கொண்டிருக்க மீண்டும் உள்ளே வந்துவிட்டான் ப்ரியதர்ஷன்.
“நீ என்ன பேபியா? தரணி கையை பிடிச்சு நிறுத்தி வைக்க. லீவ் இட்…” மனைவியின் செயல் கண்டதும் அவனிடமிருந்து உடனடி அதட்டல்.
“நீங்க பேசிட்டிருங்க. வந்திடறேன்…” என தரணி தன் கையை உருவிக்கொண்டு வெளியேறிவிட அவந்திகா ப்ரியதர்ஷனை பார்த்தபடி அசையாமல் அமர்ந்திருந்தாள்.
தரணி கிளம்பவும் அறையின் கதவை ஒருக்களித்து சாற்றியவன் அவள் எதிரில் வந்தமர்ந்தான்.
பார்வை அங்குலம் அங்குலமாய் மனைவியை வருட மெல்ல விழிகள் கீழிறங்கி அவளின் மணிவயிற்றில் பதிந்தது.
“எத்தனை மணிக்கு புறப்படனுமாம்?…” என்று அவளிடம் கேட்க,
“இன்னும் அரைமணி நேரத்துல நல்ல நேரம்ன்னு…”
“ம்ஹூம், ஈவ்னிங் போகலாம். இப்போ வேண்டாம்…” என்று சொல்ல அப்போதே படபடவென்று வந்துவிட்டது அவந்திகாவிற்கு.
எங்கே போகவே வேண்டாம் என்று சொன்னாலும் சொல்லிவிடுவானோ என பயந்து போனாள். சொல்லக்கூடியவன் தான் அவனும்.
‘தேடி தேடி பார்த்த மாப்பிள்ளை. ஒத்தை கால்ல நின்னு இவனை தான் கட்டுவேன்னு நின்னேன்ல. தேவை தான் எனக்கு’ என வழக்கம் போல் மனதினுள் புலம்பல் துவங்கியது.