அந்தளவிற்கு அங்கையின் விளக்கவுரையில் அப்படி ஒரு சுவாரஸியம் இருக்கும் என்றால் அது மிகையில்லை.
இப்போது அத்தனை கதை கேட்டும் இந்த விஷயத்தை கணவனிடம் சொல்லும்பொழுது அவன் என்ன சொல்வானோ என்றிருந்தது.
தான் சொல்லும் விதமும் சரியாக இருக்கவேண்டுமே என்றொரு கவலை. தானுமே இதனை கண்கொண்டு பார்க்கவில்லை. கேட்ட விஷயம் வேறு.
இப்படியாக தலையை உலுக்கி, மூளையை கசக்கிக்கொண்டு அவந்திகா கண்கள் இங்குமங்குமாய் சுருங்கி விரிந்து, ஆயாசத்தில் மயங்கி என்று குழம்பியவள்,
“சொல்லு சொல்லுன்னா இதை என்னன்னு சொல்ல நான்?…” என்று வாய்விட்டே புலம்பிவிட்டாள் மனதிற்குள் நினைப்பதாக எண்ணி.
“இப்போ சொன்னியே அப்படி தான்…” என்று ப்ரியதர்ஷன் சொன்னதும் தூக்கிவாரிபோட்டது அவந்திகாவிற்கு.
“ஹாங் சொன்னேனா?…” என்று திடுக்கிட்டவள் அவனை பீதியுடன் பார்க்க,
“ஆமா, இப்ப தான். சொன்னியே…” என்று அவனும் அந்த பிடியிலேயே நின்றுகொள்ள அவந்திகாவே குழம்பி போனாள்.
“நிஜமாவே சொல்லிட்டேனா?…” என்றவளே நம்பும்படி இருந்தது ப்ரியதர்ஷன் ஆமாம் என தலையாட்டி அவளை பார்த்தவிதம்.
“ஒருவேளை நிஜமாவே சொல்லியிருப்போமோ?…” என மீண்டும் முணுமுணுத்தவள், சட்டென நிமிர்ந்து பார்க்க அப்போதும் அதே தோரணையில் தான் விரைப்பாய் அமர்ந்திருந்தான் அவன்.
“அதான் சொல்லிட்டேனே. அதான் நடந்துச்சு. நீங்க கோவப்படாம பேசுங்க…” என்று சொல்லிவிட்டோம் என்று நம்பியேவிட்டாள் அவந்திகா.
“அதான் அமலா இங்க அழுதாளா?…”
“ஹ்ம்ம், ஆமா…”
“ஓஹ், வேற என்ன சொன்னாங்க அம்மா?…” என்று முரட்டுக்குரலில் கேட்கவும் சந்தேகமே எழவில்லை அவந்திகாவிற்கு.
வீட்டில் வைத்து அங்கை அமலாவை கோபமாக பேசியதாக தரணி சொல்லி அமலா அழுததை மீண்டும் தெளிவாய் கூறிவிட்டாள்.
“இதை தான் சொன்னாங்க. சொல்லிட்டு கதவை படார்ன்னு பூட்டிட்டாங்க. அந்த சத்தம் கேட்டு தான் நான், அம்மா எல்லாம் எட்டி பார்த்தோம்….” என்றவள் அடுத்து பார்க்கில் நடந்தவற்றையும் கிளிப்பிள்ளையாய் ஒப்பிவிக்க, முகத்தில் எவ்வித மாற்றத்தையும் காண்பித்துவிடாமல் கேட்டுக்கொண்டான் ப்ரியதர்ஷன்.
“அவங்க ஏதோ ஒரு ஞாபகத்துல பேசிட்டாங்க போல. ஆனா அண்ணிக்கு மனசுக்கு சங்கடமாகிருச்சு. எல்லார் முன்னாடியும் அத்தை பேசினதால…” என்று சொல்ல அவளை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தான் ப்ரியதர்ஷன்.
“இதை எப்படி உங்ககிட்ட சொல்ல? அண்ணி சொல்லவேண்டாம்ன்னு தலையசைச்சிட்டு போனாங்க…” என மீண்டும் அவளே தன் செயலுக்கு விளக்கம் கொடுக்க,
“அப்போ யாரும் என்கிட்ட சொல்லாதன்னு சொன்னா நீ என்கிட்ட சொல்லமாட்ட. அப்படித்தானே?…” என்றவன்,
“உன் புருஷன் நான், உன்கிட்ட எந்த விஷயத்தை மறைச்சாலும் உனக்கு ஓகே வா?…” என்றான் அவன் பட்டென்று.
அவந்திகாவின் முகமே விழுந்துவிட்டது. அவன் கேட்டதற்கும் அவளால் பதில் சொல்லமுடியவில்லை.
“உன்னை தான் கேட்கறேன். வாய்ல என்ன வச்சிருக்க?…” என்று சொல்ல,
“மெதுவா பேசுங்க ப்ளீஸ்…” என்று இருவருக்கும் இருந்த இடைவெளியை சட்டென அவந்திகா குறைக்க அதனை விழிகளால் அளவெடுத்தவன் முகத்தை மட்டும் மாற்றவே இல்லை.
“பதில் இல்லையா?…”
“இனிமே என்னானாலும் சொல்லிடறேன். ப்ராமிஸ்…” என அவனை கலவரமாக பார்த்தவள்,
“என்ன சொல்லனும்?…” பதிலுக்கு கேட்டபடி தலையை கோதிக்கொண்டே சுற்றிலும் பார்வையை சுழற்றினான் அவன்.
“இப்ப நான் சொன்னேனே? அதை பத்தி தான்….” என்றவள்,
“நீங்க என்ன நினைக்கறீங்கன்னு…” என்று கேட்டு அவன் அவளை புருவம் உயர்த்தி பார்க்கவும், சட்டென இமைகளை தாழ்த்திக்கொண்டாள்.
“நான் என்ன நினைப்பேன்ற அக்கறை கூட உனக்கு இருக்கா மிஸஸ். ப்ரியதர்ஷன்?….” என்றான் பல்லை கடித்தபடி அடக்கப்பட்ட சீற்றத்துடன்.
இந்த திடீர் கோபம் ஏன் என்று தெரியாமல் திடுக்கிட்டு அவனை பார்த்தவள் மிளர,
“ஒன்னொண்ணுக்கும் உன்கிட்ட நான் கேட்டுட்டு இருக்க முடியாது. சொல்லு, என்ன பார்க்கிற?…” என்றதும்,
“நீங்க கேட்டதும் நான் சொன்னேன். ஆனா நீங்க சொல்லலை. இப்படி கோவப்படறீங்க என்கிட்ட…” என்று மனதில் தோன்றியதை சொல்லியும்விட ப்ரியதர்ஷன் முகத்தில் கீற்றாய் புன்னகை.
“சரி உன்கிட்ட கோவப்படக்கூடாது. ஓகே, அப்போ யார்க்கிட்ட என் கோபத்தை, என்னோட உணர்வுகளை காட்டனும்? அதையும் நீயே சொல்லிடேன்…” என்றான் அவன் அமைதியாக குரலில்.
சற்றுமுன்னிருந்த ரௌத்திரம் எல்லாம் பனியாய் கண்ணை விட்டு மறைந்ததை போல், மெல்லிய புன்னகையுடன் அவன் கேட்க அவந்திகா முகத்திலும் திகைப்பு.
“உன்கிட்ட காட்டவேண்டியதை உன்கிட்ட மட்டும் தான் காமிக்க முடியும். சொல்லு, அனாவசியமா உன்கிட்ட நான் கோவப்பட்டேனா? பேசினேனா? இல்லை வெளில உள்ள கோவத்தை உன்கிட்ட காமிச்சேனா?…” என்றான் அவளிடம்.
வாயடைத்து போனாள் அவந்திகா. உண்மை தானே, அவன் இதுவரை தன்னிடம் நடந்துகொண்ட மொத்த விஷயங்களையும் பட்டியலிட்டால் அவனின் கோபத்திலான சூழ்நிலைகள் மொத்தமும் அவளே தான் நிறைந்திருந்தாள்.
“இப்போ சொல்லு, உன்கிட்ட கோவப்படலாமா? படக்கூடாதா?…” என்று கேட்க,
“அதெல்லாம் பட்டுக்கலாம்…” வேகமாய் தலையாட்டினாள் அவன் மனைவி.
“சிரிக்காம சொல்ற. எனக்காக சொல்றியா?…”
“அச்சோ இல்லை இல்லை. பட்டுக்கோங்க…”
“என்ன பட்டுக்கறதாம்? இங்க வச்சு தொட்டுக்க கூட முடியாது…” என்றவன்,
“போய் உடனே மாத்திக்கறேன்…” என்று சொல்ல தலையசைப்புடன் வீடு நோக்கி நடந்தான்.
“மறந்துட்டேன்…” அவன் வந்த காரணம் என்னவென்று கேட்க மறந்ததை எண்ணி அவள் சொல்ல,
“என்னையா?…” என்றான் வேண்டுமென்றே.
“அதெல்லாம் இல்லை. நீங்க ஏன் இப்போ வந்தீங்கன்னு கேட்க நினைச்சேன். அதான்…” என அவந்திகா சொல்ல, தான் பேசியதன் பொருள் கூட அவள் உணராதிருக்க பார்த்தவனுக்குள் என்னவோ செய்தது.
“ஒரு கேஸ் விஷயமா நம்ம வீட்டுல எவிடென்ஸ் வச்சிருந்தேன். அதை திரும்ப எடுத்துட்டு போக தான் வந்தேன்…” என்று பேசிக்கொண்டே வீடும் வந்துவிட்டான்.
அவர்களின் அறையில் இருந்த வாட்ரோப்பில் ஓரிடத்தில் ரகசிய கதவுபோல் ஒன்றிருக்க அதிலிருந்து ஒரு கவரில் இரண்டு சிம்கார்டுகளை எடுத்துக்கொண்டவன்,
“அவந்தி…” என்று திரும்பி அவளை தேட,
“வர்றேன்…” என்றவள் கண்ணாடியின் முன் தன் நெற்றி பொட்டை மாற்றிக்கொண்டிருந்தாள்.
“மாத்திட்டேன்…” என்று சொல்லி அவனருகில் வந்து நெற்றியை காண்பிக்க, ஒருநிமிடம் அசையாது நின்றவன் அவளை இறுக்கமாய் அணைத்து முத்தமிட்டு,
“பார்த்துக்கோ…” என்று சொல்லி வெளியே வர இன்னும் அங்கை அடைத்திருந்த கதவு திறக்கப்படவில்லை.
அதை பார்த்தபடியே கிளம்பி சென்றுவிட, அடுத்த மூன்றாம் நாள் மற்றவர்களுடன் அங்கையும் அங்கே இருக்க முடியாதென பிடிவாதமாய் கிளம்பிவிட்டார்.