“ரொம்ப நல்லா கவனிப்பு. அப்படித்தான் கவனிக்கனும். தப்பில்லை…” என்றான் அவரின் அசாதாரண உடல்மொழி கண்டு அந்த பேச்சை அப்படியே விட்டவனாக.
சிலபல நொடிகளின் நகர்விற்கு பின் அவனின் ஆழ்ந்த மூச்செடுப்பின் காரணமாய் அவனை திரும்பி பார்த்தார் அங்கை.
ப்ரியதர்ஷன் எதையோ பேசமுடியாமல் தனக்குள் அடக்குவது தெரிய இவரின் பதட்டம் இன்னும் கூடியது.
“வீட்டுக்கு போவோமே…” என்றார் அவர்.
“பேசாம நீங்க இங்கயே இருங்களேன் எங்களோட. இனிமே என் பொண்டாட்டியை நான் கவனிச்சுக்கறேன். நீங்க கூட இருந்து கைட் பண்ணுங்க…” என்றதும்,
“அது சரிவராது தர்ஷன். வீட்டை அப்படியே போட்டுட்டு வர்றது எப்படிப்பா? அதோட இப்ப தான் நீங்க ரெண்டுபேரும் தனியா வந்திருக்கீங்க. நான் எதுக்கு இடைஞ்சலுக்கு?…” என்றார் அங்கை.
“அப்போ அமலா இதே விஷயத்தை சாதாரணமா சொல்லும்போது மட்டும் உங்களுக்கு ஏன் அத்தனை கோபம் வந்துச்சு ம்மா? அப்பாவும் அதை நீங்களாதான் சொல்லியிருக்கீங்க….” என்று கேட்டுவிட இதோ அங்கைக்கு மீண்டும் நெஞ்சம் துடித்தடங்கியது.
“தர்ஷா….”
“எல்லார் முன்னாடியும் சொல்லிட்டான்னு சொன்னாலும் அப்படி ஒன்னும் தப்பான வார்த்தை எதையும் அக்கா பேசலையே?….” என்று கேட்க அங்கைக்கு மீண்டும் அழுகை.
“இதை இப்படி ரோட்டுல வச்சு பேசற நிலைமைக்கு கொண்டு வந்துட்டீங்களே? இன்னைக்கு காலையிலையும் நான் சாதாரணமா சொன்ன ஒரு விஷயம் உங்களுக்கு ஏன் தவறா தெரிஞ்சது?…”
“என்ன? என்ன விஷயம்?…” என அவர் பதற,
“நானும் அமலாவும் என்னவும் பேசிக்கறோம். கோவப்படறேன், கோவப்படுத்தறேன்னு சொன்னீங்களாம். நான் கோவமா சொன்னேன்னு உங்களுக்கு தெரியுமா?…” என்று கேட்க பதிலின்றி பார்த்தார்.
“நிறைய பேசனும். ஆனா இப்ப வேண்டாம். பேசறேன். அதுக்கொரு சூழ்நிலை வரும். இப்ப இங்க வந்த நேரம் மத்தவங்க முன்னாடி உங்களை இப்படி நினைக்க வைக்காதீங்க. உங்களோட கோபம், வருத்தம் காமிக்கவேண்டியது தான். ஆனா எங்கே, எப்போ, யார் முன்னன்னு இருக்கு. புரியுதா?…” என்று சொல்ல,
“இனிமே பேசமாட்டேன்….” என்று சொல்லியவருக்கு அவன் சொல்லியவை எதுவும் பதியாமல் ‘நிறைய பேசவேண்டியதிருக்கு. பேசறேன்’ என்பதிலேயே அவரின் யோசனை நின்றுவிட்டது.
என்ன பேச போகிறான் என்று சிந்தித்தபடியே வந்தவர் அவனிடம் எதற்கும் வாய் திறக்கவில்லை.
வீட்டினருமே எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. மறுநாளும் அன்றாட வேலைகள், பேச்சுக்கள் என்று நேரம் சென்றிருந்தது.
ப்ரியதர்ஷன் பேசியதனால் நளனிடமும், மகளிடமும் அவர் பேச நினைக்க அவர்களின் பதில் இன்னும் வேறுவிதமாய்.
பேச்சை அடக்கிக்கொண்டார். எல்லாம் முடிந்து இதோ கிளம்பிவிட்டோம் என்று வந்த நேரத்தில் இங்கே தன்னந்தனியே.
வெகுநேரம் அதே யோசனையில் இருந்தவருக்கு அப்போதுதான் ஞாபகம் வர தனது போனை எடுத்து வாங்கிவந்திருந்த அந்த எண்ணிற்கு அழைத்தார் அங்கை.
“அலோ, சாமந்தி பேசறேங்க. அங்க யாரு?….” என்ற குரலில் அங்கைக்கு அத்தனை சந்தோஷம்.
“நான் தான் சாமந்தி. அவந்திகா மாமியார்…” என்றார் அவர்.
“அப்படிங்களா? சௌகரியமா ஊரு போய் சேர்ந்துட்டீங்களாங்கம்மா?…” என்று சாமந்தி கேட்க,
“அதெல்லாம் நல்லபடியா வந்துட்டோம் சாமந்தி. அவந்திக்கு போன் போகலை. அதான் உனக்கு கூப்பிட்டேன். என்ன செய்யறா என் மருமக?…” என்றார் அங்கை.
“கொஞ்சம் முன்னதான் வேலையை முடிச்சிட்டு வீட்டுக்கு வந்தேனுங்கம்மா. நா வேணுமின்னா அவந்தியம்மா வீட்டுக்கு போயி தாக்கல் சொல்லட்டுங்களா?…” என்று கேட்க, ‘அவந்தியம்மா வீடு. எத்தனை சுலபத்தில் கிடைத்துவிட்டது இந்த பெயர்?’ என்று யோசித்தார்.
“அம்மா…” சாமந்தி அழைக்க,
“இல்ல இல்ல. உனக்கெதுக்கு சிரமம்? நான் கொஞ்சநேரம் கழிச்சு கூட பேசிக்கறேன்…” என்றவர்,
“அப்பறம் சாமந்தி. என் மருமகளை கொஞ்சம் நல்லா பார்த்துக்க. மனசே கேட்கலை, நிறைமாசமா இப்படி அங்க வந்து ஒத்தையில இருக்காளேன்னு…”
“அதுக்கென்னங்கம்மா? நான் கவனிச்சிக்கிடமாட்டேனா?…”
“நீ சொல்லுறது சரித்தான். இருந்தாலும் இங்க ஆளும்பேருமா இருந்தாலே அவ பெருசா அக்கறையா எதையும் சாப்பிட்டுக்கவோ, கவனமா இருக்கவோ மாட்டா. சின்ன பிள்ளை தான. அதுக்கு தான் நாம இருந்து பார்க்கனும்ன்னா எங்க முடியுது?…” என்று பெருமூச்சு விட்ட அங்கை,
“சரி சாமந்தி. அப்பப்ப என்னவும்ன்னாலும் இந்த அம்மாவுக்கு போன் போட்டு சொல்லு. உன்னையும் நல்லா பார்த்துக்க சொல்லி அவந்திக்கிட்ட சொல்லிட்டுதான் வந்திருக்கேன். என்னமும் சங்கடம்ன்னாலும் எனக்கு ஒரு போன் போடு சாமந்தி. என் மனசெல்லாம் அங்க தான் இருக்கும். உனக்கு உதவி எதுவும்ன்னாலும் தயங்காம என்கிட்ட கேளு…” என்று பேசி வைக்கவும் சாமந்தி அப்படியே இருந்தார்.
“என்ன புள்ள, யாரு போனுல?…” என்று சாமந்தியின் கணவர் கேட்க,
“எல்லாம் கமிசுனர் சார் அம்மா தான். என்னம்மா மாமியாவா இருக்கு இந்தம்மா?…” என்று தன் தாடையில் கைவைக்க,
“என்னடி சொல்லுத?…” என்றார் அவர்.
“என்னத்த சொல்ல? மருமக வீட்டுல என்ன ராஜாங்கம் பண்ணுதுன்னு நான் வேவு பாத்தது சொல்ல, அந்தம்மா என்னிய நல்லா கவனிக்குமாம். எம்புட்டுக்கு வெவரம் பார்த்தியா?….” என்று அங்கை பேச்சை சொல்ல,
“அப்படி சொன்ன எதும் தப்பா தெரியலையேடி…”
“சுத்த கூறுகெட்ட மனுசனா இருக்கியே? இதத்தேன் சூச்சம பேச்சுன்னுவாக. அந்த புள்ளை வெள்ளந்தியா மாமியார மாதிரி உண்டான்னு தாங்குது. இந்தம்மா என்னன்னா…” என்று சொல்லிய சாமந்திக்கு இப்போதே கவலை அங்கை தன்னை இனி விடமாட்டார் என்று.
“நீ என்ன செய்ய போறத்தா?…”
“எங்கிட்ட தான பேசுது. பேசட்டும். பாத்துக்கிடுதேன்…” என்று முந்தானையை உதறி முடிந்தார் சாமந்தி.
அங்கைக்கு சாமந்தியை தன் கைக்குள் போட்டுவிட்ட மிதப்பு. ஆனாலும் ஒரு எல்லைக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதிலும் கவனமாக இருந்தார்.
இங்கே அவந்திகா அங்கைக்கு அழைத்து பார்த்து எடுக்கவில்லை என்றதும் அமலாவிற்கு அழைத்து பேச அவளும் அங்கையை விட்டுவிட்டு தான் வந்ததாக கூறி வைத்தாள்.
“நேராவே சொல்லேன் போய் கதவை பூட்டிட்டு வந்து கொஞ்சுங்கன்னு…” என்று நமுட்டு சிரிப்புடன் சொல்லிவிட்டு எழுந்து கதவை அடைத்துவிட்டு வந்தவன் அவன் முகம் பார்க்க மறுத்த அவந்திகாவை எழுப்பி தன் மடியில் அமர வைத்துக்கொண்டான்.
“சொல்லு….”என்று கேட்க,
“என்ன சொல்லனும்?…”
“என்னோட அந்த போட்டோவை வச்சிருந்தியே. அதை பத்தி சொல்லு. ஏன் என்கிட்ட சொல்ல உனக்கு எதுவுமில்லையா என்ன?…” என்றவன் கேள்வியில் விழிவிரித்து பார்த்தாள் அவந்திகா.