“இங்க வா…” என்று ஹாலுக்கு அழைத்து வந்தவன் அவளின் காலை பார்க்க லேசாய் வீங்கி இருந்தது.
“இங்க வந்து இந்த ஒருமாசத்துல இன்னைக்கு தான் இவ்வளோ வீங்கி இருக்கு. காலுக்கு அசைவு குடுக்கவே இல்லையா நீ?…” என்று அடுத்ததாய் கேட்க அத்தனை ஆயாசம் அவந்திகாவிற்கு.
தொண்டை வேறு வறண்டது அவந்திகாவிற்கு. தண்ணீர் வேண்டும் என்பதை போல அழுகையை அடக்க முயன்று அவனிடம் கேட்க தண்ணீரை எடுத்து வந்து நீட்டியவன் தன் கைப்பேசியை எடுத்தான்.
“ஸ்பாட்க்கு போயாச்சா?…” என்று கேட்க,
“இன்னும் ஆள் வரலை ஸார்…” என்று பதில்.
“அவன் முக்கியமான விட்னஸ். பக்காவா தூக்கி தொலைக்கனும். சொதப்பாம செய்ங்க. நான் வந்துட்டே இருக்கேன்…” என்று சொல்லிவிட்டு போனை வைத்தவன் தன்னையே பார்த்துக்கொண்டிருந்தவளை கண்டு மென்னகை புரிந்தான்.
“என்னடி இப்படி பார்க்கற? என்னவோ கொள்ளைக்கூட்ட தலைவனை பார்க்கிற மாதிரி. உன் புருஷன் போலீஸ்டி…” என்றவன்,
“இங்க வா…” என்று இன்னும் அவளை நெருங்கி தன்னோடு அணைத்த நொடி அவந்திகா மொத்தமாய் உடைந்து அவனை இறுக்கினாள்.
“நாம சரிகா கல்யாணத்துக்கு ஊருக்கு போகவேண்டாம்…” என்று மெல்லிய விசும்பலோடு அவள் ஒவ்வொரு வார்த்தையாய் திக்கி தினறிக்கொண்டு சொல்ல ப்ரியனின் விரல்கள் அவளை ஆற்றுப்படுத்த முனைந்தது.
“நாம இங்கயே இருப்போமே. எனக்கும் ட்ராவல் வேண்டாம்…” என்று அவனின் கைவளைவை விட்டு விலகவும் இல்லை. திரும்பவும் இல்லை.
“சரி வேண்டாம். இங்கயே இருப்போம்…” என்று சொல்லிக்கொண்டே அவந்திகாவின் கைப்பேசியை எடுத்து பார்வையிட சற்றுமுன் தரணி அழைத்திருந்தாள் தான் வருகையில்.
சிலநொடிகள் பேச்சுக்கள் தான் அதில். அதற்கு முந்தைய அழைப்பு ஏதோ கஸ்டமர் கேர்.
அதற்கும் முன்பு மூன்றரை போல் வந்திருந்த அழைப்பு அங்கையிடமிருந்து. வெகுநேரம் பேசியிருந்தார் அவர்.
அதற்கடுத்ததாய் மூன்று முறை அங்கை அழைத்தும், அவந்திகா அவரின் அழைப்பை எடுக்கவே இல்லை.
அவனுக்கு புரிந்துபோனது எங்கிருந்து இந்த பிரச்சனை என்று. தன்னிடம் போகவேண்டாம் என்று மட்டும் சொல்லிக்கொண்டிருந்தவள் அங்கை தான் காரணம் என்பதை மட்டும் கூறவில்லை.
சிலநிமிடங்கள் அவனின் அணைப்பிலேயே அவள் சாய்ந்திருக்க ப்ரியன் கிளம்பவேண்டும் என்பதும் கூட அவளுக்கு மறந்திருக்க அவனின் கழுத்தை கட்டிக்கொண்டே அமர்ந்திருந்தாள் அவள்.
அதற்குள் அவனின் கைப்பேசிக்கு அழைப்பு வரவும் எடுத்து பேசியவன் முகத்தில் நிம்மதி.
“ஓகே, அவனை நம்ம கஸ்டடில வைங்க. நான் நேரா அங்க வர்றேன்…” என்று சொல்லிவிட்டு வைக்கவும்,
“கிளம்பறீங்களா?…” என்றாள் தவிப்புடன்.
“கிளம்பனும். ஆனா இப்போ இல்லை…” என்றவன் அவள் அமர்ந்திருக்கும் நிலை கண்டு,
“நேரா உட்கார் அவந்தி…” என்று ப்ரியன் கூற,
“நான் ஓகே தான்…” என்றவள்,
“நாம இங்கயே இருப்போமே. போகவேண்டாம்….” என்றாள் மீண்டும் அவனிடம் கெஞ்சுதலாய்.
“அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை. லீவ் போட்டுக்கலாம்….” என்றான் வேண்டுமென்றே.
“இல்ல இல்ல. உங்க லீவ் எல்லாம் சேவ் பண்ணுங்க. பின்னாடி டெலிவரி டைம் யூஸ் பண்ணிக்கலாம்ல…” என்று அவசரமாய் அவனிடம் சொல்லிவிட்டு அவள் விழிகளை விரித்த பாவனையில் அவன் மீண்டும் மீண்டும் இடறினான்.
“வரவர எனக்கு மேல விவரமாகிட்டே வர்றடி நீ….” என்றான் சிரிப்புடன்.
“சும்மா சொல்றீங்க…” என்றவளின் கண்ணீரை துடைத்தவன்,
“சரி, ஊருக்கு போகவேண்டாம். வேற என்ன பன்றதா ப்ளான்? உன் அம்மா, அப்பா, அண்ணி, அண்ணா, நிலவன் எல்லாம் பார்க்க வேண்டாமா? ஊருக்கு போக ட்ரெஸ் எல்லாம் இப்பவே ரெடி பண்ண ஆரம்பிச்சியே?…” என்று சொல்லி,
“அந்த சேரி எல்லாம் இப்போ உனக்கு கட்டிக்க முடியுதான்னு எல்லாம் மூணு நாளா ஒவ்வொரு புடவையா கட்டி பார்த்தியே? வேண்டாமா?…” என்றான் அவள் மொத்தமாய் கூறட்டும் என்று.
“ஆமா அதான். ஆனா வேண்டாம். அவங்க எல்லாம் இங்க வந்து பார்க்கட்டுமே?…” என்று சொல்ல,
“சரி அப்போ நான் மட்டும் கல்யாணத்துக்கு போய்ட்டு வர்றேன். நீ இங்க இருக்கியா? சாமந்தி துணைக்கு இருப்பாங்க…” என்று கூற,
“நீங்க மட்டுமா?…” என்று மேலும் கலவரமானவள் பதில் சொல்லமுடியாமல் பார்க்க,
“என்ன வேணும் உனக்கு?…” என்றான் ப்ரியன்.
“நான் ஊருக்கு போகவேண்டாம்…”
“நெக்ஸ்ட்…”
“நாம போகவேண்டாம்…”
“அதான் சொல்லிட்டியே அவந்தி….”
“நீங்களும் போகவேண்டாம்….”
“உன் அண்ணி கோவிக்க மாட்டாங்களா?…” என்று ப்ரியன் கேட்க,
“கோவிச்சாலும் பரவாயில்லை. போகவேண்டாம். மெதுவா பார்த்துப்போம். நான்தான் வேண்டாம்னு சொல்றேன்ல…” இப்போது அழுகை மீண்டும் வந்துவிட உதட்டை பிதுக்கி அழவே ஆரம்பித்தவள்,
“இங்கயே இருப்போம். எனக்கு எங்கயும் போகவேண்டாம். சென்னைக்கும் போகவேண்டாம். விட்டுட்டு போவீங்களா நீங்க?…” என்று அவனின் முகம் பார்த்து விசும்ப,
“அவந்தி, என்னடா?…” என்றவன்,
“அம்மாவும் அக்காவும் நீ எப்போ வர்றன்னு கேட்டுட்டு இருந்தாங்களே?…” என்று ப்ரியன் அடுத்த வெடியை வைக்க,
“மாட்டேன். நான் தான் சொல்லிட்டேனே வரமாட்டேன்னு. அங்க போனா அங்கயே இருக்க சொல்றாங்க. இருக்க முடியாதே…” என்று வேகமாய் சொல்லிவிட்டவள்,
“நீங்க நான் போய்ட்டா தனியா இங்க இருப்பீங்களா? இல்லை தானே?…” என்று கேட்டு,
“ஆனா நான் தேடுவேன். குழந்தையும் தேடும். பாருங்க, இப்பவும் உங்களை தேடுது. இங்க பாருங்க…” என்று ப்ரியனின் கை எடுத்து அவந்திகா தன் வயிற்றில் குழந்தையின் அசைவை உணர்த்த வைக்க, ப்ரியனின் பார்வை அவனின் வளர்ந்த குழந்தை மீது தான்.
“அவங்க வேணும்னா இங்க வரட்டும், பார்க்கட்டும். நான் போகலை. நீங்க சொல்லிக்கோங்க. பேசிக்கோங்க…” என்று வேகமாய் சொல்லியவள் கணவனின் அமைதியில் பேச்சை நிறுத்தினாள்.
எல்லாம் சொல்லிவிட்டோமோ என்று அச்சத்துடன் அவனை பார்த்தவள் என்ன பேசுவானோ என்று குரல் நடுங்க தானாகவே பதிலும் கூறினாள்.
“உங்க அம்மா போன் பண்ணினாங்க. நான் கோவமா பேசிட்டேன். எதிர்த்து பேசிட்டேன். ஸாரி. என்னை சரியாவே என் வீட்டுல சொல்லிக்குடுத்து வளர்க்கலை போல. அவங்களோட சண்டை போட்டுட்டேன்…” என்று வரிசையாய் அடுக்கியவள்,
“ஆனாலும் ஊருக்கு வேண்டாம். நான் போகலை…” என்று அவனின் நெஞ்சில் சாய்ந்துகொண்டு கண்ணை மூடிக்கொண்டாள் அவந்திகா.
‘இனி என்னவேண்டும் என்றாலும் திட்டிக்கொள். கேட்டுக்கொள்கிறேன்’ என்பதை போல் அவனை அணைத்து பிடித்திருக்க ப்ரியனின் இதழ்களில் பெரிதாய் புன்னகை.
‘உங்க அம்மாவாமே? பர்ஸ்ட் டைம் அத்தை அம்மாவா மாறினதுக்கு சந்தோஷப்படற முதல் பிள்ளை நானா தான் இருப்பேன்?’ என்று தன்னை குறித்துமே சிரிப்பு.
ப்ரியனின் கைகள் அவளை மொத்தமாய் வாரி அணைத்துக்கொள்ள, ‘கோபமாய் பேசுவானே?’ என்று பயத்தில் இருந்தவள் திகைப்புடன் அண்ணார்ந்து பார்க்க அவளின் இதழ்களை மெல்ல இதமாக்கினான் ப்ரியதர்ஷன்.