அமலாவிற்கு அத்தனை கோபம் ஏன் அங்கை இப்படியெல்லாம் செய்கிறார் என்று.
“நான் இவ்வளோ சொல்றேன். நீ அமைதியா இருக்கியே?…” என்றார் அங்கை.
“கொஞ்சநேரத்துல தர்ஷன் கூப்பிடுவான். அப்போ அவன் அமைதியா இருக்கானான்னு பாருங்க…” என்றாள் கோபமாய்.
“என்னடி நீயே இப்படி சொல்ற?…” என்றவர்,
“அவந்தி அப்படி ஒன்னும் அவன்கிட்ட சொல்லமாட்டா. அவன் கோவம் தான் அவ அறிஞ்சதாச்சே…” என்றார் நம்பிக்கையுடன்.
“அதெப்படி சொல்லாம இருப்பா? மாமியாருன்னு அதிகாரமா இங்க வந்து புள்ளையை பெத்துட்டு தான் நீ ஊருக்கு போகனும். அப்படியெல்லாம் திரும்ப அனுப்ப முடியாதுன்னு நீங்க ஏன் சொன்னீங்க?…” என்று அவளின் கோபம் கூடத்தான் செய்தது.
அங்கை அதை மட்டுமா கூறினார்? மகளிடம் சொல்லிவிட்டால் இதற்கே பேசுகிறவள் அதற்கும் சேர்த்து சொல்லி அவளே மகனிடம் சொன்னாலும் சொல்லிவிடுவாள் என்று மௌனமானார்.
“அவன் இப்ப தான் பொண்டாட்டியோட சேர்ந்தே இருக்கான். இப்ப இந்த ஒருமாசம் இருந்ததை விட இதுக்கு முன்ன அவங்க சேர்ந்து இருந்த நாளை பார்த்தா அதைவிட கம்மி. அங்கயே இருக்கட்டுமேம்மா…” என அமலா சொல்ல,
“என்னம்மா சொல்லனும்? அச்சாணியமா பேசி வைக்க கூடாதுன்னு என் மாமியார் அத்தனை சொல்லுவாங்க. இப்ப வாய் தவறி கூட இப்படி சொல்லலாமா? என்னம்மா நீ?…” என்று பதறிவிட்டாள்.
“இதுக்கு தான் சொல்றேன். இப்படி பயந்துட்டு இருக்கறதுக்கு நாமளே நம்ம கண்ணு முன்ன பக்குவமா அவளை வச்சு பார்த்துப்போம்ன்னு…” என்று கூற,
“நீ பேசறது உனக்கே நல்லாயிருக்கா? இப்படி தான் அவந்திட்டையும் பேசுனீங்களா ம்மா?…” என்று கேட்க,
“இல்லையே. அப்படி ஒன்னும் சொல்லலையே…” என்றவர் திருதிருவென்று விழிக்க,
“பார்த்துக்கனும்ன்னா அவன் தான் கூப்பிடறானே? போங்களேன்….”
“என் வீட்டை யார் பார்க்க? நான் இங்க தான் இருப்பேன். அவளை இங்க வர சொன்னா என்னை மதிக்கலை. வாயில்லா பூச்சின்னு நினைச்சா சண்டைக்கு நிக்கிறா?…”
“நீங்க எதுவுமே பேசாம தான் அவ உங்ககிட்ட சண்டை போடுவாளா? சரி அப்படி என்னதான் சொன்னா? அதை சரியா சொல்லுங்க. நான் பார்த்துக்கறேன்னு சொன்னதுக்கு மதிப்பில்லாம பேசிட்டான்னு மட்டும் சொல்றீங்க. பேசற அளவுக்கு என்ன ஆச்சு?…” என்று கேட்க நளன் அழைத்துவிட்டான் அமலாவிற்கு.
“அவர் தான் கூப்பிடறார்…” என்றவள் எடுத்து பேசிவிட்டு வைத்து,
“ம்மா, நைட்டுக்கும் சேர்த்து தான் கொண்டுட்டு வந்தேன். நீங்க எதுவும் சமைக்க வேண்டாம். நான் கிளம்பறேன். அவங்க வீட்டுக்கு வந்துட்டாங்களாம். துளசி தேடறா போல….” என்று கிளம்பவும் தான் நிம்மதியானார் அங்கை.
அப்போது தான் அவந்திகாவிடம் பேசி முடித்திருக்க பேசிய சிறிதுநேரத்திற்குள் அமலா தாய்க்கு உணவும், வீட்டில் செய்த பலகாரமும் எடுத்து வந்திருந்தாள்.
வந்தவளிடம் அவந்திகாவிடம் பேசியதை பற்றி மேலோட்டமாய் சொல்ல அதற்கே அமலா அவரை பேசிவிட்டு கிளம்ப தலையை உலுக்கிக்கொண்டார் அவர்.
எத்தனை யோசித்தும் அவந்திகா தன்னிடம் அப்படி பேசுவாள் என்பதை அவர் நினைத்தும் பார்க்கவில்லை.
மீண்டும் மீண்டும் அவள் கூறிய அந்த வார்த்தைகள் அவரின் மனதில் அலைமோதியது.
‘இவளும் என்னை தூசியாக எண்ண ஆரம்பித்துவிட்டாளா?’ என்ற சிந்தனை தான்.
தரணியின் தங்கையின் திருமணத்திற்கு அழைப்பு வைத்துவிட்டு போனதில் இருந்து அவந்திகாவிடம் பேசுகையில் அவர்கள் என்றைக்கு வரவிருக்கிறார்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தவர் இன்று தன் எண்ணத்தையும் சேர்த்து சொல்லிவிட்டார்.
“அடுத்தவாரம் தான் கிளம்பற. ஆனாலும் எப்ப வருவன்னு இருக்கு அவந்தி….” என்றவரின் குரலில் சிரித்த அவந்திகா,
“எனக்கும் தான் த்தை. எல்லாரையும் எப்போ பார்ப்பேன்னு இருக்கு. இதுவரையும் யாரையும் இவ்வளோ நாள் விட்டுட்டு இருந்ததில்லையா. அதான்…” என்றவள்,
“மூணு நாள் எப்படி போகும்ன்னே தெரியாது. செம்ம ஜாலியா இருக்கும்…” என குதூகலமாய் சொல்ல,
“மூணுநாள் தானா?…” என்று முகம் சுருக்கினார் அங்கை.
“ஆமா த்தை. அவங்களுக்கு லீவ் அதுக்கு மேல போட முடியாது இல்லையா?…” என்று சொல்லியவள் குரலில் இருந்த அவன் மீதான சொந்தம் அவரிடம் இல்லை என்பதும் அவருக்கு புரிந்தது.
“ஓஹ், அவனுக்காகவா?…” என்றவர்,
“பேசாம ஒன்னு பண்ணு அவந்தி. நீ திரும்பி ஏன் போகனும்? இங்கயே இரேன்…” என்றார் பொறுக்கமுடியாமல் தன் மனதில் இருந்ததை கூறி.
அவள் இங்கே வந்த பின்னர் பேசி சமாளித்து இருக்க வைத்துவிட வேண்டும் என்று தான் யோசித்திருந்தார்.
இப்போது அவந்திகா பேசியதும், அவள் சொல்லிய மூன்றுநாட்கள் மட்டுமே அங்கே இருப்போம் என்ற வார்த்தைகள் அங்கையின் கட்டுப்பாட்டை உடைத்தது.
“என்னத்தை? என்ன சொல்றீங்க?…” அவந்திகாவிற்கு புரியவில்லை.
“ஆமாம்மா. உனக்கும் எட்டாவது மாசம் ஆரம்பிச்சிருச்சு, இந்தநேரம் எதுக்கு அலைச்சல்? உடம்பு கெட்டுடும். இப்ப தான் நீ பக்குவமா இருக்கனும்…” என்றார்.
“நாங்க டாக்டர்கிட்ட கேட்டுட்டு தான் வர்றோம் அத்தை. அதெல்லாம் ஓகே தான் சொன்னாங்க…”
“அட என்னம்மா நீ புரியாம பேசற? எட்டுமாசமாச்சு. எப்போ வேணா குழந்தை பிறக்கும். நீ என்னடான்னா இப்பத்தான் கல்யாணம் ஆனது மாதிரி இங்கைக்கும், அங்கைக்கும் தாவிட்டிருக்க? அதான் பெரியவ நான் சொல்றேன்ல…” என்றதுமே அவந்திகாவிற்கு அந்த பேச்சின் தொனி வித்தியாசம் காண்பித்தது.
“அத்தை என்ன பேசறீங்க?…” என்றாள் அழுத்தமான குரலில்.
“இல்ல அவந்தி, அத்தை என்ன சொல்றேன்னா, அங்க நீ தனியா இருக்க. சாமந்தி வேலைக்கு வந்து போனாலும் நாம வீட்டாளுங்க கூட இருந்த மாதிரி இருக்குமா? பாரு, இப்ப கூட நேர்ல பார்க்க அவ்வளோ ஏங்கி போய் இருக்க. பிள்ளைத்தாச்சி பொண்ணு அப்படி ஏக்கத்துல இருக்க கூடாதும்மா…” என்றார் நயமாய்.
“நான் அங்க வந்துட்டா அவங்க இங்க தனியா இருப்பாங்களே? அது உங்களுக்கு வருத்தம் இல்லையா?…” அவந்திகாவிற்கு கோபம் வந்துவிட்டது.
“அவன் இன்னைக்கு நேத்தா அப்படி தனியா இருக்கான்? வளரும்போது படிப்பெல்லாம் ஹாஸ்டல். அடுத்தும் மேல்படிப்பு, போலீஸ் ட்ரெய்னிங். போஸ்டிங். அவனுக்கு அது பழகிருச்சு. அதெல்லாம் அவனுக்கு பெருசா தோணாது…” என்ற சொல்ல அவந்திகாவிற்கு என்னவோ போலானது.
முன்பென்றால் அங்கை சொல்லியதற்கு ‘இப்படி பிரிந்தே இருந்ததனால் தான் இளக்கமற்று இருக்கிறான் தன் கணவன்’ என்று நினைத்திருப்பாள்.
ஆனால் இப்போது மனது அவனுக்காக யோசித்ததே. தனியாய் இருப்பதற்கு அவன் விரும்பவில்லை என்பதை அவள் திருச்சி வந்த ஓரிரு நாட்களிலேயே புரிந்துகொண்டாள்.
அப்படி இருப்பவனை விட்டுவிட்டு தான் எப்படி செல்ல முடியும் என்று மனதெல்லாம் கவலையானது அங்கை சொல்லியதில்.
“அவங்க இத்தனை வருஷம் இருந்தாங்க சரி. ஆனா இப்பவும் அப்படி இருக்கலாமா? அவங்க தானே என்னை கூட்டிட்டு வந்தாங்க?…”
“அதான் ஒருமாசம் அங்க இருந்துட்டியே ம்மா. நான் என்ன உன்னை இங்கயேவா இருக்க சொல்றேன்? டெலிவரி எல்லாம் முடிச்சிட்டு குழந்தையை நல்லபடியா வளர்த்துட்டு கொஞ்சம் உனக்கும் உடம்பு தேறவும் போன்னு தான் சொல்றேன்…” என்றவர்,
“நீயே யோசி. அவன் வேலை எப்படின்னு உனக்கும் தெரியும். வேலையை பார்ப்பானா? உன்னை பார்ப்பானா? ஒன்னொண்ணுக்கும் அவனை நீயும் எதிர்பார்க்க முடியாதுல அவந்தி?…” என்றவரின் வார்த்தையில் அவந்திகா அமைதியானாள்.