“என்ன ஒன்னு நம்ம வீட்டுல அமலாவையே அஞ்சாம் மாசம் அனுப்பினேன். அவ மாமியார் நல்லா தெம்பா இருக்காங்க. பார்த்துப்பாங்க. அந்த நம்பிக்கையில. அதுவும் இல்லாம நானும் இங்க ரெண்டு தெரு தள்ளி தானே இருக்கேன். போய் பார்த்துடலாம் பாரு…” என்றவர்,
“நீ அங்க போய் ஒத்தையில பார்த்துக்கறது கஷ்டம். புள்ளை பெத்து வளர்க்கறதுன்னா சும்மாவா? உனக்கும் பூஞ்சை உடம்பு. அதனால பிள்ளைக்கு ஒம்பது மாசமாச்சும் ஆகட்டும். என்ன நான் சொல்றது?…” என சொல்ல, அவந்திகாவின் உள்ளம் திடுக்கிட்டது.
இத்தனை பேசுபவர் ஒருமுறை கூட, ‘நான் உன்னோட வந்திருக்கேன் அவந்தி. நான் பார்த்துக்கமாட்டேனா?’ என்று சொல்லவில்லை.
அவரின் பேச்சின் தொனியும், அதன் அர்த்தமும் அவளை அங்கே வரவழைப்பதாக மட்டுமே இருந்தது.
“சாமந்தியும் கூடவே இருந்து பார்த்துப்பாங்க த்தை…” என்றாள் அப்போதும் பொறுமையாக.
“அவளுக்கு என்ன தெரியும்? காசுக்கு வேலைக்கு வர்றவ எல்லாம் புள்ளைய தொட்டு தூக்கி உதவுனா விளங்குமா? என்ன பேசற அவந்தி? அவ வேலை என்னமோ அதை மட்டும் பண்ணட்டும். நீ இங்க வந்துட்டா அவனுக்கு சமைக்க, மத்த வேலை எல்லாம் பார்த்துக்கட்டும். முன்னாடியும் அவ தான இருந்தா. நீ இங்க வந்துட்டா செய்யட்டும்…” என்றவர்,
“என் வீட்டு வாரிசு, நாம தான பொத்தி பொத்தி பாதுகாத்து வளர்க்கனும். நீ இன்னும் சின்னப்பிள்ளையாவே இருக்க அவந்தி. பாரு, அங்க போய் என்னென்னவோ யோசிக்கிற. இந்த முடிவெல்லாம் எடுக்கற. உனக்கு இதெல்லாம் புரியாதும்மா…” என்று சொல்லியதோடு விடவில்லை.
வெகுநாட்களுக்கு பின் தன் பேச்சுக்கு மருமகள் செவி சாய்க்கிறாள் என்பதிலேயே அங்கையின் மனதில் அத்தனை சந்தோஷம்.
“இதுமட்டுமா, நீ மட்டும் பேசாம இங்கயே இருந்தா குழந்தையவும் நாம இங்கயே வளர்க்கலாம். இங்கருந்தே ஸ்கூலுக்கு அனுப்பலாம். இங்க இல்லாத ஸ்கூலா அங்க இருக்க போகுது. நீயும் இங்க தான படிச்ச அவந்தி? அதோட அங்கன்னா ஒத்தையில இருக்கும் புள்ளை. இங்கன்னா உன் அண்ணன் மகன், அமலா மகன்னு சொந்தபந்தத்தோட ஒட்டு உறவா வளரும்…” என்றார்.
“அப்போ அவங்க…” என்றாள் அவள் மீண்டும் மாமியாரிடம்.
“அவன் தான் இத்தனை மாசம் லீவ் கிடைக்கும் போது வந்து போவானே, அப்படி வரட்டும். அதெல்லாம் அவன் பார்த்துப்பான். நீ மட்டும் சரின்னு சொல்லு. அத்தை பார்த்துக்கறேன். நீ இங்க இருந்தப்போ உன்னை எப்படியெல்லாம் பார்த்துக்கிட்டேன். நானும் மருமக, பேரன், பேத்தியோட இருப்பேன்…” என்றார் சந்தோஷமாக.
“அப்போ அவங்க தனியா இருந்தாலும் பரவாயில்லை அப்படித்தானே? என்னத்தை?…” என்றாள் அவந்திகா அதற்குமேல் அமைதி காக்காமல் ஆதங்கத்துடன்.
“அவனுக்கு புதுசு இல்லைம்மா அவந்தி. அவனால சமாளிக்க முடியும்…” என்று சொல்ல,
“அவங்களுக்கும் நாங்க உறவு தானே? அவங்களை மட்டும் ஏன் ஒட்டு உறவோட இருக்க விடலை நீங்க?…” என்று கேட்டுவிட்டாள் அவந்திகா.
“என்ன அவந்தி?…” என்ற அங்கைக்கு அவள் கேட்டதும் பக்கென்று இருந்தது.
“டெலிவரிக்கு வர சொன்னீங்க. நியாயம். அதுக்கப்பறம்?….” என்றவள்,
“ஏன் அத்தை அவங்க தனியா இருந்தா எதுவும் இல்லையா? அவங்களுக்கு நாங்க வேண்டாமா?…” என கேட்க,
“இல்லம்மா, அவன் அதெல்லாம் யோசிக்கமாட்டான்….”
“யோசிக்காம எப்படி அத்தை அவங்க என்னை இங்க கூட்டிட்டு வருவாங்க?…”
“அவந்திம்மா, அத்தை என்ன சொல்றேன்னு கேளு…”
“எல்லாமே கேட்டுட்டேன். சொன்னீங்களே எல்லாரும் சேர்ந்து இருப்போம்ன்னு. நான், என் அண்ணா எல்லாம் வளரும்போது அப்பா கை பிடிச்சு தான் நடந்தோம், வளர்ந்தோம். அம்மாவும், அப்பாவும் சேர்த்து தான் பார்த்துக்கிட்டாங்க. அப்போ என் பாப்பாவும் அப்படித்தானே இருக்கனும்?…” என்று கேட்க அங்கைக்கு சுர்ரென்று கோபம்.
“எல்லார் வீட்டுலையும் ஒரே மாதிரியா நடக்குது அவந்தி? இங்க எல்லாம் தர்ஷன் ஹாஸ்டல்ல தங்கி படிக்கலையா? அமலாவுமே ஸ்கூல் வரை ஹாஸ்டல் தான். அப்பறம் தான் காலேஜ் இங்கயே படிச்சா. இது ஒரு விஷயமா?…” என்றவர்,
“நான் உன்னோட சூழ்நிலைக்காக சொல்றேன். எதுவும் அவசரம்ன்னா என்ன பண்ணுவ? சட்டுன்னு வலி வந்தா கூட உன்னால தனியா எங்கயும் போக முடியுமா? வீட்டுக்குள்ள யாருமில்லாம இருக்கும் போது உனக்கு எதுவும் அசம்பாவிதம்ன்னா…” என ஒருவேகத்தில் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் பேசிவிட்டார்.
“அத்தை…” என்று அவந்திகா கத்திவிட,
“என்ன அத்தை? இதெல்லாம் நாம முன்னெச்சரிக்கையா இருக்க தான் சொல்றேன். நெருப்புன்னா சுட்டுடுமா? அதெல்லாம் எதுவுமாகாது. இருந்தாலும் நாம சுதாரிப்பா இருக்கனும்ல. நீ என்னடான்னா புரிஞ்சுக்கமாட்டேன்ற? குழந்தையா நீ? இப்படி சொன்னதுக்கே பயந்து கத்தற. நீ எப்படி ஒத்தையில பிள்ளையை பார்ப்ப?…”
“இவ்வளோ பேசற நீங்க இங்க வரவேண்டியது தானே?…” என்று கேட்டுவிட்டாள் அவந்திகாவும்.
“நானா? நான் ஏன் வரனும் என் வீட்டை விட்டுட்டு? என் பேச்சை நீ என்னம்மா கேட்ட? இப்பவே என் வார்த்தைக்கு நீ மதிப்பு தரமாட்டேன்ற…” என்றவர்,
“இங்க பார் அவந்தி. நானும் இவ்வளோ நாள் உன்கிட்ட நல்லவிதமா தான் சொல்லிட்டிருந்தேன். நீ ஊருக்கு வரும்போது திரும்பி எல்லாம் போகவேண்டாம். உன் அம்மாக்கிட்ட சொன்னாலும் அவங்களும் இதை தான் சொல்லுவாங்க….” என்று கூறி,
“அங்க உன்னை விட்டுட்டு நான் இங்க நீ என்ன பன்றியோ, ஏது பன்றியோன்னு எல்லாம் யோசிக்க முடியாது. இந்த மாசத்துல இருந்து இடுப்புக்கு சுடுதண்ணி விடனும், விளக்கெண்ணெய் பூசனும், கை மருந்து குடுக்கனும். எவ்வளோ பக்குவம் இருக்கு. அதனால நீ இங்க வர்ற. அவ்வளோ தான்…” என்று அதிகாரமாய் கூறினார் அங்கை.
“நானும் வரமாட்டேன். முடிஞ்சா நீங்க இங்க வந்து எல்லாம் குடுங்க, செய்ங்க. அங்க வரமுடியாது. நான் இங்க இவங்களோட தான் இருப்பேன். எப்ப பாருங்க இங்க இருக்காத, அவங்களோட போகாதனே சொல்றீங்க. இப்படி எந்த அம்மாவாச்சும் சொல்லுவாங்களா?…” என்று தனக்கு மனதில் தோன்றிய வார்த்தைகளை மறுப்பாய் தெரிவித்து கோபமாய் போனை வைத்துவிட்டாள் அவந்திகா.
அவள் அப்படி துண்டித்ததும் அங்கைக்கும் அத்தனை ஆவேசம். மீண்டும் மீண்டும் அழைக்க அவள் எடுக்கவே இல்லை.
“நான்லாம் என் மாமியார், புருஷன் ஒரு வார்த்தை சொன்னா கண்ணை கூட சிமிட்டாம சரின்னு கேட்டுப்பேன். இவ என்னடான்னா என்ன பேச்சு பேசறா?…” என்று பல்லை கடித்துக்கொண்டு மீண்டும் அழைத்தார் அங்கை. ம்ஹூம் எடுக்கவே இல்லை அவந்திகா.
சற்றுநேரத்தில் அமலாவும் வந்துவிட்டு சென்றுவிட இப்போது மகனிடம் இதனை அவந்திகா தெரிவிப்பாளா இல்லையா என்னும் சிந்தனை.
மீண்டும் அவளுக்கு அழைக்க நினைத்தவர் மறுநாள் பேசிக்கொள்ளலாம் என்று அப்படியே அமர்ந்துகொண்டார்.
மறுநாள் அவருக்கு அவந்திகா அழைக்கவில்லை. இவர் அழைக்க நினைக்கும் முன் ப்ரியதர்ஷன் அழைத்துவிட்டான்.
“நாங்க ஊருக்கு வரலை ம்மா. நீங்க என்ன பன்றீங்க அந்த கல்யாணத்துக்கு எங்களுக்கு பதிலா போய் அட்டன் பண்ணிட்டு வந்திருங்க…” என்றதோடு,
“அன்னைக்கே நீங்க கிளம்பி இங்க வாங்க…” என்று சொல்லிவிட்டான் ப்ரியதர்ஷன்.
அருகில் இருந்த அவந்திகாவிற்கு அங்கை என்ன சொல்வாரோ, சம்மதிப்பாரோ இல்லையோ என்றிருந்தது.
இன்னும் முதல்நாள் தன்னிடம் அவர் பேசியதன் தாக்கம் கொஞ்சமும் குறைவின்றி இருந்தது.
எப்படியெல்லாம் பேசிவிட்டார்? கனிவாய் பார்த்ததை தாண்டி அவர் எதுவும் இதுவரை தன்னிடம் பேசியதில்லையே என நினைக்கையில் மீண்டும் கண்ணீர்.