இரவு பதினொன்றரை மணியாகியிருந்தது. உறக்கம் வராமல் இங்குங்குமாய் நடந்துகொண்டிருந்தாள் அவந்திகா.
விழிகள் வாசலில் தான் பதிந்திருந்தது கணவனின் வருகையை எதிர்பார்த்தபடி.
இதோ இன்னும் ஒருவாரத்தில் ஒன்பதாம் மாதம் பிறக்கவிருக்க அதன் முதலாம் வாரம் முடிவில் தலை பிரசவத்திற்கு அவளின் தாய் வீட்டிற்கு அனுப்பி வைக்கவிருக்கிறான் ப்ரியதர்ஷன்.
வாழ்க்கை இத்தனை அழகாய் மாறும் என்று நினைக்கவே இல்லை. இந்த இடப்பட்ட மாதங்களில் அவள் என்னென்னவோ நினைத்து செய்தது எல்லாம் இப்போது சிறுபிள்ளைத்தனமாய் தெரிந்தது.
இன்னும் இரண்டு வாரங்கள். அதன்பின் அவனின்றி அவள் என்ற எண்ணம் எழாமல், அவளின்றி இங்கே அவன் என நினைக்கையில் மனதினுள் பெரும்பாரம் சூழ்ந்தது.
இங்கே வந்த பின்னான மாற்றங்கள். எத்தனை எத்தனை அவனை சார்ந்து அவள் பழகி இருந்தாளோ, அத்தனைக்கத்தனை அவளை ஒட்டியபடி அவன் வாழ்ந்திருந்தான்.
கோபமோ, ஆதங்கமோ என்னவோ ஒன்று அவளிடம் காண்பிக்காவிட்டால் அவன் நாள் நிறைவு பெறாது என்பதனை வாழ்ந்து உணர்ந்திருந்தாள் அவந்திகா.
தொலைத்த நாட்களை எல்லாம் அவனிடம் எவ்வாறு மீட்டு சேர்ப்பது என்று வழிவகை புரியாமல் தவித்து தழுவும் பொழுதுகள் அவனின் அதீத அன்பின் வெளிப்பாட்டில் வன்மைகள் உயிர் பெரும்.
“கன்சீவா இருக்கன்னு பார்க்கறேன்…” என பல்லை நறநறவென்று அவன் கடித்து கடுமை பூசும் வேளைகள் எல்லாம் அவளுக்கு பொன் வேளைகள் தான்.
முகம் சிவக்க முத்தங்கள் இட்டு அணைப்புகளை அவள் கூட்ட, அக்கடுமைகள் காணாமல் கொள்ளாமல் அவளிடம் பனியாய் கரைந்துவிடும்.
வாழ்க்கை தான் எத்தனை விசித்திரங்களை கொண்டதென அவளும் உணர்ந்து உயிர்த்து வாழ்ந்துகொண்டிருக்கிறாள்.
மிதமான தூறலுடனான குளிர்ந்த காற்றும் இதமாய் அவளின் கூந்தல் கலைத்து செல்ல,
“மழை பெருசாகும் போலையே? நீ வாசல்ல என்ன பன்ற அவந்தி?…” என்று வந்தாள் தரணி.
“நிலவன் தூங்கியாச்சா அண்ணி?…” என திரும்பி பார்த்தவள் முகத்தில் நிறைவின் எழில்.
“ஹ்ம்ம், சரியான வாலு. அப்பா வேணும்ன்னு கேட்டு என்ன ஒரு பிடிவாதம். ஒருவழியா கதை சொல்லி, நாளைக்கு அவன் கேட்கற டபுள் டக்கர் பஸ் வாங்கி தர்றேன்னு ஏமாத்தி தூங்க வச்சிருக்கேன்…” என்றவள்,
“உள்ள வா அவந்தி. அண்ணா வரும்போது வரட்டும்…” என்று வந்து சோபாவில் அமர அவந்திகாவும் கதவை லேசாய் மட்டும் சாற்றிவிட்டு வந்தமர்ந்தாள்.
தரணி வந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. அவள் தங்கையின் திருமணம் முடிந்ததும் கிளம்பி வருவதாய் இருந்தவள் இப்போது தான் வந்து சேர்ந்தாள்.
“அம்மா கால் பண்ணியிருந்தாங்க. நாளைக்கு காலையில கிளம்பிருவாங்களாம்….” என்றதும்,
“ஏன்? ஈவ்னிங் தானே புறப்படறதா சொன்னாங்க? என்ன திடீர்ன்னு?…” என்றாள் தரணி.
“அண்ணா தான் சொன்னானாம். உங்ககிட்ட பேசறேன்னு சொன்னதா அம்மா சொன்னாங்க. நீங்க உள்ள தம்பியை தூங்க வச்சிட்டிருந்தீங்க. அதான் நான் போனை குடுக்கலை….”
“நல்லவேலை செஞ்ச அவந்தி. நானும் மொபைல் எதுவும் குடுக்கலை. உன் அண்ணா கூப்பிட்டிருப்பாங்க போல. குடுத்திருந்தா இப்பவே கிளம்புன்னு அடம் பண்ணிருப்பான்…” என்ற தரணி,
“பேசாம இன்னைக்கே கிளம்பி வந்திருக்கலாம் உன் அண்ணாவும், அத்தையும்…”
“காரணமில்லாமலா அண்ணி? லேட்டா தான் வந்திருக்கான் வேலை முடிச்சு. வந்ததும் சொல்லியிருக்கான். சரி என்னவோ, மார்னிங் கிளம்பறாங்க தானே? வந்திருவாங்க. நாம பர்ஸ்ட் இங்க வரும்போது இவங்க ஒரு கார் சொல்லிருந்தாங்க தானே? அந்த ட்ரைவர்ட்ட தான் பேசியிருகாங்கலாம். அந்த டைம்க்கே கிளம்பிருவாங்க….”
“நல்ல ஐடியா…” என்றவள் நேரம் பார்த்துவிட்டு,
“அண்ணா கால் எதுவும் செஞ்சாங்களா?…” என்றாள் அவந்திகாவிடம்.
“ம்ஹூம், நைட் வரமுடியாதுன்னா தான் கால் பண்ணுவாங்க அண்ணி. இப்ப வரைக்கும் கூப்பிடலையா. அதனால கண்டிப்பா வந்திருவாங்க…” என்று சொல்லியவளை கண்டு அத்தனை புன்னகை தரணியிடம்.
“இப்ப எதுக்கு இந்த சிரிப்பு? சரியில்லையே…” என்று அவந்திகா முறைக்க,
“இல்ல, கொஞ்சநாள் முன்னாடி இந்த பொண்ணு என்னவெல்லாம் பேசுச்சுன்னு யோசிச்சேன்…”
“அண்ணி…” அவந்திகா சிணுங்க,
“கொஞ்சநாள்ன்னா உனக்கு கல்யாணம் ஆனப்போ எல்லாம் போகவேண்டாம். இப்ப இந்த சிலநாள். அதாவது உன் வளைகாப்பு அன்னைக்குன்னு கூட வச்சுக்கோயேன். என்ன ஒரு பேச்சு? அதுவும் சரிகாவோட மேரேஜ் பத்தி சொல்லவும்…” என்று சொல்ல அவந்திகாவிற்கே அத்தனை வெட்கம்.
“இதுக்கு எவ்வளோ அலப்பறை. என்ன ஒரு ஆர்ப்பாட்டம்? புலம்பல். இப்ப என்னடான்னா புருஷனை விட்டுட்டு கண்ணு கூட அங்க இங்க நகர மாட்டேன்னுதே?…” என்று கேலி பேச,
“அதெல்லாம்…” என்ற அவந்திகா சமாளிக்க முடியாமல் தடுமாற,
“சொல்லு. இப்ப சொல்லு. இப்படி ஒரு மாப்பிள்ளை பார்த்திடாதீங்கன்னு சொல்லேன்….” என்ற தரணி,
“என்னோட அத்தை பொண்ணுக்கும் வரன் பார்க்க போறாங்களாம். அட்வைஸ் குயின் அவந்திகாவை அனுப்பலாம்ன்னு பார்த்தா பொண்ணு இங்க பயங்கர ப்ளாட் போல…” என்று ஓட்டி தள்ள,
“அச்சோ அண்ணி. போதும்…” என முகத்தை மூடிக்கொண்டாள் அவந்திகா.
“பார்றா வெட்கத்தை…” என்று சிரித்தவள்,
“உன் மாமியார் என்னதான் சொல்றாங்க?…” என கேட்க,
“என்ன சொல்லுவாங்க. என்னை அங்க வர சொல்றாங்க…” என்றாள் முகம் வாட.
தரணிக்கும் வருத்தமாய் இருந்தது அங்கையின் செயல்பாடுகள். ஆனால் இதில் தாங்கள் என்ன செய்துவிட முடியும் என்று மௌனம் காத்தாள்.
“ஏன் இப்படி இருக்காங்கன்னே தெரியலை அண்ணி. உங்களுக்கு தான் தெரியுமே? சரிகா கல்யாணம் முடிஞ்சு ஈவ்னிங் அவங்க அங்க போய் பார்த்ததுக்கு கீழே விழுந்துட்டேன்னு கால்ல கட்டு. அப்படியே கிளம்புங்கனு இவங்க சொன்னதுக்கு கேட்கலையாம்…” என்றவள்,
“அந்த வீட்டை விட்டு கிளம்பமாட்டேன்னு அவங்க ரூம்க்குள்ள போய் கதவை அடைச்சிக்கிட்டாங்க போல. உடைச்சா கூட்டிட்டு வர முடியும்ன்னு என்கிட்ட இவங்க கத்தறாங்க. என்ன சொல்றது? இப்ப வரைக்கும் கால் பண்ணலை. அமலாண்ணி தான் போய் பார்க்க வரன்னு இருக்காங்க…” என்றாள்.
தரணிக்கு இதனை சொல்லலாமா வேண்டாமா என்று ஒரே சிந்தனை. கலாவும், முகிலரசனும் அதனை பற்றி அவந்திகாவிடம் கூறவேண்டாம் என்றிருந்தனர்.
ப்ரியதர்ஷன் அவந்திகாவுடன் கிளம்பிய பின்னர் சம்பந்தியை பார்க்க சென்றவர்களுக்கு ஏக அதிர்ச்சி.
காலில் அடிபட்டதை போலவெல்லாம் இல்லவே இல்லை. நன்றாகவே நடந்தார் அங்கை.
மிதமான சுழுக்கு என்று சொல்லி சமாளிக்க ஒன்றும் கேட்கமுடியாமல் விசாரித்துவிட்டு வந்துவிட்டனர்.
ஆனால் அமலா மூலம் இதுவுமே ப்ரியதர்ஷனுக்கு தெரியவந்திருக்க, அவர்கள் அதனை அறியவில்லை.
தரணியின் அமைதியில் அவந்திகா அவளை லேசாய் தட்டி பார்க்கவும் சமாளித்து பார்த்தவள்,
“சரி விடு. குழந்தை பிறக்கவும் சரியாகிடும்…” என்றாள் அவள்.
“எங்க கல்யாணம் ஆகும் போதெல்லாம் அத்தை இப்படி இல்லை அண்ணி. வேற மாதிரி இருந்தாங்க. இப்ப தான் இப்படி. அதுவும் தனியா இருக்கறதாலன்னு தோணுது. சமீபமா அமலாண்ணி எதாச்சும் கேட்டா கூட கோபப்படறாங்க போல. அவங்களும் சொல்லி வருத்தப்பட்டாங்க…” என்று பேசிக்கொண்டிருந்தாள்.
அவள் சொல்லிக்கொண்டிருக்க ப்ரியதர்ஷனின் வருகை. அவன் வந்ததுமே இருவரையும் பார்த்து புன்னகைத்துவிட்டு உள்ளே செல்ல,
“இரு, நான் போய் தோசை வார்க்கறேன்…” என்று தரணி கூற,
“இல்லண்ணி, நானே பன்றேன். நீங்க போய் படுத்துக்கோங்க…” என்றாள் அவந்திகா.
“டிஸ்டர்ப் பண்ணாதீங்கன்னு எவ்வளோ பாலிஷ்டா சொல்ற நீ…” என்று சிரித்துவிட்டு கிளம்பினாள் அவள்.
அவந்திகாவும் வந்து தோசைக்கல்லை வைத்துவிட்டு அவனுக்கு சட்னியை எடுத்து வைத்து, சாம்பாரை சூடு செய்தாள்.
கல் நன்றாய் சூடாகும் பொழுதே இன்னொரு பக்கத்தில் பாலை அடுப்பில் வைக்க அதுவரை வராத உறக்கம் அவனை கண்டதும் கண்களை சுழற்ற ஆரம்பித்தது.
தேடும் பொழுதுகள் எல்லாம் அவன் நினைவில் உறக்கம் கலைய, அவனின் அருகாமையில் தள்ளி சென்ற நிம்மதி கைவளைவில் சேர்ந்ததை போல் ஒரு சுகமான தளர்வு.
இப்போதும் அவன் கை வளைவில் தான் அவள் சேர்ந்துகொண்டாள். கணவனின் மணம் அவள் நாசியை நிறைக்க,
“அச்சோ அண்ணி…” என்று விலகினாள் அவந்திகா.
“டோர் லாக் பண்ணிட்டாங்க…” என்றவன்,
“அடுப்புல நிக்கும்போது துள்ளாம நிக்கமாட்டியா? இங்க என்ன பேய், பூதமா வர போகுது. அவசரம்…” என்று அவளை கடிந்துகொள்ள,
“அடுப்புல நிக்கும் போது இப்படி செய்யாம இருந்தா நான் ஏன் துள்ள போறேன்…” என்றாள் முனுமுனுப்பாய்.
“ரொம்ப தெளிவுடி. நகரு…” என்றவன் அந்த பாலை தம்ளரில் ஊற்றி ஆற்ற ஆரம்பித்தான்.
“நீங்க சாப்பிடுங்க. அதுக்குள்ள ஆறிடும்….” என்று அதனை வாங்க,
“எனக்கு தெரியாதா? நான் சாப்பிட்டு முடிச்சு நீ பாலை குடிச்சா ரூம்க்குள்ள வந்துட்டு நெஞ்சுக்குள்ளையே நிக்குதுன்னு திணறி நடக்கறதுக்கா? இப்பவே குடி….” என்றான் அவன்.
“ஹ்ம்ம்…” என்றவள் அவன் தரவும் வாங்கிக்கொள்ள,
“நீ போய் உட்கார். நான் எடுத்துட்டு வர்றேன்…” என்று தனக்கும் ப்ளேட்டில் தோசையை எடுத்து வைத்துவிட்டு டேபிளுக்கு வந்தான்.