இத்தனை நாட்களில் ஒருநாள் ஒருபொழுதும் கூட நான் வரும்வரை ஏன் விழித்திருக்கிறாய் என்று கேட்டதில்லை.
‘தூக்கம் வந்தா தூங்கவேண்டியது தானே?’ என்றும் சொல்லியதில்லை. உறங்கிவிட்டாலும் அவளை எவ்வித தொந்தரவும், கேள்வியும் கேட்பதில்லை.
ஆனால் அவனுக்காக அவளிருக்கும் பொழுதில் அம்முகம் காண்பிக்கும் அந்த உணர்வுகள் எல்லாம் அவந்திகாவை முழுதாய் அள்ளிக்கொள்ளும்.
ஒருவித ஏக்கம். அது நிறைவேறுகையில் அவை காண்பிக்கும் ஒப்பற்ற மகிழ்ச்சி. இதனை அவந்திகா அவதானித்திருந்தாள்.
‘அண்ணியை பார்க்கலைன்னா நிலவன் கூட இப்படி தேடி, அவங்களை பார்த்ததும் சிரிப்பானே? அப்படி இருக்கு’ என மனதிற்குள் சொல்லிக்கொள்பவள் அவனிடம் அதனை கேட்டதில்லை.
அதற்காகவே விழித்திருப்பாள். முதலில் சிரமமாக இருந்தாலும் அந்த ஒற்றை புன்னகைக்கே அவள் காத்திருக்க துவங்கினாள்.
பாலை குடித்துக்கொண்டே அவன் உண்ணுவதை கவனிக்க கைப்பேசியில் வந்திருக்கும் குறுஞ்செய்திகளை கவனித்தபடி சாப்பிட்டவன் எதை அதிகம் எடுக்கிறான் என்று பார்த்தாள்.
இது நன்றாக இருக்கிறது, இல்லை என்ற வார்த்தைகள் எதுவும் வாங்கிவிடமுடியாது அவனிடம்.
அன்றைக்கு சாம்பார் சட்னியை விட ருசி அதிகம் போல. அவனுக்கு பிடித்திருக்கிறது என்று புரிந்துவிட அவந்திகா பாலை குடித்துவிட்டு எழுந்தாள்.
அவளை நிமிர்ந்து பார்த்தவன் அவள் காலி தம்ளரை காண்பிக்கவும் மீண்டும் உண்ண துவங்கினான்.
எழுந்து சென்றவள் கையோடு அடுத்த தோசையை வார்த்து கொண்டுவந்து வைக்கவும் ஒன்றும் சொல்லாமல் அதனையும் உண்ண அடுத்தது வந்தது.
“போதும் அவந்தி…” என்று சொல்லி சாப்பிட்டு முடித்தவன்,
“மார்னிங் ஹாஸ்பிட்டல் போகனும். உன்னோட ரிப்போர்ட்ஸ் எல்லாம் எடுத்து வச்சிட்டியா?…” என்றான்.
“ஹ்ம்ம்…” என்றவள்,
“ஒன்பதாம் மாசம் தானே வாராவாரம் வர சொல்லுவாங்க? ஏன் நமக்கு இந்த மாசமே?…” என்று கேட்டவள் தான் எடுத்து வைத்திருப்பதை காண்பிக்க,
“ஓகே, அங்கயே வச்சிரு…” என்று வந்து கட்டிலில் அமர்ந்தான்.
மெடிக்கல் ரிப்போர்ட் அனைத்தையும் உள்ளே வைத்துவிட்டு வந்து தானும் அமர்ந்தவள் அவனை பார்க்க,
“நீயும் அப்பவே போகனுமா என்ன?…” என கேட்டதும் அவந்திகா திடுக்கிட்டு பார்க்க,
“என்னடி முழிக்கிற? போறியா? அதை சொல்லு…” என்றான் லேசான அதட்டலுடன்.
“அப்படியெல்லாம் இல்லையே. அமலாண்ணி வேற வர்றேன்னு சொல்லியிருக்காங்க நெக்ஸ்ட் வீக்கெண்ட். துளசிக்கு வெளில போகனுமாம். அப்பறம் முக்கூடல் எல்லாம் போய் பார்க்கனும்ன்னு சொல்லியிருக்கா. அதான் நான் இருக்கேன்…” என்றாள் சமாளிப்பாய்.
“அதனால மேடம் இருக்கீங்க…” என்றவனின் மரியாதை கேலியில் மாட்டிக்கொண்டு அவந்திகா விழிக்க,
“சரி, அமலா வரும்போது வரட்டும். நீ வேணா போகனும்ன்னா போயேன். இந்தநேரம் ஆசைபட்டா செய்யனுமாமே. அதனால கிராண்டட்…” என்று சொல்ல அவந்திகாவிற்கு மூச்சு வாங்கியது அவன் சொல்லியதை கேட்டு.
ஒன்றும் சொல்லாமல் சில நொடிகள் பார்த்திருந்தவள் அவனை முறைக்கவும் முடியாமல் சட்டென சரிந்து அவனுக்கு முதுகு காண்பித்து படுத்துக்கொண்டாள்.
அதற்குமேல் என்ன செய்ய முடியும்? போவென்று சொல்லிவிட்டானே? விளையாடுகிறான் என்று தெரிந்தாலும் ஒரு கோபம்.
ஆனால் காண்பிக்கமுடியவில்லை. மௌனத்தினை கையில் எடுத்துக்கொண்டவள் இடையை வளைத்தது அவன் கரங்கள்.
“ஓய் பேசிட்டிருக்கும்போதே இதென்ன மரியாதை இல்லாம?…” என அவள் காதோரம் கிசுகிசுப்பாய் ப்ரியன் வினவ,
“ம்ஹூம்…” என்றாள் மென்குரலில்.
“அப்படின்னா?…”
“தூக்கம் வந்திருச்சு. அதான்…” மீண்டும் முணுமுணுப்பாய் அவள் குரல்.
“ஓஹ், நான் கூட போக இஷ்டம் இல்லாம படுத்துட்டியோன்னு தப்பா நினைச்சேன். உனக்கு தான் இங்க இருக்கறதை விட உன் ஊருக்கு போகனும்ன்னா போதுமே. வேண்டாம்ன்னா சொல்லுவ…” என அவளை டென்ஷன் செய்ய,
“நான் சொன்னேனா போறேன்னு. என்ன வேணும் உங்களுக்கு?….” என்று அவளறியாமலே குரலை உயர்த்திவிட்டவள் ஒருவேகத்தில் வேகமாய் எழுந்தமர சட்டென அடிவயிற்றில் லேசாய் வலி.
“ஹேய் என்னடி இப்படி எழுந்துக்கற?…” பயந்து கத்திவிட்டான் ப்ரியதர்ஷன்.
அவந்திகாவுக்குமே பயம். கோபத்தில் இப்படி வயிற்றில் குழந்தை இருப்பதை மறந்து அப்படி என்ன தனக்கு வேகம் என்று தன்னையே நிந்தித்தவள் அவனின் கலவரமான முகம் பார்த்தாள்.
“என்ன செய்யுது அவந்தி? எதுவும் இல்லையே…” என்றவனின் பரிதவிப்பான குரலில் ஒன்றுமில்லை என்று தலையசைத்தவள், மெதுவாய் அவன் பக்கம் திரும்ப,
“நிஜமாவா? என்னன்னு சொல்லுடி. நிஜமாவே எதுவும் இல்லையா?…” என்று கேட்க,
“நிஜமாவே ஒன்னும் இல்லை. லேசா சுருக்குன்னுச்சு. அவ்வளோ தான்…” என சொல்லியும் ப்ரியதர்ஷன் அவளையே பார்த்திருந்தான்.
“பயந்துட்டீங்களா?…” என மெல்லிய சிரிப்புடன் கேட்டவளின் நெற்றியில் துளித்துளியாய் வியர்வை பூக்கள்.
இன்னும் அவனின் பார்வை அவளிடம் தான். அவள் முகம் பார்த்து விழி கண்டு அவளுக்கு என்ன செய்கிறதோ என பார்த்தபடி இருக்க,
“என்னை ஊருக்கு போக சொல்லி நீங்க இனிமே சொல்லக்கூடாது…” ஒருவழியாய் வாய் திறந்து சொல்லிவிட்டாள் அவந்திகா.
ப்ரியனின் அந்த பார்வை மனதையும், உயிரையும் என்னவோ செய்ய அவன் மனம் மலரும் வகையில் அவன் விரும்பியதை கூற ப்ரியனின் விழிகளில் ப்ரியம் கூடியது.
“எப்போ போகனுமோ போகலாம். நீங்க சொல்லாதீங்க…” என்றவள் அதனை கூறுகையில் விழிகள் லேசாய் கலங்க மெல்ல நகர்ந்து அவனையும் சாய்த்து, அவன் நெஞ்சில் தலை சாய்த்தவள் அவனின் கரத்தை எடுத்து தன்னை சுற்றி போட்டுக்கொண்டாள்.
“நீங்க விளையாட்டுக்கு சொல்றீங்க. ஆனா கேட்கும்போது கஷ்டமா இருக்கு. அதான் உடனே கோபம். திரும்பிட்டேன்…” என்றவள் அவன் முகத்தினை நிமிர்ந்து பார்க்க அவனின் விழிகள் அவளிடம் தான்.
பார்த்தவள் மெல்ல எம்பி அவனின் தாடையில் துளி முத்தம் வைக்க ப்ரியனின் இதழ்களில் குறுநகை.
“சரி, போன்னு சொல்லலை. ஆனா டெலிவரிக்கு போகனுமே? போவ தான? இது ஒரு விஷயம்ன்னு உனக்கு கோவம்? அப்போ நீ செஞ்சதுக்கு எல்லாம் நான் உன்னை என்ன பண்ணனும்? எவ்வளோ கோவப்படனும்?…” என்றதும் அவந்திகா விழிக்க,
“பதில் சொல்லு நீ. சும்மா இருந்தவனை உசுப்பேத்திட்டு ஒன்னும் தெரியாத பிள்ளையாட்டம் முழிக்கிற?…” என்றான் அவளின் மூக்கை பிடித்து லேசாய் ஆட்டியபடி.
“அதான் செஞ்சிட்டேனே? தப்பு. பனிஷ் பண்ணுங்க. இப்போ ஓகேவா?…” என்று அவனிடம் மொத்தமாய் தன்னை ஒப்புக்கொடுக்க,
“இவ்வளோ பேச்சு பேசற. இன்னும் ரெண்டுவாரம். நீ கிளம்பிருவ. இதுல நான் எதுவுமே உன்னை சொல்ல கூடாதா? தைரியம் தான். என்கிட்டையே ஆடர் போடற நீ…” என்றான் அவளை ஆதுரமாய் அனைத்து, குரலில் கிண்டலும், கண்டிப்பையும் சரிவிகிதத்தில் காண்பித்து.
“இன்னும் ரெண்டுவாரம் இருக்கு…” என்றாள் அவந்திகா தன் கையை பெரிதாய் விரித்து.
“இன்னும் ரெண்டே வாரம் தான் இருக்கு….” என்றவன் அவள் விரித்த கரத்தை இழுத்து தன்னை சுற்றி கட்டிக்கொண்டு.
இரண்டுவாரங்கள் பெரிதோ, சிறிதோ. ஆனால் இருவரின் நெருக்கங்கள் இனிக்க இனிக்க புதிதாய் பிறந்துகொண்டே இருந்தது.