இரண்டுமுறை அடித்து ஓய்ந்திருந்த கைப்பேசியை எடுத்தவன் அதில் பார்வையை பதித்துக்கொண்டே அவ்விடம் விட்டு வெளியேறினான்.
“சொல்லு அவந்தி…” என கேட்டதும் மெலிதான முணங்கல் எதிர்பக்கம்.
“அவந்திகா…” என்று அவனின் காதுகள் கூர்மையாக,
“நீங்க எங்க இருக்கீங்க?…” என்று கேட்க,
“இங்க கமிஷனரை மீட் பண்ண வந்தேன். உனக்கு என்ன?…” என்றவன் வீட்டிற்கு செல்லும்படி ட்ரைவரிடம் சொல்லி வாகனத்தில் ஏறி அமர்ந்தான்.
அவளின் குரலிலேயே என்னவோ சரியில்லை என்று புரிந்தது. பிற்பகல் மூன்றுமணியை தாண்டி இருக்க இந்தநேரம் சாமந்தி கிளம்பியிருப்பார் என தெரிந்ததும் தானும் வீடு நோக்கி கிளம்பினான்.
இரண்டுநாட்களுக்கு முன்புதான் கலாவும், தரணியும் ஊருக்கு கிளம்பி சென்றனர்.
அவந்திகாவை மறுவாரம் வந்து முறையாய் அழைத்து செல்வதாக சொல்லி சென்றிருந்தனர்.
செல்லும்முன் சாமந்தியிடம் கலா அன்பு கட்டளை போல சொல்லியே தான் சென்றிருந்தார்.
“மாப்பிள்ளை நைட் ட்யூட்டின்னு போனா கொஞ்சம் இங்க வந்து படுத்துக்கோம்மா சாமந்தி. பிள்ளையை விட்டுட்டு போகவும் மனசில்லை. அதுக்காக நானும் இங்கயே இருந்தா சரிவராதே. இன்னும் ஒரு வாரம் தான்…” என்றவருக்கு மனதே இல்லை.
செல்லவேண்டாம். தன் அருகாமை இப்போது மகளுக்கு வேண்டும் என்று தோன்றிக்கொண்டே இருந்தது உள்ளுக்குள்.
ஆனால் இன்னும் ஒன்பதாம் மாதம் கூட ஆரம்பிக்கவில்லையே. மருத்துவமனையிலும் எல்லாம் நன்றாக இருப்பதாக சொல்லியிருந்ததால் ஒரு தைரியம். கிளம்பி சென்றுவிட்டனர்.
ப்ரியதர்ஷன் இருக்கும் வேளைகளில் சட்டென்று வேலையை முடித்துவிட்டு கிளம்பிவிடும் சாமந்தி, மற்ற நேரங்களில் அவந்திகாவுடன் அவளுக்கு துணையாக பேசிக்கொண்டாவது உடன் இருப்பார்.
சற்றுமுன்னர் தான் அவரும் அவள் உறங்கவிருப்பதனால் தானும் வீட்டிற்கு சென்று வருவதாக சொல்லியிருக்க அரைமணி நேரத்திற்குள் இப்படி ஒரு அழைப்பு.
வந்த பார்த்தவர் பதறி போனார். தரையில் அமர்ந்திருந்தவள் வயிற்றை பிடித்தபடி வலியில் அனத்திக்கொண்டிருக்க,
“அவந்தியம்மா, ஒண்ணுமில்லை. வந்துட்டேன் நான்…” என்று சொல்லி அவளை பிடித்து சோபாவில் அமரவைத்து முகத்தை துடைத்துவிட்டார்.
“ஒண்ணுமில்ல, பொறுங்க. பொறுங்க…” என்றவர் உடனடியாக கை வைத்தியம் பார்க்க, அதற்குள் ப்ரியதர்ஷன் வந்து சேர்ந்தான்.
“அவந்தி…” என்றவனின் அவசரமான வருகையும் பதட்டமும் கண்டவளுக்கு இன்னும் கலவரம்.
வலி வேறு அவளை எழ விடாமல் உயிரை சுருட்டியது. வெகுவாய் பயந்துபோனாள் அவந்திகா.
“ஒண்ணுமில்லை, வந்துட்டேன்…” என்றவன் அவளை ஆற்றுப்படுத்தும் அவகாசம் இல்லாமல்,
“ஹாஸ்பிட்டல் போயிடலாம்…” என்றான்.
“ஆமா ஸார். போகலாம். இருந்தாலும் இது சூட்டு வலியாவும் இருக்கும்…” என்று சொல்ல,
“எதுவா இருந்தா என்ன?…” என்றவன் அவளை கையில் தூக்கிக்கொள்ள சாமந்தி கதவை பூட்டிவிட்டு வந்தார்.
“ப்ச், அந்த கீயை குடுங்க. நான் போய் மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் எடுத்துட்டு வர்றேன்…” என்று சொல்லி உள்ளே வந்து தேவையானவற்றை எடுத்துக்கொண்டு மீண்டும் கதவை பூட்டிவிட்டு,
“இந்த தண்ணியை கொஞ்சம் கொஞ்சமா குடிக்க சொல்லுங்க ஸார். சூட்டுவலின்னா குறையும்…” என்று ஒரு பாட்டிலை நீட்டினார்.
“இது என்ன?…” என்றவன் அவரிடம் வாங்கி பார்க்க,
“அரிசி வடிச்ச கஞ்சில வீட்டுல எடுத்த சுத்தமான வெண்ணெய் போட்டு குடிக்கிற சூட்டுக்கு ஆத்திருக்கேன். இது குடிச்சா பொய் வலின்னா குறைஞ்சிடும்…” என்று சொல்லவும் அவந்திகாவிற்கு தர மிடறு விழுங்கினாள் அவள்.
மருத்துவமனை செல்லும்முன் அவள் அனுபவித்த வலிகளால் படாதபாடாய் போனது.
உடனடியாக அனுமதிக்கப்பட அவளுக்கு பார்க்கும் மருத்துவரும் அதேநேரம் பணியில் இருக்க இன்னும் நிம்மதியானது.
சென்ற சிறிதுநேரத்திலேயே கண்டுகொண்டனர் அது சூட்டினால் உருவான வலி என்று.
“இது டெலிவரி பெய்ன் கிடையாது ஸார்…” என்றதும்,
“ரொம்ப துடிச்சாளே டாக்டர்…” என கேட்டான் ப்ரியதர்ஷன்
“அப்படித்தான் இருக்கும். ஆனா பால்ஸ் பெய்ன் தான். இன்னும் கர்ப்ப வாய் திறக்கவே இல்லை ஸார். கொஞ்சநேரத்துல அவங்க நார்மலாகிடுவாங்க. வீட்டுக்கு போயிடலாம்…” என மருத்துவர் சொல்ல தலையசைத்தவனின் முகத்தில் அப்போது தான் நிம்மதி.
அவந்திகாவை அனுமதித்திருந்த அறைக்குள் நுழைய அயர்வில் கண் மூடி இருந்தாலும் முகமெல்லாம் சோர்வும், மிஞ்சிய வலியும் தெரிந்தது.
“அவந்தி…” என்றதுமே திரும்பி விழி திறந்து பார்த்தாள்.
“ஹ்ம்ம், ஒண்ணுமில்லை….” என்றாலும் மனதை அப்போதே திடப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தாள் அவந்திகா.
“வீட்டுக்கு கிளம்ப சொல்லி டாக்டர் சொல்லிட்டாங்க. நீ ஓகேன்னா புறப்படுவோம்…” என்று சொல்ல தலையசைத்து எழுந்துகொண்டாள்.
மருத்துவரையும் பார்த்து பேசிவிட்டு தான் வந்தனர் இருவரும். சாமந்தியை கிளம்ப சொல்லிவிட்டு இருவர் மட்டும் வீடு வந்தனர்.
“தனியா பயந்துட்டியா?…” என்றான் அவர்களின் இடம் வந்ததுமே.
“ஹ்ம்ம், ரொம்ப…” என்று அவனை அணைத்துக்கொள்ள,
“என்ன செய்யலாம் அவந்தி?…” என்றவனை புரியாமல் அவள் நிமிர்ந்து பார்க்க,
“உன்னை இங்க இருக்க வச்சு கஷ்டப்படுத்தறேனோ?…” என்றான் ப்ரியதர்ஷன்.
“அப்படின்னு இல்லை…”என்றவள் முகத்தில் பெரும்கவலை.
இதுவரை எந்த நேரத்திலும் குற்றவுணர்வில் அவன் முகம் வாடி பார்த்ததே இல்லை அவந்திகா.
அவனை விட்டு தான் விலகி நின்ற நேரத்திலும் கூட தனக்காக தான் அவன் விலகி இருந்தானே தவிர இப்படியெல்லாம் முகம் கலங்கி பார்த்ததே இல்லை.
இப்போது கண்டதுமே உள்ளம் பாகாய் கரைய தன் தைரியம் ஒன்றே அவனின் நிம்மதி என புரிந்தது.
“இப்படி வலி வர்றது இதுதான் பர்ஸ்ட் டைம் இல்லையா? அதான் கொஞ்சம் பயந்துட்டேன். இனிமே பழகிடும்…” என்றவள்,
“பாருங்க நான் ஆல்ரைட்…” என்று சொல்லி எழுந்து கூடத்தில் இங்குமங்குமாய் நடந்து காண்பித்து, புன்னகைத்து தன்னை இலகுவாய் காட்டிக்கொண்டவளை கண்டு புன்னகை விரிந்தது ப்ரியதர்ஷன் முகத்தில்.
“இப்ப கொஞ்சமிருந்த வலியும் போயிருச்சு. ட்ரஸ்ட் மீ…” என அவந்திகா அவனை சமாதானம் செய்யவென்று.
“ம்ஹூம். நம்பிக்கை வரலை…” என்றான் அடக்கப்பட்ட புன்னகையுடன்.
“ஏன்? ஏன்? ஏன்? எனக்கென்ன? இதோ இதுக்கு மேலே என்ன வேணும்? நல்லா நடக்கறேன். விட்டா வேகமாவும் நடப்பேன். ஆனா குழந்தை பயந்துக்குமே…” என்று வயிற்றை பிடித்துக்கொண்டு அவள் கொஞ்சலாய் முகம் கனிந்து விழி சுருக்கி சொல்ல கவிதையாய் அவளை பாவனை.
“பேசாம உன் அண்ணி, அம்மாவோடவே அனுப்பியிருக்கலாமோன்னு நிஜமாவே தோணுது அவந்தி. சீரியஸா சொல்றேன்…” என்றான் மெல்லிய புன்னகையும், கவலையுமாய்.