அவனை ஒரு பார்வை பார்த்தவள் ஒன்றும் சொல்லாமல் உள்ளே சென்றுவிட ப்ரியதர்ஷன் புருவங்கள் குறுஞ்சிரிப்புடன் உயர்ந்தது.
“வர வர மதிக்கவே மாட்டேன்றா இவ…” என்றபடி எழுந்து பின்னால் செல்ல, அறைக்குள் சென்றவளுக்கு கோபமான கோபம்.
அதனை எப்படி காட்டுவதென்று தெரியவில்லை. பேசவும் வரவில்லை. அவனை காயப்படுத்தவும் முடியவில்லை.
அவந்திகாவிற்கு அந்தநேரம் தோன்றும் அவ்வுணர்வை காண்பிக்கும் வகையறியாமல் இங்குமங்குமாய் நடக்க அதனை கண்டுகொள்ளாமல் அவளின் மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் அனைத்தையும் அதனிடத்தில் வைத்தான்.
அப்போதும் அவந்திகா அவன் பேசுவான் என்று பார்க்க. எதிர்பார்ப்பு பொய்யானது.
தான் கோபமாக வந்த பின்னரும் அவன் எதுவும் பெரிதாய் எடுத்துக்கொள்ளாமல் செல்வதை கண்டு பல்லை கடித்தவள் முகம் பார்க்கும் கண்ணாடியை பார்க்க மூச்சு வாங்கியது.
சிலநொடிகள் தான். சிறுபிள்ளைத்தனம் மீண்டும் தலைதூக்க சட்டென நெற்றி பொட்டை எடுத்துவிட்டு வட்ட பொட்டை எடுத்து ஒட்டிக்கொண்டாள் அவந்திகா.
இப்போது வேண்டுமென்றே அவனின் முன் வந்து அமருவதும், அவன் பார்க்க முகம் காண்பிப்பதுமாய் இருக்க ப்ரியதர்ஷன் முகத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.
‘இவங்க என்ன பார்த்தும் பெருசா ரியாக்ட் பண்ணலை?’ என்று திருத்திருத்த பார்வையுடன் அவனையே வட்டமிட, அவன் போனில் பேசுவதும், பேப்பரை பார்ப்பதுமாய் தான் இருந்தான்.
‘என்கிட்டையே உன் வேலையை காமிக்கவா செய்யற?’ என உள்ளுக்குள் சொல்லிக்கொண்டவன் மனதினுள் அத்தனை சிரிப்பு.
‘சைல்டிஷா பன்ற அவந்தி. வச்சிக்கறேன்’ என்று நினைத்தவன் அவள் இன்னும் வேறு என்னென்ன வேலைகள் செய்யவிருக்கிறாள் என்று பார்க்க காத்திருந்தான்.
பேசவே இல்லை. பேச்சுக்கொடுக்கவும், கேட்கவும் கூட இல்லை. அவளாக பேசட்டும் என்றிருக்க அவந்திகாவிற்கு பேசுவதா வேண்டாமா என்னும் அலைக்கழிப்பு.
அவன் அமர்ந்திருக்கும் விதம் கண்டு இப்போதைக்கு அவன் பேசப்போவதில்லை என்று தெரிந்து அவள் ஒருமுடிவுக்கு வரும்முன்,
“எஸ் ப்ரியதர்ஷன்…” என்று வராத அழைப்பை வந்ததை போல் எடுத்து அவன் காதில் வைக்க, அவந்திகா நிஜமாகவே அழைப்பு வந்துவிட்டதோ என்று தான் பார்த்தாள்.
சப்தம் கேட்கவில்லை, அழைப்பு எதுவும் வந்தவிதம் தெரியவில்லையே என்று யோசிக்க கூட இல்லை அவள்.
“ஓகே, நான் வர்றேன்…” என்றவன் சட்டென எழுந்துகொண்டு மொபைலை பாக்கெட்டினுள் வைக்க,
“அதுக்குள்ள கிளம்பிட்டீங்களா?…” என்றாள் அவந்திகா அவனின் கை பிடித்து.
“ஹ்ம்ம்…” என்று அவன் தலையை மட்டும் அசைத்ததோடு நெற்றிப்பொட்டை பார்க்க,
“இல்ல, சரி போய்ட்டு வாங்க…” என்றாள் பாவம் போல் அவனை பார்த்து.
தானும் அதிகம் செய்கிறோமே என்று யோசித்தவன் அவளிடம் பேச வாயெடுக்க,
“கொஞ்சம் கோவம். போக சொல்றீங்களேன்னு. அதான் கோவமா போய் பொட்டை மாத்தினேன். ஆனா இப்போ கோவமில்லை. அது போயிருச்சு…” என்றவள்,
“நான் நல்லா தான் இருக்கேன். அம்மா வரும்போது வரட்டுமே. ப்ளீஸ். சரியா. நீங்க ஓகேவா இருங்க. சரியா? சரியா?…” என்று கேட்டு மீண்டும் மீண்டும் தலையை ஆட்ட,
“இப்படி பண்ணினா நான் எங்கருந்து சரியா இருக்க அவந்திக்குட்டி?…” என்றவன் அவளை இழுத்து அணைத்துக்கொண்டவன் அவள் உச்சந்தலையில் முத்தமிட்டு,
“வா, நான் பொட்டு வச்சிவிடறேன்…” என்றான் அவளிடம் புன்னகையுடன்.
“போக எல்லாம் வேண்டாம். இதோ இருக்கே. வச்சுவிட்டுட்டு கிளம்புங்க…” என்று தன் உள்ளங்கையை காண்பிக்க அதில் கோபுர பொட்டு ஒட்டியிருந்தது.
“அதான் பேசாம அனுப்பியிருக்கலாம். நீ போயிருக்கலாம். இப்படி சொன்னீங்களே?…” என்றதும்,
“ஸ்டேட்மென்ட்ன்ற, வித்ட்ரான்ற. என்னடி இது? எப்பருந்து இதெல்லாம் தெரிஞ்சதாம்?…” என்றவன் கண்கள் சிரித்தது.
“அதிருக்கட்டும். போன் வந்துச்சே. நீங்க கிளம்பலையா?…” என கேட்க,
“ஹ்ம்ம், போவோம். போவோம்…” என்றவன் அவளின் தலை கோதி,
“நான் சொன்னது அந்த அர்த்தத்துல இல்லை அவந்தி. இன்னைக்கு யாருமே இல்லாம தனியா நீ கஷ்டப்பட்ட. நானும் பக்கத்துல இருந்தேன். உடனே ரீச் பண்ணிட்டேன். இல்லைன்னா?…”
“அதான் டாக்டர் சொன்னாங்களே? இது பால்ஸ் பெய்ன் அப்டின்னு. ஆக்சுவலி சாமந்தி அக்கா குடுத்த அந்த தண்ணிலையே கொஞ்சநேரத்துல சரியாகி இருக்குமாம். நான் தான் வலி பொறுக்க முடியாம உங்களை பயம் காட்டிட்டேன்…” என்றவள்,
“இனிமே வேலை நேரத்துல கால் பண்ணமாட்டேன். உடனே சாமந்தி அக்காட்ட கேட்டுப்பேன். இல்லைன்னா அவங்களை கூப்பிட்டுக்கறேன். அதான் இன்னும் டெலிவரிக்கு டைம் இருக்கே? டேட்க்கு எவ்வளோ நாள் இருக்கு…” என்று அவள் கூற,
“இன்னைக்கு நீ துடிதுடிச்சதை பார்த்து இன்னைக்கே டெலிவரி ஆகிரும்ன்னு நினைச்சேன்…” என்றான் ப்ரியதர்ஷன்.
“அப்படியெல்லாம் இல்லை. ஆனாலும் நல்லது தானே?…” என்று சொல்லியவளை கண்டு ப்ரியதர்ஷனுக்கு ஆச்சர்யம் ஒருபுறம் என்றால், இன்னொருபுறம் அளப்பறியா சந்தோஷம்.
“ரொம்ப நல்லது. வர வர நீ ரொம்ப தேறிட்ட. கீப் இட் அப்…” என்று அவளின் கன்னம் தட்டியவன்,
“சரி அவந்தி. நான் நிஜமாவே கிளம்பறேன். இன்னும் ஸ்டேஷன் கூட போகலை. அப்படியே கமிஷனர் ஆபீஸ்ல இருந்து வந்துட்டேன்…” என்றவன் தன்னுடையை பார்த்துவிட்டு,
“வேற யூனிபார்ம் மாத்திக்கறேன்…” என்று அவளை விட்டு விலகி அறைக்குள் நுழைந்தான்.
“இன்னொன்னு கேட்கனும்…” என்று அவன் பின்னே வர,
“டக்குன்னு சொல்லு அவந்தி. டைம் ஆகுது…” என்று பரபரக்க,
“வீட்டுக்கு சொல்லவா? இப்படி ஆச்சுன்னு சொல்லனுமா?…” என்றாள் அவனிடம்.
அவளை கண்ணாடி வழியே பார்த்துக்கொண்டே ஷர்ட்டை இன் செய்தவன் முகமும் யோசனையில்.
“இனிமே நான் வர்ற வரை சாமந்தி இங்கயே இருக்கட்டும். நீ தூங்கினாலும் கூட அவங்க இருக்கட்டும். டிவி பார்க்கட்டும். இல்லையா வேற எதாசுசம் செய்யட்டும். புரியுதா அவந்தி?…” என்றான் வெளியே வந்து ஷூ அணிந்துகொண்டே.
“நான் கால் பண்ணிடறேன்…” என்றாள் அவந்திகாவும்.
“நீயும் சொல்லு. நானும் போற வழில சொல்லிட்டு போறேன். அவங்க ஹஸ்பன்ட்கிட்டையும் சொல்லனுமே. அதுதான் சரி…” என்று சொல்லி கிளம்பி சென்றான் ப்ரியதர்ஷன்.
செல்லும்வரை அத்தனை முறை திரும்பி திரும்பி பார்த்துக்கொள்ள அவந்திகாவிற்கே கஷ்டமாக இருந்தது.
உள்ளே வந்ததும் முதலில் சாமந்திக்கு அழைத்து பார்க்க அழைப்பு செல்லவில்லை.
மீண்டும் அழைப்பு செல்லாமல் இருக்க அடுத்ததாய் கலாவிற்கு வீடியோ காலில் அழைத்துவிட்டாள் அவரிடம் பேசிவிடுவோம் என்று.
விஷயம் தெரிந்ததும் அங்கே கலாவிற்கு கையும், காலும் சுத்தமாய் ஓடவில்லை.
“எத்தனை சாதாரணமா சொல்ற நீ? இதுக்குத்தான் நான் சொன்னேன் இந்தநேரம் வேண்டாம்ன்னு. உன் வீட்டுக்காரர் கேட்டாரா?…” என்றார் கலா.
அவர் பதறியதில் அவந்திகாவிற்கு தான் படபடப்பானது. இங்கே தான் தானே முடியாதென்று அவனிடம் சொல்லியது என்று நினைத்தவள் எங்கே உளறி வைத்துவிடுவோமோ என்று கப்பென்று வாயை மூடிக்கொண்டாள்.