“நாங்க வந்தப்போவாச்சும் உன்னை கூட்டிட்டு வந்திருக்கனும்…” என கலா சொல்ல,
“ம்மா, அதான் ஒன்பதாம் மாசம் தான கூப்பிடனும். அதுதானே முறை…” என்று சொல்ல,
“நீ பெரிய பெரியமனுஷி. எனக்கே முறையை சொல்லி தர்றா…” என்று ஒருபாடு பேசி தீர்த்தவர்,
“உன் மாமியார் காதுல போட்டுடாத அவந்தி. அவ்வளோ தான். ஏற்கனவே உன்னை அனுப்பினதுக்கு எங்களை முறைச்சிட்டு சரிவர பேசறதில்லை. இது தெரிஞ்சா அம்புட்டு தான்…” என்றார்.
“இங்க குடுங்கத்தை நான் பேசறேன்…” என்று போனை வாங்கிய தரணி,
“ஏன் அவந்தி, என்ன முறை? அதான் நீ இங்க வளைகாப்பு முடிஞ்சு முறையா சீரோட அழைச்சுட்டு வந்துட்டோமே. இனிமே என்ன முறை? நாங்க கிளம்பி வர்றோம். நீ புறப்படு…” என்று கூற,
“அதெல்லாம் வேண்டாம். சும்மா சும்மா எதுக்கு இங்கயும் அங்கயும்? நீங்க முன்னாடி குறிச்ச நாள்லயே வாங்க போதும். ஏன் அண்ணி புரியமாட்டேன்றீங்க?…” என்றாள் அவந்திகா.
“எல்லாம் புரியுது. யாருமில்லாம தனியா இருந்திருக்க. சாமந்தி பக்கத்துல இருக்க போய் சரியா போச்சு. இல்லைன்னா?…” என்று சொல்ல,
“அதானே…” என கலாவும் கூற, எதை சொல்லி அவர்களை நிறுத்தி வைக்க என்று அவந்திகாவிற்கு தெரியவில்லை.
“ம்மா என்ன நீங்க? சும்மா சும்மா டிசிஷனை மாத்திட்டே இருக்கீங்க?அவங்க ரொம்ப கோவக்காரங்க. தெரியும் தானே? அப்பறம் இப்ப வந்து என்னை கூட்டிட்டு போறேன்னு சொன்னா அவ்வளோ தான். பெரிய பிரச்சனை ஆகிடும், பார்த்துக்கோங்க…” என்றவள்,
“நம்ம வீட்டுல வச்சு நடந்தது எல்லாம் மறந்து போச்சா? அவர்க்கிட்ட வாங்கி கட்டவேண்டாம் பார்த்துக்கோங்க….” என்று சொல்லி மிரட்டலோ மிரட்டல் அவந்திகா.
“என்னடி இப்படி சொல்ற?…” நிஜத்தில் கலாவுமே கலங்கி போனார்.
“நான் சொன்னது நிஜமா இல்லையா?…” என்று அவந்திகா கேட்க,
“ஆமா, உன் புருஷன் கோபம் தான் ஊர் அறிஞ்சதாச்சே. என்னவோ இப்பத்தான் கொஞ்சநாளா முகம் குடுத்து சிரிச்சு பேசறார்…” என கலாவும் கவலையாய் கூற,
“ஹ்ம்ம் அதே தான். எதுக்கு சும்மா இருக்கறவரை நாமளே கோபப்படுத்தனும். அதெல்லாம் தப்பும்மா…” என்று தாய்க்கே பாடம் எடுக்க,
“உருட்டு உருட்டு…” என்று தரணியின் குரல்,
“என்னம்மா, என்ன சொல்ற?…” என கலா கேட்க,
“நைட்டுக்கு சப்பாத்தி மாவு உருட்டனும் த்தை. அதைத்தான் சொல்லிட்டிருந்தேன்…” என்று தரணி கூற அவந்திகாவிற்கு அசடு வழிந்தது.
சமாளிக்க வேண்டுமே. இல்லை என்றால் அப்போதே கிளம்பி அர்த்தராத்திரியில் வந்து தன்னை அழைத்து சென்றாலும் சென்றுவிடுவார்களே என்று அவந்திகா செயலில் இறங்கிவிட, கலாவும் நம்பிவிட்டார்.
“மனசே கேட்கலையே அவந்தி…” என்று பாவமாய் பார்த்த தாயை கண்டு அவந்திகாவின் மனமும் வருந்தியது.
ஆனாலும் அப்போதே செல்ல மனமில்லையே. இன்னும் இடைப்பட்ட இந்த நாட்களில் அவனுடன் இருந்துவிட்டே செல்வோமே என்று நினைத்தாள்.
“டாக்டரே சொல்லிட்டாங்கம்மா. இப்போ எந்த பிரச்சனையும் இல்லைன்னு. அதான் டேட் இப்போ இல்லையே….” என்று சமாதானம் செய்தவள்,
“சரிம்மா, நான் வைக்கறேன். போய் சாப்பிடனும். பசிக்குது…” என்று சொல்ல,
“சரிம்மா. பத்திரம். என்னன்னாலும் அம்மாவுக்கு உடனே போன் பண்ணிடு. நானும் உடனே கிளம்பிடறேன்.என்னடா…”என்று திரையில் தெரிந்த மகளின் முகத்தை தொட்டு கொஞ்சிவிட்டு அழைப்பை வைக்கவும் தான் நிம்மதியானது அவந்திகாவிற்கு.
“ஹப்பாடா, இவங்களை சமாளிக்கறதுக்குள்ள நான் படற பாடு இருக்கே? இனிமே சொன்னா தான கிளம்பி வருவீங்க….” என்றவள் தனது போனை டீப்பாயில் வைத்து,
“இப்படி ஏமாத்திட்டேன் நான். கும்பிடறேன் கலாம்மா. மன்னிச்சு…” என்று கையெடுத்து கும்பிட்டு சொல்லிவிட்டு நிமிர, வாசலில் வாயில் வைத்த கையை எடுக்காமல் நின்றிருந்தான் ப்ரியதர்ஷன்.
பார்த்ததும் அதிர்ந்தவள் கனவோ என்று கண்ணை கசக்கிக்கொண்டு அங்கே பார்க்க அவன் உள்ளே வந்துவிட்டான்.
“ப்ராடு. என்னடி வேலை பார்த்திருக்க? அதுவும் என்னை, நான்…” என்று வாயில் அடித்தபடி உள்ளே வந்தவன் முறைத்தான்.
எங்கே தன்னை எதுவும் சொல்வானோ என நினைத்த அவந்திகா சட்டென அவனை கட்டிக்கொண்டு தன் முகத்தை அவன் நெஞ்சத்தில் ஒட்டிக்கொள்ள,
“பர்ஸ்ட் உன்னை தான் தூக்கி உள்ள வைக்கனும். ராஸ்கல், எவ்வளோ சரளமா அடிச்சு விடற. நீ இவ்வளோ பேசுவியா?…” என்றான் அவளை பிடித்து விலக முயன்று.
“ப்ளீஸ், ப்ளீஸ்….” என்று கண்ணை மூடியவள் அவனை விடுவதில்லை என்பதை போலவே கட்டிக்கொண்டு நிற்க,
“நான் கூட என்னவோன்னு நினைச்சேன். அதுவும் லாஸ்ட்ல பண்ணின பாரு ஒரு கும்பிடு. அம்மாடியோ…” என்று சொல்ல இப்படி மாட்டிக்கொண்டோமே என அவந்திகாவிற்கு அவன் முகம் பார்க்கவே முடியவில்லை.
“அவங்க வர்றேன்னு சொன்னாங்க கூட்டிட்டு போக. அதான் எதுக்கு இப்பவே அலைச்சல்? ரெண்டுநாள் முன்னாடி தான் கிளம்பி போனாங்க. பாவம்ல. அதான்…” என்று சொல்ல சொல்லாத்தனை சிரிப்பு ப்ரியதர்ஷனிடம்.
“நீ பன்றதுக்கு பார்த்துட்டே இரு. இங்கயே டெலிவரி ஆக போகுது. உன்னை மொத்த போறாங்க…” என்று அவன் அவந்திகாவிடம் சொல்ல,
“ஆமா டெலிவரி ஆனதும் இங்கருந்து மாசம் கழிச்சு என்னை அம்மா வீட்டுக்கு அனுப்புவீங்க? எவ்வளோ நாள் கழிச்சு அங்க இருந்து கூப்பிடுவீங்க?…” என்றாள் அவந்திகா அவனை நிமிர்ந்து பார்த்து தீவிரமாக.
கண்களில் அத்தனை நேசம். இத்தனை நாட்களை விட இன்று அவள் கேட்டதும், காண்பித்ததும் அவனை செயலற்று பார்க்க செய்ய,
“டெலிவரி ஆகிட்ட உடனே ட்ராவல் பண்ண கூடாது தானே?…” என்றும் கேட்க ப்ரியதர்ஷன் முகத்தில் ஆர்ப்பாட்டமில்லாத அழகிய புன்னகை.
“பதில் சொல்லுங்க…” என்று அவந்திகா அவனின் கன்னத்தில் தட்ட அதனை அப்படியே ஒட்டிக்கொண்டு அழுத்தியவன்,
“நீ ஏன் அவந்தி என்னோட முன்னாடியே வராம போய்ட்ட?…” என்றான் அவளிடம்.
லேசாய் கண்கள் கலங்கியது. ‘ஆமாம் ஏன் வரவில்லை?’ என்ற ஏக்கம் அவளுள்ளும் எழுந்தது.
‘இதை போல இழுத்து பிடித்து கூட்டி வந்திருக்கலாமே?’ என்றும் தோன்றாமல் இல்லை அவளுக்கு.
“ஓகே, ரிலாக்ஸ்…” என்று அவளின் கன்னம் வருடி கண்ணீர் துடைத்தவன்,
“ஆமா, அதென்ன இங்க இருந்து போறது மட்டும் எத்தனை மாசம் கழிச்சு. அங்க இருந்து வர்றது நாள் கழிச்சு? உங்கம்மாட்ட சொல்லவா?…” என்று கேட்க, மீண்டும் கலாவிடமிருந்து அழைப்பு.
“அச்சோ தப்பு தப்பு…” என்று அவனின் இதழ்களை கரம் கொண்டு மூட,
“இப்படின்னா கண்டிப்பா சொல்லுவேன்…” என்றவன் அவளின் கைப்பேசியை எடுக்க பார்க்க,
“அச்சோ…” என்றவள் அவன் விரும்பிய விதமாய், குளிர்வாய் அவன் வார்த்தைகளை உள்வாங்கிக்கொண்டாள்.
அன்றைய நாளில் அத்தனை தேவதைகளும் அவர்களின் பேச்சிற்கெல்லாம் ஆசி வழங்கி இருக்க, அவந்திகாவின் பிரசவம் திருச்சியில் அவள் கணவனின் அருகாமையில் தான் நிகழ்ந்தது.
இரு குடும்பங்களும் கிளம்பி திருச்சி வந்து சேருகையில் தன் ஆண்மகவை தன் கையில் வாங்கியிருந்தான் ப்ரியதர்ஷன்.