“யாரு சாமந்தியா? போனை குடு…” என தர சொல்லவும் அவர் வாங்கி பேச,
“சாமந்தி கொஞ்சம் இருந்து பார்த்துக்கம்மா. இப்ப தான் ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்ததை பத்தி அவந்தி சொன்னா…” என்றார் கலா தவிப்புடன்.
“நான் இருக்கறேன்ம்மா. ஒன்னும் பதட்டப்படாதீங்க. அப்பத்தான் வீட்டுக்கு போனேன். போன வேகத்துல வந்துட்டேன். இப்ப ஸாரும் வந்து சொல்லிட்டு போனாரு. அவரு இல்லாத நேரமெல்லாம் இங்கினவே இருக்க சொல்லி…” என்று கூற,
“சரிம்மா. வச்சிடறேன்…” என்று சொல்லி வைத்துவிட அவந்திகா இன்னும் தரணியோடு பேசியதை நினைத்து சிரித்தபடி நிற்க,
“இப்படியாமா சிரிக்கிறது? வெளில வரைக்கும் கேட்குது. எங்கண்ணே பட்டுருச்சு போங்க. இப்ப வாரேன்…” என சொல்லிய கையோடு அவந்திகாவிற்கு திருஷ்டி எடுத்துவிட்டு தான் அடுத்த வேலை பார்த்தார் அவர்.
மூன்றுநாட்கள் நன்றாகவே சென்றது. அன்று அதிகாலையே பரபரப்பாய் கிளம்பிவிட்டான் ப்ரியதர்ஷன்.
“அவந்தி எமர்ஜென்ஸின்னா மட்டும் கால் பண்ணு. மறந்துடாத. பத்திரமா இரு. நான் நைட் வரவும் லேட்டாகும். சாமந்தி உன் கூடவே தான் இருப்பாங்க. இப்ப வந்திருவாங்க. பார்த்துக்கோடா. பத்திரம் பத்திரம்…” என்று சொல்லியே தான் கிளம்பி இருந்தான்.
விசாரணை விஷயமாய் வேறெங்கோ செல்வதாய் அவன் போனில் பேசியதை வைத்து அவந்திகாவிற்கு புரிந்தது.
இன்னும் அதிகாலை இருள் பிரியவில்லை. அப்போதுதான் ப்ரியதர்ஷன் கிளம்பியிருந்தான்.
சாமந்தி வர எப்படியும் ஏழு மணியாகிவிடும். அதுவரை நேரத்தை கடத்த என்ன செய்வதென்று தெரியவில்லை.
டிவியை போட்டுவிட்டு பாடல்களை ஒலிக்கவிட்டு அமர்ந்திருந்தவள் கொஞ்சம் கொஞ்சமாய் அசௌகர்யத்தை உணர்ந்தாள்.
உடலெல்லாம் என்னவோ செய்ய லேசாய் வியக்க துவங்கியது. புழுக்கமாய் உணர்ந்தவள் எழுந்து சென்று குளித்துவிட்டு வந்தமர்ந்தாள்.
இடுப்பில் முணுக்கென்று மெலிதாய் வலி. லேசாய் ஆரம்பிக்கவுமே சாமந்தி சொல்லியதை போல வெந்நீர் வைத்து குடித்தவள் பாத்ரூம் சென்றுவிட்டு வந்தாள்.
சூட்டிற்கு தான் இன்றும் வலிக்கிறது என்று நினைத்தபடி சற்றுநேரத்தில் சரியாகிவிடும் என்று நினைத்தவள் போனை கையில் வைத்துக்கொண்டாள்.
அந்தநேரத்திற்கு சாமந்திக்கு அழைப்பதா? சிறிதுநேரம் செல்லட்டும் என்று வலியை தாங்கியபடி அமர்ந்திருந்தாள் அவந்திகா.
நேரம் செல்ல செல்ல வலி கூட ஆரம்பிக்கவுமே குப்பென்று வியர்க்கவும் துவங்கிது.
அதற்குமேல் அமர முடியவில்லை. ப்ரியதர்ஷனுக்கு அழைக்க தொடர்பு எல்லைக்கு அப்பால் என்று செய்திவர மிரண்டு போனாள் அவந்திகா.
முதலில் பதட்டம் கூடாதென்று மனதை திடப்படுத்த முயன்றாள். அத்தனைக்கு அவளின் மருத்துவர் அவளுக்கு நிறைய தைரியம் சொல்லியிருக்க அடுத்தநொடி யோசிக்கவே இல்லை.
சட்டென போனை எடுத்து ப்ரியதர்ஷன் அறிமுகம் செய்துவைத்திருந்த ஆட்டோ ட்ரைவருக்கு அழைத்து வீட்டிற்கு வர சொல்லியவள், பூஜை மாடம் சென்று சாமியை கும்பிட்டுவிட்டு தேவையானவற்றை எடுத்துக்கொண்டாள்.
சாமந்திக்கு அழைக்க, அவளின் அழைப்பு சென்றுகொண்டே தான் இருந்ததே தவிர எடுக்கப்படவில்லை.
வலியில் கண்ணீர் ஒருபுறம், கணவன் அருகில் இல்லாதது ஒருபுறமும் அவளை அலைகழிக்க,
“குட்டிம்மா. கொஞ்சம், கொஞ்சம் இரேன். அம்மாக்கு ரொம்ப வலிக்குது. பாவம்ல அம்மா. அப்பா வரட்டும்டா….” என வயிற்றில் பிள்ளையுடன் உரையாடியபடி இதழ்களை கடித்துக்கொண்டு வலியை பொறுத்தாள்.
ப்ரியதர்ஷனின் எண்ணிற்கு குரல்வழி செய்தி அனுப்பியவள் தானே மருத்துவமனை செல்வதாக அனுப்பி வைத்துவிட்டு காத்திருந்தாள்.
ஐந்துநிமிடத்தில் ஆட்டோ வந்துவிட அதில் ஏறி அமர்ந்ததுமே ட்ரைவர் அவளின் நிலை கண்டு,
“சாமந்தி வீட்டுக்கு தானுங்களே. எனக்கு தெரியுமேம்மா…” என்று அவர் சாமந்தியின் வீட்டிற்கு செல்ல அவர் வாசலை தெளித்துக்கொண்டிருந்தார்.
“இந்தாம்மா சாமந்தி கமிஷனர் அய்யா சம்சாரம் வந்திருக்காங்க…” என்று நிறுத்தும் முன்னரே சாமந்தியை பார்த்து கத்திக்கொண்டே செல்ல சாமந்திக்கு புரிந்துவிட்டது.
“ஆத்தீ, என்னாச்சு ண்ணே…” என்று வந்து ஆட்டோவினுள் எட்டி பார்க்க அவந்திகா வலியில் அமரமுடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தாள்.
“வலி கண்டுருச்சோ…” என்றவர்,
“ஒருநிமிஷம் ம்மா. என் வீட்டுக்கார்ட்ட சொல்லிட்டு வர்றேன்…” என்று ஓடிய வேகத்தில் வந்துவிட்டார்.
மருத்துவமனையை சொல்லி அங்கே செல்ல சொல்லிய சாமந்தி அவந்திகாவை அணைவாய் பிடித்துக்கொண்டார்.
“பண்ணினேன் க்கா. ரிங் போய்ட்டே இருந்துச்சு. அதான் நானே ஆட்டோவுக்கு சொல்லி வந்துட்டேன். கொஞ்சம் முன்னாடி இருந்துதான் வலி. அன்னைக்கு மாதிரி தான் இருக்கு…” என்று சொல்ல சொல்ல வலி இன்னும் கூடியது.
மின்னல் வெட்டுக்களாய் வலி அவளின் உயிரை சுண்டி இழுக்க தொண்டைக்குழி என்னவோ செய்தது.
அவந்திகாவிற்கு அந்த வலியை தாங்கமுடியாததில் பயம் கூட அமர்ந்திருக்க முடியாமல் இங்குமங்குமாய் சாய்ந்தாள்.
“வீட்டுக்கு சொல்லிருக்கீங்களாம்மா? அம்மாவுக்கு தெரியுமா?…” என்று அவளிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டே அவர் வர,
“இன்னும் இல்லை சாமந்திக்கா. அம்மா இப்ப தான் எழுந்திருப்பாங்க….” என்றவள் லேசாய் அலற,
“அம்மா…” என்றார் அவளின் சத்தத்தில்.
“அன்னைக்கு மாதிரி தான் வலி. அதான் ஹாஸ்பிட்டல் போய்ட்டு பார்த்துட்டு சொல்லுவோமே. அவங்களையும் பயம் காட்ட வேண்டாம்ல…” என்றவள் தனது போனை தேடி எடுத்தாள்.
ப்ரியதர்ஷனுக்கு அழைக்க அவனுக்கு அப்போதும் செல்லவில்லை. அவனின் ட்ரைவருக்கும் செல்லவில்லை.
அழுகை அடக்கமுடியாமல் தேம்பலாய் வெடித்து வர மீண்டும் மீண்டும் அழைத்தவள் மனம் சோர்ந்தது.
அவன் அருகில் இருந்தால் போதுமென்று மனம் வேண்ட கண்ணீர் மட்டும் நிற்கவில்லை.
மருத்துவமனை சென்று சேர்ந்த நேரம் லேசாய் வலி குறைந்ததை போலிருக்க சற்று நிம்மதி.
“பாருங்க க்கா. இங்க வரவும் அப்போ மாதிரி இல்லாம வலி குறைஞ்சிருக்கு….” என்று சொல்லி அவந்திகா புன்னகைக்க சாமந்திக்கு புரிந்தது.
‘வலி விட்டு விட்டு வருமே. அப்போ பிரசவ வலி தான் போல’ என நினைத்தவர் தலையசைத்து தானும் உள்ளே வந்தார்.
“வலி குறைஞ்சாலும் முழுசா போகலை. டாக்டரை பார்த்துட்டு போயிருவோம். அவங்க கால் பண்ணினாங்கன்னா சொல்லிடுவோம்…” என்றவள் இன்றைக்கும் அப்படித்தானோ என்று நினைக்க அவளை பரிசோதித்த மருத்துவர்,
“அட்மிட் ஆகிடுங்க. பார்த்துக்கலாம்…” என்று சொல்லிவிட்டார்.
அவந்திகாவிற்கு அவர் அனுப்பாதிலேயே புரிந்துவிட சாமந்தியை பார்த்தாள் அவள்.
“திரும்ப வலி கூடுதா என்னன்னு பார்க்கத்தான் அவந்திம்மா…” என்று சமாதானம் செய்த சாமந்தி,
“சூட்டுவலின்னா இன்னும் கொஞ்சநேரத்துல கப்புன்னு நின்னுடும். நாம போயிருவோம். இப்ப எப்படி இருக்கு?…” என்று கேட்க,
“ஹ்ம்ம், கொஞ்சம் முணுமுணுன்னு வலி…” என்று சொல்ல மீண்டும் இடையில் மின்னலாய் வலி வெட்டி மறைந்தது.
“சாமந்தி க்கா…” என அவரின் கையை பிடித்தவள் விழிகள் நீரை வடிக்க,
“ஒண்ணுமில்ல, ஒண்ணுமில்ல…” என்று சொல்லி அவளை விட்டு அவர் எங்கேயும் நகரவில்லை.
“அவங்களுக்கு பேசனும் சாமந்தியக்கா. என் போன் எங்க?…” என்று என்று கேட்க,
“உங்க பேக்ல இருக்கும் ம்மா…” என்று போனை தேட அதிலும் கைப்பேசி இல்லை.
ஆட்டோவில் வைத்து அவனுக்கு முயன்றுகொண்டே வந்தவள் அதிலேயே விட்டுவிட்டது புரிந்தது.
“போன் ஆட்டோல விழுந்துருச்சு போல…” என்று சொல்ல மீண்டும் வலி.
“செத்த இருங்கம்மா…” என்று சாமந்தி வெளியே ஓடி வந்தார்.
மருத்துவர் அறை நோக்கி செல்ல அதற்குள் எதிர்ப்பட்டான் ப்ரியதர்ஷன். அங்கே சாமந்தியை எதிர்பார்க்கவில்லை அவன்.
வேறொரு விசாரணை விஷயமாய் மருத்துவமனைக்கு வந்திருக்க சாமந்திக்கு அப்போது தான் நிம்மதியானது.
“சாமந்தி இங்க என்ன பன்றீங்க இந்தநேரம்? தெரிஞ்சவங்க யாருக்கும் முடியலையா?…” என்றான் அவன்.
“நல்லவேளையா வந்தீங்க ஸார். நம்ம அவந்திகாம்மாவை தான் சேர்த்திருக்கோம். வாங்க…” என்று சொல்ல,
“என்ன? அவந்தியையா?…” என்று பதட்டமானவன், அவனுடன் வந்த இன்ஸ்பெக்டரிடம் திரும்பினான்.
“ராகுல், நீங்க போய் ஸ்டேட்மென்ட் வாங்கிருங்க. வேற யாரையும் உங்களோட அலோவ் பண்ண வேண்டாம்….” என்று சொல்லிவிட்டு சாமந்தியுடன் அவந்திகா இருந்த அறைக்கு செல்ல அங்கே மருத்துவரும், நர்ஸும் அவளுடன் இருந்தார்கள்.