“டாக்டர் வேற எதுவும் காம்ப்ளிகேஷனா?…” என்றவன் பார்வை மனைவியிடம் தான்.
உயிரெல்லாம் பதறியது. தான் இந்தநேரம் தான் இங்கே வராது போயிருந்தால் என்னவாகி இருப்பாள் என நினைத்தவனின் மனம் கலங்க,
“அவந்திகா…” என்றான் மீண்டும் அவளின் கன்னம் தொட்டு.
“ம்மா…” என்று வயிற்றை பிடித்தவளால் சத்தமிட்டு கூட அழ முடியவில்லை.
“வலி வந்து வந்து போகுது ஸார். இடுப்பு எலும்பு விலகி குடுக்கலை. சிசேரியன் தான் பண்ணனும்…” என்று சொல்ல,
“உடனே ஏற்பாடு செய்ங்க டாக்டர். ப்ளீஸ்,…” என்று சொல்லிக்கொண்டிருக்க,
“அம்மா….” என பெருங்குரலெடுத்து கதறினாள் அவந்திகா.
அவளால் அவனின் இருப்பை உணர முடிந்தது. ஆனால் வலியும், அதனை தாங்கமுடியாததில் மயக்கமுமாய் திண்டாடிக்கொண்டிருக்க ப்ரியதர்ஷன் நிலையோ பரிதவிப்பு.
“ஆப்பரேஷன் தியேட்டர் ரெடி பண்ணுங்க…” என்று மருத்துவர் சொல்லிவிட்டு செல்ல கடகடவென்று அதற்கு பரபரப்பாகிவிட ப்ரியதர்ஷன் அவளை அணைத்தவாக்கில் தைரியம் சொல்லிக்கொண்டிருந்தான்.
“நான் இருக்கேன்டாம்மா. ஒன்னும் இல்லை. கொஞ்சம் நேரம் தான்….” என்று தான் சொல்லும் சமாதானங்கள் எல்லாம் அவ்வலியை குறைக்காதென்று தெரிந்தாலும் அவளை தேற்றவேண்டுமே.
அவனின் கரங்கள் அவளின் பிடியில் நெறிபட அதுவே அவள் அனுபவிக்கும் வேதனையை எடுத்துக்காண்பித்தது.
அவளோடு பேசிக்கொண்டே அவனிருக்க, அவந்திகாவினால் ஒருவார்த்தை பதில் பேசமுடியவில்லை.
நேரம் கரைய கரைய பிரசவநேர வலி அவளை முழுவதுமாய் தின்றுகொண்டிருந்தது.
ப்ரியனின் கரத்தை விட்டு தன் கைகளை விலகவே இல்லை அவந்திகா. அத்தனை கெட்டியாய் அவனை பிடித்திருக்க,
“உன்னை விட்டு எங்கையும் போகலைடா. அவந்தி, இங்க தான் இருக்கேன். எங்கயும் போகலை…” என்று ஜபம் போல் சொல்லிக்கொண்டே இருக்க அவளை அழைத்து செல்ல என்று வந்துவிட்டனர்.
“டாக்டர்…” என்று ப்ரியதர்ஷன் தொண்டை அடைக்க அவரிடம் பேசமுடியாமல் முகம் வெளிறி பார்த்தான்.
“வொர்ரி பண்ண வேண்டாம் ஸார்….” என்று அத்தனை மரியாதையாய் அவனிடம் சொல்லிவிட்டு செல்லவும் தான் அந்த அறையில் அவந்திகாவின் கைப்பையும் அதனுள் மருத்துவ சிகிச்சை கோப்புகளும் இருந்தது.
சிதறியபடி திறந்திருந்த அந்த பேக்கை கையில் எடுத்தவன் தலையணை அருகில் இருந்தவற்றை எடுக்க மற்றவற்றோடு அவனின் புகைப்படமும்.
அதுவும் அவள் கைகளால் புகைப்படத்தின் ஓரம் அவள் உள்ளங்கையினுள் கசக்கப்பட்டிருக்க கண்டவனின் விழிகளில் நீர் திரையிட்டது.
அவளுக்கே அவளுக்கென்று முழுமையாய் ஒரு பந்தமென அவனை சொந்தம் கொண்டவள்.
மனதை பெரும் பாரம் அழுத்த துவங்க, மீண்டும் அவ்வெண்ணம். இப்படி பிடிவாதமாய் அழைத்து வராமல் இருந்திருக்கலாமோ என்று.
‘என்னை அனுப்ப நினைச்சீங்க? ம்ம்’ என மனக்கண்ணில் எழுந்து நின்றவள் அவனை விரல் நீட்டி மிரட்டும் பாவனை அவனுள்.
“அவந்தி…” என சொல்லியவன் மனம் கசங்க தாளமுடியாத உணர்வில் தடுமாறி அதில் அமர்ந்தான் ப்ரியதர்ஷன்.
“ஸார் வாங்க…” என்று சாமந்தி வந்தழைக்க அவரை பார்த்தவன் தொண்டையை செருமிக்கொண்டு,
“ஆட்டோ ட்ரைவர் வந்தார் ஸார். அவந்தியம்மா வரும்போதே போனை ஆட்டோல விட்டுட்டாங்க போல. அதை குடுத்துட்டு போக வந்தாரு…” என்றவர் அவனிடம் தந்துவிட்டு,
“இன்னும் வீட்டுக்கும் சொல்லலைங்க ஸார்…” என்றார்.
“ஹ்ம்ம், ஆமா. இப்ப சொல்லிடறேன்…” என்று சொல்லியவன் ஆப்பரேஷன் தியேட்டர் முன் வந்து நின்றான்.
இருவரின் வீட்டிற்கும் அழைத்து சொல்ல அங்கே பரபரப்பும் பதட்டமும் தீயாய் பற்றிக்கொண்டது.
அதற்குள் அங்கை சாமந்தியின் எண்ணிற்கு அழைத்து தீர்த்துவிட்டார். அவரின் கைப்பேசி வீட்டில் இருக்க எடுத்ததோ அவரின் கணவர்.
“நான் போய் ஆஸ்பத்திரில குடுக்கறேன் ம்மா…” என்று எடுத்துக்கொண்டு ஓடி வர, அத்தனை முறை அழைத்துவிட்டார் கொடுத்தாகிற்றா என்று கேட்க.
சாமந்தியிடம் போனை கொண்டுவந்து தந்துவிட்டு அவர் ஒரு பக்கம் ஓரமாய் நின்றுகொண்டார்.
ப்ரியதர்ஷன் அவந்திகாவின் தாய் வீட்டிலிருந்தும், அமலாவிடமிருந்தும் வரும் அழைப்புகளை பேசியபடி நின்றிருந்தான்.
ஒவ்வொருவரும் சரியாகிடும், வந்திடறோம். கிளம்பிட்டோம் என மாற்றி மாற்றி அவனை தேற்ற அங்கையும் கிளம்பியிருந்தார்.
மகனிடம் பேசவில்லை. இதற்கு தானே சொன்னேன் என்பதை போல அத்தனை கோபம்.
ஆண் குழந்தை என்று மருத்துவர் வெளியில் வந்து சொல்லி சென்றதோடு அவந்திகாவின் நலத்தையும் உறுதிபடுத்திவிட்டு செல்ல, சென்னையிலிருந்து அங்கிருந்தவர்கள் வாகனம் புறப்பட்டிருந்தது.
அவசரத்திற்கு விமான பயணச்சீட்டு கிடைக்காத காரணத்தினால் இரண்டு கார்களை ஏற்பாடு செய்து புறப்பட்டுவிட்டனர்.
குழந்தை பிறந்துவிட்ட விஷயம் சந்தோஷமாய் ப்ரியதர்ஷனால் வீட்டினரிடம் பகிரப்பட அத்தனை வாழ்த்துக்கள்.
அவர்கள் யாருமே இங்கே விட்டு சென்றிருக்கலாம், இதற்கு தான் சொன்னோம் என்று எதையும் பேசவில்லை.
“இதுதான் நடக்கனும்ன்னு ப்ராப்தம். அப்பா கையில தான் முதல்ல போய் சேருவேன்னு என் பேரன் நினைச்சிருக்கான். ரெண்டுபேரும் நல்லா இருக்காங்களே. அது போதும்….” என்றுவிட்டார் கலா.
“அப்படி சொல்லுங்க த்தை…” என தரணியும் சொல்ல அவர்களுக்கு மனத்தாங்கல் எல்லாம் எதுவுமில்லை.
இங்கே அங்கை பேரன் பிறந்ததில் சந்தோஷம் என்றாலும், அமலாவிடம் தான் சொல்லியதை கேட்டானா உன் தம்பியும், தம்பி மனைவியும் என்று பொருமி தீர்த்தார்.
“குறை பிரசவமா போச்சே?…” என சாமந்தியிடம் அங்கை கேட்க,
“பிள்ளை ஆரோக்கியமா பிறந்திருக்கு. அதை பார்ப்பீங்களா? என்னம்மா நீங்க இப்படி பேசறீங்க? எட்டு மாசத்துல பொறந்தா வேணாம்ன்னு சொல்லுவீங்களா? நல்லா இருக்கே?…” என்றுவிட,
“நான் வந்து பேசிக்கறேன்…” என்று வைத்துவிட்டார் அங்கை.
“நினைச்சதை சாதிச்ச மாதிரி என்னை வரவச்சிட்டான் உன் தம்பி…” என்று அங்கை புலம்ப, ப்ரியதர்ஷனுக்கு எவ்வித எண்ணமும் இல்லை.
கையில் குட்டியாய் கொழுக்மொழுக் என்று பிறந்திருக்கும் மகனை காண தெவிட்டவில்லை.
மகனின் நெற்றியில் முத்தமிட்டவனின் கரங்கள் மயக்கத்தில் இருந்த மனைவியின் நெற்றியிலும் அழுத்தமாய் பதிந்து நேசத்துடன் வருடியது.
கூடவே கள்ளப்புன்னகை வேறு அவளை காண காண. மருத்துவர் சொல்லி சென்றதை நினைத்து புன்னகைத்தவன் கையினுள் மகன் கால்களை உதைத்துக்கொண்டு நாக்க துறுத்தினான்.
“என்னடா குட்டிப்பையா, உன் அம்மா சொன்ன மாதிரியே சில மாசம் கழிச்சு தான் உன் பாட்டி வீட்டுக்கு போவ போல?…” என்று மகனிடம் கேட்க குழந்தை இங்குமங்குமாய் அசைந்து நெளிந்தது.
மருத்துவர் வந்து சொல்லிவிட்டே தான் சென்றிருந்தார் அவந்திகாவிற்கு எந்தவித அலைச்சலும் கூடாதென்று.
“அவந்திகாவுக்கு நிறைய ப்ளட் லாஸ் ஆகியிருக்கு ஸார். சிசேரியன்றதால உடனே ட்ராவல் எதுவும் வச்சுக்க கூடாது. அவங்களை நல்லா கேர் பண்ணிக்கோங்க…” என்று அறிவுறுத்திவிட்டே சென்றிருக்க சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது அவனுக்கு.
‘இங்க இருந்து எத்தனை மாசம் கழிச்சு போகனும். எத்தனை நாள் கழிச்சு வரனும்?’ என்று அவள் கேட்டதை எண்ணி உள்ளமெல்லாம் சந்தோஷம் ஊற்றெடுத்தது.
“உங்கம்மாவுக்கு என்னை விட்டு போக வேணாமாம்டா குட்டி. உனக்குமா? அப்பா கூடவே இருப்பீங்களா?…” என்று கேட்க குழந்தை அவனின் நெஞ்சத்தில் தலைசாய்த்து கண்களை கசக்க ப்ரியதர்ஷன் விழிகள் கனிந்தது.
உடல் நெகிழ்ந்து சிலிர்த்து அமர்ந்திருந்தான் ப்ரியதர்ஷன். அத்தனை பாந்தமாய் மகனை பிடித்திருந்தான்.