“அதுவும் சரிதான். அவங்க வரும்போது நாம இருக்கனுமே…” என்றபடி முகிலரசன் அமர்ந்துவிட்டார்.
அனைவரும் வெளியில் சென்றதும் அவந்திகாவின் அருகில் கட்டிலில் அமர்ந்தான் ப்ரியதர்ஷன்.
உள்ளமெல்லாம் சந்தோஷ கூப்பாடு. புதிதாய் பிறந்ததை போல அவனின் இதழ்களை புன்னகை நிறைத்துக்கொண்டே இருந்தது.
ஒற்றை விரலால் மகனின் பாதவிரல்களை ஒன்றன் பின் ஒன்றாய் வருடியபடியே இருக்க பிள்ளைக்கு கூசியதில் உடலை நெறித்தான் குழந்தை.
“ச்சோ…” என்று ஒருவிரல் ஐவிரலாகி மெதுவாய் வருடி, தடவி தட்டிக்கொடுக்க, குட்டி நாக்கினால் மொட்டு இதழ்களின் நடுவில் துருத்திக்கொண்டு சிறு சப்தம் எழுப்பியபடி கண்களை சிமிட்டி விழிக்க முயன்று உறக்கத்தில் கிறங்கியது குழந்தை.
“உங்கம்மா இப்படிதான்டா செய்வா. நல்லா தூங்கிட்டிருக்கும் போது எழுப்பினா இல்லாத பாவனை எல்லாம் காட்டி என்னை ஒருவழி பண்ணிருவா. அம்மா போல பன்றியா நீ?…” என்றான் மெல்லிய குரலில் மகனிடம் ரகசியம் பேசியபடி.
அவன் பேச பேச பிள்ளை நன்றாகவே விழித்துக்கொண்டான். இரு கைகளையும் உயர்த்தி இங்குமங்கும் உடலை அசைத்துக்கொண்டு அலுப்பு விட்டு தகப்பனை கண்ணை உருட்டி பார்த்தான்.
ப்ரியனுக்கு மகனின் அசைவுகள் ஒவ்வொன்றும் அளப்பறியா சந்தோஷத்தை அள்ளி தெளிக்க பார்த்தபடியே இருந்தான்.
கையை காலை உதைத்துக்கொண்டு மழலை குரல் எழுப்பியவனிடம் இவனும் ரகசியம் பேச என்று நேரம் செல்ல மெதுவாய் ஒருசாய்த்து திறந்திருந்த கதவின் வழி பார்த்த தரணிக்கு முகமெல்லாம் ஆனந்தம்.
“இங்க பாருங்க உங்க மருமகனை. என்னைக்காவது இப்படி பார்த்திருப்பீங்களா?…” என்று கலாவை சத்தமில்லாமல் அழைத்து காண்பிக்க,
“பாரேன். என்னமோ பேச இந்த குட்டியும் கையை காலை உதைச்சிட்டு ராகமா ங்ஞா போடறதை…” என்று கன்னத்தில் கை வைத்து பார்த்தார் அவர்.
“இப்ப உங்க பார்வைக்கு தான் சுத்தி போடனும். போதும் அண்ணா பார்த்திடாம…” என்று கதவை சாற்றிவிட்டு அவரை தள்ளிக்கொண்டு சென்றாள் தரணி.
அதன் சத்தத்தில் ப்ரியதர்ஷன் நிமிர்ந்து பார்க்க அவந்திகாவும் விழித்துக்கொண்டாள்.
“எப்போ வந்தீங்க?…” விழித்ததுமே அவளின் பார்வையில் அவள் கணவன்.
சூரியனை கண்ட ஆகாய தாமரையாய் முகம் விகசிக்க புன்னகையுடன் பார்த்தவள் முகம் வெளிறி இருந்தது.
“பெய்ன் இன்னும் இருக்கா அவந்தி?…” என்றான் அவளின் கன்னம் தொட்டு.
“கொஞ்சம். ஆனா தாங்கிக்க முடியுது….” என புன்னகைத்தவள் குழந்தையின் அசைவில் தலையை திருப்பி பார்த்தாள்.
“இவன் உங்களை மாதிரியேவாம். அம்மா சொன்னாங்க…” என்று சொல்ல,
“ஓஹ்…” என்ற ப்ரியனின் முகத்தில் பல லட்ச ஒளிக்கற்றைகள்.
இதழ் பிரியாமல் புன்னகைத்தவன் அவர்கள் இருவரையும் தான் மாற்றி மாற்றி பார்த்தான்.
“எல்லாமே உங்களை மாதிரியாம். கண்ணு, காது, மூக்கு. எனக்கு தான் பார்க்க தெரியலை. குழந்தை குழந்தையா தான் தெரியறான்…” என்றாள் உதட்டை பிதுக்கி.
“அதெல்லாம் பெரியவங்களுக்கு தெரியுமாம். பெரியவங்களுக்கு தான் தெரியுமாம்…” என்று ப்ரியன் கூற,
“ஓஹ். அதான் அம்மாவுக்கு தெரிஞ்சிருக்கு…” என அவந்திகா சொல்லவும் பக்கென்று சிரித்துவிட்டான் ப்ரியதர்ஷன்.
“கேலி செஞ்சீங்களா நீங்க?…” என்று அவன் சிரிக்கவும் தான் அவன் என்ன அர்த்தத்தில் கூறினான் என்றே அவள் யோசித்து பார்த்து கேட்க,
“ரொம்ப சீக்கிரம் கேட்டுட்ட போ…” என்றவன் இன்னும் நெருங்கி அவந்திகாவின் நெற்றியில் அழுத்தமாய் இதழ் பதித்து விலக, மகன் மல்லுக்கு நின்றான் அவனிடம்.
“தங்கக்கட்டிக்கும் வேணுமாம்…” என்று அவந்திகா கூற,
“தங்கக்கட்டியாமாம்…” என்று சிரிப்புடன் மீசை உரசாமல் பிள்ளையின் நெற்றியில் இதழ் ஒற்றி நிமிர குழந்தை இன்னும் அதிகமாய் சிணுங்கி சப்தம் எழுப்பியது.
“அழறானா என்ன?…” என்று பார்க்க அப்படி எதுவும் இல்லை.
“இப்ப தான் பசியாத்துனேன். அழலை…” என்றவள்,
“அத்தை, அண்ணி எல்லாரும் வந்தாச்சா?…” என்றாள்.
“ம்ஹூம். இன்னும் அரைமணிநேரம் மேலவே ஆகிடும் போல….”
“ஓகே ஓகே. துளசி மறுபடியும் அழ போறா. தம்பியை நாங்க தூக்கிட்டு போயிடறோம்ன்னு சொல்லி…” என்று சிரிக்க,
“ம்ஹூம். என் மகனாச்சே. சொல்லமாட்டா…” என்றான் பிரியதர்ஷனும் சிரிப்புடன்.
“அதுவும் சரிதான். உங்களை பார்த்து பயப்படுவாளே…”
“ஹ்ம்ம் அவந்தி. நிலவன் கூட என்னை பார்த்ததும் ராகவ் காலை கட்டிக்கிட்டான். என்ன ஒரு பயம்? நான் என்ன பண்ணிட்டேன்?…” என்றவன்,
“அப்பாவை பார்த்து நீயும் பயப்படுவியா குட்டி? இல்லை தானே?…” என்றான் மகனிடம்.
“அவங்க ரெண்டுபேரையும் நாம சேர்ந்து பயம் காட்டிருவோம். நீ அப்பாவோட பிள்ளை. நீ பயப்பட மாட்டடா. இனிமே அவங்க பயந்து பார்த்தா என் பிள்ளை இருங்கான் போடான்னு சொல்றேன் அப்பா. ஓகே…” என்று சொல்லி சுட்டுவிரலால் மகனின் நாசியை லேசாய் தட்ட குழந்தையின் கைகள் தகப்பனின் விரலை பற்றிக்கொண்டது.
இரு கைகளாலும் ஒற்றை விரலை இறுக்கமாய் பிடித்துக்கொள்ள ப்ரியனின் முகம் கனிந்ததோடு, கலங்கியும் போனதும்.
ஒருவிதமாய் உணர்வுகளின் பிடியில் அவனிருக்க அவந்திகா அவனின் ஒவ்வொரு ஜாலங்களையும் பார்த்துக்கொண்டிருந்தாள்.
மனமெல்லாம் என்னவோ செய்தது. விழிகள் கலங்கி இதழ்களில் புன்னகை நெளிய அமர்ந்திருக்கும் அவளின் கணவன் அவளின் உணர்வுகளை, உயிரை பிசைந்தான்.
அவன் ஒரு உலகத்தில் இருப்பதை போலவே சிலநொடிகள் மகனுடன் பேச்சுவார்த்தை.
அதற்கு பதிலளிக்கும் விதமாய் மகனின் அசைவுகள். மெய்மறந்து போயிருந்தான் முரடன் என்று காண்பிக்கப்பட்டவன்.
அவந்திகாவின் கண்கள் கலங்கி விழிகளில் நீர் உடைப்பெடுத்துவிட லேசாய் விசும்பிவிட்டாள்.
வெகுநேரம் மனைவியின் பார்வை தன் மீது என்று உணர்ந்திருந்தாலும் அவளின் விசும்பலில் தான் புருவம் உயர்த்தி அவளை பார்த்தான் ப்ரியதர்ஷன்.
“என்னடா, வலிக்குதா அவந்தி?…” என்று கேட்க,
“ம்ஹூம். இல்லை…” என்றவள் குரலுக்கு எதிராய் அவள் முகம் வேதனையை காண்பித்தது.
உடல் நோவினால் வந்த வேதனை இல்லாது மனதினால் உருவான வலி. என்னவோ அவள் பெரிதாய் தவறு செய்துவிட்டதை போலவே தான் உணர்ந்தாள் அவந்திகா.
“நான் தப்பு பண்ணிட்டேன்ல…” என்று கேட்க அவள் கேட்டவிதத்தில் மகன், மனைவி இருவரையுமே மாற்றி மாற்றி பார்த்தவன்,
“ரெண்டுபேருக்கும் பெருசா வித்தியாசம் இல்லை….” என்று சொல்லி சிரிப்புடன் முறைத்துக்கொண்டே,
“நீ ஸ்ட்ரெய்ன் பண்ணிக்க கூடாதுன்னு சொல்லியிருக்காங்களே? ஏன் அழற?…” என்று கண்ணீரை துடைத்துவிட்டான்.
“நான் தப்பு பண்ணிட்டேன். எனக்கு புரியுது…” மீண்டும் அதையே சொல்ல,
“சரி, தப்பை சரி பண்ணலாம். போதுமா. அழாம பேசனும். இல்லைன்னா எழுந்து வெளில போயிருவேன்…” என்று மிரட்ட,
“ம்ஹூம். போகமாட்டீங்க…” இப்போது கண்ணீரோடு புன்னகையும் அவந்திகா முகத்தில்.
“ஏன் மாட்டேன்? கிளம்பறேன். நீ அழுதுட்டே இரு…” என்று கோபம் போல சொல்லியவன் எழுந்து நிற்க அப்போதும் அவள் அழுதாள். அதனுடன் சிரிக்கவும் செய்தாள்.
“அவந்தி…” ப்ரியதர்ஷன் உண்மைக்கும் கோபமானான்.
அவன் சொல்லியதை போல கிளம்பவும் முடியவில்லை. அவள் அழுவதையும் நிறுத்த முடியவில்லை.
ஏன் எதற்கு என்றும் தெரியவில்லை. ஆனால் எதையோ நினைத்து கலங்கி இந்த அழுகை என்று மட்டும் புரிந்தது.
வெளியே அவளின் பெற்றோர் இருக்க இந்தநேரம் பேச்சை வளர்க்க அவன் விரும்பவில்லை.
“நீ அழுதுட்டே இரு. நான் கிளம்பறேன்…” என்றான் மீண்டும் கதவின் அருகில் சென்று.
தலையை திருப்பி அவனை மட்டுமே பார்த்திருந்தவள் கண் சிமிட்டி அழுகையை நிறுத்த பார்த்து புன்னகைக்க முடியவில்லை.
காரணமின்றி அழுகை பெரிதாய் வெடிக்க அதனை அவள் அடக்க முயல்வதும் ப்ரியதர்ஷனை நிறுத்தியது.
ஒன்றும் சொல்லாமல் மீண்டும் அவளருகில் வந்தவன் குழந்தையோடு அவளையும் சேர்த்து அணைத்துக்கொண்டான்.
“ஸாரி…” அவந்திகா கூற எதுவும் பேசவில்லை ப்ரியதர்ஷன்.
“ரொம்ப ரொம்ப ஸாரி…” மீண்டும் கூற, கணவனின் கைகள் அவளை வளைத்து பிடித்திருந்தது சிரமமின்றி.
“எனக்கு ரொம்பவே தவிப்பா இருக்கு. பெரிய தப்பு பண்ணிட்டேன்ல…” என்று சொல்லியவளின் நெற்றியோடு நெற்றி வைத்து அவள் மூச்சுக்காற்றில் கலந்தவன்,
“மூச். இனி இதை பேசவே கூடாது நீ. புரியுதா? நான் சொன்னா கேட்கமாட்டியா?…”
“ம்ஹூம். மாட்டேன்…” என்று சிரித்தாள் அவந்திகா.
“அவ்வளோ தைரியமாகிருச்சா?…”
“கொஞ்சம்…”
“பயம் போயிருச்சு…”
“சென்னைலையே விட்டுட்டு வந்துட்டேன் போல…”
“அப்போ இங்க இருக்கிற அவந்திட்ட என்ன இருக்கு?…”
“ப்ரியம். ப்ரியன்…” என்றாள் அவந்திகா அகம் நிறைந்த நேசத்துடன்.
ப்ரியதர்ஷன் இதனை எதிர்பார்க்கவில்லை. விளையாட்டாய் பேசிக்கொண்டிருக்க அவளின் அந்த பதில்கள்.
களவுகள் பத்திரமாய் உரிய இடம் சென்று சேர்ந்துகொண்டது.