“உங்க தம்பியை நீங்க விட்டுக்குடுப்பீங்களா?…” என்பவளுக்கு எதிர்பார்ப்பின் அளவில் ஏமாற்றமே அதிகத்திற்கும் கிடைத்தது.
கணவனை நிமிர்ந்து பார்த்தால் தானே அவனின் முகம் புன்னகைக்கிறதா, புகைகிறதா என்று தெரியும் என அவளுக்கு புரியவில்லை.
அவள் எதிர்பார்க்கும் விதத்தில் ப்ரியதர்ஷன் இல்லவே இல்லை. அதனை அவன் பெண் பார்க்க வந்தபொழுதே அனுமானித்துவிட்டாள்.
தனக்கொரு குணாதிசயம் இருப்பதை போல அவனுக்கும் இயல்பு ஒன்று உள்ளதென யோசிக்கவே இல்லை.
தான், தன் கணவன் தன்னோடு இப்படி இருக்கவேண்டும் என்னும் நினைவில், அவனின் கடுமைகள் ஏறி அவளின் மனதை அழுத்த, அதை உடைத்துவிட்டு வந்து பார்க்கும் பக்குவமும் இல்லாது போனது.
திருமணம் முடிந்து இருவரும் ஒன்றாய் இருந்திருந்தால் ஓரளவு இருவருக்குள்ளுமான இணக்கம் பலப்பட்டிருக்குமோ என்னவோ என்று தரணி நினைக்காத நாளில்லை.
“பேசாம அவந்தியை அவரோட அனுப்பிட்டு மாத்தி மாத்தி நாம போய் அவளுக்கு துணைக்கு இருந்து பார்த்திருந்திருக்கனும் த்தை. விட்டுட்டோம்…” என்று கலாவிடம் தரணி பேசியிருக்க,
“கல்யாணம் ஆனதுல இருந்து பெருசா சேர்ந்து இல்லை. மருமகனும் மாசம் ரெண்டுநாள் வந்துட்டு பார்த்துட்டு போறார். இதுல எங்க அவங்க புரிஞ்சுக்க? இவ அவர் பேச்சை எடுத்தாலே உன் மருமகனுக்கு சப்போர்ட் பண்ணாதன்னு சொல்றா….” கலா அங்கலாய்த்தார்.
“ம்க்கும், எங்க பேசினா அங்க போக சொல்லிருவோம்னு அலறிட்டு இருக்கா. நல்லா இங்க மாமியார், நாத்தனார் கூட ஜெல்லாகிட்டா. ஜாலியா நேரம் போகுது அவளுக்கு. அதான் அங்க போனா என்ன பன்றதுன்னு யோசிக்கிறா…” என்ற தரணி,
“இந்த அங்கையம்மா தான் கூட போய் அங்க இருந்தா என்னவாம்? மகளையும் கட்டி குடுத்தாச்சு. இங்க ஒத்தையில இருந்து என்னதான் பன்றாங்க?…” என்று ஆதங்கம் வேறு தரணிக்கு.
இது எதுவும் அங்கைக்கு புரியாமல் இல்லை. அவரால் அந்த வீட்டை விட்டு செல்ல முடியாது.
“உங்கப்பா எப்படி இவனை உருவாக்கி வச்சிட்டு போயிருக்கார் பார்த்தியா?…” என்று மகளிடம் சொல்லுபவர்,
“கல்யாணம் ஆனதும் கூப்பிட்டான்னா போகவே மாட்டேன். எப்ப பார்த்தாலும் போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல நிக்கிற மாதிரியே இவன் முகத்தை பார்த்துட்டு நான் என்னத்த நிக்கறது?…” என்று பேசுபவர் மருமகள் வந்த பின்னரும் அதையே தான் தொடர்ந்தார்.
“உன் புருஷன் அப்படியே அவங்க அப்பா மாதிரி. இவனாச்சும் பரவாயில்லை. அவர் ரொம்ப கண்டிப்பு. இவனை இப்படி வளர்த்து அவரை மாதிரியே போலீஸ் ஆக்கிட்டு தான் நிம்மதியானார். என் மகன் என்னை மாதிரியே வரனும்ன்னு சொல்லி சொல்லி இன்னைக்கு அவனுக்கு கிடைக்கிற இந்த பேரை பார்த்து பூரிக்க மனுஷன் இல்லாம போய்ட்டார்…” என்பார் அவந்திகாவிடம்.
தன் கணவரை பற்றி அங்கை கூறும் புராணங்களில் அதிகமாய் அவந்திகா அறிந்துகொள்வது என்னவோ ப்ரியதர்ஷனின் கடுமையும், கோபமும் தான்.
“இதெல்லாம் இவனுக்கு புடிக்காது. எனக்கு பழகிருச்சு. ஏனா இவங்கப்பா அப்படித்தானே?…” என்று சொல்லி சொல்லியே அவள் மனதில் ப்ரியதர்ஷன் மீதான பிம்பத்தை மேலும் வேறாக மாற்றிவிட்டார்.
எதார்த்தமான பேச்சுக்கள் இங்கே பூதாகரத்தை கிளப்பியிருக்க அவந்திகாவின் உருவகம் மேலும் ப்ரியதர்ஷன் பற்றிய அபிப்பிராயத்தை மோசமாக்கி இருந்தது.
“சாப்பிட்டியான்னு கேட்டு பார்த்ததில்லையே என் புருஷனை. அதுக்கெல்லாம் ஒரு குடுப்பினை வேணும்…” என்று பெருமூச்சு விடுபவரின் கழுத்தை பிடித்து, ‘அப்பறம் ஏன் என்னை கட்டிவச்சீங்க?’ என்று உலுக்கும் வேகம் பிறக்கும் அவந்திகாவிற்கு.
அதுவே அவளின் ரத்தக்கொதிப்பை ஏற்றியது. மருத்துவரின் கவனத்திற்கு செல்ல அங்கிருந்து ப்ரியதர்ஷன் அறிந்துகொள்ள, அவனின் கண்டிப்பில் அவந்திகா தான் அல்லாடி போவாள்.
“இத சாப்பிடு அவந்திம்மா. இல்லைன்னா உன் புருஷனுக்கு பதில் சொல்ல முடியாது…” என்று அங்கை பேசும் பொழுதெல்லாம் ஒருவித எரிச்சல் அவளிடம்.
ஒருவழியாய் கெஞ்சி, பேசி, அமலாவை வைத்து மனதை கரைத்து, மண்டையை கழுவி இதோ ஏழாம் மாதமே வளைகாப்பை வைத்துவிடும்படி கேட்டிருக்க அங்கைக்கு மகனிடம் கேளாமல் முடிவெடுக்க அத்தனை யோசனை.
ஒருவழியாய் உடல்நிலை, நல்லநாள் பொழுது என்று பேசி விழாவும் நல்லவிதமாய் முடிந்திருக்க அவனின் வருகை அவந்திகாவிற்கு அதிர்ச்சியாய். போனில் பேசுகையில் அவ்வப்போது,
“இங்க வேணா வந்துடேன். மெய்ட் போட்டு பார்த்துக்கலாம்…” என்று அவளை கலங்கடிப்பான்.
“நீங்க அத்தைட்ட பேசுங்க…” என்று அவளும் இதுதான் வாய்ப்பு என்று அங்கையை சத்தமின்றி கோர்த்துவிட,
“இல்லப்பா, நீ வேலையா வெளில போவ. வேலைக்கு இருக்கறவங்களை நம்பி பிள்ளையை தனியா எப்படி அனுப்ப. உனக்கும் டென்ஷன். அவ உடம்பு தேறட்டும். இப்ப என்ன குழந்தை பிறக்கவும் அவ அங்க தான வர போறா…” என்று என்னென்னவோ சமாளிக்க,
“ஏன் நீங்க என்ன பன்றீங்க? கூட வரவேண்டியது தான?…” என்று கடுப்பாகிவிடுவான்.
“என் உடம்பு என்ன முன்ன போலவா இருக்கு? இங்கன்னா அக்கா வந்து என்னையும், அவந்தியையும் சேர்த்தே பார்த்துப்பா….” என உடனடியாக கவலை குரலில் பேசி அவனின் அமைதியை கண்டதும் தான் நிம்மதியாவார் அங்கை.
இப்படியாக இத்தனை நாட்கள் சென்றிருக்க கிடைத்த நேரத்தில் கிளம்பி வந்திருந்தான் ப்ரியதர்ஷன்.
அவனின் வருகையும், எதற்காக வந்து சேர்ந்ததும் என எதுவும் அவந்திகாவின் மனதில் தோன்றவே இல்லை.
அவனுக்கான அவள் மனதின் பிம்பமே வேறாக இருக்க நேராக யோசிக்க அவளின் சிந்தனையும் செல்லவில்லை.
அவன் பிடித்திருந்த கையை விடாமல் பற்றியிருக்க இவள் நேரத்தை பார்த்தபடி அமர்ந்திருந்தாள். இயற்கை அவஸ்தை வேறு ஒருபுறம்.
மெல்ல திரும்பி கணவனை பார்க்க அவனின் அசைவின்றிய உறக்கத்திலேயே அந்த அயர்ச்சி புரிந்தது.
உறங்கிக்கொண்டிருப்பவனை அவள் ரசித்து பார்த்த நாட்கள் எல்லாம் விரல்விட்டு எண்ணிவிடலாம்.
அப்படி பத்தில் கூட முழுமையடையாத அளவில் தான் அவந்திகாவின் கவனிப்பு இருந்தது.
எப்போதும் அதற்கு வாய்ப்பிருந்ததும் இல்லை. அவனிருந்தால் அதிகத்திற்கும் உறங்குவதும், முகம் பார்க்காமல் இருப்பதும் அவளாகவே இருக்க இப்போது இந்த நிமிடத்தை இழக்கவும் முடியவில்லை.
முன் நெற்றி கேசம் காற்றில் லேசாய் அசைந்தாட சீரான சுவாசத்துடன் உறங்கிக்கொண்டிருந்தவனின் முகத்தை அத்தனை அவதானித்தாள்.
இயல்பாய், இலகுவாய், பாந்தமாய் ஒரு உறக்கம். மனது அவனை வகைதொகையின்றி தாறுமாறாய் ரசித்து வைக்க, மீண்டும் அவன் மீதான மையல் மொட்டுவிட்டது.
‘இப்படி தூக்கத்துலயே வாழ்க்கை முழுக்க ஓட்டிடுவியோ? விளங்கிடும்’ என இன்னொரு மனது எக்களித்தது.
எதையும் அவள் பொருட்படுத்தவில்லை. பிடித்து சம்மதித்து திருமணம் செய்துகொண்ட அவனை பிடிக்காமல் இல்லை.
அளவுக்கதிகமாய் அவனின் இயல்பு தெரியாமல் புகைப்படம் பார்த்தே அவன் மீது பித்தானவள் தான்.
அந்த அளப்பறியா நேசம் கொண்ட எதிர்பார்ப்பிற்கு கிடைத்த ஏமாற்றத்தில் ஆரம்பித்தது அவந்திகாவின் சுணக்கம்.
அவன் வேண்டும். ஆனால் வேண்டாம் என்பதை போலொரு மனப்பான்மை ஏன் என்றே தெரியாமல் வளர்ந்திருக்க எங்கே முழுதாய் வேண்டாம் என்று மனம் விடுபட்டுவிடுமோ என்று பயந்திருந்தாள்.
அப்படி அவனின்றிய வாழ்வும் அவளுக்கு சுகிக்காது என்பது அவந்திகாவே அறிந்தது தான்.
‘இவங்க கொஞ்சம் சிரிச்ச முகமா, சாஃப்ட்டா பேசலாம்’ என நினைத்தபடி அவனின் கைகளை தானுமே லேசாய் அழுத்தம் கூட்டி பற்றிக்கொள்ள பட்டென்று கண் விழித்தான் ப்ரியதர்ஷன்.
‘தான் இப்படி வைத்த கண் எடுக்காமல் பார்த்திருந்த நேரத்திலா இவன் விழிக்கவேண்டும்?’ என்று பார்வையை திருப்பவும் முடியாமல் மலங்க மலங்க விழிக்க,
“ரொம்பநேரம் ஆகிடுச்சா அவந்திகா?…” என்றபடி எழுந்தவன் தன்னை தன் மனைவி ரசித்து பார்த்து கொண்டிருந்த விதம் கூட அவனுக்கு புலப்படவில்லை.
“இல்லை, டைம் பார்க்கலை…” என்றவள் திரும்பி கடிகாரத்தை பார்க்க சரியாய் பத்துநிமிடங்கள் தான் உறங்கியிருந்தான்.
‘ஹப்பா சரியான பங்சுவாலிட்டி. கடவுளே’ மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது.
“ஓகே, நான் போய் சாப்பிட்டு வர்றேன்…” என கட்டிலை விட்டு இறங்கியவன் முகத்தை துடைத்துவிட்டு வெளியே செல்ல அவந்திகாவின் உடல்மொழி இயல்பிற்கு திரும்பியது.
“ஆமா, நான் வர்றப்போ என்ன சொல்லிட்டிருந்த உன் அண்ணிட்ட?…” என மீண்டும் உள்ளே வந்துவிட்டவனை கண்டு திடுக்கிட்டவள்,
“என்னங்க?…” என்றாள் எதை கேட்கிறான் எனும் சஞ்சலத்துடன்.