“உன் அண்ணிட்ட என்ன சொன்னன்னு கேட்டேன்…” கதவில் ஒற்றை கையை வைத்து சாய்ந்து, இடுப்பில் ஒன்றை வைத்துக்கொண்டு அவன் நின்ற தோரணையில் மனம் மயங்கவிருந்தாலும் கேட்ட கேள்வியில் உள்ளம் பதறியது.
இன்னொருபுறம் ஒருவேளை முழுதாய் கேட்டிருக்கவில்லையோ, அதனால் கேள்வி கேட்கிறானோ என யோசித்து,
“தரணி அண்ணி சரிகாவுக்கு அலையன்ஸ் வந்திருக்காம். அதை பத்தி அந்த மாப்பிள்ளை பத்தி பேசிட்டிருந்தோம்…” என்றாள் எச்சிலை கூட்டி விழுங்கியபடி.
“என்னது? எப்போ சொன்னாங்க?…” என பதறும் மனதை அடக்கிக்கொண்டு கேட்க,
“அவங்க சொல்லலை. உன் வாய்ஸ்ல கேட்டுச்சு…” என்றான் அழுத்தமாய்.
“நானா? இல்லையே. ஞாபகமில்லை…” என்றவள் மனதினுள், ‘போச்சு பண்ணாரியப்பன் வேப்பிலையை எடுக்க போறான்’ என பதறினாள்.
“ஓஹ் மறந்திடுச்சோ?…” என்ற பிரியதர்ஷன் பின் சாவகாசமாய்,
“ஆனா என்ன பேசினன்னு எனக்கு ஞாபகம் இருக்கு. நான் எல்லாமே கேட்டேன்…” என்று சொல்ல மூச்சே நின்றதை போலானது அவந்திகாவிற்கு.
மீண்டும் கதவை சாற்றிவிட்டு அவள் அருகில் வந்து எதிரே அமர்ந்ததும் என்ன சொல்லி சமாளிப்பது என்று விழிகளை நகர்த்த,
“ப்ச், என்னை பாரு அவந்திகா…” என்று அவள் கன்னம் பற்றி, அவன் பார்வையை சந்திப்பேனா என்றிருந்தவள் முகத்தை திருப்பினான்.
“என்னவோ போதாதுன்னு சொன்னியே? என்ன?…” என்று கேட்க,
“அது தெரியாம, வந்து…” என்று திணறி பார்த்தவள் என்ன சொல்லி பேசுவானோ, திட்டுவானோ என்று பார்த்திருக்க,
“தூரமாவே இருந்தா எதுவும் போதாது தான். பக்கம் வர நீ ஸ்டெப் எடுக்கவே இல்லையே?…” என்று கேட்க அவந்திகாவின் விழிகள் அகன்றது.
லேசாய் முத்துமுத்தாய் முகத்திலும், மேலுதட்டிலும் அவளுக்கு வியர்த்திருக்க தன் விரல் கொண்டு துடைத்தவனின் நிதானம் அடிவயிற்றில் என்னவோ கூச செய்தது.
“டாக்டர் சொல்லிருக்காங்க…” என்று தன் விழிகளை தளர்த்தினாள்.
“ப்ச், என்னை பாருன்னேன். டாக்டர் என்கிட்டயும் தான் சொல்லிருக்காங்க…” சுத்தத்திற்கும் அதிலிருந்த அப்பட்டமான ஏமாற்ற உணர்வை அவந்திகாவால் உணர முடிந்ததுவே ஆச்சர்யம்.
தான் வகுத்திருந்த அவன் மீதான பிம்பத்தில் சிறிதளவு கீறல் எழுவதை போலிருக்க திகைப்புடன் பார்த்தபடி இருந்தாள்.
“என்கிட்ட கேளு என்ன போதலைன்னு. ஊரெல்லாம் சொல்லுவியா நீ?…” என்றான் அவள் கன்னம் பற்றியிருந்த தன் விரலில் அழுத்தத்தை கூட்டி.
பேச்சற்று பார்த்துக்கொண்டிருந்தவளை இன்னும் இன்னும் நெருங்கி அமர்ந்தவன் மீசை முகமெல்லாம் அவளை இம்சிக்க புதிதாய் ஒரு உணர்வு.
ஆனாலும் அதனை உணரவிடாதபடி அவனின் கரகரப்பான அழுத்த குரல் அதட்டல் தொனியில்.
பிள்ளை உண்டானதில் இருந்து பெரிதாய் இந்த உணர்வுகளை அவன் காண்பித்ததே இல்லை.
அவளின் உடல்நிலையும் அதற்கு ஏற்ப தான் இருந்தது நலிந்து, சிற்சில உபாதைகளுடன்.
அதற்கெனவே பூவை போல தான் பார்த்துக்கொள்ளவேண்டிய சூழ்நிலை இருந்தாள் அவந்திகா.
இந்தநிமிடம் அவற்றை எல்லாம் களைந்து அவளின் உடல்நிலையும் தேறி இருக்க, இப்போது வளைகாப்பு, பிறந்த வீடு என்று நிற்கிறாள்.
“போலீஸ்க்காரன் பொண்டாட்டி, பொய் சொல்ற நீ….” அவளின் கழுத்து வளைவில் முகம் சாய்த்தவனின் இன்னொரு கை அவளின் இடையை சுற்ற,
“நான் நான்…” என்றதோடு அவந்திகா வேறு வார்த்தையை தேடி தவிக்க, இவன் தரும் இந்த இம்சை புதிதிலும் புதிது.
“நீ நீ தான். பொய் சொன்னா எனக்கு புடிக்காது அவந்திகா…” என்றவன்,
அவந்திகாவிற்கு அவனின் இந்த நெருக்கத்தை தாண்டி அந்த தண்டனை அவனோடு செல்வதாக இருக்குமோ என்று தான் உள்ளுக்குள் அடித்துக்கொண்டது.
“குடுக்கலாமா பனிஷ்மென்ட்டை…” என முகத்தோடு உரசிக்கொண்டிருந்தவன் இதழ்கள் அவளின் மொழிவழியை மிதமாய் நனைக்க, கண்கள் தாமாய் மூடியது அவந்திகாவிற்கு.
அவசரமின்றி, காயம் செய்யாமல், வலிக்காமல், அலுக்காத இதழ்முத்தம் ப்ரியதர்ஷனிடமிருந்து முதல்முறை.
அதுவே அவளை மயக்க விலகாமல் அவனின் சட்டையை பற்றியிருந்தவள் உள்ளத்தினுள் உருவமில்லாத ஒரு உணர்வு பெரிதாய் வியாப்பித்தது.
மெதுமெதுவாய் அவளை விடுவித்தவன் முகம் மனவியின் உணர்வை ஆராய நிமிரவே இல்லை அவள்.
ப்ரியதர்ஷன் இதழ்களில் குறுநகை பூக்க அவள் கன்னத்தை நிமிண்டியவன் அவளை ரசித்துக்கொண்டே எழுந்து நின்றான்.
“சரி அவந்திகா, நான் சாப்பிட்டு உன் பேரன்ட்ஸ்கிட்ட பேசிட்டு வரேன். நீ ரெஸ்ட் எடு…” என்றவனை அவள் கேள்வியாய் நிமிர்ந்து பார்க்க,
“இன்னைக்கு நீ அங்க போ. நாளைக்கு டாக்டர்கிட்ட கன்சல்ட் பண்ணிட்டு உன்னை திருச்சி கூட்டிட்டு போகலாமான்னு கேட்டுட்டு நாம கிளம்ப அரேஞ்ச் பன்றேன்…” என்று இலகுவாய் சொல்லிவிட்டு அவளின் நெஞ்சில் வெடிவைத்து சென்றுவிட்டான்.
அவன் சொல்லி சென்ற அதிர்ச்சியில் அசைவற்று அமர்ந்துவிட்டாள் அவந்திகா. சற்றுமுன்னிருந்த இதம் தொலைந்து மனதினுள் கலக்கம்.
‘தன்னால் அவனுடன் தனியாய் எப்படி? அவனை சமாளிக்க முடியுமா?’ என யோசிக்க யோசிக்க அங்கை சொல்லிய அனுபவங்கள் அவளை மேலும் கலக்கமுற செய்தது.
இதை எதையும் அறியாமல் ராகவ்வை அருகில் அமர்த்திக்கொண்டு பந்தியில் அமர்ந்திருந்தான் ப்ரியதர்ஷன்.
வந்திருந்த உறவினர்கள் பெரும்பாலானோர் புறப்பட்டிருக்க அவந்திகாவின் பக்க சொந்தங்கள் சிலர் மாடியில் ஓய்வில் இருக்க கீழே கூடத்தில் இவர்களின் உறவுகள் மட்டுமே இருந்தனர்.
ப்ரியதர்ஷன், ராகவ்விற்கு இலையை போட்டுவிட்டு தரணியும், அமலாவும் பரிமாற, மகன் இருக்கிறான் என அங்கையும், மருமகன் இருக்கிறான் என அவந்திகா பெற்றோரும், மகனின் மச்சினன் வந்திருக்கிறான் என நளனின் பெற்றோரும் அங்கே தான் கவனிப்பில் இருந்தனர்.
‘இத்தனை பேர் இருந்தும், நோ யூஸ். ஆத்தா ஏன் சம்மதிக்க மாட்டேன்றீங்க? ஹெல்ப் மீ’ என்ற ராகவ்வின் மைண்ட் வாய்ஸ் குடும்பத்தினர் அனைவருக்குமே பலமாய் கேட்கத்தான் செய்தது.