“உங்களுக்குத்தான் உடம்பு சரியில்லையே ம்மா. கால்ல வேற அடி பட்டிருந்துச்சே? அதுக்காக தான் உங்களை வேலை செய்யவேண்டாம்ன்னு சொன்னாங்க என்னோட அத்தை….” என்று வந்துவிட்டாள் தரணி.
“நீ பேசாம இரு தரணி…” என கலா பதறி கூற,
“அட இருங்க த்தை…” என்றவள் நிதானமாய் அங்கை பக்கம் திரும்பினாள்.
“வேணும்னா நீங்களே பாருங்க. யாரும் தடுக்கலை ம்மா. அப்பறம் மாமாவுக்கு சுகர் இருக்கு. இப்படித்தான் தோசை ஊத்தனும்…” என அதற்கொரு விளக்கம் சொல்லியவள்,
“என் புருஷனுக்கு எண்ணெய் நிறைய ஊத்த கூடாது. ரோஸ்ட்டாவும் இல்லாம, ரொம்ப மொந்தமாவும் இல்லாம மீடியமா இருக்கனும். எனக்கு ரோஸ்ட் தான். என் பையனுக்கு நானே செஞ்சுக்கறேன். நீங்க அனுமதி குடுத்தீங்கன்னா…” என்று சொல்ல கலா திருதிருவென்று பார்த்தார்.
“அப்பறம் ஹாஸ்பிட்டலுக்கு உங்க பையனுக்கு எப்படி வேணா சமைச்சுக்கோங்க. உங்க விருப்பம். அவந்திக்கு நாளைக்கு வரைக்கும் சாப்பாடு வேண்டாம். டாக்டர் சொல்லவும் தான் அதுக்கேத்தபடி குடுக்கனும்…” என்றவள்,
“இப்போ ஓகே வா ம்மா. நீங்க மனம் போல என்ன வேணுமோ செய்ங்க. சந்தோஷமா செய்ங்க. இது உங்க மகன் வீடு. நாங்க சும்மா பொண்ணை குடுத்தவங்க தானே? அப்பறம் பொண்ணுவீட்டுல வந்து உக்கார்ந்துட்டு உங்களை வேலை வாங்கிட்டோம்ன்னு யாரும் சொல்லிட்டாங்கன்னா நீங்க தான் பொறுப்பு…” என்றவள் கலாவின் கையை பிடித்துக்கொண்டு வெளியே இழுத்து சென்றுவிட்டாள்.
‘அப்படி போடு. இந்தம்மாவுக்கு இதுதான் சரி’ என சாமந்தி வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தார்.
அங்கைக்கு என்ன நடந்தது என்று கிரகிக்கவே சில நிமிடங்களானது. அப்படியே நின்றுவிட்டார்.
அதுவும் தரணி சொல்லி சென்றவற்றை எல்லாம் நினைக்கவே தலை கிறுகிறுத்தது.
“அப்பறம் என்னம்மா செய்யட்டும்? என்னத்த எடுத்து குடுக்கட்டும்…” என்று சாமந்தி கேட்கவும் தான் விழித்ததை போல பார்த்தார்.
“ஒன்னும் வேண்டாம். நான் பார்த்துக்கறேன்…” என்று சொல்லிவிட்டு அங்கிருந்த அலமாரிகளை திறந்து ஒவ்வொன்றும் எங்கே இருக்கிறது என்று பார்ப்பதற்கே நேரமானது.
அதற்குள்ளே களைத்து போனார் அவர். கலாவிற்கு எழுந்து சென்று பார்க்கவேண்டும் என்று தோன்ற தரணி மிரட்டி அமரவைத்துவிட்டாள்.
அவ்வப்போது அங்கை பேசியதில் கண்கள் வேறு கலங்கியது கலாவிற்கு. எப்படி சொல்லிவிட்டார் என நினைத்து மறுகினார்.
“நான் நாட்டாமையா பன்றேன் தரணி…” என்று கேட்டு வருந்தியவரை அப்படி முறைத்தாள்.
“ஏன், வாயில என்ன வச்சிருந்தீங்க? கேட்க வேண்டியதுதானே உங்களுக்கு மகன் வீடுன்னா எனக்கு மக வீடு தானேன்னு. விட்டிருந்தா நான் நல்லா பேசிருந்திருப்பேன்…” என்று பொருமினாள்.
“எதுக்கு வருத்தப்படனும்? ஏன் சொல்லாமயிருக்கனும்?…” என்றவள்,
“ஆமா என்னத்துக்கு கிளம்பனும்? நல்ல கதையா இருக்கே? இது உங்க மக வீடு. அந்தம்மா பேசினா அதுக்கு கிளம்புவீங்களா? அவந்தியை பார்க்கற உரிமை நமக்கு இருக்கு. சொல்ல போனா இந்த பிரசவம் நாம பார்க்கவேண்டியது…” என்றதும் இன்னும் கலாவிற்கு மனவருத்தம்.
“நான் சாதாரணமா தான் சொன்னேன்…” என்றார் அவர் மீண்டும்.
“ப்ச், விடுங்க…” என்றவள் ராகவ் வரவும் அவனை தனியே அழைத்து சென்றாள்.
“நைட் நானும் அத்தையும் போகும்போது கூட வாங்க. ஹாஸ்பிட்டல் பில் எவ்வளோ என்னன்னு விசாரிச்சிட்டு அண்ணா கட்டறதுக்கு முன்னாடியே நீங்க செட்டில் பண்ணிடுங்க…” என்றாள் கறாராக.
“ஏன் தரணி, இப்பவே என்ன? டிஸ்சார்ஜ் ஆகும்போது தானே பில் கட்டனும்?…”
“ஆமா, ஆனா இப்பவே விசாரிங்க. அண்ணா கட்டிட்டா இன்னும் சங்கடமாகிடும்…” என்றாள் அவள்.
“என்ன பேசற நீ? என்ன பிரச்சனை…” என்றவன் தாயின் முகம் பார்த்தான்.
“நீங்க ஏன் உக்கார்ந்திருக்கீங்க? அங்க அத்தை தனியா வேலை செய்யறாங்க…” என்று கேட்க,
“அவங்களுக்கு தனியா தான் வேலை செய்யனுமாம். இது அவங்க மகன் வீடாம்…” என்றாள் கடுகடுவென்று.
அதுவே ராகவ்விற்கு எதையோ விளக்க, இதற்கும் பணம் கட்ட சொல்வதற்குமான சம்பந்தத்தை அவன் புரிந்துகொள்ள நளனும் கவனித்துவிட்டான் இதனை.
“இந்தம்மாவை…” என்று பல்லை கடித்தவன் அமலாவை வர சொல்லியிருக்கலாமோ என்று யோசித்தபடி நின்றான்.
“இங்க பாருங்க, அங்கையம்மா ஒரு ரூம் எடுத்துக்கட்டும். அண்ணா அவந்தி ரூம் வேண்டாம். நீங்க மாமா, எல்லாரும் இன்னொரு ரூம்ல இருந்துக்கோங்க. மெத்தை ஒன்னு இருக்கே. கீழ விரிச்சு அதுல பிள்ளைங்களை படுக்க வச்சிருங்க. புரியுதா?…” என்றும் சொல்லியிருந்தாள் தரணி.
சொல்லிவிட்டு அடுக்களை செல்ல வீம்புக்கென்று அங்கை எல்லாவற்றையும் இழுத்து வைத்து பார்த்துக்கொண்டு நின்றார்.
“ம்மா, நீங்க முதல்ல எல்லாருக்கும் டீ வச்சிருங்க. பிள்ளைங்களுக்கு பால். அத்தைக்கும், மாமாவுக்கும் சர்க்கரை கம்மியா…” என்று வந்து தரணி சொல்ல அங்கைக்கு கடுகடுவென்றானது.
“என் வீட்டுக்கு வரும் போதெல்லாம் இப்படி சர்க்கரை கம்மியா குடிச்சதில்லையே? நான் போட்டு தரும் டீயை அப்படியே குடிச்சிப்பாங்க…” என்றார் அங்கை.
“போற இடமெல்லாம் நாட்டமை பன்ற பழக்கம் என் மாமனார், மாமியாருக்கு இல்லையே ம்மா. அங்க உங்க வீட்டுல வந்து அவங்க இப்படித்தான் வேணும்ன்னு அதிகாரம் பண்ண முடியுமா? அது நாகரீகம் இல்லையே…” என்று சொல்லிவிட சுருக்கென்று குத்திவிட்டது அங்கைக்கு.
“என்ன தரணி, பேச்செல்லாம் ஒருமாதிரி இருக்கு. நீ இப்படியெல்லாம் பேசமாட்டியே…” என்று சொல்லிக்கொண்டிருக்க வெளியே சப்தம்.
ப்ரியதர்ஷன் தான் வந்திருந்தான் வீட்டிற்கு. மகனின் குரல் கேட்டதும் அங்கையின் உடல்மொழியே மாறியது.
மெதுவாய் எட்டி பார்த்தார் அவர். உள்ளே வந்தவன் முகிலரசனிடம் பேசிக்கொண்டே தன் அறைக்குள் செல்ல பார்த்து திரும்ப அங்கை பார்த்தவிதத்தில் அவரை கண்டுவிட்டான்.
“இங்க நீங்க என்ன பன்றீங்க ம்மா?…” என்றதும்,
“உக்கார சொன்னா எங்க ஸார் உங்கம்மா கேட்கறாங்க? அவந்தியம்மா அம்மா தான் பார்த்துட்டு நின்னாங்க. நம்ம அம்மா வந்துட்டு என் மகன் வீடு, நீங்க என்ன நாட்டாமை பன்றேங்கன்னு எல்லாத்தையும் நான் தான் செய்வேன்னு இழுத்து போட்டு செஞ்சிட்டிருக்காங்க…” என யாரும் எதிர்பாராதவிதமாக குறுக்கே வந்து விழுந்து கூறிய சாமந்தி,
“பேரன் பிறந்த சந்தோஷம். எப்படி காட்டன்னு தெரியல போல. வயசானதை மறந்து அம்புட்டையும் செய்யறாங்க. நீங்களே சொல்லுங்க ஸார்…” என்று சிரித்தபடி குறை போல் இல்லாது நறுக்கென குட்டிவிட்டார்.
சாமர்த்தியமாக அங்கை எதுவும் சொல்லும்முன் நடந்த விஷயத்தை ப்ரியதர்ஷனுக்கும் புரியும் விதமாகவும், இப்படி பேசிவிட்டார் என்று அவர் பேசிய வார்த்தைகளையும் சேர்த்தே போட்டுடைத்துவிட்டார் சாமந்தி.
இதனை அங்கை எதிர்பார்க்கவே இல்லை. எதையாவது சொல்லி சமாளிப்போமென்று நினைக்க கூட கால அவகாசம் இல்லாமல் போக பதறி நின்றார்.
சாமந்தி சொல்லவும் அங்கையை பார்த்தவன் பார்வை கலாவை எட்டியதும் அவர் தலையை குனிந்தபடி சங்கடத்துடன் நிற்க கண்டான்.
தரணிக்குமே சட்டென விழிகள் கலங்கிவிட்டது. அதுவரை அல்லாமல் முகம் கசங்கி போய் பார்த்தாள் அவனை.
வேறு எந்த வார்த்தைகளும், விளக்கங்களும் தேவை இருக்கவில்லை ப்ரியதர்ஷனுக்கு.
முகிலரசன், ராகவ், நளன் என்று அனைவருமே என்ன பேச்சு இது என்பதை போல அங்கையை பார்த்தனர்.
“ம்மா கிட்சனை விட்டு வெளில வாங்க…” என்றவன், அவரின் கையில் இருந்த மாவை பார்த்துவிட்டு,
“நீங்க கிளம்பி என்னோட ஹாஸ்பிட்டல் வாங்க. நைட் நான் வரும்போது இங்க வரலாம். மத்த எல்லாத்தையும் அத்தையும், தரணியும் பார்த்துப்பாங்க…” என்றவன்,
“சாமந்தி….” என்று சொல்ல,
“நான் வீட்டுக்கு கூட போவலை ஸார். இங்கினவே அடுப்படில படுத்துக்கறேன். இங்கினவே இருந்துக்கறேன். நீங்க சொல்லனுமாங்க ஸார்…” என்று சொல்லிவிட நிம்மதியானது.
அதற்குமேல் அங்கையால் மகனின் பேச்சை மீறி அங்கே இருக்கமுடியவில்லை.
கலாவிற்கும், தரணிக்கும் தான் என்னவோ போலானது. அவர் தான் அப்படி பேசிவிட்டார் என்றால் தானும் பேசியிருக்க கூடாதோ என்று அங்கையின் முகம் பார்க்கையில் வருத்தமாக இருந்தது.
ப்ரியதர்ஷன் வந்தவேலையை முடித்து மருத்துவமனைக்கு தாயை அழைத்து வந்துவிட்டான்.
அங்கையிடம் அதன் சம்பந்தமாக எதுவும் அவன் பேசவும் இல்லை. கேள்வியும் கேட்கவில்லை.
அதுவே இன்னும் அங்கையை பதட்டம் காண செய்தது. மருத்துவமனை வந்த தாயை அமலா வித்தியாசமாய் பார்க்கவில்லை.
“என்னம்மா பேரனை பார்க்காம இருக்க முடியலயா?…” என்று சிரித்தாள்.
அங்கையை விட்டுவிட்டு ப்ரியதர்ஷன் மனைவியை பார்க்க அவந்திகா, குழந்தை இருவருமே உறங்கி இருந்தனர்.
அவர்களை பார்த்துவிட்டு வெளியே இருப்பதாக சொல்லி ப்ரியன் வெளியே செல்லவும், அமலா அங்கையிடம் கூறினாள் தன் தம்பியை பற்றி.
“உன் மகன் என்னமோ பேசறான். இந்த படுவாவும் இப்பவே தகப்பனுக்கு ங்கா போட்டு ராகம் பாடறான் தெரியுமா? பார்க்கவே செம்ம அழகு…” என்றவள் தான் எடுத்த வீடியோவை காண்பித்தாள்.
அவந்திகா சாய்ந்து அமர்ந்திருக்க மறுபக்கம் ப்ரியதர்ஷன் மகனை கையில் வைத்தபடி என்னவோ இதழசைத்தான்.
பேசுகிறான் என்று புரிந்தது. ஆனால் எதுவும் கேட்கவில்லை. ஆனால் அதற்கு ஈடாக குழந்தை கையை, காலை ஆட்டிக்கொண்டு என்னென்னவோ பாஷைகளற்ற ஸ்வரங்களை எழுப்பிக்கொண்டிருந்தான்.
“பாரேன், இவன் இப்பவே எவ்வளோ சவடால்ன்னு? தர்ஷனையே வந்து பாருன்றான். அதுவும் தர்ஷன் முகத்துல எவ்வளோ சிரிப்பும்,சந்தோஷமும்…” என்ற அமலா,
“என்கிட்ட சொன்னான், நான் தான் குழந்தையை முதல்ல கைல வாங்கினேன்னு. சொல்லும் போது நீ பார்க்கலையே. இத்தனை வருஷத்துல அப்படி ஒரு பூரிப்பை நான் அவன் முகத்துல பார்த்ததே இல்லை தெரியுமா?…” என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.
அத்தனையும் காதில் விழுந்தது. ஆனாலும் அங்கையின் பார்வை கையிலிருந்த கைப்பேசியிலும், அதற்கு நேராக உறங்கிக்கொண்டிருந்த மருமகளிடமும் தான் மாறி மாறி பதிந்தது.