“ம்மா, எப்படியும் அவந்தி அங்க வர மூணு மாசமாகிடும். நீங்க பாட்டுக்கு கிளம்பி என் வீடுன்னு அங்க வந்துடாம இங்க இருந்து பேரனோட சந்தோஷமா பொழுதை கழிங்க. வீட்ட யாரும் தூக்கிட்டு போயிடமாட்டாங்க…” என்று வேறு கேலியாய் பேசிக்கொள்ள, அதற்குமே அங்கை முகத்தில் சிறு புன்னகை.
அவந்திகாவையும் பேரனையும் திரும்பி பார்க்க அவளிடமும் அசைவு தெரிந்தது.
“அவந்தி எழுந்துக்கறா…” என்று வேகமாய் அவளிடம் சென்றார் அங்கை.
“என்னம்மா, எதுவும் வேணுமா?…” என்று பரிவாய் அவர் கேட்கவும் அவந்திகாவின் விழிகள் கலங்கியது.
எத்தனை நாட்கள்? பயத்தில் சிலநாள், கோபத்தில் சிலநாள் என்று அவரிடம் அவள் பேச்சை நிறுத்தி இருந்தாள்.
அவர் அழைக்கையில் அவள் எடுக்கவில்லை. அவள் அழைக்கையில் அங்கை பேச மறுத்துவிட்டார்.
இப்போது வந்ததும் தன்னிடம் பேசியதோடு பழைய அங்கையை பார்ப்பதை போலிருந்தது அவந்திகாவிற்கு.
“என் மேல கோவம் எல்லாம் போயிருச்சா த்தை…” என்றாள் அவள் அங்கையின் கையை பிடித்துக்கொண்டு.
அங்கைக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தன்னை அவள் தவிர்த்தாள் என்பது இன்னுமே நீருபூத்த நெருப்பாய் அவரின் நெஞ்சில் இருக்கத்தான் செய்கிறது.
அதனால் அமைதியாக அவர் இருக்க அமலாவிற்கு அங்கையின் அமைதியில் சிறு வருத்தம்.
“அவ தான் கேட்கறா இல்ல? ஏன்ம்மா இப்படி பன்றீங்க?…” என்றாள் அமலா.
“ப்ச், அதெதுக்கு இப்போ? விடு…” என இருவருக்கும் பொதுவாய் கூறினார் அங்கை.
“நீங்க சொல்ற மாதிரி அவங்க ரொம்ப கோவமில்லை. ரொம்பவே பாவம். தனியா இருக்க அவங்களுக்கு பிடிக்கலை. தெரியுமா உங்களுக்கு?…” என்றாள் அங்கையிடம்.
“நீங்க சொல்லுவீங்க, அவங்கட்ட எதுவுமே பேச முடியாது. என்ன கேட்டாலும் வெடுக்குன்னு பதில் வரும். கோபத்துல சட்டுன்னு கை ஓங்கிடுவாங்கன்னு. அப்படியெல்லாம் பண்ணவே இல்லை தெரியுமா? அவங்க ரொம்ப ஸ்வீட். நான் தான் ரொம்ப பயந்தேன்…” என்றவள்,
“ம்ஹூம் நீங்களும் அப்படி நினைச்சுட்டீங்க. ஏன் அத்தை அவங்களை தனியா விட்டீங்க? எங்களோடவாவது வந்திருக்கலாமே? நான் கூப்பிட்டேனே? அவங்களும் எத்தனை சொன்னாங்க. உங்களுக்கு எங்களோட இருக்க இஷ்டமில்லையா த்தை?…” என்று கேட்க கேட்க அங்கையின் மனதில் திடுக்கிடல்.
அதன்பின் வெகுநேரம் அங்கை சொல்லியவற்றை எல்லாம் கூறி அதற்கு காரணம் என்னவென்று நியாயம் செய்து, ப்ரியதர்ஷன் மீதான அங்கையின் புரிதலில் தான் தவறு என்று கூறினாள் அவந்திகா.
அப்போதும் அவளுக்கு அங்கையின் மேல் வருத்தமே தவிர்த்து அவர் வேண்டுமென்றே தன்னை இருக்க வைத்திருப்பார் என்று தெரியவில்லை.
அமலாவும் அவந்திகா சொல்ல சொல்ல கேட்டவள் அங்கையின் முகம் பார்த்தாள்.
“ம்மா,…” என்று என்னவோ ஆரம்பிக்க அதற்குள் குழந்தை சிணுங்க ஆரம்பித்தது.
“அடடா ஈரம் பண்ணிட்டானே…” என அமலா குழந்தைக்கு ஈரத்துணியை மாற்றி அவனை துடைத்துக்கொண்டே,
“அப்படியே பசியாத்திடு அவந்தி…” என்று அவளருகில் படுக்க வைத்தாள் அமலா.
“நான் வெளில இருக்கேன்…” என்று அங்கை எழுந்துகொண்டார்.
அமலா அவந்திகாவிற்கு உதவியாய் அவளை பார்த்துக்கொள்ள அங்கை வெளியே வந்ததுமே திரும்பி பார்த்தான் ப்ரியதர்ஷன்.
போனில் பேசிக்கொண்டிருந்தவன் தாய் முகத்தில் குழப்பமும், வருத்தமுமாய் வந்து நிற்க கண்டு,
“நான் கொஞ்சநேரம் கழிச்சு கூப்பிடறேன்…” என்று கூறி அழைப்பை துண்டித்துவிட்டு எழுந்து வந்தான்.
“என்னம்மா வந்துட்டீங்க?…” என்று ப்ரியன் கேட்க,
“குழந்தை முழிச்சுட்டான்….” என சொல்லவும்,
“அவந்தி முழிச்சாச்சா?…” அங்கே எட்டி பார்த்தவன் மீண்டும் கதவை அடைத்துவிட்டு,
“நீங்க தானே என் அம்மா. ஏன் என்னோட நீங்க சாப்பிட்டதில்லையா என்ன? இன்னும் நீங்களும் காபி குடிக்கலை. நானுமே டீ எடுத்துக்கலை. வாங்க…” என்றான் ப்ரியதர்ஷன்.
பிள்ளைகள் மட்டுமல்லாது, வீட்டினரும் எதுவும் பார்த்துக்கொண்டாலோ, பேசினாலோ கூட அங்கையின் ஆழ்மனதில் சென்று பதிவதில்லை என்பது அவனுக்கு தெரிந்திருக்க நியாயமில்லையே.
அவரின் நினைவுகளும், ஞாபகங்களும் எப்போதோ மரத்துவிட்டிருந்தது. அதனால் பிள்ளைகள் வாஞ்சையுடன் பேசுவதும், கேட்பதும் கூட அந்தந்த நிமிடங்கள், ஒருசில நாட்கள் தான் அவர் மனதில் நிழலாடும்.
“வாங்க…” என்று சொல்லியவன் அவரோடு சேர்ந்தே தான் நடந்தான்.
கீழே செல்லும் வரையிலும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. கேண்டீனில் ஓரிடத்தில் இருக்கையை இழுத்து வைத்து அதில் அவரை அமர சொல்லிவிட்டு,
“உட்கார்ந்திருங்க. நான் வாங்கிட்டு வர்றேன்…” என்று சொல்லி நகரும் அவனை தான் பார்த்துக்கொண்டிருந்தார் அங்கை.
மனதிற்குள் சற்றுமுன் அமலா காண்பித்த அந்த காணொளி தான் படமாய் விரிந்தது.
அதனோடு அவந்திகா பேசியவையும், கேட்டவையும் கூட சேர்ந்தே வலம் வர மனதிற்குள் சுளீரென்று ஒரு தாக்கம்.
“ம்மா…” என்றவனின் சத்தத்தில் தன்னுணர்வு வந்தவர்,
“என்னப்பா?…” என்றார் பாவமாய் மகனிடம்.
“சாப்பிடுங்க. காபி சொல்லிருக்கேன். வந்திரும்…” என்றவன் காண்பித்ததை பார்க்க, அதில் வடையும், மசால் தோசையும் இருந்தது.
“உங்களுக்கு பிடிக்குமே மைசூர் மசால் தோசை. இங்க நல்லா இருக்கும். அவந்தி கூட இங்க வந்து சாப்பிட்டப்போ சொன்னா, உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்ன்னு…” என்றான் அவரிடம்.
சட்டென மனதை பெரும் பாரம் தாக்க, காரணமின்றி கண்ணீர் கரைபுரண்டது அங்கைக்கு.
“பசிக்கலையே தர்ஷன்…” என்றார் மகனிடம்.
“சரி முடிஞ்சளவு சாப்பிடுங்க. முடியலைன்னா விடுங்க…” என்று சொல்ல மறுக்கமுடியாமல் உண்டவருக்கு தொண்டை அடைத்தது.
தன் மகன், மருமகள் எத்தனை தூரம் தன்னை கவனிக்கின்றனர், தான் என்ன செய்கிறேன் என்பதிலேயே அவரின் எண்ணம் சுழல அதற்குள் காபியும், டீயும் வந்துவிட்டது.
அங்கே கூட்டம் பெரிதாய் இல்லை அந்தநேரத்தில். அங்கை நிமிர்ந்து பார்க்காமல் ஏதேதோ நினைப்பில் வேகமாய் உண்டு முடிக்க, அனைத்தையும் காலி செய்த பின்னர் தான் தான் எத்தனை தூரம் பசித்திருக்கிறோம் என்று புரிந்தது.
“காபி எடுத்துக்கோங்க ம்மா…” என்று அதனையும் நகர்த்த,
“ஹ்ம்ம்…” என இடது கையினால் அதனை எடுத்து பருக,
“கை கழுவிட்டு வர்றீங்களா?…” என்றான் அவரிடம்.
என்றோ, எப்போது அவன் தன்னை இப்படி கவனித்த நினைவுகள் உயிர் தட்டி விழிக்க பார்த்தது.
அவர் நினைவில் வைத்துக்கொள்ள நினைப்பவை தாண்டி ஒட்டாத விஷயங்கள் எதுவும் மூளைக்குள் பதியவில்லை.
“என்னம்மா யோசிக்கிறீங்க? இடது கை நடுங்குதே? அதான் சொன்னேன்…” என்றான் மகன்.
“ஹ்ம்ம், எங்க கழுவனும்?…” என்று கேட்டவருக்கு அந்த கேண்டீனின் ஓரத்தில் இருந்த இடத்தை காண்பித்தான்.
அங்கை எழுந்து சென்று கழுவிவிட்டு வந்தவர் காபியை குடித்து முடிக்கும் வரை எதுவும் பேசவில்லை.
“போலாமா?…” என்றவன் மாடிக்கு வரவும் தான் அமலாவுக்கும் அவன் வாங்கி வந்ததையே அங்கை கவனித்தார்.
“அமலா, நான் குழந்தையை பார்த்துக்கறேன். நீ இதை சாப்பிடு…” என்று தன் அக்காவுக்கும் நீட்ட,
“இந்தநேரம் எதுக்கு தர்ஷன் தோசை எல்லாம்?…” என்று கூறினாலும் அதன் வாசத்தில் பசியெடுத்தது.