மீண்டும் மனவுறுத்தல் அங்கைக்கு. தன் பெண் இருப்பதை மறந்து, அவளுக்கும் வாங்க கூறாமல் இருந்தது என்று தன்னை தானே நிந்தித்த அங்கைக்குள் பெரும் போராட்டம் துவங்கியது.
“அடி கிடைக்கும். வேணுமா?…” என்று ப்ரியதர்ஷன் மிரட்டல் போல அவந்திகாவிடம் கண் சிமிட்டி சொல்லவும் அவன் முகபாவனை எதையும் கவனிக்கவில்லை அங்கை.
“அவ இப்ப பச்சை உடம்புக்காரி தர்ஷன். அடிக்கறேன்ற? பெரிய தப்பு….” என்று பதறி இருவருக்கும் இடையில் வேகமாய் புகுந்து நின்றார்.
அங்கையின் உடல் வெளிப்படையாய் நடுங்கியது. மகனின் அத்தனை நேர பேச்சும், பார்வையும், அனுசரணையும் எல்லாவற்றையும் அந்த குரல் விரட்டியடிக்க மகனிடம் பயந்து நின்றார் அவர்.
அவன் பேசியது கிண்டல் மொழி என்பதை கூட பிரித்தறிய முடியவில்லை. அவரின் புத்தியில் உரைத்தது எல்லாம் அவனின் முரட்டு குரலும், அதட்டலும், அடி என்னும் வார்த்தையும் தான்.
“நீ சாப்பிடுக்கா…” என்றவன் அங்கேயே ஒரு இருக்கையில் அமர்ந்துகொண்டான்.
போனில் கவனம் இருந்தாலும் அவ்வப்போது தாயும், மனைவியும் பேசுவதை கவனித்துக்கொண்டும் இருந்தான் ப்ரியதர்ஷன்.
அங்கையின் முகத்தில் அத்தனை சந்தோஷம் அவந்திகாவிடம் பேசும் பொழுதில்.
இது தான் அவனின் கவனத்தை இன்னுமே ஈர்த்தது. விழிகள் இடுங்க கூர்மையான பார்வை.
அவன் என்னவோ நினைத்திருக்க இப்போது அவளிடம் காண்பிக்கும் இந்த முகமும், அதில் தெரியும் அன்பும் பொய்யில்லை.
அதிலும் அவளின் கையை விடவே இல்லை அங்கை. இத்தனைநாட்கள் பேசாததிற்கும் சேர்த்து பேசுவதை போலிருந்தது அங்கையின் பேச்சு.
அமலா உண்டுவிட்டு துளசி என்ன செய்கிறாள் என கேட்க நளனுக்கு அழைக்க அவன் அங்கு நடந்தவற்றை அவன் கூற கேட்டதும் அத்தனை அதிர்வு.
“என்ன இப்படி சொல்றீங்க?…” என்றாள்.
“என்னத்த சொல்ல? நடந்ததை தான் சொல்றேன். உங்கம்மாவுக்கு முடியாதுன்னு தானே கலாம்மா பன்றேன்னு சொன்னாங்க. என்ன வார்த்தை இது? நாட்டாமை பன்றீங்க அது இதுன்னு. இன்னைக்கு தான் இது மகன் வீடுன்னு தெரிஞ்சதா உங்கம்மாவுக்கு?…” என்றவன்,
“இன்னைக்கு இவ்வளோ பேசினவங்க என்ன பண்ணியிருக்கனும்? அவந்திக்கு காய்ச்சல் லேசா விட்டதுமே அப்பவே இங்க கூட்டிட்டு அவங்களும் கூட வந்திருக்கனும். என் வீட்டை விட்டு வரமாட்டேன்னு அதையே கட்டிக்கிட்டு இருந்துட்டு இன்னைக்கு இங்க வந்து உரிமை கொண்டாடறாங்க….” என்று அமலாவிடம் காய்ந்துவிட்டான்.
அமலாவிற்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. நளன் கோபம் அத்தனை அடக்கப்பட்டதாய் இருந்தது.
“அதுவும் அந்த சாமந்தி வந்து இதை சொல்றாங்க. அந்தளவுக்கு அவங்க முன்னாடி இவங்க நடந்தது எவ்வளோ தப்பு?…” என்று வேறு சொல்ல,
“இப்ப கலா த்தை என்ன செய்யறாங்க?…” என்றாள் அமலா.
“உள்ள இருக்காங்க. இரு தர்றேன்…” என்று போனுடன் உள்ளே செல்ல வாங்கி பேசியது தரணி.
“என்ன அமலாக்கா?…” என்று கேட்க,
“அம்மா இப்படி பேசுவாங்கன்னு நான் நினைக்கலை தரணி. தப்பா எடுத்துக்காத. அதான் அத்தைட்ட பேசலாமேன்னு குடுக்க சொன்னேன்…”
“நானுமே கொஞ்சம் பேசிட்டேன். நீங்களே பார்த்துக்கோங்க. இப்படி எங்களுக்கு எல்லாம் வேணும்ன்ற மாதிரி. அதிகாரம் பண்ணிட்டேனோன்னு சங்கடமாகிருச்சு. அண்ணா வந்து கூட்டிட்டு போனதும் தான் அத்தை முகம் பார்க்கவே வருத்தமா போச்சு. ஸாரி. நான் வந்து அத்தைட்ட பேசறேன்…” என்று சொல்ல,
“சரி, நான் அப்பறமா பேசட்டுமா?…” என்று துளசியை பற்றி கேட்டுவிட்டு வைத்துவிட்டாள் அமலா.
தன் தாய் ஆரம்பித்து வைத்ததுதானே? அவர் இப்படி பேசினால் அதற்கு பதில் பேசாமல் இருப்பார்களா என்ன என்று ஏகத்திற்கும் வருத்தம்.
ஆனால் காண்பித்துக்கொள்ளவில்லை. மௌனமாய் உள்ளே வந்து அமர்ந்துகொண்டாள்.
இரவு உணவை எடுத்துக்கொண்டு கலாவோடு தரணியும், ராகவ்வும் மருத்துவமனை வர, வந்ததுமே அங்கையை தனியே அழைத்த கலா,
“மன்னிச்சிடுங்க சம்பந்தி. நானும் தப்பா எதுவும் நினைச்சு சொல்லலை. தரணியும் ஏதோ வேகத்துல பேசிட்டா. ரொம்ப கஷ்டமா போயிருச்சு. நாம எல்லாம் ஒரு குடும்பம். இப்படி மனக்கசப்பு வளர விடவேண்டாம். பாருங்க….” என்று அவரின் கையை பிடித்துக்கொள்ள,
“ஸாரி ம்மா. நீங்க பேசினதும் அத்தை கண் கலங்கி நின்னாங்க. அதான் நானும் பேசிட்டேன். அது உங்க மகன் வீடுன்னா, இது அத்தைக்கு மக வீடு. எல்லாருக்குமானது தானே? அதான் பேசிட்டேன்…” என்று சொல்லிவிட்டு தரணி சென்றுவிட,
“வாங்க சாப்பிடுங்க முதல்ல. எல்லாருக்குமே கொண்டு வந்துட்டேன்…” என்று கலா அழைத்துவர இதனை அமலாவுமே பார்த்திருந்தாள்.
சட்டென சூழ்நிலை இலகுவாகியது. அங்கைக்கு தான் மனது கடினமான இரும்பாகியது.
‘அப்போ நான் தான் தப்பு. நான் செய்யறது தான் தப்பு. ஆமா, என்கிட்ட தான் தப்பு’ இப்படியான எண்ணங்கள் அதிகத்திற்கும் சூழ்ந்தது.
அவர்களின் மன்னிப்புமே அங்கையை இன்னுமே குற்றவுணர்வுக்குள் வெகுவாய் தள்ளிவிட்டது.
இரவு உணவை முடித்துக்கொண்டு ப்ரியதர்ஷன் அவந்திகாவிடம் சொல்லிவிட்டு, மகனை கொஞ்சிவிட்டு அங்கை, ராகவ்வை அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான். வரும் வழியில் ராகவ்விடம்,
“ஹாஸ்பிட்டல்ல பில் பத்தி விசாரிச்சீங்க போல ராகவ்…” என்று காரில் வைத்து கேட்க,
“ஆமா மாப்பிள்ளை. டிஸ்சார்ஜ் பண்ணும்போது நாங்க கட்டனும்ல. இது தாய்வீட்டு முறை தானே?…” என்றான் ராகவ்வும் சங்கடத்துடன்.
“சரி, உங்க விருப்பம்…” என்றவனுக்கு சட்டென பேச மனம் இடம் தரவில்லை.
வீடு வந்தவன் வந்ததுமே மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்துவிட்டு சாமந்தியை தேடி வந்தான்.
“வேலை முடிஞ்சதா சாமந்தி?…” என்று கேட்க பாத்திரம் தேய்த்து முடித்து அடுப்படியை துடைத்து கொண்டிருந்தவர்,
“எல்லா வேலையும் ஆச்சுங்க ஸார்…” என்றார்.
“சரி, அப்போ நீங்க கிளம்புங்க. காலையில வழக்கமான நேரம் வாங்க…” என்றதும்,
“இல்ல ஸார், இங்க ஒத்தாசைக்கு…”
“இப்ப அவசியமில்லை சாமந்தி. காலையில் வாங்க. அதோட இனிமே மதியம் வேலையை முடிச்சிட்டு கிளம்புங்க. திரும்ப சாயந்தரம் ஒருதடவை வந்தா போதும். புரியுதா?…” என்றான் கண்டிப்புடன்.
“சரிங்க ஸார்…” என்று சாமந்தி கிளம்ப,
“ஒரு நிமிஷம், இனிமே இங்க நீங்க இருக்கும் போது என்ன நடந்தாலும், அது என்ன விஷயமா இருந்தாலும் என்கிட்டையோ, இல்லை அவந்திக்கிட்டையோ தனியா சொன்னா போதும். அதுவும் உங்ககிட்ட நாங்க கேட்டா. சொல்லவேண்டிய அவசியம் உங்களுக்கு இருந்தா மட்டும்…” என்று எச்சரிக்க,
“ஸார் நான் அப்படி நினைச்சு…”
“இருங்கம்மா, நீங்க நல்லதுக்கே சொல்லிருந்தாலும் அவங்க என் அம்மா. வீட்டுல நாங்க மட்டுமில்லை. எனக்கு பொண்ணு குடுத்தவங்களும் இருக்காங்க. அவங்கள என் அம்மா பேசியிருந்தாலும், இல்லை என் அம்மாவை அவங்க பேசியிருந்தாலும் நீங்க அதை தனியா தான் சொல்லியிருக்கனும். இது உங்களுக்கு தேவையில்லாத விஷயமும் கூட…”
“குடும்பத்துக்குள்ள ஆயிரம் நடக்கும். நீங்க எங்களுக்கு நிறையவே உறுதுணையா இருந்திருக்கீங்க. இல்லைன்னு சொல்லலை. ஆனா இன்னைக்கு செஞ்சது. ம்ஹூம், அதை நீங்க செஞ்சிருக்கவே கூடாது சாமந்தி. அந்தநேரமே உங்களை சொல்லியிருக்கலாம். சூழ்நிலை சரியில்லை…” என்றான் அவரிடம்.
“ஸார், நான் இத்தனை நாளா உங்ககிட்டையோ, அவந்தியம்மாக்கிட்டையோ கூட எதுவுமே சொன்னதில்லையே. உங்கம்மா இங்க மொதவாட்டி வந்துட்டு போனதுல இருந்து நித்தைக்கும் போனை போட்டு அவந்தியம்மா என்ன செய்யிறாங்கன்னு விசாரிச்சிட்டே இருப்பாங்க. இப்பவரைக்கும் இங்க மூச்சு விட்டதில்ல….” என்றவருக்கு அழுகை வந்துவிட்டது.
“இந்த வீட்டு விசயம் கூட என் கழுத்தறுத்தாலும் யாருக்கும், என் புருஷனுக்கும் நான் சொன்னதில்ல. என்கிட்டையே புரட்டி பேசுவாங்க பெரியம்மா. எங்க இங்கயும் அப்படி நீங்க கேட்டதும் அவங்க மாத்தி பேசி, அது அவந்தியம்மா வீடாளுங்கள நீங்க பேச இடம் குடுத்துருமோன்னு தான் அவசரப்பட்டு பேசிட்டேன்…” என்றவர்,
“தப்புத்தான். இனிமே கவனமா நடந்துக்கறேன் ஸார். மன்னிச்சிக்கிடுங்க…” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார் சாமந்தி.
ப்ரியதர்ஷன் தலைக்குள் அத்தனை ஆயிரம் வண்டுகள் குடைய தொடங்கியது.
கட்டுக்கடங்காமல் கோபம், யாரிடமும் காண்பிக்க முடியாத சூழ்நிலை. இத்தனை தூரம் அவன் தன்னை அடக்கி கொண்டதே இல்லை.
சாமந்தியிடம் அங்கை பேசப்போய் தானே இத்தனை தூரம் சாமந்தியும் குடும்ப விஷயத்தினுள் தலையிடவேண்டியதானது.
இப்படியான யோசனைகள் அவனை அலைகழிக்க உறக்கம் தூர சென்றது. ஒரு அறையில் முகிலரசன் படுத்துக்கொள்ள, அங்கே கீழே மெத்தை விரித்து பிள்ளைகள் இருவரும், அவர்களின் பக்கத்தில் நளனும், ராகவ்வும் படுத்திருந்தனர்.
இன்னொரு அறையில் அங்கை இருக்க வெகுநேரம் நடந்துகொண்டிருந்தவன் மனதினுள் என்னவோ தோன்ற அந்த திறந்திருந்த அறையை இன்னும் நன்றாய் திறக்க அங்கை கட்டிலில் உறங்காமல் அமர்ந்திருந்தார்.