விடிவிளக்கை அணைத்துவிட்டு விளக்கை எரியவிட்ட மகனின் வரவில் அங்கயும் திரும்பி பார்த்தார்.
“தூங்கலையா ம்மா?…” என்றான் ப்ரியன்.
“ஹாங், தூங்கறேன். இப்ப தூங்கிருவேன்…” என்றவர் சட்டென படுத்துக்கொள்ள, மீண்டும் விளக்கை அணைத்துவிட்டு வெளியே வந்தமர்ந்தவன் ஒருமணிநேரம் கழித்து மறுபடியும் எட்டி பார்க்க இப்போதும் அங்கை அமர்ந்திருந்தார்.
அவரை அழைக்க நினைத்தவன் பின் யோசனையுடன் தன்னுடைய போர்வையை எடுத்துக்கொண்டு அங்கை இருந்த அறைக்குள் நுழைய,
“என்னப்பா?…” என்றார் அங்கை.
“எனக்கும் அங்க தூக்கம் வரலை. அதான். நீங்க தூங்குங்க…” என்று சொல்லி கீழே விரித்து படுத்துவிட்டான் ப்ரியதர்ஷன்.
இப்படி செய்வான் என அங்கை எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஒன்றும் சொல்லாமல் படுத்தவருக்கு உறக்கம் எட்டி போனது.
இங்குமங்குமாய் புரண்டு படுத்தவர் ஒருகட்டத்தில் எழுந்து அமர்ந்துவிட்டார். அவரின் அசைவுகள் ஒவ்வொன்றையும் கவனித்த ப்ரியதர்ஷன் தானும் எழுந்துகொண்டான்.
“நீ படுப்பா, நானும்…”
“ம்மா, எனக்குமே தூக்கம் வரலை. கொஞ்சநேரம் பேசிட்டு இருக்கலாம்…” என்று அமர்ந்துவிட என்ன செய்வதென தெரியாமல் விழித்தார் அங்கை.
“என் மகன் எப்படி இருக்கான்?…” என ப்ரியதர்ஷன் கேட்க,
“ஹாங்…” என்று பார்த்தார் அங்கை.
தன்னை விசாரிக்கிறானோ? தன்னிடம் நடந்தவற்றிற்கு விளக்கம் எதிர்பார்க்கிறானோ என்றுதான் யோசித்தார் அங்கை.
“ம்மா, உங்ககிட்ட தான் கேட்டேன்…” என்றதும்,
“ஹ்ம்ம், நல்லா இருக்கான்…” என்றார் அவர் அடுத்து என்ன கேட்பானோ என்பதை போல பார்த்தபடி.
“நல்லாயிருக்கான்னா, என்னை மாதிரியா? இல்லை அவந்தி மாதிரியா?…”
“அமலா சொன்னாளே உன்னை மாதிரின்னு…”
“நீங்க சொல்லுங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பார்வை. இங்க யாருமே இன்னொருத்தர் பார்வையில பார்க்கிறதில்லையே…” என்ற பேச்சே பூடகமாய் தோன்றியது அங்கைக்கு.
“என்கிட்ட…” என அவர் இதனை கேட்பதா வேண்டாமா என்று யோசிக்க,
“என்னம்மா…” என்றான் அவன்.
“ம்ஹூம். ஒன்னுமில்லையே…” என்று உடனடியாக மாற்றிக்கொண்டவர் தானாக எதையும் பேசவேண்டாம் என்று நினைத்துக்கொண்டார்.
“நான் சொல்லவா? குழந்தைக்கு கால் விரல், கை விரல் எல்லாம் உங்களை மாதிரி இருக்கு. எனக்கும் உங்களை மாதிரி தானே நீளமான விரல்கள்….” என்று தன் கைவிரலை நீட்டி காண்பிக்க அங்கை வியந்து பார்த்தார் மகனை.
பார்வை அவன் நீட்டிய விரல்களில் பதிய அதனுடன் தானும் தன் கைகளை விரித்து பார்த்ததும் அவரின் முகத்தில் மெல்லிய புன்னகை.
“ஆமாவா?…” என்றார் அதே சந்தோஷத்துடன்.
இப்படி பிள்ளைகளை அவர் கவனித்து பார்த்ததெல்லாம் கனவை போலிருந்தது அங்கைக்கு.
“என் வீட்டுலையா? ஹ்ம்ம்…” என்று அவர் யோசனையாய் விடையை தேட பார்க்கும் பொழுதே மகனாய் அவன் மொத்தமாய் நொறுங்கியிருந்தான்.
“ம்மா…” என்றவனுக்கு கண்கள் கலங்க,
“தூங்குவேன்னு தான் நினைக்கறேன் தர்ஷா…” என்றார் அவர்.
என்ன பதில் சொல்ல முடியும்? பிள்ளைகளிடம் கூட என் வீடு. அவர் பிடித்து வைத்துக்கொண்டு விடமுடியாது என்னும் அந்த வீடு கூடவா அவருக்கு நிம்மதியான உறக்கத்தை தரவில்லை?
மனமெல்லாம் தீயாய் எரிந்தது. எப்படி இதனை பார்க்காமல், யோசிக்காமல், கவனிக்காமல் போனோம் என தன்னை தானே நிந்தித்துக்கொண்டான்.
சிலநிமிடங்கள் மௌனமாய் கழிய அவன் பேசவில்லை என்றதும் அங்கையுமே அமைதியாகி போனார்.
தானாக அவனிடம் பேச அவர் முன்வரவே இல்லை. நீ ஏன் விழித்திருக்கவேண்டும் என்று உறங்க சொல்லவும் இல்லை.
அவரும் அவனை பார்த்துக்கொண்டே தான் அமர்ந்திருந்தார் இங்குமங்கும் நகராமல்.
“எவ்வளோ நாளா இப்படி தூக்கம் வரலை உங்களுக்கு?…” என்றான் ப்ரியன் தன்னை சுதாரித்துக்கொண்டு.
“தெரியலை…” என்று உடனே அங்கை பதில் சொல்ல நெஞ்சை நீவிக்கொண்டான் ப்ரியதர்ஷன்.
“ம்மா, ஹாஸ்பிட்டல் போவோமா? டாக்டரை பார்த்து…” என்று மகன் முடிக்கும் முன்,
அதன்பின் அங்கை சாதாரணம் போலவே மற்றவர்களுடன் இருந்தாலும், மகனின் பார்வையை அவர் உணர துவங்கினார்.
மருத்துவமனைக்கு அவந்திகாவை, குழந்தையை காண வருகையில் எல்லாம் கவனமாய் ப்ரியனோடு இருக்கும் பொழுதுகளை தவிர்த்தார்.
ராகவ், இல்லை நளன் இருவரோடும் வந்துவிட்டு செல்வது என்று பார்த்துக்கொண்டார் அவர்.
சாமந்தியிடமும் எந்த பாராமுகத்தையும் காண்பிக்கவில்லை. அவ்வப்போது அவரை அதட்டிக்கொண்டு எதையாவது செய்ய, கலா அவரை தனித்து விடாமல், எதை செய்தாலும் அங்கையை கேட்டு செய்வது என பார்த்துக்கொண்டார்.
மருத்துவமனையில் இருந்து குழந்தையோடு அவந்திகா வீடு வந்து சேர்ந்துவிட்டாள்.
அவளிடம் வீட்டில் நடந்த விஷயம் எதையும் யாரும் சொல்லியிருக்கவில்லை. ப்ரியன் அதற்கும் மறுத்திருந்தான்.
“அவ வருத்தப்படுவா. சொல்லாதீங்க…” என அனைவரிடமும் சொல்லிவிட்டான்.
அவந்திகா வீடு வந்த மறுநாளே தரணி, முகிலரசன், ராகவ், நளன் என்று அனைவரும் சென்னை கிளம்பிவிட்டனர்.
கலாவும், அங்கையுடன் அமலாவும் துளசியும் மட்டும் அங்கே தங்கிக்கொண்டனர்.
அங்கைக்கு செல்லவும் முடியாமல், இருக்கவும் முடியாமல் தத்தளிக்க, அவந்திகா தான் சேர்ந்து போகலாம் என்று சொல்லியிருந்தாள்.
அனைவரும் மீண்டும் குழந்தைக்கு முப்பதாம் நாள் பெயர் சூட்டும் விழாவிற்கு வருகை தந்திருக்க ஆத்விக் என்று சூட்டப்பட்டது.
அங்கையிடம் அத்தனை முறை கேட்டவள் அவர் எதுவும் தோன்றவில்லை என்றதும் தானும் ப்ரியதர்ஷனும் சேர்ந்து சில பெயர்களை எழுதி அதில் ஒன்றை தேர்ந்தெடுக்க செய்து பெயர் வைத்தனர்.
வீட்டில் இருக்கும் பொழுதுகள் அனைத்தும் மகனுடன் தான் ப்ரியதர்ஷனுக்கு.
அவந்திகாவிடம் கேட்டு கேட்டு அவனை எப்படி பார்த்துக்கொள்வது என்று கற்றுக்கொண்டான்.
“நானும் சேர்ந்து தானடி பெத்தேன். அப்போ நானும் தெரிஞ்சுக்க வேண்டாமா?…” என்று மகனுக்கான பணிகள் எதையும் அவன் தவறவிட்டதில்லை.
அதில் கலாவிற்கு ஏக பெருமை. பார்த்து பூரித்து தன் கண்ணே பட்டுவிடுமோ என்று அவர்களுக்கு அத்தனை திருஷ்டி கழித்தார் கலா.
“ராகவ்வும் சரி, அவன் அப்பாவும் சரி. இதெல்லாம் நமக்கு வராதுன்னு பிள்ளையை கொஞ்ச மட்டும் தான் செய்வாங்க சம்பந்தி. ஆனா மாப்பிள்ளையை பாருங்களேன். எப்படி கவனிக்கிறாங்கன்னு. அருமையான பிள்ளை உங்க பிள்ளை. என் மக குடுத்து வச்சவ…” என்று சொல்லியே சந்தோஷத்தில் மாய்ந்துபோனார் கலா.
நிகழ்வுகள் ஒவ்வொன்றும் அங்கையின் மனதை வெகுவாய் உருக்கிக்கொண்டிருந்தது.
அங்கிருந்த நேரங்களில் அங்கையை தனியே யாருமே விட்டதில்லை. யாராவது அவரோடு பேசிக்கொண்டும், அருகில் இருந்துகொண்டும் தான் கவனித்தனர்.
ஒருவழியாய் மூன்றாம் மாதம் நிறைவில் அவந்திகாவின் உடல்நிலையும் தேறி இருக்க சென்னை கிளம்பலாம் என்று சொல்லிவிட்டார் மருத்துவர்.
மற்றவர்களை விட அங்கைக்கு அத்தனை சந்தோஷம் அவந்திகா சென்னை வந்து இருக்க போவது.
கிளம்பும் நாள் கலாவிடமும், அழைக்க வந்த முகிலரசனிடமும் சொல்லிவிட்டான் ப்ரியதர்ஷன்.
“பத்துநாள். அதுக்குமேல இருக்க சொல்லாதீங்க…” என்று உறுதியாய் சொல்லிவிட அங்கைக்கு அதில் உடன்பாடில்லை.
ஆனால் அப்போதே ஏன் பேசவேண்டும், அங்கே வரட்டுமென்று நினைத்து மௌனம் காக்க விளைவு விபரீதமானது.
மீண்டும் வரும்பொழுது என்னவானாலும் சரி தன் தாயுடன் தான் என்ற முடிவில் இருந்தான் ப்ரியதர்ஷன்.
தாய் வீடு சென்றவள் திருச்சி திரும்பவேண்டி திட்டமிடப்பட்ட நாளுக்கு இருநாட்களுக்கு முன் புகுந்தவீடு வந்திருக்க அங்கையின் பிடி இறுகியது.
வார்த்தைகள் வலுக்க, ப்ரியதர்ஷன் பொறுமை பறக்க, கோபம், கண் மண் தெரியாத ஆத்திரம், அங்கையின் முழு சிந்தையையும் மழுங்கடிக்க அங்கையின் கையிலிருந்து பறந்த கண்ணாடி குடுவை அவந்திகாவின் நெற்றியை பதம் பார்த்துவிட்டது.