“வேண்டாம்ன்னு விலகறதும் அவங்க தான். வேணும்ன்னு வர்றதும், தன்னை தான் விலகி போனாலும் யாரும் விலக்கி வைக்கக்கூடாதுன்னு அவங்க எதிர்பார்க்கறாங்க. அவங்களுக்குள்ள அவங்களே முரண்பட்டு நிக்கறாங்க…” என்ற அஷ்மிதா,
“உங்கம்மா என் வீடுன்னு சொல்றாங்களே அது ஏன்னு தெரியுமா?…” என்றவள்,
“அந்த வீடு அவங்க வீடு இல்லைன்னு நம்பறாங்க. அந்த வீடும், அதுல இருக்கற நீங்களுமான மனுஷங்களும் அவங்களுக்கு உரிமைப்பட்டது இல்லைன்னு அவங்க மனசுக்குள்ள வலுக்கட்டாயமா திணிக்கப்பட்டிருக்கு….” என்று சொல்ல,
“வாட்?…” என்றான் ப்ரியதர்ஷன் அதிர்வுடன்.
“டாக்டர்…” என்று அஷ்மிதா மணிமேகலையை பார்க்க,
“நீயே பேசு அஷ்மி….” என அவரும் சம்மதமாக சொல்லிவிட்டு ப்ரியதர்ஷனை பார்த்தார்.
அஷ்மிதா அவந்திகாவிடம் அவள் திருமணம் முடிவாகிய பொழுதும், அதன்பின் திருமணம் நடந்து முடிந்த பின்னர் அங்கையுடனான அவளின் உறவை பற்றியுமும் தெளிவாய் கேட்டுக்கொண்டாள்.
“உங்க அம்மாவுக்கு ஏற்பட்டிருக்கற இந்த பாதிப்பு இன்னைக்கு நேத்திக்கு ஆரம்பிச்சது இல்லை. கல்யாணமாகி வர்ற வரைக்கும் அவங்களும் சாதாரணமான வாழ்க்கையை தான் வாழ்ந்திருக்காங்க. ஆனா அதுக்கப்பறம் அவங்க வாழ்க்கைல சந்தோஷம்ன்றது எங்கயுமே இல்லைன்றது தான் உண்மை…”
“டாக்டர், புரியலை. அம்மாவும், அப்பாவும் சந்தோஷமா தான் இருந்தாங்க…” என்றான் ப்ரியன்.
“சந்தோஷம்ன்னா எதை சொல்றீங்க ஸார்? நீங்க ஒரு அசிஸ்டன்ட் கமிஷனர். பலபேரை பார்க்கறவங்க. பார்வையிலையே குற்றவாளி உண்மையை சொல்றானா பொய் சொல்றானான்றதை கேட்ச் பண்ணிடுவீங்க. இப்போ நீங்க உங்களுக்கு ஞாபகத்துல இருக்கிற உங்க அம்மாப்பா வாழ்க்கையை யோசிச்சு பாருங்க…” என்றாள்.
ப்ரியதர்ஷன் முகம் வெகுவாய் கசங்கி கலங்கியது. தாயும், தந்தையும் சேர்ந்து அமர்ந்து பேசி சிரித்து கவனித்திருப்போமா? இல்லையே. அவன் மனம் ஒப்புக்கொண்டது.
படிப்பு, விடுமுறைக்கு வரும் நாட்களில் கூட தகப்பனுடனான பயிற்சிகள், அதன் சம்பந்தமான பேச்சுக்கள், ஓய்வு இப்படித்தான் இருந்தானே தவிர்த்து தானுமே என்ன ஒட்டி வாழ்ந்தோம்?
மனமெல்லாம் ரணமாகும் உணர்வுகள் அவனை நிலைகுலைய செய்தது. வருத்தமாய் நிமிர்ந்து பார்த்தான் அஷ்மிதாவை.
“இதுல உங்க மேல தவறுன்னு சொல்ல முடியாது ஸார். ஆனா எல்லாருமே இதுக்கொரு காரணம்ன்னா உங்களோட அம்மா பெரும் காரணம். அவங்களோட வாழ்க்கையை என்னவோ நினைச்சு வந்து உங்க வீட்டுல பேசறதுக்கும் கூட அனுமதி வேண்டி நிக்க கூடிய சூழ்நிலை. கல்யாணம் பண்ணிட்டு வந்ததே அந்த குடும்பத்தை வழிநடத்த, குழந்தை பெத்து கொடுக்க, புருஷன், மாமியாரை பார்த்துக்க இதுதான்ற மாதிரி அவங்களை வச்சிருக்காங்க…”
“இதை தான் சாப்பிடனும். இப்படித்தான் இருக்கனும். உங்க அக்காவோட, உங்களோடையுமே அவங்களை ரொம்ப ஜெல்லாக விடலை உங்க பாட்டி. அதுக்கு உடந்தை உங்கப்பா. அவங்கம்மா தான் அந்த வீட்டோட ரூலர். அதன்படி தான் உங்கம்மா நடந்துக்கனும்….”
“ரெண்டுவார்த்தை கனிவா பேசாம வீட்டுலையும் உங்கம்மா ஒரு குற்றவாளி மாதிரி, தான் ஒரு போலீஸ்ன்றதை தான் காமிச்சிருக்கார். அந்த வாழ்க்கையே அவங்களுக்கு பெருசுன்ற மாதிரி தாழ்வு மனப்பான்மையை பேச்சோட வளர்த்துவிட்டிருக்காங்க. நினைச்ச இடம், விசேச நாள்ல அவங்களோட அம்மாப்பாவை பார்க்க போகாமன்னு ரொம்பவே கண்ட்ரோல்…”
“உங்களோட வொய்பை அவங்களுக்கு ரொம்ப பிடிச்சு தன்னோடவே வச்சுக்கனும்னு நினைச்சதுக்கும் அதுதான் காரணம். உங்க கல்யாணம், உங்கமேல உங்க மனைவிக்கு இருந்த அதிருப்தியும், பயமும், உங்க கோபமும் அங்கைக்கு அவந்திகாவை பார்த்துக்கனும்ன்ற மாதிரியான மனநிலையை குடுத்திருக்கு…”
“அதுவரை அதுதான் வாழ்க்கை, இது விதின்னு வாழ்ந்தவங்களுக்கு அவந்திகாவோட வரவு அவங்களை வேறொரு உலகத்துக்கு கொண்டுபோயிருக்கு. அவங்களோட நெருக்கம், அவங்களை கேட்டு குழந்தை மாதிரி அவங்க சொல்றதுக்கெல்லாம் தலையாட்டி அவங்களுக்குள்ள சமத்தா இருந்த அந்த குழந்தைத்தன்மை அங்கைக்கு பிடிமானமாகியிருக்கு…”
“திட்டமிட்டபடி நீங்க கல்யாணம் முடிஞ்சு பத்தாவதுநாள் அவந்திகாவை அழைச்சிட்டு போயிருந்தா அது ஒரு சாதாரண மாமியார், மருமகள் உறவா இருந்திருக்கும். ஆனாலும் அவந்திகாவோட வாழ்க்கை உங்களோட எப்படி இருக்குன்னு கவனிச்சுட்டே தான் இருந்திருப்பாங்க அங்கை…”
“இதுல வியக்க கூடிய விஷயம், சிரிப்பா கூட இருக்கும். அது அவந்திகாவை கூட்டிட்டு போன உங்க மேல உங்கம்மாவுக்கு உருவான பொறாமை…” என அஷ்மிதா மெல்லிய சிரிப்புடன் கூற,
“இவங்க அவங்களோட மகன் டாக்டர். அதெப்படி பெத்த பிள்ளைங்க மேல இல்லாத பாசம் என் மேல?…” என்றாள் அவந்திகா அவளிடம்.
“கரெக்ட். ஆனா அவங்க பிள்ளைங்க மேல இருந்த பாசத்தையும் தாண்டி ஒருவித வெறுப்பும் இருந்தது தான் உண்மை….” என்றவள் ப்ரியதர்ஷனை பார்க்க அவன் முகம் இன்னுமே கலங்கியது.
“கேட்க கஷ்டமா தான் இருக்கும். இது எல்லாமே உங்க அம்மா மனசுல இருந்து வந்த வார்த்தை. அதை நீங்க புரிஞ்சுக்கனும். இப்ப அதுதான் முக்கியம். கொஞ்சம் உணர்ச்சிவசப்படாம கேளுங்க…” என்றவள்,
“தன் பேச்சை கேட்காதவங்க மேல எப்பவுமே ஒரு பிடித்தம் குறைவா இருக்கறது சாதாரணமாவே மனுஷங்க இயல்பு. அதேநேரம் தன்னை கவனிச்சு மதிச்சு, பாசம் காமிச்சு, முக்கியத்துவம் குடுக்கறவங்க மேல தன்னையறியாம ஒரு அன்பு ஊறிட்டே இருக்கும். அவங்களை தனக்குன்னு வச்சுக்க பார்ப்பாங்க. அவந்திகாவையும் அப்படித்தான் வச்சிருந்தாங்க….”
“ஒருசிலர் பிடிச்ச விஷயத்துக்காக கஷ்டப்படுவாங்க. ஆனா பிடிக்கவே பிடிக்காதுன்ற ஒருத்தருக்காக எதையுமே செய்ய மனசு விரும்பாது. அப்படித்தான் அங்கைக்கும். அவங்களுக்கு அந்த கட்டுப்பாடு, கணவன், மாமியார் எதுவும் பிடிக்கலை. ஆனா விலக முடியாத சூழ்நிலை. அவங்களோட பலவீனம் பயம்….”
“அவங்களால அந்த விலங்க அறுத்துட்டு வர முடியலை. அந்த கண்ணோட்டத்துல தான் உங்களோட இருக்கறதையும் அவங்க நினைக்கிறாங்க. எங்க திரும்பவும் அந்த வாழ்க்கைக்குள்ள போயிருவோமோன்னு தான் நீங்க கூப்பிட்டப்போ எல்லாம் மறுத்திருக்காங்க. நீங்க அந்த வீட்டுல இருக்கும் போதெல்லாம் எப்போ கிளம்புவீங்கன்றதை உணர்ந்திருக்காங்க…”
“அப்போ என்னை எங்கம்மாவுக்கு பிடிக்காதுன்னு சொல்றீங்களா?…” என்றான் ப்ரியதர்ஷன் மனதை கல்லாக்கிக்கொண்டு உணர்வற்ற பார்வையுடன்.
“நினைச்சா கசப்பு தான். ஆனா அதுதான் நிஜம். நீங்க அவங்க பெத்த மகன்றதை தாண்டி அறவே பிடிக்காத கணவனோட இன்னொரு பிம்பமா பார்க்கறாங்க. அதுவே உங்களை விட்டு விலக செய்யுது. அதேநேரம் பாசமும் இருக்கு. இல்லைன்னு மறுக்க முடியாது. அந்தநேரம் அவங்க ப்ரியதர்ஷன், அமலாவோட அம்மாவா இல்லாம அங்கையா மட்டுமே தன்னை முன்னிலை படுத்த நினைக்காங்க…”
“அவங்க வாழ முடியாத ஒரு வாழ்க்கையை அதேபோல குணாதிசயம் கொண்ட உங்களோட அவந்திகா வாழறாங்க. அந்தநேரங்கள்ல அளவுக்கதிகமான ஏக்கமும், தனக்கு ஏன் அப்படி இல்லைன்ற தாழ்வு மனப்பான்மையும், அவந்திகா எதிர்த்து பேசினப்போ தன்னால அதையும் மீறி தன்னோட மாமியார் மாதிரி அதட்ட முடியலையேன்ற ஆவேசமும், தன் கையை விட்டு போயிடுவாங்களோன்ற பயமும் அவங்களை ரொம்பவே பாதிக்குது…”
“அவங்களுக்கு அந்த அதிகார தோரணை வேணும். அந்த வீட்டுல அவங்க சந்தோஷமா வாழனும். ஆனா அவங்களால அதை காமிக்க முடியலை. அவங்களோட இயல்பும், அவங்களுக்குள்ள அவங்களறியாம உருவான பாதிப்பும் ஒண்ணுக்கொண்ணு ஒத்துபோகலை…”
“அவங்களுக்கு அதிகாரம் பண்ணனும். அவந்திகாவும் தன் கைக்குள்ள இருக்கனும். ஆனா அவங்களால அவந்திகாவுக்கு கெடுதல் பண்ணி அவங்கள காயப்படுத்த முடியலை. அவங்களையும் மீறி அப்படி செய்யும் போது தனக்குள்ள அவங்களோட நிம்மதி இழந்து மனஅமைதி பறிபோய் தப்பு பன்றோம்ன்ற உணர்வு அவங்களை மெல்ல மெல்ல சாகடிக்க தொடங்கிருச்சு…” என்றாள்.
“ஆனா, ஆனா டாக்டர் அம்மா அப்பா இறந்த அப்பாவும் சரி, அதுக்கு முன்னாடியும் சரி ஒரே மாதிரி தான் இருந்தாங்க….”
“அவங்க கடைசி வரை அப்படித்தான் இருந்திருப்பாங்க. ஏனா அவங்களோட உணர்வுகள் எல்லாம் எப்பவோ உயிரில்லாம போயாச்சு. இதுதான் தான் செய்யனும்ன்னு ஒரு இயந்திரமா மாறினவங்க என்ன செஞ்சாலும் அப்படியே தான் இருப்பாங்க. சொல்ல போனா பிள்ளைங்களும் தனக்கு இல்லைன்ற நிலைக்கு அவங்க தள்ளப்பட்டப்பவே அப்படி மாறிட்டாங்க….” என்றாள் அஷ்மிதா.
“அதிகமான சந்தோஷமோ எதுவுமே அவங்களை பாதிக்காது. நீங்களும் சின்ன வயசுல இருந்து அவங்களை அப்படியே பார்த்ததனால அவங்களோட இயல்பு அதுன்னு முடிவுக்கு வந்துட்டீங்க. எல்லாமே வத்திப்போன மனநிலைல இப்படியே வாழ்ந்து முடிக்க இருந்தப்போ அவந்திகா அவங்களோட பாசத்தால, அங்கை என்ன சொன்னலும் நம்பற அப்பாவித்தனத்தால அங்கைக்குள்ள இருந்த உரிமை உணர்வு வெளிவர, அது அங்கையை அவங்களை கெட்டியா பிடிச்சுக்க வச்சிருக்கு….”
“தன்னை போல இன்னொரு அங்கை போல. அவங்களை பத்திரமா பார்த்துக்கனும்ன்னு ஒரு மனசு, தான் இப்போ மாமியார். அது என் வீடுன்ற எண்ணம், அப்படி இந்த மாமியார் ஆளுமைல என்ன ருசி இருக்குன்ற எதிர்பார்ப்பு, இது எல்லாம் அவங்களை முற்றிலும் மாற்றியிருக்கு…”
“அந்தநேரத்துல நீங்க அவந்திகாவை கூட அழைச்சிட்டு போக நினைச்சதும் அவங்களோட அடக்கப்பட்ட கோபம் எல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து இப்ப இந்த லெவல்ல கொண்டுவந்து விட்டிருக்கு. நீங்க என்னதான் இப்பவும் அன்பா பழகினாலும் அந்தநிமிஷம் தாண்டி அடுத்த நாளே அதை அவங்க மறந்திடறாங்க….”
“அவங்களுக்கு கல்யாணமான நாள்ல இருந்தே வாழ்க்கையோட மாற்றத்தால அதை வழக்கமாவே வச்சிருக்காங்க. தனக்கு தேவையில்லாத விஷயத்தை எல்லாம் தன் ஞாபகத்துல இருந்து மறக்க நினைச்சு இப்ப அதுவே அவங்களுக்கு பழக்கமாகிடுச்சு…”
“அவங்களுக்கு அன்பும், அருகாமையும் தேவைப்படும் போது கணவனோ, இன்னொரு தாயான மாமியாரோ, ஏன் பெத்த பிள்ளைங்க கூட அதை குடுக்கலை. இதுல உங்க தப்புன்னு எதுவுமே இல்லை. இது நார்மலைஸாகிருச்சு….”
“சிலர் இதைவிட்டு மீண்டு அதுக்குள்ளவே முடங்கி இருக்காம பிள்ளைங்க கிட்டயாச்சும் தன் மனசை திசை திருப்புவாங்க. ஆனா அங்கையோட இயலாமையும், வெளிப்படுத்த முடியாத கோபமும் வெறுப்பா மாறி அந்த வெறுப்போட நிழல் உங்க மேலையும் படர்ந்திருச்சு. அவங்களை அறியாமையே அவங்களை தண்டிச்சிக்கிட்டாங்க…” என்றாள் அஷ்மிதா.
“ஒருவேளை நீங்க ஹாஸ்ட்டல்ல வளராம வீட்டுல இருந்திருந்தா அந்த சூழ்நிலை மாறி, அங்கை நல்லபடியா இருந்திருப்பாங்களோ என்னவோ? ஆனா அப்படி எதுவுமே ஆகலை…” என்றதும் ப்ரியன் விழிகள் கலங்கியது.
“மிஸ்டர் ப்ரியதர்ஷன், அங்கை மாதிரி சூழ்நிலையை பெரும்பாலான பெண்கள் கடந்து தான் வருவாங்க. நிறையப்பேர் அதனை கையாள தெரிஞ்சு அந்த சுழல்ல இருந்து விடுபடறாங்க. ஆனா உங்கம்மா சுயபட்சாதாபத்துக்குள்ளயே இருந்து அதை தாண்ட விரும்பாம இருந்துட்டாங்க. நீங்க இதை கில்ட்டா எடுத்துக்க வேண்டாம்…” என்ற மணிமேகலை,
“இப்பவுமே அவங்க அவங்களுக்கு எதுவும் இல்லை. அதிகபட்ச கோபம் தான் அப்படி பண்ணிட்டோம்ன்னு நினைக்கறாங்க. அவங்களால அவங்க நிலைமையை உணர முடியலை. இப்போ அவங்க உடல்நிலையும் அதுக்கொரு காரணமாகிடுச்சு….”
“வெளிப்படையா பேச மனுஷங்க இல்லாம அவங்களுக்குள்ளவே இருந்து பழகிட்டாங்க. பேச உறவுகள் கிடைச்ச போதும் அவங்க விலகி இதுதான் இப்படித்தான் நாம இருக்கனும்ன்னு அவங்களை அவங்களே தனிமை படுத்திக்கிட்டாங்க. அந்த தனிமை அவங்களுக்கு வேணும்ன்றப்போ வரமாவும், வேண்டாம்ன்றப்போ கோபமாவும் மாறிடுது…” என்றார் அவனிடம்.
“ஷார்ட்டா சொல்லனும்ன்னா அடிமையா இருந்த அவங்களுக்கு அவந்திகா அன்பா, அடிபணியற ஆளா கிடைச்சதும் தனக்குன்னு தக்க வச்சிட்டாங்க. வீட்டோட அதிகாரத்தை விட்டுக்கொடுக்க மனசில்லை. அதனால அக்கறைன்னு அவங்களை ஒட்டவிடாம வச்சாச்சு. எங்க விட்டா அவந்திகாவும் உரிமைன்னு அதிகாரம் செஞ்சு இவங்களை அடக்குவாங்களோனு ஒரு பயம்…”
“ஒரு கூட்டுக்குள்ள மடிஞ்சே இருந்தவங்க, தனக்குன்னு ஒரு ஆள் சிக்கவும், பிள்ளைகள்கிட்ட கூட காமிக்க முடியாத அடக்குமுறையை அன்புன்ற பேர்ல அவந்திகாட்ட காமிச்சு அதுமூலமா சின்ன சந்தோஷத்தை அனுபவிச்சாங்க. அது அவங்களுக்கு பிடிச்சும் இருந்தது. அதை பறிக்க நீங்க செஞ்ச முயற்சியால வெடிச்சிட்டாங்க. இதுதான் ஓவர் ஆல்…” என்றாள் அஷ்மிதா.
“நீங்க சந்தோஷமா வாழ கூடாதுன்னு அவங்க நினைக்கலை. பிள்ளைங்களை பிடிச்சு தனக்குன்னு அவங்க வச்சிருந்தாங்கன்னா அந்த முயற்சியே அங்கையை இப்படி ஒரு மனநிலை பாதிப்புக்கு ஆளாக்கி இருக்காது. அவங்க பயத்தால அதையுமே முயற்சி செய்யலை. எங்க புருஷனோட கோபத்துக்கு ஆளாவோமோன்னு அவங்க விலகியே இருந்துட்டாங்க…”