“ஹ்ம்ம் புரியுது டாக்டர். தேங்க் யூ…” என்று சொல்லி வெளியே வந்தான் ப்ரியதர்ஷன்.
“வெல்செட் அஷ்மி. ரொம்பவே சந்தோஷம். நீ இதை ஒரு கோர்ஸாவே எடுக்கலாம். அட்லீஸ்ட் மந்த்லி ஒன்ஸ் நீ இங்க விசிட் பண்ணியே ஆகனும். இட்ஸ் மை ஆடர்…” என்றார் மணிமேகலை அஷ்மிதாவிடம்.
“அஷ்மிக்கு டிமாண்ட் கூடிட்டே போகுதே….” என்று அவரின் கையை பிடித்து குலுக்கிவிட்டு,
“இப்பவாவது கிளம்புவோமா? ஹஸ் வந்திருவார். என் பையன் வேற அதி வீட்டுல இருக்கான். பிக்கப் பண்ணனும் அவனையும். கிளம்புவோமா?…” என்றபடி அஷ்மிதா அங்கிருந்து புறப்பட்டாள்.
வெளியே அமலா நளனுடன் அழுதபடி நிற்க இவர்களை கண்டதுமே ஓடி வந்தவள் அவந்திகாவின் கையை பிடித்து,
“என்ன சொன்னாங்க அவந்தி? அம்மா இப்ப எப்படி இருக்காங்களாம்?…” என்று கேட்க,
“அவந்தி நீ முதல்ல பிள்ளைக்கு பசியாத்து. எவ்வளோ நேரமாகிடுச்சு…” என்ற ப்ரியதர்ஷன்,
“உனக்கு நான் சொல்றேன்…” என்றான் அமலாவிடம்.
“இதுக்குத்தான் நானே வர்றேன்னு சொன்னேன். இவர் கேட்டாரா?…” என்று நளனை சாடினாள் அமலா.
அவன் ஒன்றும் பேசவில்லை. அமைதியாய் நின்றிருந்தான். அமலாவை உள்ளே அனுப்பி இருந்தால் நிச்சயம் முழுமையாய் ப்ரியதர்ஷனால் எதையும் கேட்டிருக்கவும், பேசியிருக்கவும் முடியாது.
அதற்கென்றே அவன் அமலாவை அனுப்பவில்லை. அவர்கள் இருவர் மட்டும் கேட்டுவிட்டு வரட்டும் என்று சொல்லிவிட்டான்.
அங்கேயே ஒரு அறையை கேட்டிருக்க அதில் அவந்திகா பிள்ளையுடன் நுழைய தரணியும் உள்ளே உடன் சென்றாள்.
“நீங்க போய் பேசிட்டு வாங்க. அத்தை தூங்கறாங்கலாம். நான் இங்க வெய்ட் பன்றேன்…” என்றான் ராகவ்.
அதன்பின்னர் அரைமணிநேரம் கழித்து அவந்திகா இருந்த அறைக்குள் ப்ரியதர்ஷன் வர, பின்னோடு அமலாவும், நளனும் வந்தனர்.
அங்கிருந்த கட்டிலில் குழந்தை உறங்கியிருந்தான். தரணி ஒருபுறம் நிற்க ப்ரியதர்ஷன் குழந்தையின் அருகில் அமர்ந்தான்.
“அத்தையை பார்த்தீங்களா? எழுந்துட்டாங்களா?…” என கேட்க,
“ஹ்ம்ம், பார்த்தாங்க. ஆனா பேசலை…” என்று சொல்ல அமலா இன்னுமே அழுதுகொண்டே தான் இருந்தாள்.
“நானும் அம்மாவை கவனிக்கலை. என் மேல எவ்வளோ தப்பு. நானும் விட்டுட்டேன்…” என்று அவள் ஒருபுறம் அரற்றிக்கொண்டிருந்தாள்.
“யார் நினைச்சா இப்படி ஒரு முகமும், வலியும் அங்கையம்மாக்கு இருக்கும்ன்னு. நீங்க என்ன பண்ணுவீங்க?…” என்றாள் தரணி.
அவளுக்குமே வேதனை தான். இப்படி அங்கையை பார்க்கவே வருத்தமாய் இருந்தது.
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியிருந்த அங்கையின் உடல்நிலை இன்னுமே மோசம்.
வெறும் கூடு தான் என்பதை போல உடலில் சதைபற்றே இல்லை என்பதை போலாகிவிட்டார். தனக்குள்ளே இன்னுமே மருகிக்கொண்டிருந்தார்.
இப்போதும் மகன் மருமகளிடம் சாதாரணமாக பேசினால் கூட அங்கையின் விழிகள் அந்த வலியை பிரதிபலித்தது.
அதற்கு முன்பு அந்த பார்வைக்கு அர்த்தம் தெரியவில்லை. ஆனால் இப்போது விளங்கியது.
தாங்கள் இருக்கிறோம் என்று ப்ரியனும், அமலாவும் அவரை அரவணைத்தாலும் அவரின் பார்வை அவந்திகாவை தான் தேடியது.
அவளின் அருகாமை ஒன்று அவரின் முகத்தில் புன்னகையை உயிர்ப்பிக்கும். இப்போது பேச்சுக்கள் அறவே இல்லை அங்கையிடம்.
தான் செய்த செயலும், அவரை பற்றிய விஷயங்களும் பிள்ளைகளுக்கு தெரிந்துவிட்டதென்பதே அவரை குற்றுயிராக்கியது.
அவர் விரும்பியவிதமாய் அவரை முன்னிலைப்படுத்தி, முக்கியத்துவம் தந்து முன்னிறுத்தும் பொழுதுகள் எல்லாம் அவரை கொல்லாமல் கொல்ல ஆரம்பித்தது.
இப்போதும் அவர் தனக்குள்ளேயே யோசித்து, களைத்து, தண்டித்து ஒருகட்டத்தில் உறக்கத்திலேயே உயிர்விட்டும் போனார்.
“அவங்க மனசளவுல ரொம்பவே உடைஞ்சுட்டாங்க. இனிமே வாழற நாட்கள் அவங்களுக்கு அவங்களே தண்டனை குடுத்துக்கற மாதிரி தான். சந்தோஷமா பார்த்துக்கோங்க…” என்று அவரை காண வந்த மணிமேகலை சொல்லி சென்றது தான் ஞாபகம் வந்தது.
அங்கைக்கு மாரடைப்பு வந்து மூன்றுமாதங்கள் வரை உயிரை கையில் பிடித்துக்கொண்டு பிள்ளைகளை பார்த்து குற்றவுணர்வுடன் அந்த சந்தோஷத்தையும் ஏற்கவும், அனுபவிக்கவும் முடியாமல் உறக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்திருந்தது.
இதோ முப்பதாம் நாள் காரியம் நடந்து முடிந்து வந்திருந்தவர்கள் அனைவரும் கிளம்பியிருக்க அங்கையின் அறையில் கண் மூடி அமர்ந்திருந்தான் ப்ரியதர்ஷன்.
தாய்க்காகவே அவர் அவரின் வீட்டிலேயே இருப்பதற்காகவே சென்னைக்கு மாற்றுதல் வாங்கிக்கொண்டு வந்துவிட்டவனோடு அப்போதும் அங்கையால் ஒன்ற முடியவில்லை.
தன்னை விட்டு தூர செல்லும் தாயை காணுகையில் இன்னுமே மனதளவில் நலிந்துவிட்டான் ப்ரியன்.
‘எதுக்குமே நீங்க காரணமில்லை. ஆனா உங்களுக்கே தெரியாம நீங்களுமே ஒருவிதத்துல காரணமாக்கபட்டிருக்கீங்க’ என்று அஷ்மிதா அன்று சொல்லிய வார்த்தைகள் இப்போதும் அவனின் காதில் ஒலித்தது.
“வளர்ற நிறைய பசங்களுக்கு அம்மா தானே, அம்மா நம்மளை பார்த்துப்பாங்க, அப்படின்ற மென்டாலிட்டில இருந்திடறாங்க. எத்தனை வயசானாலும் அவங்களும் மனுஷி தான். அனுபவம் இருந்தாலும் அவங்களுக்குள்ளையும் ஆசைகள், ஏக்கங்கள் இருக்கும். அதை யாருமே கவனிக்கறதில்லை….”
“அம்மான்னா எல்லாத்திலையும் பாசம் காமிக்கிறதும், சகிக்கிறதும், சமாளிக்கிறதும், விட்டுக்குடுக்கறதும், வேலை பார்க்கிறதும், இப்படியான கவனிப்புகள் மட்டும் தான்னு நினைக்கிறவங்களுக்கு அங்கை நிலைமை மிகப்பெரிய பாடம். எல்லாருமே வாழ்க்கையை வாழ தான் பிறந்திருக்காங்க. கல்யாணம் ஆகிட்டாலே அவங்க தலையில மிகப்பெரிய பொறுப்பை சுமத்திடறாங்க. பொறுப்பு எல்லாருக்குமே பொதுவானது. பொண்ணுங்க தான் குடும்பத்தை கட்டி காப்பாத்தனும்ன்ற எண்ணம். அவங்க தியாகிகளா என்ன?…”
“வீட்டுக்கு வாழ வந்தவ தானே, வீட்டோட சும்மா இருக்கறவ தானேன்னு ஆரம்பிக்கிற அந்த அலட்சியம். அதை தெரிஞ்சு செஞ்சாலும் செய்யலைன்னாலும் மிகப்பெரிய தவறு தான். உயிரை கொல்லுறதை விட உயிரோட விட்டு அவங்க உணர்வை பொசுக்குறது ரணம்…”
“உங்க அப்பா மாதிரி ஆம்பளைங்களுக்கு பிள்ளைங்க சரியா படிக்கலைன்னாலும் அம்மா தான் காரணம். பிள்ளைங்க தப்பு பண்ணினாலும் அம்மா தான் காரணம். வெளில பிரச்சனை, மனவுளைச்சல், கோபம், சண்டைன்னாலும் வீட்டுல இருக்கற அந்த மனுஷி தான் காரணம். எல்லாத்துக்கும் வடிகாலா அந்த மனுஷிட்ட தன்னோட ஆத்திரத்தை கொட்டி வார்த்தையால கொன்னுட்டு, ஈஸியா சொல்லிடறாங்க வீட்டுல தான இருக்கன்னு…”
“வெட்கப்படனும் இந்தமாதிரி சொல்றவங்க எல்லாரும். சின்ன சண்டையையும், கோபத்தையும், மனவுளைச்சலையும் தாங்கிக்க முடியாம வந்து அவங்க ஆவேசத்தை இறக்கிவச்சு வசைபாடி ஆதங்கத்தை தீர்த்துக்க கூட அவங்களுக்கு வீட்டுல இருக்கற அந்த மனுஷி தான் தேவைப்படுது. ஆனா சும்மா இருக்காங்களாம்…”
“வெளில சமாளிக்கமுடியாத விஷயத்தை வீட்டுக்கு கொண்டுட்டு வர்ற ஒவ்வொரு ஆம்பளைங்களோட இயலாமைக்கும் பலியாகற அந்த பொண்ணுங்க தான் இரும்பு மனுஷியா இருந்து அவங்க ஒட்டுமொத்த இயலாமையையும் தனக்குள்ள தாங்கி ஒளிச்சு வச்சு சுமக்கறாங்க. அப்போ இங்க குடும்பத்தை தாங்கறது யாராம்? சம்பாதிச்சிட்டு வந்து குடும்பத்தலைவன்னு சொல்லிட்டா ஆச்சா? இதுல பெருமை வேற…”
“உங்கப்பா அப்படி தான் வாழ்ந்திருக்காங்க. உங்க பாட்டி இந்த குடும்பத்துக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லைன்ற மாதிரியே உரிமை இல்லாம பேசி உங்கம்மா மனசுக்குள்ள சொந்த உறவுகள்கிட்ட கூட பிடிப்பு இல்லாம வாழ வச்சிருக்காங்க. அதுக்கு உங்களையே அறியாம உடன்பட்டுருக்கீங்க…”
“இனிமே வளர்க்கற பிள்ளைங்கட்ட சொல்லி வளர்க்கனும். வெளில இருந்து வீட்டுக்கு சாப்பிட வாங்கிட்டு வர்ற பண்டத்துல கூட எல்லாருக்கும் சரிசமமா வாங்கிட்டு வந்தா பத்தாது. அம்மாவுக்கான பங்கு எப்பவும் அம்மாவுக்குன்னு சொல்லுங்க. எல்லாரையும் அவங்கவங்க பிறப்புக்கான வாழ்க்கையை வாழ விட்டாலே போதும். அங்கைகள் உருவாக்கப்படமாட்டாங்க….”
“இங்க யாரும் யாருக்கும் அடிமை கிடையாது. ஒவ்வொரு பிறப்புக்கும் அர்த்தமிருக்கு. அவங்களுக்குள்ள மனுஷ தன்மையோட, ஆசாபாசங்களும் இருக்கும். இப்படியெல்லாம் வாழனும்ன்ற விருப்பங்களும் இருக்கும்….”
“ஒரு விசேஷமா, தீபாவளியா என்ன நினைக்கறோம்? எழுந்து குளிச்சு சாமி கும்பிட்டு தயாரா வந்து உக்கார்ந்துட்டு அம்மா சாப்பாடு ரெடியான்னு கேட்கிறது. இதென்ன இத்தனை காரம், இவ்வளவு தானா? வேற இல்லையா? இப்படி பிள்ளைங்க அம்மா எல்லாம் இதுக்காகவே படைக்கப்பட்டவங்கன்னு நினைக்கிறதுக்கு வீட்டுல பெரியவங்களான அப்பா, பாட்டி, தாத்தா எல்லாம் காரணமாகறாங்க….”
“அம்மாக்கள் பிடிச்சே அதை செஞ்சாலும் அதுவும் ஒருவித நிர்பந்தம் தான். எழுந்ததுல இருந்து சமைக்க, சாப்பிட வைக்க, அதை சுத்தம் செய்ய, அடுத்த வேளைக்கு பார்க்க, இப்படித்தான் அவங்களோட விசேஷ நாள் போயிடுது. சந்தோஷமா தான் அவங்களும் செய்யறாங்க. அவங்களுக்கு என்ன சந்தோஷத்தை குடுக்குது இந்த குடும்ப அமைப்பு?…”
“அம்மாவுக்கு உதவி செய்ன்னு எத்தனை அப்பாக்கள் சொல்லிடறாங்க? ஏன் இவ்வளோ பன்ற? கொஞ்சநேரம் உக்காருன்னு சொல்லி எத்தனை கணவன்கள் அவங்க மனைவியோட விசேஷ நாளை சேர்ந்து கொண்டாடறாங்க. இல்லை நானும் உதவறேன்னு யார் முன் வருவாங்க?…”
“வாழ்க்கை ஒரு சக்கரத்துல ஓடற வண்டி இல்லை. இதுல சிலருக்கு விதிவிலக்காவும் இருக்கலாம். துணையை பொருத்து அவங்களோட வாழ்க்கையும் மாறுபடும். ஆனா மாற்றம் இருக்கக்கூடிய இடத்தை மொத்தமா மாறிட கூடாதுன்னு மாறவிடாம ஆக்கிடறது நியாயம் இல்லையே?…”
“இந்த வீட்டுக்கும் உனக்கும் சம்பந்தமில்லை. என் வீடு. எனக்கடுத்து என் பேரப்பிள்ளைகளுக்குன்னு வார்த்தையால சொல்லி, அதை செயல்ல காமிச்சிருக்காங்க. உங்க பாட்டியோட வீடு. அவங்களுக்கு அடுத்து உங்களை தான் சேரனும்ன்னு. இது நடக்கறது தான். ஆனா அதையும் சொல்லி காமிச்சு சந்தோஷப்பட்டுக்கற அந்த குரூரம் எந்தவிதத்துல சரி. எல்லாத்துக்கும் அங்கை வேணும். ஆனா அங்கைக்கு அங்க எதுவுமில்லை….”