“சொல்லுங்க அமலா, ஏதாவது தெரிஞ்சிருக்கா?…” மீண்டும் அஷ்மிதா கேட்க,
“ம்ஹூம், இல்லை. எப்பவும் ஒரேமாதிரி தான் இருப்பாங்க. அளவா சிரிப்பாங்க. அளவா பேசுவாங்க. எப்பவாச்சும் கூட கொஞ்சநேரம் பேசினாங்கன்னா உடனே அமைதியாகிடுவாங்க…” என்று அமலா சொல்ல ப்ரியதர்ஷன் தலையசைத்தான்.
“ஹ்ம்ம், இவ்வளோ தான். நீங்க பார்த்தது எல்லாம் உங்கம்மாவோட ஒரே முகத்தை தான். அப்படி இருக்கும்போது உங்க கவனத்துக்கே வராத விஷயத்துக்கு நீங்க எப்படி பொறுப்பாக முடியும்? கண்ணுக்கு புலப்படாத விஷயங்கள் எல்லாமே தெரிய வர நாம ஒன்னும் மந்திரவாதி இல்லையே….” என்றாள் அவள் சிரிப்புடன்.
“அப்போ அம்மா…” என அமலா கேட்க ஆரம்பிக்க,
“அம்மா அம்மா தான். அவங்க எப்பவும் உங்களோட இருப்பாங்க தான். நீங்களும் ஒரு அம்மா தான். உங்க பொண்ணுக்கு அவங்க எப்படி இருக்கனும்ன்னு சொல்லிக்குடுங்க. அங்கையா இருந்தாலும் தைரியம் வேணும்ன்னு சொல்லி வளருங்க….” என்றவள்,
“மாற்றம் நம்மக்கிட்ட இருந்து தான் வரனும். இதையே யோசிச்சு குழம்பி நீங்களும் உங்களுக்குள்ள முடங்கிடக்கூடாது. உங்க பொண்ணுக்கு சொல்ல நீங்க சரியா இருக்கனும். தெளிவாவும் இருக்கனும். மனசு சஞ்சலமா இருந்தா தெளிவான சிந்தனை கூட சரியில்லையோன்னு தோணும்…” என்றாள் அஷ்மிதா.
“தேங்க் யூ டாக்டர். அக்காவுக்கு எல்லாம் புரிஞ்சிருக்கும்….” என்ற ப்ரியதர்ஷன்,
“இது எனக்காக நான் உங்களுக்கு சொல்ற நன்றி. தேங்க் யூ சோ மச்…” என்று சொல்ல, நளனும் நன்றி சொல்லி விடைபெற்றான்.
அவர்கள் பேசி முடித்து கிளம்பவும் மணிமேகலை அஷ்மிதாவை பார்த்து புன்னகைக்க,
“எவ்வளோ சீரியஸா பேசறேன் நான். சிரிக்கறீங்க நீங்க. இந்த ஹஸ் கூட சேர்ந்து என் பையனும் இங்க ஒரே சிரிப்பு. அஷ்மி பத்தி இன்னும் எல்லாரும் தெரிஞ்சுக்கவேண்டியது நிறைய இருக்கு. பி கேர்ஃபுல்…” என்றாள் அஷ்மிதா குறும்பாய் புன்னகைத்து கண் சிமிட்டி.
“ஹ்ம்ம், அஷ்மிதா எப்பவும் அஷ்மிதா தானே. ஓகேம்மா, தேங்க் யூ சொன்னாலும் பேசுவ. இருந்தாலும் சொல்றேன். தேங்க்ஸ் அன்ட் பை அஷ்மி…” என்று கூறி விடைபெற்றார் மணிமேகலை.
மருத்துவமனையிலிருந்து வெளிவந்த அமலாவின் முகமாற்றத்தை பார்த்தபடி தான் இருந்தான் நளன்.
“இப்போ நீ ஓகே தானே?…” என்று கேட்க,
“ஹ்ம்ம், ஆமா…” என்றவள் முன்பை போல இல்லாது ஓரளவு கலக்கமின்றி பார்த்தாள்.
“சரி நீ தூங்கு…” என்று சொல்லியவன் ப்ரியதர்ஷனை பார்க்க,
“ஒரேநாள்ல எல்லாம் மாறிடாது. கொஞ்சம் கொஞ்சமா மீண்டு வந்திருவாங்க…” என்றான் நம்பிக்கையுடன்.
“ஆமா மச்சான், இத்தனை நாள் நாம சொல்லி புரியாதது இனிமே அவளே யோசிப்பா. சரியாகிடும்…” என்றான் நளனும் நிம்மதியாய்.
அதன்பின் அமலாவிடம் கொஞ்சம் கொஞ்சமாய் பழைய புன்னகை மீள ஆரம்பித்தது.
அனைவரும் நல்லவிதமாய் பார்த்துக்கொள்ள குழந்தைகளுக்காக என்று அமலாவும் தன்னை இன்னும் சரிசெய்துகொண்டாள்.
மகளுக்கு அஷ்மிதா சொல்லியதை போல தைரியத்தை சொல்லி வளர்க்க, ப்ரியனிடம் நின்று பேச ஆரம்பித்தாள் துளசி.
அதுவே அவளை பொறுத்தவரை மிகப்பெரிய மாற்றம் தான். அங்கை அவர்களோடு இன்னும் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்.
மறைமுகமாய் வலியாக இருந்தாலும், எதிர்காலத்தின் வழிகாட்டி போல அவரை சேர்ந்தவர்களுக்கு வெளிச்சமாய் இருப்பதாய் நினைத்தனர்.
————————————————-
சிலவருடங்களுக்கு பின்….
வீட்டில் வண்ண தாள்களால் தோரணங்கள் தொங்கிக்கொண்டிருக்க நேரம் அந்தி மாலையாகி இருந்தது.
வாசலில் வாகனம் வந்து நின்றதுமே உள்ளிருந்து பட்டாசை போல வேகமாய் கிளம்பி வெளியே ஓடி வந்த குழந்தை,
“அப்பா…” என்று சத்தத்துடன் வாகனத்தை தாண்ட,
“பாப்பா பார்த்து போ…” என பின்னே ஓடி வந்தான் ஆத்விக்.
“அனன்யா நில்லு…” என்று அவந்திகாவும் உள்ளிருந்து மகளை பிடிக்க வர அதற்குள் மகளை கையில் தூக்கிக்கொண்டான் ப்ரியன்.
“அப்பா…” என கழுத்தை கட்டிக்கொண்ட பிள்ளை அவனின் கன்னத்தில் முத்தமிட,
“இவளை…” என்று முறைப்புடன் வந்தாள் அவந்திகா.
“என்ன ஒரு ஓட்டம்? கொஞ்சமாவது அடங்கறாளா…” என்று வந்ததும் மகளின் முதுகில் வலிக்காமல் ஒரு அடி வைக்க,
“உன் பேச்சு கா…” என்றாள் குழந்தை.
“அனன்யா…” என ப்ரியன் அழைத்ததுமே பிள்ளைக்கு புரிந்தது.
“ஸாரி மம்மி…” என்று தாயை பார்த்து சொல்லிவிட்டு,
“இப்ப பாருங்கப்பா…” என்று தகப்பனின் நாடியை பிடித்து கான்பித்தவள்,
“உங்க பேச்சு கா மம்மி…” என சொல்லிவிட்டு தன் இரு கட்டை விரல்களையும் தகப்பனிடம் காண்பித்து,
“ஓகே வா. பாப்பா குட். பாப்பா சொல்லுங்க…” என்றாள் குழந்தை பாவனையுடன்.
இரண்டு கால்கள் கொண்ட தேவதையாய் தன் பின்னோடே வந்த சிறுபிள்ளையை புன்னகையுடனே பார்த்தபடி தனக்கு மாற்று உடையை எடுத்தான் ப்ரியன்.
அதற்குள் அவனுக்கு தண்ணீரில் இருந்து, என்னென்ன வேண்டுமோ எல்லாம் தானும் கவனிக்க,
“தேங்க் யூ குட்டிம்மா…” என்று பிள்ளையை தூக்கி பிடித்து கொஞ்சியவன்,
“அம்மா என்ன பண்ணிட்டிருந்தாங்க இன்னைக்கு? ரொம்ப வேலையாமா? பாப்பா அம்மாக்கு என்ன ஹெல்ப் பண்ணுனீங்க?…” என்று பேசிக்கொண்டே கிளம்பி வெளியே வர அன்றைக்கு என்னன்னா நடந்ததோ எல்லாம் அவனிடம் பட்டியலிட்டபடி வந்தாள் குழந்தை.
குழந்தைகளிடம் அவர்களின் முன்னிலையில் அவந்திகாவை சொல்லி பேசுவதை கூட மரியாதையாக மாற்றியிருந்தான் ப்ரியன்.
“ஒப்பிச்சாச்சா? இப்ப பங்க்ஷன் ஆரம்பிப்போமா?…” என ராகவ் கேட்கவும் ப்ரியனுடன் வந்தவள் தாயையும் தன்னருகில் நிறுத்திக்கொண்டு துளசி, ஆத்விக், நிலவன் என்று ஒருவரையும் விடாமல் அனைவரையும் பார்த்த பின்னர் தான் கேக் வெட்டினாள் அனன்யா.
அங்கையின் வாழ்வு மற்றவர்களுக்கு எப்படியோ, அவரின் சந்ததிக்கு பெரும் பாடமாய் அமைந்திருந்தது.
முதலில் தாங்கள் சரியாக இருக்கவேண்டும். மற்றவர்களுக்கு சொல்லவேண்டியதில்லை.
வாழும் வாழ்வே மற்றவர்களின் மாற்றத்திற்கு வித்தாய் அமையும் என்பதை போல் வகுத்து வாழ்ந்தனர்.
வளரும் பிள்ளைகளுக்கு பெற்றவர்களை மட்டுமல்லாது உற்றவர்களையும் உணர்ந்து வாழ கற்றுக்கொடுத்தனர்.
இப்போதும் அங்கை இல்லம் அங்கையின் இல்லம் தான். அனன்யா கேக்கை வெட்டி முடித்ததும் முதல் பகுதியை எடுத்துக்கொண்டு அங்கையின் புகைப்படத்தின் முன் வந்தாள்.
அவருக்கென்று அதனை வைத்துவிட்டு அவரை பார்த்து கண் சிமிட்டி புன்னகைத்து புகைப்படத்தில் இருக்கும் அவரின் கன்னத்தை பிடித்து கொஞ்சிக்கொண்டு கையசைத்தவள்,
“ப்ளஸ் மீ பாட்டி…” என்று கும்பிட்டு திரும்பினாள்.
ப்ரியதர்ஷன் அமலாவின் உள்ளம் இப்போதெல்லாம் வலியை தாண்டிய ஒரு நிறைவை உணர்ந்தது.
வாழும் போது அவர் அனுபவிக்காத சந்தோஷத்தை இப்போது அரூபமாய் அவரின் ஆன்மா நிச்சயம் அனுபவிக்கும் என்று நம்பினர்.
அங்கையின் வாழ்வு முழுவதும் இருந்த தனிமையை பிள்ளைகள் இப்போது தருவதில்லை.
எதை ஆரம்பித்தாலும் அங்கையிடம் சொல்லாமல், அவரிடம் பகிராமல் அவரின் பார்வை இல்லாமல் எதையும் செய்வதில்லை.
இதனை அவர் இருந்தபொழுதே செய்திருக்கலாம், இன்னும் நிம்மதியாய் இருந்திருப்பாரோ என்ற எண்ணமும் எழாமல் இல்லை.
ஆனால் நினைத்து வருந்தி என்ன பயன் என்னும் ஏக்கங்கள் எல்லாம் கண்ணீரோடு கரைந்தே போனது.
அவந்திகா. அவளை நினைக்கையில் அமலாவும், ப்ரியதர்ஷனும் உணர்வது ஒன்று தான்.
ஏதோ ஒரு வகையில் அங்கையின் வாழ்வில் சந்தோஷத்தை, பிடிப்பை, நிறைவை அவள் அவளறியாமலே தந்திருக்கிறாள் என்பது தான்.
பெற்ற பிள்ளைகளான தங்களுடன் தோன்றாத ஒரு பிணைப்பை அவளோடு அவர் ஏற்படுத்தி இருக்கிறார் என்றால் அந்த அன்பு எத்தகையதாக இருந்திருக்கும்.
‘என்கிட்ட அவ இருக்கட்டும்’ என்னும் பொழுதெல்லாம் அவளை பார்த்த அங்கையின் பார்வை வெளிப்படுத்திய அந்த அன்பில் எவ்வளவு பரிசுத்தம்.